search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • டொயோட்டா ஹிலக்ஸ் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
    • ஹிலக்ஸ் டாப் எண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    டொயோட்டா நிறுவன விற்பனையாளர்கள் ஹிலக்ஸ் பிக்கப் டிரக்-க்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றனர். பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று துவங்குகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் டொயோட்டா ஹிலக்ஸ் விற்பனைக்கு வந்தது.

    ஹிலக்ஸ் மாடல் இதுவரை சுமார் 1300 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. அறிமுகத்தின் போது டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் விலை ரூ. 33 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பிறகு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா ஹிலக்ஸ் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    என்ட்ரி லெவல் மாடல்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில், டாப் எண்ட் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி ஹிலக்ஸ் டாப் எண்ட் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரமும், ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    தற்போதைய தகவல்களின் படி டொயோட்டா ஹிலக்ஸ் மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ. 6 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சில விற்பனையாளர்கள் அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை ஹிலக்ஸ் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடுகிறது.

    டொயோட்டா ஹிலக்ஸ் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஹிலக்ஸ் மாடலில் ஏழு ஏர்பேக் வழங்கப்பட்டு உள்ளது.

    • இந்திய சந்தையில் பயன்படுத்திய கார் மாடல்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • பயன்படுத்திய கார் வாங்கும் போது பல்வேறு விஷயங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் ஆகும்.

    புதிய கார் வாங்க வங்கிகள் ஏராளமான நிதி சலுகைகளை வழங்கி வருகின்றன. என்ற போதிலும், புதிய கார் வாங்குவதற்கான பட்ஜெட் சற்று அதிகம் ஆகும். இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. இதை எதிர்கொள்ளவே பலரும் பயன்படுத்திய கார் மாடல் வாங்குகின்றனர். இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்ட கார் மாடல்கள் விற்பனை அதிகரிக்க துவங்கி இருக்கிறது.

    ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் மாடலை வாங்குவது அத்தனை எளிதான காரியம் இல்லை. நீங்கள் வாங்கும் பயன்படுத்தப்பட்ட காரில் தீர்க்க முடியாத அல்லது அடிக்கடி பிரச்சினை தரக்கூடிய கோளாறு இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் அந்த கார் விபத்தில் சிக்கிய ஒன்றாகவும் இருக்கலாம். அந்த வகையில், காரை செகன்ட் ஹேன்ட்-ஆக வாங்கும்போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

     

    கவனம் அவசியம்:

    விலையை கேட்கும் போது கவர்ச்சிகரமான ஒன்றாக தெரிந்தாலும், பிரீமியம் கார்கள் மற்றும் எஸ்யுவிக்களை வாங்கினால், அவற்றை பராமரிப்பதற்கான செலவீனங்கள் அதிகரிக்கும். இதனால் உங்களின் தேவைக்கு பட்ஜெட்டில் பார்ப்பதை விட, பயன்பாட்டுக்கு தேவையான கார் மாடலை தேர்வு செய்வது நல்லது.

    காரின் நிலை:

    காரை தேர்வு செய்த பிறகு, அதனை முழுமையாக சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். உங்களுக்கு கார்களை பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் தெரியாத பட்சத்தில், அந்த விஷயத்தில் விவரம் அறிந்தவர்கள் உதவியை நாடுவது நல்லது. கார் வாங்கும் முன் அதன் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    இதில் காரின் ஒட்டுமொத்த தோற்றம், அதன் இன்டீரியர் பாகங்கள், டயரின் நிலை உள்ளிட்டவைகளை முழுமையாக சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

     

    டெஸ்ட் டிரைவ்:

    கார்கள் பெரும்பாலும் தோற்றத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். ஆனால், ஓட்டும் போது தான் அவற்றின் உண்மையான நிலை நமக்கு தெரியவரும். அந்த வகையில், காரை வாங்கும் முன் அதனை டெஸ்ட் டிரைவ் செய்வது நல்லது. டெஸ்ட் டிரைவ் முடித்த பிறகு, கார் நிலை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது, ஏதேனும் கோளாறு இருக்குமோ என்ற எண்ணம் எழுந்தால், அதனை வாங்காமல் தவிர்த்து விடுவது நல்லது.

