search icon
என் மலர்tooltip icon

    சிறப்பு வேட்பாளர்கள்

    எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
    சென்னை:

    மிகவும் எதிர்பார்ப்புடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்த தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி, இன்று வெளியான தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடைந்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்று என கூறிய அந்த கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெற முடியவில்லை.

    தேர்தல் தோல்வி தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும்.

    “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    பா.ம.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் வேட்பாளர்கள் வினோத், தி.இரா. சகாதேவன் ஆகியோரை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது சென்னையில் பா.ம.க. 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று உரையாற்றினார்
    சென்னை :

    பா.ம.க. வேட்பாளர்கள் வினோத் (தி.நகர்) தி.இரா. சகாதேவன் (சைதாப்பேட்டை) ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–

    சென்னை வெள்ளத்தில் பா.ம.க. ஆற்றிய பணிகளை மக்கள் பாராட்டுகிறார்கள். நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும்? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அன்புமணி திட்டம் தீட்டி உள்ளார்.

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணா கற்றுக் கொடுத்ததை இரு திராவிட கட்சிகளும் கைவிட்டு விட்டன. கண்ணியமான அரசியல், முன்னேற்றத்துக்கான அரசியல் பற்றி அன்புமணி பேசுகிறார். இப்படி ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தாரா? என்று மக்கள் பாராட்டும் அளவுக்கு அன்புமணி பேசி வருகிறார்.

    மதுவை கொடுத்து மக்களை சீரழித்துவிட்டது திராவிட கட்சிகள். எங்கும் ஊழல் மலிந்துவிட்டது. புரையோடிப்போன இந்த புண்ணை குணமாக்க மருத்துவர் அன்புமணியால் தான் முடியும்.

    இரு திராவிட கட்சிகளையும் மக்கள் ஒதுக்கி விட்டார்கள். இளைஞர்கள் எங்களை தனியாக நிற்க வற்புறுத்தினார்கள். இப்போது பெருகி வரும் ஆதரவை பார்க்கிறேன். 200 தொகுதிகளுக்கு மேல் பா.ம.க. கைப்பற்றி ஆட்சியை பிடிக்கப்போவது உறுதி.

    சென்னையில் உள்ள 22 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றுவோம். ‘மாம்பழம்’ சின்னத்துக்கு வாக்களித்து மாற்றத்தை தாருங்கள். முன்னேற்றத்தை நாங்கள் தருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வேட்பாளர்கள் சுப்பிரமணி (வில்லிவாக்கம்), அகிலேஷ் (அண்ணாநகர்), குமார் (விருகம்பாக்கம்), வினோபா (வேளச்சேரி) மற்றும் ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், கன்னியப்பன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளன, அவற்றை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    5 முறை ஆண்ட தி.மு.க.வும், 3 முறை ஆண்ட அ.தி.மு.க.வும் கடந்த காலத்தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் அவர்கள் வெளியிட்ட வாக்குறுதிகளை முழுமையாக இரு கட்சிகளும் நிறைவேற்றியிருந்தாலே மக்கள் நல கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

    தற்போது கூட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற அதிகார போதையில் இரு கட்சிகளும் தள்ளாடுகின்றன. எனவே தான், கடந்த காலங்களில் என்ன வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் கொடுத்தார்களோ அதையே திரும்பத்திரும்ப ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளாக வெளியிட்டு வருகின்றனர். அப்படி என்றால், அவற்றை எல்லாம் நிறைவேற்றவில்லை என்றுதானே அர்த்தம்.

    தற்போது, அவர்கள் கொடுக்கும் பொய்யான, கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதிகார போதையில் தள்ளாடும் இரு கட்சிகளுக்கும் மக்கள் தங்கள் மவுனப் புரட்சியின் மூலம் பாடம் கற்பிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா  பேசியதாவது:-

    ஏழை மக்களின் தரம் உயர்வதற்கு பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்காக அனைவருக்கும் தரமான கல்வியை அ.தி.மு.க. அரசு வழங்கி உள்ளது. மாணவர்களின் கல்வித்தரம் உயர தொடர்ந்து வழிவகை காணப்படும்.

