search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாலியல் தொல்லை கொடுப்பதாக கதறி அழுத நடிகைகள் - மேலும் பலரின் பெயர்கள் வெளியாகியதால் பரபரப்பு
    X

    பாலியல் தொல்லை கொடுப்பதாக கதறி அழுத நடிகைகள் - மேலும் பலரின் பெயர்கள் வெளியாகியதால் பரபரப்பு

    தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக பேட்டியின் போது ஸ்ரீரெட்டி உள்ளிட்ட தெலுங்கு நடிகைகள் கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #SriReddy #SriLeaks
    நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்து இருப்பது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். திரையுலக பிரபலங்கள் ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

    மகளிர் அமைப்புகள் ஸ்ரீரெட்டிக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளன. ஸ்ரீரெட்டி மற்றும் அவரை ஆதரிக்கும் நடிகைகள் அபூர்வா, சுனிதா ரெட்டி, சுருதி, சந்தியா நாயுடு, ஹேமா, நாகலட்சுமி உள்ளிட்ட பலர் ஐதராபாத்தில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-



    “தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள். இரவில் படுக்கை அறை பொம்மையாக்கி விடுகிறார்கள்.

    நடிகர் பவன் கல்யாண் அமராவதியில் ரூ.200 கோடியில் வீடு கட்டுகிறார். நடிகைகள் கஷ்டங்களை அவர் கண்டுகொள்வது இல்லை. கோனா வெங்கட், அப்பாராவ் உள்பட பலர் பெண்கள் கற்பை சூறையாடுகிறார்கள். புதிய படங்களில் வாய்ப்பு கேட்கும் ஆண்களிடம் பணம் கேட்கிறார்கள். பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள். 80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது. வயதான பெண்களையும் விடுவது இல்லை. செக்ஸ் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும்”.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டியின்போது செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கதறி அழுதனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #SriReddy #SriLeaks
    Next Story
    ×