    பராமரிப்பு வரலாறு:

    கார் நல்ல நிலையில், இருப்பதை உறுதிப்படுத்திய பிறகு காரை ஓட்டுவதற்கு உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். கார் பயன்படுத்தும் அனைவரும் அதன் பராமரிப்பு விஷயங்களை தகவல்களாக வைத்திருப்பது இல்லை. ஆனால் ஒருசிலர் இவ்வாறு செய்யும் வழக்கம் கொண்டுள்ளனர். இதனால், கார் பராமரிப்பு எத்தனை கால அளவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை சரிபார்ப்பது நல்லது.

     

    தரவுகள்:

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின், கடைசியாக காருக்கான பதிவு சான்று, காப்பீடு போன்ற தரவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதோடு காரை வாங்கியதும் பதிவு சான்றில் உங்களின் பெயரை இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

    • ஒலா வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது, வாகனம் பார்க் மோடிலேயே இருக்கும்.
    • இந்த அம்சம் எதிர்கால வாகனங்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் முற்றிலும் புதிய ஹெல்மெட் டிடெக்ஷன் தொழில்நுட்பத்திற்காக காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. காப்புரிமை நிலையில் இருக்கும் புதிய தொழில்நுட்பம் ஒலா நிறுவனத்தின் எதிர்கால வாகனங்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ரைடர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒலா நிறுவனம் புதிய சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது. இது ரைடர் ஹெல்மெட் அணியாத சூழலில், வாகனத்தை இயக்க அனுமதிக்காது. அதாவது ஹெல்மட் அணியாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், ஸ்கூட்டரை ரைட் மோடிற்கு மாற்ற அனுமதிக்காது.

     

    ஒலா வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது, வாகனம் பார்க் மோடிலேயே இருக்கும். பிறகு, ஸ்கூட்டரை இயக்குவதற்கு ரைடு மோடிற்கு மாற்ற வேண்டும். ஒலா உருவாக்கி வரும் புதிய சிஸ்டம், ரைடர் ஹெல்மெட் அணியாமல் இருக்கும் போது வாகனத்தை ரைடு மோடில் மாற்ற அனுமதிக்காது. இதனை உறுதிப்படுத்த வாகனத்தில் கேமரா மற்றும் சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இதற்கான காப்புரிமை வழங்கப்படும் பட்சத்தில், இந்த அம்சம் எதிர்கால வாகனங்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக மார்ச் மாத வாக்கில் ஒலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ADAS சிஸ்டம் வழங்குதாக டீசர் வெளியிட்டு இருந்தது. இந்த அம்சம் கொண்ட புதிய ஸ்கூட்டர் வரும் மாதங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

    • கார் பயன்படுத்துவோர் வைப்பர் பிலேடுகளை சீரான இடைவெளியில் மாற்ற தவறி விடுகின்றனர்.
    • வின்ட்ஷீல்டில் ஸ்கிராட்ச் ஏற்படுத்துவதோடு, வைப்பர் பிலேடுகளையும் சேதப்படுத்தும்.

    கார் பாகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளில் ஒன்று வைப்பர் பிலேடுகள். இவற்றை எளிதில் சரி செய்யவும், குறைந்த செலவில் மாற்றியும் விட முடியும். எனினும், கார் பயன்படுத்துவோர் வைப்பர் பிலேடுகளை சீரான இடைவெளியில் மாற்ற பெரும்பாலும் தவறி விடுகின்றனர்.

    மழை காலங்களில் வைப்பர் பிலேடுகளில் உள்ள ரப்பர் பாகம் வின்ட்ஸ்கிரீனில் உள்ள நீரை சுத்தப்படுத்தி, சாலையை தெளிவாக பார்க்க செய்கிறது. எனினும், இந்த ரப்பர் பாகம் நாளடைவில் பாழாகிவிடும். அந்த வகையில் காரின் வைப்பர் பிலேடுகளை பராமரிக்க எளிய டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம்.

     

    வின்ட்ஷீல்டு பயன்படுத்தாமலேயே இருக்கும் போது, அவைகளில் தூசு படியும். பிறகு வைப்பர் ஆன் செய்யப்பட்டால், தூசியும் வின்ட்ஷீல்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இது வின்ட்ஷீல்டில் ஸ்கிராட்ச் ஏற்படுத்துவதோடு, வைப்பர் பிலேடுகளையும் சேதப்படுத்தும். இதனால் வைப்பர் பயன்படுத்தும் முன், வின்ட்ஸ்கிரீனை சுத்தப்படுத்துவது அவசியம் ஆகும்.

