search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா வாழ்க்கைப்பாதை - இசை அமைப்பில் புதுமைகள் செய்தார்
    X

    இளையராஜா வாழ்க்கைப்பாதை - இசை அமைப்பில் புதுமைகள் செய்தார்

    இளையராஜா, திரைப்பட இசை அமைப்பில் பல புதுமைகளை செய்தார். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால் தினமும் 4 மணி நேரமே அவர் தூங்கினார்.
    இளையராஜா, திரைப்பட இசை அமைப்பில் பல புதுமைகளை செய்தார். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால் தினமும் 4 மணி நேரமே அவர் தூங்கினார்.

    தன் வாழ்க்கைப்பாதையைப் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "எனக்கு கார்த்தி, பவதா, யுவன் என மூன்று குழந்தைகள். அண்ணன் பாஸ்கருக்கு பார்த்தி, வாசுகி, ஹரி என மூன்று குழந்தைகள். குடும்பம் பெரிதான சூழலில் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்களும் இருப்பது சிரமமாக இருந்ததை பாஸ்கர் உணர்ந்து கொண்டார். இதனால் தனியாக வீடு பார்த்தார்.

    ஒரு வீடு அவருக்கு பிடித்துப்போக, என்னிடம் வந்தார். "ராஜா! நீ வந்து பார்த்து சரி என்று சொன்னால் நான் மாறிக்கொள்கிறேன்'' என்றார்.

    நானும் பார்க்கப்போனேன். பார்த்த வீடு எனக்குப் பிடித்துப்போயிற்று. நான் பாஸ்கரிடம், "வீடு நன்றாக இருக்கிறது. இதில் நான் குடியிருந்து கொள்கிறேன். நீ வேறு வீடு பார்த்துக்கொள்'' என்றேன்.

    பாஸ்கரும், "சரி; நீயே இருந்து கொள். நான் வேறு இடம் பார்க்கிறேன்'' என்று கூறிவிட்டார்.

    தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அந்த வீடு இருந்தது. வீட்டு எண் 157.

    "வீட்டின் கூட்டுத்தொகை 13 வருகிறது. அதனால் இந்த வீடு வேண்டாம். அதோடு கவியரசர் கண்ணதாசன் இந்த வீட்டில்தான் அவருடைய சினிமாக் கம்பெனியை தொடங்கி பெரும் கடனுக்கு உள்ளானார். அதனால் ராசி இல்லாத இந்த வீட்டுக்குப் போகவேண்டாம்'' என்றார்கள் நண்பர்கள்.

    எனக்கோ வீட்டைப் பார்த்தவுடன் பிடித்துப்போனதால், அந்த வீட்டுக்கே குடிபெயர்ந்தேன். அம்மா என்னுடனே வந்துவிட்டார்கள்.

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    சினிமாவில் வளர்ந்து வந்த நிலையிலும் கர்நாடக சங்கீதத்தை முழுமையாக கற்கும் ஆர்வம் இளையராஜாவை விட்டுவிடவில்லை. இதனால் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசை கற்க விரும்பினார்.

    அதுபற்றி கூறியதாவது:-

    ஏற்கனவே டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக இசை கற்கும் ஆவல் எனக்குள் நீடித்து வந்தது. புது வீட்டுக்கு வந்த பிறகுதான் அதற்கான வாய்ப்பு அமைந்தது. டி.வி.கோபாலகிருஷ்ணன் அப்போது பெசன்ட் நகரில் இருந்தார். காரணீஸ்வரர் கோவில் தெருவில் இருக்கும்போது பத்து நிமிடத்தில் அவர் வீட்டுக்கு நடந்தே போய் விடலாம். இப்போதோ பெசன்ட் நகர் போய்வரவே அரை மணி நேரமாவது ஆகும்.

    அவரிடம் மறுபடியுமாக என் கற்றல் ஆர்வம் சொன்னபோது, "நீங்கள் எந்த நேரத்தில் வந்தாலும் நான் சொல்லித்தர தயாராயிருக்கிறேன். உங்களுக்கு எந்த நேரம் சவுகரியமோ அதைச் சொல்லுங்கள்'' என்றார்.

    எனக்கு இருந்த வேலைகளுக்கிடையே சரியான நேரத்தை எப்படி அமைப்பது என்று யோசித்தேன். அவரோ எந்த நேரமானாலும் பரவாயில்லை என்று சொன்னதால் விடிகாலை நேரத்தை தேர்ந்தெடுத்தேன்.

    எப்போதும் விடிகாலை 4 மணிக்கு நான் எழுந்து பழக்கப்பட்டவன். சமீபகாலமாக அது கொஞ்சம் நின்று போயிருந்தது. இப்போது மீண்டும் அந்த நேரத்துக்கு மாறினேன். நான்கு மணிக்கு சமஸ்கிருத பாடம் அரை மணி நேரமும், பிறகு குளித்து விட்டு 5 மணிக்கு பெசன்ட் நகரில் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்நாடக சங்கீத பாடமும், 6 மணிக்கு உடற்பயிற்சியும், தியானமும், பூஜையுமாக தொடர்ந்தது.