    கல்வி வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. பள்ளிக்கல்வியில் தமிழகம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் நலன் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படவில்லை. வெற்று வாக்குறுதிகளே உள்ளன. தி.மு.க. ஆட்சியின்போது மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் தனியாருக்கு மட்டுமே பயன் கிடைத்தது. தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. தி.மு.க. திட்டத்தை விட எங்களின் திட்டமே சிறந்தது.

    அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசால் தாமதம் ஏற்பட்டது. வேலூர் கூட்டு குடிநீர் திடடம் அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர்.

    தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்று பொருள். எங்கு பார்த்தாலும் ஊழல் மயம். ஊழலையே தொழிலாக கொண்டுள்ளது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி. மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி. எனவே, இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வரும்போது அவர்களை வாக்காளர்கள் விரட்டியடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அ.தி.மு.க. ஆட்சியின் இருளை உதயசூரியன் போக்கும் கருணாநிதி பிரசாரம்
    சென்னை :

    தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து வேன் மூலம் புறப்பட்டு மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், விருகம்பாக்கம், தி.நகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனை ஆதரித்து சிட்டி சென்டர் அருகிலும், வேளச்சேரி தி.மு.க. வேட்பாளர் நடிகர் சந்திரசேகரை ஆதரித்து திருவான்மியூரிலும், சோழிங்கநல்லூர் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேசை ஆதரித்து மேடவாக்கத்திலும், தாம்பரம் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து தாம்பரம் பஸ் நிலையத்திலும் பிரசாரம் செய்தார்.

    இரவு 8.10 மணிக்கு பல்லாவரம் தி.மு.க. வேட்பாளர் இ.கருணாநிதியை ஆதரித்து பல்லாவரம் பஸ் நிலையம் அருகிலும் ஆலந்தூர் தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து ஆலந்தூர் எம்.கே.என். சாலையிலும் வேன் பிரசாரம் செய்தார்.

    இரவு 8.40 மணிக்கு விருகை தொகுதி தி.மு.க. வேட்பாளர் க.தனசேகரனை ஆதரித்து சாலிகிராமம் தசரதபுரம் பஸ் நிலையம் அருகிலும், தி.நகர் வேட்பாளர் டாக்டர் கனிமொழியை ஆதரித்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அருகிலும் பேசினார்.

    பிரசாரத்தில் கருணாநிதி பேசியதாவது:–

    நாடு வாழ, நல்லாட்சி மலர உங்கள் அன்பான ஆதரவை தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வழங்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் படிந்துள்ள இருள் விலக, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ நீங்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.

    இந்த ஆட்சியில் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். இந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

    உங்கள் கைகளில் தான், தமிழ்நாட்டின் எதிர் காலம் இருக்கிறது. அந்த எதிர்காலத்தை எழில் காலமாக மாற்றி அமைத்து, திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்றான, சமத்துவம், சமதர்மம், மதச்சார்பற்ற தன்மை, இவைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் அளித்து, இளைஞர்கள் எழுச்சி பெறவும், வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு நன்மை, தாய்மார்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளில் இருந்து விடுதலை– இவைகளை நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பை நம்முடைய கழகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

    தி.மு.க. ஆட்சி ஏற்கனவே நடைபெற்ற கழக ஆட்சியில் எத்தகைய சாதனைகள் நடைபெற்றன என்பது உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட கழக ஆட்சி மீண்டும் நடைபெற உங்களுடைய அன்பான ஆதரவு தேவை. எதிர் காலம் இளைஞர்களுடைய கைகளிலேதான் இருக்கிறது.

    தி.மு.க. இந்த தேர்தலில் பெரு வெற்றியை பெறும் என்று தமிழ்நாட்டில் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த மக்களில் நீங்களும் இருக்கிறீர்கள்.