     

    கார்களை எப்போதும் மறைக்கப்பட்ட இடத்திலோ அல்லது மூடப்பட்ட பார்கிங்கில் நிறுத்துவது நல்லது. இவ்வாறு செய்யும் போது வைப்பர் பிலேடின் ரப்பர் பாகம் எளிதில் பாதிக்கப்படாது. மேலும் ரப்பர் பிலேடு மென்மையாகவும், சீராகவும் இயங்க செய்கிறது. வைப்பரில் உள்ள ரப்பர் பிலேடு பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் அதிக ரசாயனம் இல்லாத டிடர்ஜென்ட்களை கொண்டு காரின் வின்ட்ஷீல்டை சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது வைப்பர் பிலேடில் ஏற்படும் சேதம் குறைக்கப்படும்.

    • இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
    • தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக பேட்டரி பேக் பாழாகும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான அளவுக்கு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத திறன், எளிய பயன்பாடு மற்றும் பராமரிப்பு மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மானியம் உள்ளிட்டவை எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

    உலகம் முழுக்க செகன்ட் ஹேண்ட் எனப்படும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை விலைக்கு வாங்கி, அதனை மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இதே வழக்கம் வாகன பயன்பாட்டிற்கு அதிகம் பொருந்தும். அந்த வகையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் வாங்க திட்டமிடுகின்றீர்களா? இவ்வாறு செய்யும் முன் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனினும், இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனையாகும் அளவுக்கு எலெகட்ரிக் வாகனங்கள் விற்பனையாவதில்லை. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையான விற்பனையை எலெக்ட்ரிக் வாகனங்கள் எட்டுவதற்கு மேலும் சில காலம் ஆகும்.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சீராக இருந்து வருகிறது. இதே போன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் துறை மீதான விருப்பமும் அதிகரித்து வருவதால், பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமான அளவுக்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் திட்டத்தை ஒத்திவைப்பது, தற்காலிகமாக ரத்து செய்வது போன்ற முடிவுகளை எடுக்கின்றனர்.

    பேட்டரி பேக் ஆயுள்:

    எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏற்படும் சிக்கல்களில் ஒன்று இது. தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக பேட்டரி பேக் பாழாகும் வாய்ப்புகள் உண்டு. சீரற்ற சார்ஜிங் பழக்கங்கள் இதனை வெகு விரைவில் ஏற்படுத்த செய்யும். பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் வாகனங்களில் என்ஜினில் ஏற்படும் விசித்திர சத்தம் கொண்டு என்ஜின் கோளாறை கண்டறிந்து விடலாம். எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை பேட்டரியை முழுமையாக தீர்ந்து போக செய்து அதன்பிறகு மீண்டும் முழு சார்ஜ் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது பேட்டரியை சார்ஜ் செய்ய, குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்ததை விட அதிக நேரம் ஆகும் பட்சத்திலோ அல்லது விரைவில் சார்ஜ் இறங்கும் பட்சத்திலோ பேட்டரி பாழாகி இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம். ஒருவேளை பேட்டரி பாழாகும் பட்சத்தில் அதனை எளிதில் சரி செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ முடியும்.

     

    தேய்மானம்:

    பிரீமியம் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விரைந்து தேய்மானம் ஆகிவிடும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டும் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரீமியம் மாடலாகவே கருதப்படுகின்றன. இதன் காரணமாகவே பயன்படுத்தப்பட்ட எலெர்க்ரிக் வாகனத்தை வாங்க விரும்புகின்றனர்.

    பராமரிப்பு:

    பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை பராமரித்தல் மிகவும் எளிமையான காரியம் ஆகும். இதன் பவர்டிரெயினில் அசையும் பாகங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். இதன் காரணமாக பராமரிப்பு கட்டணம் பெருமளவு குறைவு ஆகும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை மாற்றுவதற்கான கட்டணம் அதிகம் ஆகும்.

    எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதால், ஏற்படும் மின் கட்டண செலவு குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும்.

     

    சார்ஜிங் உள்கட்டமைப்பு:

    எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது சார்ஜிங் உள்கட்டமைப்பு மிகவும் அத்தியாவசியமானது ஆகும். ஏத்தர் 450 போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஃபாஸ்ட் சார்ஜர்களுக்கு சப்போர்ட் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குவோர், வீட்டில் ஃபாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்து வைப்பது அதிக பயனுள்ளதாக இருக்கும்.

