search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    புதிய வார்ப்புகள் படத்துக்கு புதிய உத்திகளில் இளையராஜா இசை அமைப்பு
    X

    புதிய வார்ப்புகள் படத்துக்கு புதிய உத்திகளில் இளையராஜா இசை அமைப்பு

    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.
    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.

    தனது இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேவராஜ் -மோகன் இயக்கிய "பூந்தளிர்'' படத்தில் ஒரு மலையாளப்பாடல் இடம் பெற்றது.

    "ஞான் ஞான் பாடணும் ஊஞ்ஞால் ஆடணும்''- என்ற இந்தப்பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். இந்த பாடலில், ஒரு புதிய பாடகி பாடியிருப்பதும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.

    முந்தின நாள் எனது இசையில் ஒரு பாட்டுக்கு பாட வந்த ஜேசுதாஸ், அவருடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். `இந்தப் பெண்ணை பாட வைத்து கேட்டுப்பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். கேட்டேன். குரல் பிடித்துப் போயிற்று. அடுத்த நாளே ரெக்கார்டிங்கில், அந்தப் பெண்ணை இந்த மலையாளப்பாடலை பாட வைத்தேன். அந்தப் பாடகிதான் ஜென்சி.

    தேவராஜ் - மோகனின் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' நல்ல கதையம்சம், பாடல்களுடன்அமைந்த படம். கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான தமிழும் அழகும் கிராமியப் பாடலிலும் கொஞ்சி வந்து மெட்டுக்களில் விளையாடிய படம்.

    "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி'', "என்ன பாட்டுப்பாட'', "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ'', "என்னுள்ளில் எங்கோ'' முதலான பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பாடல்களாக அமைந்தன.

    பாரதிராஜா "புதிய வார்ப்புகள்'' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.

    இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.

    முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு "ட்ïன்'' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.

    அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. "இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டிïன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்'' என்றார்.

    நான் பாரதியிடம், "யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?'' என்றேன்.

    பாரதியும் விடவில்லை. "அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?'' என்று கேட்டார்.

    "சரி காலையில் பார்க்கலாம்'' என்று சொல்லி போனை வைத்தேன்.

    மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டிïனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.

    டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.

    கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.

    கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் "டூயட்தானே?'' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.

    "ஆமாண்ணே'' என்றேன்.

    "டிïனை பாடு'' என்றார்.

    பாடினேன்.

    "இன்னொரு முறை பாடு'' என்றார்.

    மீண்டும் பாடினேன்.

    உடனே கவியரசரிடம் இருந்து டிïனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.

    "வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

    அவர் சொன்னதை நான் டிïனோடு பாடிக்காட்டினேன். "கண்டுகொண்டேன் ராமனை'' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.

    கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.

    மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார். பாரதி "ஓ.கே'' சொன்னார்.

    ஜானகியும், மலேசியா வாசுதேவனும் வந்தார்கள். பாடலை எழுதி, டிïனை கற்றுக்கொண்டு ஒத்திகை முடிந்து பாடல் பதிவானது.

    அங்கேயே அப்போதே சுடச்சுட எடுத்த பாடல்தான். ஆனால் `பாஸ்ட் புட்' ரகம் அல்ல.

    கடற்கரையில் உதயமான கற்பனை

    மற்ற பாடல்களை கம்போஸ் செய்ய ஓட்டலில் உட்கார்ந்தோம்.

    ஊருக்குப் புதிதாய் வந்த ஆசிரியருக்கும், நாயகிக்கும் காதல் அரும்புகிறது. இப்போது பாடல் காட்சி. இந்தப்பாடல் எனக்கு வித்தியாசமாக வேண்டும் என பாரதி கேட்டார்.

    பல மெட்டுக்கள் போட்டேன். ஒன்றும் பிடிக்கவில்லை. எனக்கே புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தேன். எனக்கும் எதுவும் புதிதாகத் தெரியவில்லை.

    ஆர்மோனியத்தை மூடிவிட்டு "சரி வாய்யா! அப்படி பீச் பக்கம் போய் வரலாம்'' என்றார் பாரதி. பிரசிடென்ட் ஓட்டலில் இருந்து கொஞ்ச தூர நடையில் கடற்கரையை அடைந்தோம்.

    கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமாக நாங்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கிய அதே கடற்கரை.

    சுண்டல் வாங்கி கொறித்தபடி கடற்கரையில் நடந்தோம். கடல் அலைகளில் கால்கள் நனைய நனைய நின்றோம். இப்படியே சிறிது நேரம் பீச்சில் பொழுது போக்கிவிட்டு திரும்பவும் ரூமுக்கு வந்தோம். அதுவரை பாடலைப் பற்றி பேசவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.

    இந்த இடைவெளியில் என்ன நடந்ததோ தெரியவில்லை. வந்து ஆர்மோனியத்தை தொட்டேன். அவ்வளவுதான். ஆரம்பம் முதல் கடைசி வரை `தம் தனனம்' என்று தொடங்கி முடியும் வரை அதே `தம்தனன'வில் பாடலின் முழு டிïனும் வந்துவிட்டது.

    பாரதியைப் பார்க்கணுமே "சூப்பர்! பிரமாதம்'' என்றவர், ஆடாத குறைதான். அத்தனை உற்சாகம் அவருக்கு!

    பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?

    "புதிய வார்ப்புகள்'' படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.

    "ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?'' கேட்டேன், பாரதியிடம்.

    "நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்'' உறுதியாகவே சொன்னார், பாரதி.

    மறுநாள் என்னைப் பார்த்தவர், "என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்'' என்றார்.

    கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், "என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?'' என்று கிண்டல் செய்தேன்.

    அவரோ, "இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்'' என்று யதார்த்தமாக சொன்னார்.

    அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜ×ம் ஹீரோ - இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். "ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?'' என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

    Next Story
    ×