search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாலசந்தர் தயாரித்த ஜனரஞ்சக படங்கள்
    X

    பாலசந்தர் தயாரித்த ஜனரஞ்சக படங்கள்

    கே.பாலசந்தர் சில ஜனரஞ்சக (கமர்ஷியல்) படங்களை சொந்தமாகத் தயாரித்தார். அவற்றை டைரக்ட் செய்யும் பொறுப்பை, எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.
    கே.பாலசந்தர் சில ஜனரஞ்சக (கமர்ஷியல்) படங்களை சொந்தமாகத் தயாரித்தார். அவற்றை டைரக்ட் செய்யும் பொறுப்பை, எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

    பாலசந்தரின் சொந்த பட நிறுவனம் "கவிதாலயா.'' அந்த நிறுவனத்தின் பெரும்பாலான படங்களை பாலசந்தர் டைரக்ட் செய்தார் என்றாலும், நிறுவனத்தின் பொருளாதார நிலையை வலுவாக வைத்துக்கொள்வதற்காக, இடையிடையே சில கமர்ஷியல் படங்களையும் தயாரிக்க வேண்டியிருந்தது.

    புரட்சிகரமான, புதுமையான, பரீட்சார்த்தமான படங்களை டைரக்ட் செய்து வந்த பாலசந்தர், கமர்ஷியல் படங்களை இயக்க விரும்பவில்லை. மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய படங்களை - அதாவது மசாலா படங்களை தயாரிப்பதற்கு வேறு திறமை வேண்டும் என்று கருதினார்.

    இந்த முடிவுக்கு வந்தபின் பாலசந்தரின் மனக்கண் முன் தோன்றியவர் எஸ்.பி.முத்துராமன்தான். கருத்துள்ள படங்களையும், கமர்ஷியல் படங்களையும் டைரக்ட் செய்யக்கூடிய திறமையைப் பெற்றவர் அவர். அதே சமயம் சினிமாத்தனங்கள் இல்லாத -எல்லோராலும் மதிக்கப்பட்ட இயக்குனராகவும் திகழ்ந்தார்.

    ரஜினியை தந்தை, மகன் என்று இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து, "நெற்றிக்கண்'' என்ற படத்தை தயாரிக்க பாலசந்தர் முடிவு செய்தார். அந்தப் படத்தை டைரக்ட் செய்யும் பொறுப்பை எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

    லட்சுமி, சரத்பாபு, மேனகா, சரிதா ஆகியோரும் இப்படத்தில் நடித்தனர்.

    15-8-1981-ல் வெளிவந்த "நெற்றிக்கண்'' மகத்தான வெற்றி பெற்றது.

    பிறகு, ரஜினியை வைத்து "நான் மகான் அல்ல'', "வேலைக்காரன்'', "புதுக்கவிதை'', "ராகவேந்திரா'' ஆகிய படங்களை பாலசந்தர் தயாரிக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

    "வேலைக்காரன்'' படத்தில், ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்தார். படம் "மெகாஹிட்.''

    ரஜினிகாந்தின் நூறாவது படம் "ராகவேந்திரா.''

    ரஜினி, ராகவேந்திரரின் பக்தர். அதனால், தனது 100-வது படமாக ராகவேந்திரர் வரலாற்றை படமாக்க வேண்டும் என்றும், ராகவேந்திரராக தான் நடிக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

    பாலசந்தரை சந்தித்து, "என்னுடைய நூறாவது படம் ராகவேந்திரர். என்னை திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய நீங்கள்தான் இப்படத்தை தயாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    பாலசந்தர் இதற்கு சம்மதம் தெரிவித்தார். ராகவேந்திரர் படத்தை டைரக்ட் செய்யுமாறு, எஸ்.பி.முத்துராமனிடம் கூறினார்.

    முத்துராமன் தயங்கினார். "ராகவேந்திரர் வேடத்தில் ரஜினி நடிப்பதை அவருடைய ரசிகர்கள் ஏற்கவேண்டுமே! படம் வியாபார ரீதியில் வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வது?'' என்று கேட்டார்.

    "இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது வியாபார ரீதியாக வெற்றி பெறாமல் போனாலும் கவலை இல்லை. ரஜினியின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக படம் அமைந்தால் போதுமானது'' என்று பாலசந்தர் பதிலளித்தார்.

    இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன், லட்சுமி, கே.ஆர்.விஜயா, அம்பிகா ஆகியோர் நடித்தனர். வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார்.

    இப்படம் 1985 செப்டம்பர் 1-ந்தேதி வெளிவந்தது.

    கமர்ஷியல் படங்களுக்கான வரவேற்பை இப்படம் பெறாமல் போனாலும், ரஜினியின் மாறுபட்ட நடிப்பை ரசிகர்கள் வியந்து ரசித்தனர்.

    கமலஹாசனை வைத்து "எனக்குள் ஒருவன்'' படத்தை பாலசந்தர் தயாரித்தார். பூர்வஜென்மம் பற்றிய கதை இது.

    கமலஹாசன் புதுமையான வேடத்தில் நடித்தார். சத்யராஜ், ஸ்ரீபிரியா ஆகியோரும் நடித்தனர். இந்தப் படத்தையும் எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார்.

    மற்ற பட அதிபர்கள் தயாரித்த படங்களிலும் ரஜினிகாந்த்தை இயக்கியவர் முத்துராமன். "ஆறிலிருந்து அறுபது வரை'', "எங்கேயோ கேட்ட குரல்'' ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் ரஜினியை நடிக்க வைத்தார்.

    எனவே, "ரஜினிகாந்த் என்ற வைரத்தை நான் கண்டுபிடித்தேன். அந்த வைரத்தை பட்டை தீட்டியவர் எஸ்.பி.முத்துராமன்'' என்று பாலசந்தர் பாராட்டியுள்ளார்.

    "பாலசந்தர் பெரிய டைரக்டர். அவர் படங்களை இயக்கும் வாய்ப்பை நீங்கள் பெற்றீர்கள். அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி? நீங்கள் டைரக்ட் செய்யும்போது, பாலசந்தர் தலையிட்டு ஏதாவது ஆலோசனைகள் கூறுவாரா?'' என்று கேட்டதற்கு பதிலளித்து முத்துராமன் கூறியதாவது:-

    "படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், கதையை கேட்பார். ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதைச் சொல்வார்.

    அதன் பிறகு, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வரவேமாட்டார். படப்பிடிப்பு முடிந்த பிறகு, முதல் பிரதியை அவருக்குப் போட்டுக்காட்டுவோம். அவ்வளவுதான்.

    படப்பிடிப்பு செலவுகளில் சிக்கனம் பார்க்கமாட்டார். "நீங்கள் ஏவி.எம்.ஸ்டூடியோவில் பணியாற்றுகிறீர்கள். அங்கு, பணத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை சிறப்பாகத் தயாரிக்கிறார்கள். அதேபோலவே இங்கும் செலவைப்பற்றி சிந்திக்காமல், படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும். சிக்கனம் பார்க்காதீர்கள்'' என்று என்னிடம் கூறுவார்.

    அவருடைய படங்களில் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத -மகிழ்ச்சியான அனுபவம்.''

    இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

    Next Story
    ×