    எனவே இளைஞர்களாகிய நீங்கள், இதே ஆர்வத்தை தொடர்ந்து காட்டி, அக்கறையில்லாமல் அவசரத்துக்கு ஆளாகி கோட்டை விட்டு விடாமல், கழகத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கருணாநிதி பேசினார்.

    மாலை 6 மணிக்கு வேன் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி இரவு 10 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்தார்.

    குரோம்பேட்டை பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி ஆகிய இடங்களில் கடும் வாகன நெரிசலில் கருணாநிதியின் கார் போக முடியாமல் 15 நிமிட நேரம் சிக்கிக் கொண்டது.

    அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான இளைஞர்களும், பெண்களும் தங்களது மொபைல் போன்கள் மூலம், வாகனத்தின் வெளிச்சத்தில் கருணாநிதியை போட்டி போட்டு படம் எடுத்து மகிழ்ந்தனர்.
    டாஸ்மாக் அரக்கனை ஒழித்து பெண்களை காப்பாற்றுவேன் என்று விருகம்பாக்கம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரத்தின் போது பேசினார்.

    சென்னை:

    பாரதீய ஜனதா தமிழக தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரி முதல்வரை சந்தித்தார். அப்போது பாரதிதாசன் குடி யிருப்பு பகுதி மக்களின் கோரிக்கை மனுவை நிறை வேற்ற வற்புறுத்தியதோடு மத்திய தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா நடவடிக்கை எடுக்க அவருக்கு கடிதம் அனுப்பினார்.

    மேலும் தமிழிசை குடியிருப்பு பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தபோது, “கடந்த 5 ஆண்டுகளாக அ.தி. மு.க. அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டதால், பெண்களின் வாழ்க்கை இருண்டு விட்டது. வீட்டில் குடிகாரர்களின் தொல்லையால் பல கொலைகளும், தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.

    பெண்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.க. அரசை வீட் டுக்கு அனுப்புவோம். கல்லூரி மாணவர்கள் தொடங்கி, பள்ளி மாணவர்கள் வரை பலரும் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள்.

    என்னை நீங்கள் தேர்வு செய்தால் மது என்னும் அரக்கனை உடனடியாக ஒழித்துக் கட்டுவேன். பெண்கள் நிம்மதி யோடு வாழ அனைத்து நட வடிக்கைகளை எடுப்பேன்” என்று பேசினார்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம் செய்கிறார். வீதி, வீதியாக வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
    சென்னை :

    தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

    முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.

    தற்போது ஜெயலலிதா தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு கடந்த 25-ந் தேதி வந்திருந்தார். அப்போது அவருக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வேன் மூலம் புறப்பட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    தொகுதிக்கு தான் செயல்படுத்திய நலத்திட்டங்களையும், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களையும் எடுத்துரைத்து ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு வாக்குகள் சேகரிக்க உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம், கொருக்குப்பேட்டை உள்பட இடங்களில் ஜெயலலிதா திறந்தவேனில் பேசி வாக்குகள் சேகரித்தார்.

    தற்போது அதே இடங்களில் ஜெயலலிதா மீண்டும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் ஜெயலலிதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் அவருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது பிரசாரம் செய்வதற்காக ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதிக்கு வர உள்ளதையடுத்து, அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு மேள-தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கவும் தற்போதே தயாராகி வருகின்றனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா தனது சூறாவளி பிரசாரத்தை கடந்த மாதம் 9-ந் தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கி, விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சீபுரம், சேலம், திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நிறைவு செய்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா வாக்குகள் சேகரிக்க உள்ளார். தொடர்ந்து 8-ந் தேதி தஞ்சாவூரிலும், 10-ந் தேதி வேலூரிலும், 12-ந் தேதி நெல்லையிலும் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். 
    முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    கோவை:

    தமிழக சட்டசபைக்கு வருகிற 16–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார்.

    கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கேரள மாநிலத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.

    இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பொதுக் கூட்ட மைதானத்துக்கு வந்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை செல்கிறார்.

    பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு எதிரே சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவையில் மதியம் முதலே தொண்டர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர்.

    பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஜெயலலிதா வரும் பாதை, மேடை அமைந்துள்ள இடம், பொதுக் கூட்ட மைதானம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் 5 ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், வானூர், மயிலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், ஆகிய 11 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா நாளை பிரசாரம் செய்கிறார்
    விழுப்புரம் :

    தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    விழுப்புரத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், வானூர், மயிலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், ஆகிய 11 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களையும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ் பெண்ணாத்தூர் ஆகிய 2 சட்டசபை தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதையொட்டி விழுப்புரம் ஜானகிபுரம் புற வழிச்சாலையில் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    முதல்–அமைச்சர் ஜெயலலிதா மதியம் 3 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழுப்புரம் வருகிறார். அங்கு அவர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு கீழ்பகுதியில் ஆண்கள் அமர தனியாகவும், பெண்கள் அமர தனியாகவும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. நெரிசல் ஏற்படாமல் தடுக்க ஆங்காங்கே தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளன.

    கூட்டத்திற்கு விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், கடலூர், பெரம்பலூர், விழுப்புரம், ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் பேச்சு
    விழுப்புரம் :

    உளுந்தூர்பேட்டை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அங்கிருந்து ஊர்வலமாக வந்து உளுந்தூர்பேட்டை பஸ்நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:–

    இந்த தொகுதி மக்களின் கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். பல முறை இந்த தொகுதியில் நிற்குமாறு கேட்டீர்கள். ஒவ்வொரு முறையும் என்னை பல தொகுதிகளிலும் போட்டியிடுமாறு மக்கள் கேட்டு வருகின்றனர்.

    தற்போது நான் இங்கு போட்டியிடுகிறேன். இந்த தொகுதி மக்களுக்காக நான் பாடுபடுவேன். இங்குள்ள மக்கள் கல்லூரி கட்டித்தரவேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

    எனவே கல்லூரி கட்டி தருவேன், உளுந்தூர்பேட்டை மைய பகுதியில் உள்ளது. அதிகமாக விபத்துகள் நடக்கிறது. எனவே இங்கு உலக தரம் வாய்ந்த மருத்துவமனையை கட்டித்தருவேன். உங்கள் குறைகளை தீர்க்க பாடுபடுவேன். திரும்ப திரும்ப கருணாநிதி, ஜெயலலிதாவை குறை கூற என்ன இருக்கிறது.

    முடியட்டும் விடியட்டும், முடியட்டும் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சி, விடியட்டும் தமிழ்நாடு. தமிழகம் முழுவதும்நான் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே தொண்டர்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் எனது வெற்றிக்காக பாடுபட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றிபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த அடியை விட சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.
    மதுரை:

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை முந்தைய திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்றது. அதுவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரே முறைகேடுகளில் ஈடுபட்டனர். கிரானைட் கொள்ளை தொடர்பாக 2009-ம் ஆண்டே பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தன.

    முதல்-அமைச்சர் கருணாநிதியிடமே கூட புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் கிரானைட் கொள்ளையர்கள் மீது அன்றைய தி.மு.க. அரசோ, அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியோ ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா என்றால் இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கொள்ளைக்கே அவர்கள் காரணமாக இருந்ததால் தான், கிரானைட் கொள்ளையர்களை விட்டு விட்டு அது பற்றி தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி.

    2011-ம் ஆண்டு நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின், இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அறிக்கை பெறப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டதன் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பப்பட்டு 2012-ம் ஆண்டு மே மாதம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை அரசுக்கு சமர்ப்பித்தார். அதில், ஒலிம்பஸ் கிரானைட் உள்ளிட்ட மூன்று குவாரிகளை மட்டும் ஆய்வு செய்ததாகவும், அதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டால், மதுரை மாவட்டம் முழுவதும் 16,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்ட ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் கருணாநிதியின் பேரன்.