    7 மணிக்கு ரெக்கார்டிங் ஸ்டூடியோ. இல்லையேல் கம்போசிங். தினசரி இரண்டு பாடல்கள் இருக்கும்.

    ரெக்கார்டிங் இரவு 9 மணிக்கு முடிய, வீட்டுக்கு வந்து மீண்டும் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் பெசன்ட் நகரில் சங்கீதப் பாடம் முடித்துவிட்டு வர இரவு 12 மணி ஆகிவிடும்.

    இந்த அன்றாட நிகழ்ச்சி நிரலில் பெரும்பாலும் மாற்றமிருக்காது. எங்காவது வெளிïர் கோவிலுக்கு போனால் மட்டுமே மாறும். இந்த வகையில் தினசரி என் தூக்கம் 4 மணி நேரம்தான்.

    ஓரளவே நான் கற்றுக்கொண்ட சங்கீதம், டி.வி.கோபாலகிருஷ்ணனின் ஒத்துழைப்பால்தான் எனக்கு சாத்தியமாயிற்று. ஆயினும் அது எனக்கு அந்த அளவேனும் வந்ததே என்பதில் திருப்தியைக் காட்டிலும், அத்தனையையும் கற்றுக்கொள்ள இயலாமையால் ஏற்பட்ட வருத்தமே அதிகம் மேலோங்கி இருந்தது.

    ஜி.கே.வி.யிடம் இருந்தபோது ரெக்கார்டிங் ஓய்வு நேரத்தில், நான் எழுதிய இசைப் பகுதிகளை அங்கிருக்கும் கலைஞர்களை வாசிக்க வைத்துக் கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது.

    அவர்கள் கருத்தை வைத்து, எனது இந்த இசை அணுகுமுறை சினிமா சங்கீதத்துக்கு ஒத்துவராது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

    ஆனால் அதை உபயோகிக்க, தரத்தில் உயர்ந்த ஒரு படம் வரும்போதுதான் சரியாக இருக்கும். எனவே, புதிதாக நான் கற்றுக்கொண்டவைகளை எப்படி பயன்படுத்துவது என்று ஆலோசித்து, அவ்வப்போது அதை நடைமுறைக்கு கொண்டு வரவும் செய்தேன்.

    மேல்நாட்டு இசையில் `கவுண்டர் பாயிண்ட்' என ஒரு விஷயம் இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு டிïன்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படுவதுதான் அது. அதில் `ஹார்மோனி' என்ற அம்சம் உள்ளடங்கி இருக்கவேண்டும்.

    இதை எனது இரண்டாவது படமான "பாலூட்டி வளர்த்த கிளி'' படத்தில் "நான் பேச வந்தேன்'' என்ற பாடலின்போதே தொடங்கிவிட்டேன். அந்தப் பாடலின் இடையே வரும் இசையின் ஹம்மிங்கில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு டிïன் `ஹம்' செய்ய, எஸ்.ஜானகி வேறு டிïனில் ஹம்மிங் செய்து பதில் சொல்வது போல அமைத்திருந்தேன்.

    இது படத்தின் டைரக்டருக்கோ, இசைக் குழுவில் வாசித்தவர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இசைக் குழுவில் அட்வான்ஸ் ஆக இருக்கும் ஓரிரு கலைஞர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.

    காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலிலும் இந்த யுக்தியை பாடலின் கடைசியில் கையாண்டிருந்தேன். இது பாடலின் அதே டிïனை அப்படியே `ரிபீட்' செய்யும் `இமிடேஷன்' என்ற விதிக்குள் அடங்கும்.

    பின்னால் "சிட்டுக்குருவி'' என்ற படத்தை தேவராஜ் - மோகன் இயக்கியபோது அதற்கு கம்போஸ் செய்ய நேரமே இல்லாமல் போனது.

    அப்போது "துர்காதேவி'' என்ற படம் சங்கரய்யர் டைரக்ஷனில் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு பின்னணி இசை நடந்து கொண்டிருந்ததால் எங்கும் நகர முடியவில்லை.

    இதற்கிடையே சிட்டுக்குருவி படத்துக்கு தேவராஜ் - மோகன் ரெக்கார்டிங்கிற்கு தேதி குறித்துவிட்டார்கள்.

    ரெக்கார்டிங் இரவு 9 மணிக்கு முடியும். பத்து மணிக்கு தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் கம்போஸ் தொடரும். அது முடிய விடிகாலை 3 மணி வரை ஆகிவிடும்.

    அதற்குப் பிறகு 4 மணிக்கு படுப்பதெங்கே? அடுத்த நாள் தொடங்கி விடும்.''




    Next Story
    ×