    பயன்பாடு மற்றும் பராமரிப்பு கட்டணம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை பராமரிப்பது மிகவும் எளிய காரியம் ஆகும். இதற்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் மிகவும் குறைவு ஆகும். தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் கட்டணம் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உபயோகிப்பாளர்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள தொழில்நுட்பம் முன்பு இருந்ததை விட பெருமளவு அதிநவீனமாக மாறிவிட்டன. இவற்றில் எளிதில் மென்பொருள் அப்டேட் வழங்கும் நிலை வந்துவிட்டது. சமீபத்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பழைய மாடலை விட பல விஷயங்களில் மேம்பட்டவைகளாகவே இருக்கின்றன. 

    • எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.
    • எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது பேட்டரி பேக் சூடாக அதிக வாய்ப்புகள் உண்டு.

    எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுவது சாதாரண காரியம் தான். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளிலும் பயனர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் நிலையிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் சிக்காமல் இருக்கவும், எலெக்ட்ரிக் வாகனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் மேற்கொள்ள வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    உடனே சார்ஜ் செய்ய வேண்டாம்:

    எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது பேட்டரி பேக் சூடாக அதிக வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக வாகனத்தை பயன்படுத்திய உடனே அதனை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு, பேட்டரி ஆயுளும் மேம்படும்.

    நீண்ட நேர சார்ஜிங்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவுக்கு சார்ஜ் செய்வது பேட்டரி ஆயுளை பெருமளவு பாதிக்கும். மேலும் அதிக வெப்பம் காரணமாக பேட்டரியில் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக வாகனம் தீப்பிடித்து எரிய அதிக வாய்ப்புகள் உண்டு.

    மழையின் போது சார்ஜிங்:

    நீரும், மின்சாரமும் ஒன்றாகும் போது ஏற்படும் விளைவு அனைவரும் அறிந்ததே. வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பான வாட்டர் ப்ரூஃபிங் வசதி வழங்கினாலும், சில சமயங்களில் சிறு ஓட்டை மூலம் மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனால் மழை பெய்யும் போது வாகனங்களை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    சார்ஜர்களில் கவனம் அவசியம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய சான்றளிக்கப்பட்ட சார்ஜிங் மையத்தை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் அதனை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

    பேட்டரி பயன்பாடு:

    எலெக்ட்ரிக் வாகன பேட்டரியை முழுமையாக தீர்ந்து போகும் வரை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கிற்கு அழுத்தம் அதிகரித்து, அதன் ஆயுளை குறைக்கும். இதோடு பேட்டரி பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கும். 

    • கார்களில் டிரெயின் பிளக்-களை கண்டறிதல் சிரமமமான காரியம் ஆகும்.
    • கார் இன்டீரியரில் ஏற்படும் ஈரத்தன்மையை போக்குவது சவாலான காரியம் ஆகும்.

    மழை வெளுத்து வாங்கும் கனமழை காலமோ அல்லது நீர்நிலைகளுக்கு எடுத்து செல்வதோ கார் இன்டீரியரில் எப்போது வேண்டுமானாலும் எளிதில் நீர் புகும் வாய்ப்புகள் அதிகம் தான். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும், இதனை முழுமையாக தவிர்ப்பது முடியாத காரியம் தான். அந்த வகையில், ஈரமாகும் கார் இன்டீரியரை விரைந்து காய வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பார்ப்போம்.

    மழை பெய்யும் போது சன்ரூஃப் லீக் அல்லது ஜன்னல் வழியே கார் இன்டீரியரில் நீர்புகும் சூழல் ஏற்பட்டால், எதில் பிரச்சினை ஏற்பட்டது என்று உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை நீர் 3 செமீ அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர் உதவியை நாடுவதே சிறந்தது.

     

    டிரெயின் பிளக்:

    பெரும்பாலான கார்களில் இன்டீரியரில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு டிரெயின் பிளக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி இன்டீரியரில் உள்ள நீரை வெளியேற்றலாம். சில கார்களில் டிரெயின் பிளக்-களை கண்டறிதல் சிரமமான காரியம் ஆகும்.

