search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நெஞ்சை நெகிழ வைத்த சிவாஜியின் சந்திப்பு
    X

    நெஞ்சை நெகிழ வைத்த சிவாஜியின் சந்திப்பு

    சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.
    சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.

    1970 முதல் 7 ஆண்டுகள் மேஜர் சுந்தர்ராஜனுடன் நாடகங்களில் நடித்து வந்தார், சிவகுமார். "அப்பாவி'' என்ற நாடகம், ஆயிரம் தடவை மேடை ஏறியது. 1000-வது நாடகத்துக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.

    நாடகத்தைப் பார்த்தபின் சிவகுமாரிடம், "கவுண்டா! இத்தனை நாள் எங்கேடா ஒளிச்சு வச்சிருந்தே இம்புட்டுத் திறமையை! கல்யாணம் பண்ணினதும் வீரம் வந்துடுச்சா?'' என்று தமாஷாகக் கூறினார்.

    சிவகுமார் குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் "இனி ஒரு சுதந்திரம்.'' இது 1987-ல் வெளிவந்தது. சிவகுமாரின் 154-வது படம்.

    இந்தப்படம் சிவாஜிக்குப் போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்து முடிந்து வெளியே வந்த சிவாஜி, "படத்தைப் பார்த்தேன். பிரமாதமா பண்ணி இருக்கே. `கப்பலோட்டிய தமிழன்'லே உயிரைக் கொடுத்து நடித்தேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்குக் குழச்சிக்கிட்டு இருக்காங்க'' என்று சிவகுமாரிடம் சொன்னார்.

    "சிவாஜி சொன்னது மாதிரி எனக்கும் நாமம் போடப்பட்டது'' என்று கூறுகிறார், சிவகுமார்.

    சிவாஜியுடன் பழகிய சில நாட்களை நினைவு கூர்ந்த சிவகுமார் நெஞ்சம் நெகிழ கூறியதாவது:-

    "உறுதிமொழி படப்பிடிப்பு. நானும் பிரபுவும் தேக்கடியில் நடித்துக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு நாள் சிவாஜி குடும்பத்துடன் வந்திருந்தார். எங்கள் வீட்டிலிருந்து என் மனைவி, குழந்தைகள் எல்லாம் வந்திருந்தனர். சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்படியே என் தோள் மீது கைபோட்டபடி தனியே நடந்த சிவாஜி, "கவுண்டரே! சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா'' என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.

    "அண்ணே, என்ன பேச்சு பேசுறீங்க! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுலதான் நாங்க விளையாடுகிறோம். எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிச்சிட முடியாது'' என்றேன்.

    "அப்படியா நினைக்கிறே?''

    "இது என் தாய் மேல் சத்தியம்! தொழில் மேல் சத்தியம்'' என்றேன்.

    "எல்லாரும் அப்படி நினைப்பாங்களா?'' சிவாஜியின் கேள்வி என்னைக் கலங்கச் செய்து விட்டது.

    தேக்கடியில் ஓட்டல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள், என் மகள் பிருந்தா. அப்போது அங்கே சிவாஜி வந்தார். "குட் மார்னிங் அங்கிள்'' என்று சொன்னாள்.

    "நான் உனக்கு அங்கிள் இல்லம்மா. உங்கப்பன் என் தம்பி! நான் உன் பெரியப்பன்'' என்றார். அது முதல் சிவாஜியை பிருந்தா, "பெரியப்பா'' என்றுதான் அன்போடு அழைப்பாள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிவாஜி மயங்கி விழுந்து விட்டார். "ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் ஊசலாடுகிறது'' என்றும், ஒரு கட்டத்தில் "சிவாஜி இறந்து விட்டார். உடல் விமானத்தில் வருகிறது'' என்றெல்லாம் செய்திகள். எனக்கு இதயமே ஒரு நொடி நின்று விட்டதுபோல் ஆகிவிட்டது. "பெரியப்பா சாகமாட்டாருப்பா! அவர் கம்பீரமாகத் திரும்பி வருவார் பாருங்க'' என்றாள், பிருந்தா.