    கருணாநிதி ஏன் கிரானைட் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இப்போது புரிகிறதா? எனது ஆட்சியில், கிரானைட் முறைகேடுகள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிமையாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்கள் வெட்டியெடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்ட ஆணையர் விசாரணை மேற்கொண்டு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தி.மு.க.வினர் தங்களது திண்ணைப் பிரச்சார துண்டு பிரசுரத்தில் கிரானைட்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என பிரசாரம் செய்கிறார்கள்.

    மதுரையில் கிரானைட் வெட்டி எடுப்பது 2012-ம் ஆண்டு முதலே எனது அரசால் நிறுத்தப்பட்டுவிட்டது. அப்படியென்றால் அவர்கள் சொல்லும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது தி.மு.க.வினர் தான் என்பது புரிந்து விட்டதா?

    காங்கிரஸ்-தி.மு.க. நடத்திய மத்திய கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஊழல்; 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்; மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுவசதியில் ஊழல்; காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என விளையாட்டிலே கூட விளையாடிய கூட்டணி தான் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பதை மறவாதீர்கள்.

    முன்பு ஆட்சியில் இருந்த போது சுருட்டியது போதாதென்று மேலும் சுருட்ட வாய்ப்பு கேட்டு உங்களை தேடி வாக்கு கேட்க தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் வருவார்கள்.

    மறுபடியும் உங்கள் வாக்குகளைப் பெற்று கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணத்தில் உங்களை தேடி அதே கொள்ளைக் கூட்டம் வரும். அவர்களுக்கு, அந்த தி.மு.க-வுக்கு, இந்தத் தேர்தலில், கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, பலமான அடியை நீங்கள் கொடுத்தால் தான் அந்தக் கொள்ளைக் கூட்டம் நிரந்தரமாக ஒழியும்.

    தி.மு.க.-காங்கிரஸ் கொள்ளைக் கூட்டணியையும் ஒழிக்க வேண்டும். அதற்கு 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த பலமான அடியை விட, வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுத்து, அந்தக் கூட்டணியை, கொள்ளைக் கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். தி.மு.க.-காங்கிரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

    சட்டம்-ஒழுங்கைப் பற்றி ஒரு சில கருத்துகளை இப்பொழுது தெரிவிக்க விரும்புகிறேன். 2006 முதல் 2011 வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சி ஒரு அராஜக ஆட்சி.

    தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக மாற வேண்டும் என்று தான் நீங்கள் 2011-ம் ஆண்டில் ஒரு அமைதிப் புரட்சியை ஏற்படுத்தினீர்கள். உங்களது எண்ணப்படியே இன்றைக்கு தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது. யாரும் எந்தவித அச்ச உணர்வும் இன்றி வாழ முடிகிறது. நடமாட முடிகிறது. தங்களது சொத்துகளை அனுபவிக்க முடிகிறது. அன்றைய தி.மு.க. அரசும், தி.மு.க.-வினரும் காவல் நிலையங்களுக்கு சென்று காவலர்களை அச்சுறுத்திய காரணத்தினால் தான் சட்டம்-ஒழுங்கு அப்போது சீர்குலைந்திருந்தது. அதை மாற்றி சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியது நான் தான் இன்று எந்த அரசியல்வாதியும் காவல் நிலையத்திற்கு சென்று காவலர் பணிகளில் தலையீடு செய்ய முடியாது. எனவே தான் சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுகிறது. குற்றங்கள் குறைந்து வருகின்றன. அன்றைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை, சமூக விரோத கும்பல் உதவியுடன் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களை மிரட்டி அவர்களின் சொத்துகளை அபகரித்தனர். 2011-ம் ஆண்டு நான் ஆட்சி பொறுப்பேற்ற பின், நில அபகரிப்பு புகார்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்; நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன்.

    பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 3,264 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டனர். 3,678 கோடி ரூபாய் மதிப்புள்ள 5,193 ஏக்கர் நிலம் மற்றும் 35 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி வீட்டுமனைகள் நில அபகரிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    1,084 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இதில் 3 வழக்குகளில் எதிரிகள் தண்டனை பெற்றுள்ளனர். சிறப்பு நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் விரைந்து முடிவுக்கு வர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கு நிலைமை சீரமைக்கப்பட்டு உள்ளதோடு மட்டுமல்லாமல் குற்றங்களும் தற்போது குறைந்துள்ளன.

    கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கொலைகள், ஆதாயக் கொலைகள், கூட்டுக் கொள்ளைகள், கொள்ளைகள், களவு வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள் என பல்வேறு குற்றங்களின் எண்ணிக்கை தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் குறைந்துள்ளன.

    மதுவிலக்கைப் பற்றி இப்பொழுது பல அரசியல் கட்சித் தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க.வின் கருத்தினை இப்போது தெரிவிக்க விரும்புகிறேன்.

    எனது தலைமையிலான அ.தி.மு.க., எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.

    முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.

    இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
    10 வயதில் இருந்து 92 வயது வரை உழைக்கிறேன் நான் ஓய்வு பெற விரும்புகிறேன் தஞ்சாவூர் கூட்டத்தில் கருணாநிதி பேசியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் தனக்கு ஆதரவு கேட்டு வேனில் பிரசாரம் செய்தார்.

    பின்னர் கருணாநிதி தஞ்சை திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:–

    தமிழ்நாடு இந்த 5 ஆண்டுகாலத்தில் எந்த அளவுக்கு சீரழிந்து போய் இருக்கிறது. தமிழகத்தை இன்று ஆள்கிறவர்கள் எந்த அளவுக்கு சீரழித்து இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டும். கழக ஆட்சியில் விலைவாசி என்ன? இந்த ஆட்சியில் விலைவாசி எப்படி உள்ளது என்பதை தாய்மார்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    (அப்போது ஒவ்வொரு பொருட்களின் விலையையும் பட்டியலிட்டார்). ஏதோ, இந்த தேர்தலில் வெற்றி அடைந்தால் உயர்ந்த இடத்துக்கு போய் விடுவோம், உங்களை எல்லாம் மதிக்க மாட்டோம் என்று எண்ணுகிறவர்கள் அல்ல நாங்கள்.

    இந்த கூட்டத்தில் நாம் எடுத்துவைக்கிற எந்த கருத்துகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதைப்போல ஒரு அறிக்கையை இனியாரும் வெளியிடப்போவது இல்லை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடாமல் மக்களை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு அறிக்கை தேவையில்லை. தி.மு.க. ஒவ்வொரு தேர்தலிலும் அறிக்கை வெளியிட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் என்று கூறி அதை நிறைவேற்றி வருகிறோம்.

    இன்றைக்கு நாட்டில் பணம் தண்ணீரைப்போல இறைக்கப்படுகிறது. தண்ணீரைப்போல என்றால், தண்ணீர் கூட இன்று கிடைப்பது இல்லை. அதற்கு மேலாக வாரி இறைத்து இந்த தேர்தலை நடத்த அ.தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பணத்தை தண்ணீர் போல செலவழித்து இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற வேண்டும். மீண்டும் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும். தாங்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாட்டில் ஒரு கூட்டம் நடமாடுகிறது.

    இந்த நாட்டைப்பற்றி கவலைப்படாதவர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது. சிக்கிய ஆட்சியை மீட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். என்னுடைய மக்களை காப்பாற்ற வேண்டும். திராவிட இயக்கத்தின் குறிக்கோளையே, திராவிட இயக்கம் ஏன் தோன்றியது என்ற நோக்கத்தை குழி தோண்டி புதைத்தவர்கள் இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்பிக்க இது தான் சரியான தருணம்.

    தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றி பெற்றால் வீராப்பு கொள்வதும், தோல்வி அடைந்தால் முகத்தை கீழே தொங்கப்போடுவதும் அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. தி.மு.க.வை நடத்தி செல்கின்ற பெரும் பொறுப்பு வாய்ந்த பேரியக்கமாக நான் கருதுகிறேன். அதற்கு யாராவது ஊறு விளைவித்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன். அவர்களின் கருத்துகளை எதிர்த்து, எழுத்துக்கு, எழுத்து, பேச்சுக்கு பேச்சு என்று அந்த நாள் முதல் இந்த நாள் வரை போராடுகிறேன். அண்ணாவின் தம்பிகளான எங்களை யாரும் வீழ்த்த முடியாது. கடைசி மூச்சு இருக்கும்வரை இயக்கத்திற்காக பாடுபடுவேன்.