    மைக்ரோஃபைபர் துணி:

    தரமான மைக்ரோஃபைபர் துணி அல்லது டவல்களை கொண்டு நீரை முடிந்த வரை உறிஞ்சி அதனை வெளியில் பிழிந்துவிடலாம். இவ்வாறு செய்யும் போது கார்களின் இன்டீரியர் அதிவேகமாக காய்ந்து விடும். முதலில் செய்யும் போது, இந்த வேலை செயலற்றதாக தோன்றும். ஆனால், இதுவே சிறப்பான வழிமுறை ஆகும்.

     

    காற்றாடி:

    இனி அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து, போர்டபில் காற்றாடி கொண்டு ஒரே திசையில் வீச செய்ய வேண்டும். சமயங்களில் ஹேர் டிரையர் போன்ற சாதனங்களை கொண்டும் இன்டீரியரில் உள்ள ஈரத்தை சரி செய்யலாம். இது கார் இன்டீரியரில் உள்ள ஈரத்தை பெருமளவுக்கு நீக்கிவிடும்.

    ஈரத்தன்மை:

    கார்களில் நீர் புகுந்தால், நீரை எப்படியோ வெளியேற்றி விட முடியும். எனினும், அதன் பிறகு ஏற்படும் ஈரத்தன்மையை போக்குவது சவாலான காரியம் ஆகும். இதற்கு சிலிகா ஜெல் பயன்படுத்தலாம். கார் இன்டீரியரை சுற்றி சிலிகா ஜெல் பாக்கெட்களை வைத்தால் ஈரத்தன்மையை பெருமளவு குறைக்க முடியும்.

    • என்ஜினில் உள்ள ஏராளமான பாகங்கள் அசையும் திறன் கொண்டிருப்பதால் லூப்ரிகேஷன் அவசியம்.
    • கூலிங் சிஸ்டம் சீராக இயங்க வைக்க கூலனட் சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    கார்களுக்கு என்ஜின் தான் இதயம் எனலாம். இதனை சரியாக வைத்துக் கொண்டாலே இவற்றில் ஏற்படும் சிக்கல் மற்றும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். இவ்வாறு என்ஜினை சரியாக பரிமரித்தால், அதன் திறன் சீராக இருப்பதோடு, நீண்ட காலத்திற்கு சிரமம் இன்றி பயன்படுத்த முடியும். அந்த வகையில் கார் என்ஜினை எப்போதும் சீராக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    என்ஜின் ஆயில்:

    என்ஜின் பராமரிப்பில் மிக முக்கியமான விஷயம் லூப்ரிகேஷன் தான். என்ஜினில் உள்ள ஏராளமான பாகங்கள் அசையும் திறன் கொண்டிருப்பதால் லூப்ரிகேஷன் அத்தியாவசியமான ஒன்று ஆகும். குறைந்த அளவு என்ஜின் ஆயில் அல்லது பழைய என்ஜின் ஆயில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை என்ஜினை விரைந்து பாழாக்கி விடும்.

    என்ஜின் பாழாகும் பட்சத்தில் அதனை சரியாக சரிசெய்வது மிகவும் கடினம் ஆகும். இவ்வாறு சரி செய்தாலும், பெரும்பாலான சூழல்களில் இவை மீண்டும் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனை தவிர்க்க என்ஜினுக்கு சீரான இடைவெளியில் ஆயிலை மாற்றுவது நல்லது.

    என்ஜின் கூலன்ட்:

    இன்டர்னல் கம்பஷன் என்ஜின் அல்லது ஐ.சி. என்ஜின் அதிகளவு வெப்பத்தை வெளிப்படுத்தும். இந்த வெப்பத்தை என்ஜினில் உள்ள என்ஜின் கூலிங் சிஸ்டம் தான் குறைக்கும். கூலிங் சிஸ்டம் சீராக இயங்க வைக்க கூலனட் சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது என்ஜின் எப்போதும் சீரான வெப்பநிலையில் இருப்பதை உறுதிப்படுத்திவிடும்.

    ஏர் ஃபில்ட்டர்:

    காரின் மிக முக்கிய பாகங்களில் ஒன்று தான் ஏர் ஃபில்ட்டர். இது காரின் செயல்திறனை நேரடியாக பாதிப்பதோடு, என்ஜினில் வெளிப்புற அம்சங்கள் நுழைந்து ஏற்படுத்தும் பாதிப்புகளை தடுக்கிறது. இதன் காரணமாக ஏர் ஃபில்ட்டரை சீரான இடைவெளியில் மாற்றிக் கொண்டே இருப்பது அவசியம் ஆகும்.