    "மகளே, உன் வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா, ஒரு பூச்செண்டு தர்றேன், அதை உன் கையாலேயே பெரியப்பாவுக்குக் கொடுத்துடு'' என்றேன்.

    அதேபோல் புது ரத்தம், புதுப்பொலிவுடன் ஒரு மாத ஓய்வுக்குப் பின் திரும்பி வந்தார். குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். அவர் அருகில் ஒரு நாற்காலி - உட்காரச் சொன்னார். நான் தரையில் அமர்ந்தேன். என் தலையைத் தடவிவிட்டபடி சிவாஜி சொன்னார்:

    "நாமெல்லாம் `முன்னொருகால நடிகர்கள்'டா சிவா! எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா? சிங்கப்பூர்ல பாரு, அஞ்சாயிரம் பேர் கூடியிருக்காங்க. இருபது அடிக்கு முப்பது அடி திரையில் கட்டபொம்மன் காட்சியைப் போடுறான். அஞ்சாயிரம் பேரும் அடிக்கிறான் விசில்.

    "தங்கப்பதுமை... `ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா... அவனவன் சாமி ஆடறான். `தங்கப்பதக்கம்' அரங்கமே குலுங்குது!

    "சிவா! வாட் ஏ பைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல? எதுக்காகடா உயிரோட வந்தேன்?''

    இப்படி சொல்லும்போது சிவாஜிக்கும் எனக்கும் கண்களில் நீர் முட்டித் தளும்பியது.

    நூறு வயது வாழணும்னு ஆசை இருந்தா கூட, ஒரு கலைஞனுக்கு எப்படி முடிவு வரவேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார்.

    1981-ல் முத்துராமன் ஊட்டியில் இறந்தபோது, அவரது உடலை நானும் திருப்பூர் மணி படக்குழுவும் சென்னைக்கு எடுத்து வந்தோம். அதிகாலை 4 மணி. முத்துராமன் வீட்டு வாசலில் சிவாஜியும் முன்னாள் டி.ஜி.பி. பரமகுருவும் காத்திருந்தார்கள். "கவுண்டரே, தேவனுக்கு (முத்துராமன்) நல்ல சாவுடா! கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா? நம்ம நடிக ஜாதியில ஒருத்தர், விஸ்வநாததாஸ் - மேடையில முருகன் வேஷம் கட்டி மயில்மேல் வள்ளி தெய்வானைக்கு நடுவுல உட்கார்ந்திருக்கும்போது செத்துப் போயிட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த சாவு. சாவுன்னா, அப்படி வரணும்'' என்றார்.

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!

    மனிதர்கள் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால், தமிழ் உள்ளளவும் தமிழ் சினிமா உள்ளளவும் அந்த ஒரு உலக மகா கலைஞனின் சாதனையை யாரும் மறந்திட முடியாது!''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    கலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "1980-களின் கடைசியில், "பாசப்பறவைகள்'', "பாடாத தேனீக்கள்'' என்று இரண்டு படங்களில் கலைஞர் அவர்களின் வசனங்களைப் பேசி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தக் காலக்கட்டங்களில், அடுக்கு மொழி வசனம், இரண்டு வரி வசனமாகச் சுருங்கிவிட்டது.

    படத்தின் வெற்றி விழாக்களில், சிவாஜிக்கு அவர் எழுதிய நீண்ட வசனங்களை பேசிக்காட்டி மகிழ வைத்திருக்கிறேன்.

    துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோருடன் கலைஞர் என் இல்லம் வந்து 90 நிமிடங்கள் என் ஓவியங்களை கண்டு களித்திருக்கிறார்.

    என் புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார். நான் ஓட்ட என் காரில் அவர் சவாரி செய்திருக்கிறார்.

    அவரது தமிழ்ப்பற்றும், நினைவாற்றலும் எப்போதும் என்னை பிரமிக்க வைக்கும்.''

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டார்.

    Next Story
    ×