    இங்கு இளைஞர்கள் கூட்டத்தை பார்க்கிறேன். இளைஞர்கள் தான் இந்த சமுதாயத்தின் ஆணி வேர்கள். அவர்களால் தான் இந்த உலகத்தில் பல புரட்சிகள் நடைபெற்றன. இளைஞர்கள் தான் நாட்டை ஆள கூடியவர்கள்.

    என்னால் நடக்க கூட முடியவில்லை. அப்படி இருந்தாலும் கூட நீங்கள் காட்டுகிற உணர்வு, என் உள்ளத்தில் உள்ள அன்பு, ஆர்வம் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது. இவைகளையெல்லாம் பொக்கிஷமாக கருதுகிறேன். நாம் அனைவரும் ஒரே குறிக்கோளாடு வாழ வேண்டும். தமிழர்களை காப்பாற்ற, நம்மை விட்டால் யாரும் இல்லை.

    வேறு யார் வந்து காப்பாற்றப்போகிறார்கள். நாம்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். நாம்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். எனவே எந்த தியாகத்துக்கும் தயாராகுங்கள். நான் உங்களை கேட்டுக்கொள்வது. நாம் எதற்கும் தயார், எதற்கும் ஈடுகொடுப்போம் என்ற சபதத்தை ஏற்று பணியாற்ற வேண்டும்.

    என்னைப்பொறுத்தவரை எனக்கு 92 வயதாகிறது. 10 வயது தொடங்கி அரசியல் பணிஆற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த ஓய்வு ஒன்று தான் நான் பட்டபாட்டுக்கு, நான் உழைத்த உழைப்புக்கு, நான் அடைந்த பயன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

    நான் பேச முடியாது. தழுதழுத்து பேசுகிறேன். என்னால் சரியாக நடக்கக்கூட முடியாது. தள்ளாடி தள்ளாடி நடக்கிறேன். உங்கள் அன்பால் உதவியால் நான் கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆதரிப்பது தனிப்பட்ட கருணாநிதியை அல்ல. கருணாநிதி கொண்டிருக்கும் கொள்கை, உணர்ச்சி, வேகத்தை.

    தமிழர்களை காக்க என்னை விட்டால் வேறு கதியில்லை. நாம் தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனவே உங்களை கேட்டுக்கொள்வது தியாகத்துக்கு தயாராக இருங்கள். எதற்கும் நாம் தயார், எதற்கும் ஈடுகொடுப்போம் என்ற சபதத்தை ஏற்று பணியாற்றுவோம்.

    இந்த தேர்தலில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்சமுதாயத்துக்கு விடுதலை, சுதந்திரம் கிடையாது. எனவே தேர்தலில் நாம் சீரோடும், சிறப்போடும் நடப்போம். உங்கள் அன்பால், உதவியால் தான் நான் கடைசி மூச்சை கூட விட்டு கொண்டு இருக்கிறேன். என்னை நீங்கள் ஆதரிப்பது என்பது தனிப்பட்ட கருணாநிதியை அல்ல. கருணாநிதி கொண்டிருக்கிற கொள்கை, அந்த உணர்ச்சியை, அந்த வேகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். இந்த தேர்தலை பொறுத்த வரை தஞ்சையில் கூடி இருக்கிற தமிழ்ப்பெருங்குடி மக்கள், இளைஞர்கள், வாலிபபட்டாளங்களே இந்த தேர்தலில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சமுதாயத்துக்கு விடுதலை கிடையாது.

    கடையை மூடினால் யாரும் மது அருந்த முடியாத அளவுக்கு என்னென்ன சட்டத்தை விதிக்க வேண்டுமோ? அதை எல்லாம் செய்து மதுவை ஒழித்தே தீருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    ×