    ஆயில் ஃபில்ட்டர்:

    தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக சேகரிக்கப்படும் அழுக்குகளை நீக்கும் பணியை ஆயில் ஃபில்ட்டர் மேற்கொள்கிறது. இதில் பாழாகி போன என்ஜின் ஆயில் சேகரிக்கப்படும். சீரான இடைவெளியில் இதனை அகற்றாத பட்சத்தில் என்ஜினில் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகம் ஆகும்.

    ஆயில் லீக் மற்றும் புகை:

    காரினை விரைந்து சரிபார்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் அபாய எச்சரிக்கை தான் ஆயில் லீக் மற்றும் புகை வெளியீடு. காரில் இந்த பிரச்சினை ஏற்பட்டால், அதனை விரைந்து சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். இதனை தவிர்க்கும் பட்சத்தில், புதிதாக ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

    • காரை சுத்தமாகவும், எந்த விதமான துர்நாற்றமும் இன்றி பராமரித்தால் எலிகளின் தொல்லை இருக்காது.
    • என்ஜின் பகுதி எலிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.

    கார்களை பராமரித்தல் மிகவும் நேர்த்தியான வேலை. ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப கார்களில் இதை செய்ய வேண்டும், இதை செய்யக் கூடாது என ஏராளமான நுனுக்கங்கள் இதில் உள்ளன. மழை காலங்களில் கார்களுக்குள் எலி புகுந்து கொண்டு அட்டகாசம் செய்வது அதிகரிக்கும். பருவமழை பெய்யும் சீசனும் விரைவில் துவங்க இருப்பதாலும், எப்போதும் கார்களில் எலி தொல்லை ஏற்படாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    கார்களில் உணவு பண்டங்களை வைக்க வேண்டாம்:

    எலி மற்றும் இதர பூச்சிகள் உணவு பொருட்களை கண்டே கார்களுக்குள் ஈர்க்கப்படலாம். அதனால் கார்களினுள் உணவு பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். கார் இண்டீரியரில் உணவு பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது. காரை சுத்தமாகவும், எந்த விதமான துர்நாற்றமும் இன்றி பராமரித்தாலே எலிகளின் தொல்லை இருக்காது.

    இருள்சூழ்ந்த பகுதியில் நிறுத்த வேண்டாம்:

    எலிகள் பெரும்பாலும் இருள் சூழ்ந்த பகுதிகளிலேயே தங்க விரும்பும். இதன் காரணமாகவே என்ஜின் பகுதி எலிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. கார்களை எப்போதும் சுத்தமான மற்றும் அதிக வெளிச்சமுள்ள பகுதிகளில் நிறுத்தி வைப்பது நல்லது.

    தெளிப்பான்கள்:

    கார்களில் எலி மற்றும் பூச்சிக்கள் வராமல் இருக்க செய்வதற்காக சந்தையில் ஏராளமான தெளிப்பான்கள் (Spray) கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தினாலும், கார்களில் எலி வருவதை தடுக்க முடியும். இவற்றை நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம்.

    செல்லப்பிராணிகள்:

    வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் பெரும்பாலும், எலி மற்றும் இதர பூச்சுகளால் எவ்வித இடையூறும் சந்தித்து இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. பூனை மற்றும் நாய்களை வீடுகளில் வளர்க்கும் போது, எலி மற்றும் இதர பூச்சிகள் வீட்டிற்குள் வர நினைக்காது. செல்லப்பிராணி வைத்திருக்கும் கார் ஓனர்களுக்கு இது சிறந்த வழிமுறை ஆகும்.  

    • மெக்லாரென் நிறுவனத்தின் புதிய ஹைப்ரிட் ஹைப்பர்கார் 3.0 லிட்டர் டுவின் டர்போ V6 யூனிட் கொண்டுள்ளது.
    • இதில் உள்ள 7.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி 31 கிமீ வரை செல்லும்.

    பிரிட்டன் நாட்டு சூப்பர்கார் உற்பத்தியாளரான மெக்லாரென் இந்திய சந்தையில் புதிய அர்டுரா பிளக்-இன் ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் அர்டுரா மாடலின் விலை ரூ. 5.1 கோடி, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வோகிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மெக்லாரென் நிறுவனத்தின் அர்டுரா, மூன்றாவது ஹைப்ரிட் கார் மாடல் இது ஆகும். P1 மற்றும் ஸ்பீடுடெயில் ஹைப்பர்கார் மாடல்கள் வரிசையில் புதிய அர்டுரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற இரண்டு ஹைப்பர்கார்களை போன்று இல்லாமல், புதிய அர்டுரா மாடலில் தான் முதல் முறையாக ஹைப்ரிட் பவர்டிரெயியன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் சக்திவாய்ந்த V7 இண்டர்னல் கம்பஷன் எஞ்சின் கொண்ட முதல் மெக்லாரென் கார் இது ஆகும். மெக்லாரென் அர்டுரா ஹைப்ரிட் செட்டப்-இல் 3.0 லிட்டர் டுவின் டர்போ V6 யூனிட் மற்றும் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எஞ்சின் 577 ஹெச்பி பவர், 584 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதில உள்ள ஆக்சியல் ஃபிலக்ஸ் இ-மோட்டார் 93.8 ஹெச்பி பவர், 225 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. அர்டுராவில் உள்ள ஹைப்ரிட் பவர்டிரெயின் 671 ஹெச்பி பவர், 720 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த ஹைப்பர்கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும், 200 கிலோமீட்டர் வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 330 கிலோமீட்டர்கள் ஆகும். புதிய மெக்லாரென் ஹைப்ரிட் மாடலில் உள்ள 7.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 31 கிலோமீட்டர்கள் வரை செல்லும். 

    • டாட் சார்ஜரை பயனர்கள் வீட்டில் உள்ள சார்ஜிங் மையத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
    • குறுகிய காலத்திற்கு டாட் சார்ஜர் வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 450X பேஸ் வேரியண்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்துவோரின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடிவு செய்து இருக்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் பிரபலமான டாட் சார்ஜர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கி வருகிறது.

    தற்போது ஏத்தர் 450X பேஸ் வேரியண்டை 0 முதல் 100 சதவீதம் வரை முழுமையாக சார்ஜ் செய்ய 14 முதல் 15 மணி நேரங்கள் வரை ஆகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்ய இது நீண்ட நேரம் ஆகும். தற்போது டாட் சார்ஜரை ரூ. 7 ஆயிரத்து 500 எனும் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்குகிறது. டாட் சார்ஜரை பயனர்கள் வீட்டில் உள்ள சார்ஜிங் மையத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும்.

    டாட் சார்ஜர் ஒரே இடத்தில் நிரந்தரமாக இன்ஸ்டால் செய்யப்படும் ஒன்றாகும். டாட் சார்ஜர் கொண்டு ஏத்தர் வாடிக்கையாளர்கள் தங்களின் 450X பேஸ் வேரியண்டை 5 மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடயும். குறுகிய காலத்திற்கு டாட் சார்ஜர் வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாட் சார்ஜர் கொண்டு வாடிக்கையாளரின் சொந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். ஒருவரின் டாட் சார்ஜரை மற்றவர்களால் பயன்படுத்தவே முடியாது. 

    • இந்த குறைபாடு பலத்த காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் கொண்டது.
    • ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனை மையங்களுக்கு ரிகால் பற்றிய அறிவிப்பை வழங்கியது.

    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகளின் உயிரை பறிக்கச் செய்யும் ஏர் பேக் கோளாறு காரணமாக சுமார் பத்து லட்சம் எஸ்யுவி-க்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதில் 2014 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட புய்க் என்க்லேவ், செவர்லட் டிராவெர்ஸ் மற்றும் ஜிஎம்சி அகாடியா போன்ற மாடல்கள் அடங்கும்.

    பாதிக்கப்பட்ட கார்களில் உள்ள ஏர்பேக்-ஐ செயல்பாட்டுக்கு வரச் செய்யும் உபகரணம் வெடிக்கும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வெடிக்கும் பட்சத்தில் கூர்மையான மெட்டல் பாகங்கள் கேபினுள் வீசப்படும். இது பலத்த காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    2017 செவரலட் டிராவெர்ஸ் மாடல் விபத்தில் சிக்கும் போது ஏர்பேக் சரியாக வேலை செய்யவில்லை. இதை தொடர்ந்து தான், இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது. மே 10, 2023 அன்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனை மையங்களுக்கு ரிகால் பற்றிய அறிவிப்பை வழங்கி இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாத வாக்கில் அதுபற்றிய அறிவிப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தங்களது கார் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பயனர்கள் NHTSA ரிகால்ஸ் வலைதளம் சென்று பார்க்கலாம்.

    ×