search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • மருமகள் குழந்தையுடன் வீடு திரும்பிய நிலையில், அவரை 7-வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து செல்ல லிப்ட் வசதி இல்லாததால் வாங் கவலை அடைந்தார்.
    • புதிதாக பிறந்த குழந்தையையும் பத்திரமாக ஏற்றி 7-வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    மாமியார்- மருமகள் இடையேயான உறவு பெரும்பாலான குடும்பங்களில் எப்போதும் சண்டையாகவே இருக்கும். விதிவிலக்காக சில குடும்பங்களில் மட்டுமே மருமகள் மீது மாமியார் அதிக அன்பு காட்டுவார்.

    அந்த வகையில், சீனாவில் குழந்தை பெற்று வீடு திரும்பிய மருமகளை, லிப்ட் வசதி இல்லாததால் 7-வது மாடிக்கு அழைத்து செல்வதற்காக கிரேனை வாடகைக்கு எடுத்த மாமியாரின் செயல் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

    சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள சென்யாங் நகரை சேர்ந்தவர் வாங். இவரின் மருமகள் கர்ப்பம் அடைந்த நிலையில், சமீபத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இதனால் வாங்கின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் மருமகள் குழந்தையுடன் வீடு திரும்பிய நிலையில், அவரை 7-வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து செல்ல லிப்ட் வசதி இல்லாததால் வாங் கவலை அடைந்தார். இதைத்தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் ராட்சத கிரேனை வாடகைக்கு வரவழைத்து அதில் மருமகளையும், புதிதாக பிறந்த குழந்தையையும் பத்திரமாக ஏற்றி 7-வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் மாமியாரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.

    இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எரிமலையை சுற்றியுள்ள 4 கிலோ மீட்டர் தூரம் வரை வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
    • எரிமலை வெடிப்புக்கான அபாயம் குறைந்துள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    ஜகார்த்தா:

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. இதில் ஜாவா தீவு அருகே உள்ள ருவாங் எரிமலை கடந்த வாரம் வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீக்குழம்புகள் வெளியேறின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதனையடுத்து எரிமலையை சுற்றியுள்ள 4 கிலோ மீட்டர் தூரம் வரை வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கையாக அதன் அருகில் உள்ள ரதுலங்கி விமான நிலையமும் மூடப்பட்டது.

    தற்போது எரிமலை வெடிப்புக்கான அபாயம் குறைந்துள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே ஒரு வாரத்துக்கு பிறகு ரதுலங்கி விமான நிலையம் திறக்கப்பட்டு மீண்டும் தனது சேவையை தொடங்கியது.

    • பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்' என்ற நுண்ணுயிர் கண்டறியப்பட்டது.
    • சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2019-ம் ஆண்டிலும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.

    மாஸ்கோ:

    பாகிஸ்தானில் இருந்து ரஷியாவுக்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் டன் அளவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. எனவே பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்' என்ற நுண்ணுயிர் கண்டறியப்பட்டது. இது ரஷியாவின் உணவு பாதுகாப்பு தரத்தை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே பாகிஸ்தான் தூதரை அழைத்து இது தொடர்பாக கடும் ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.

    மேலும் இதேநிலை தொடர்ந்தால் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2019-ம் ஆண்டிலும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பொது போக்குவரத்துகளான பஸ், மெட்ரோ ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்னும் சேவை தொடங்கவில்லை.

    துபாய்:

    துபாயில் ஒரு வாரம் கனமழை பாதிப்பால் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் நேற்று தங்கள் அலுவலகங்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்பினர். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 200 மீட்டரை கடக்க 45 நிமிடம் வரை ஆனது.

    அமீரகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைவெள்ளம் தேங்கி இருந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

    குறிப்பாக மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டன. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    கடந்த வாரத்தில் குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தனர்.

    துபாயில் நிலைமை தற்போது சீராகி வருவதால் ஒருவாரமாக வீட்டில் முடங்கி கிடந்த மக்கள் நேற்று வாரத்தின் முதல் நாளன்று பணிக்கு திரும்பினர். இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொது போக்குவரத்துகளான பஸ், மெட்ரோ ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    துபாயின் முக்கிய வர்த்தக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியான பிசினஸ் பே-ல் நேற்று காலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மக்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட நேரம் முன்னேறி செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஷேக் ஜாயித் சாலை அருகே அல் சபா சுங்க சாவடி அருகே உள்ள உட்புற சாலைகளில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வாகனங்கள் ஆமை வேகத்திலேயே ஊர்ந்து சென்றன. இதனால் சுமார் 200 மீட்டர் தூரத்தை கடக்க 45 நிமிடம் பிடித்ததாக வாகனங்களில் சென்றவர்கள் கூறினர். பிசினஸ் பே பகுதி மட்டுமல்லாமல் அல் பர்சா தெற்கு, அல் கைல், ஹெஸ்சா சாலை மற்றும் ஜே.வி.சி. ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அதேபோல 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்னும் சேவை தொடங்கவில்லை. மேலும் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் தாமதமாக வந்தது. இதன் காரணமாக வழக்கமாக செல்லும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

    • தைவானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இதனால் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் குலுங்கின.

    தைபே:

    தைவான் தலைநகர் தைபேயில் நேற்று நள்ளிரவு 11.35 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் தைபே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    ஏற்கனவே கடந்த 3-ம் தேதி தைவானின் ஹூவாலியன் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்நிலையில் தற்போது 65,960 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
    • அமெரிக்க குடியுரிமை பெற்ற 2- வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது

    அமெரிக்க நாட்டில் வசிக்க உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகிறார்கள்.மேலும் வேலை மற்றும் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் அமெரிக்கா சென்று வருகிறார்கள்.

    அமெரிக்காவின் வாழ்க்கை ,வசதிகள் பிடித்த காரணத்தால் அந்நாட்டில் வசிப்பதற்கு குடியுரிமை பெற தினந்தோறும் ஏராளமான பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.





    2022 -ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி 46 மில்லியன் வெளிநாட்டில் பிறந்த மக்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர் .இது அமெரிக்க நாட்டின் மொத்த மக்கள் தொகையான 333 மில்லியனில் 14 சதவீதம் ஆகும்.

    மெக்ஸிகோவில் பிறந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், கியூபா மற்றும் டொமினிகன் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள் என சமீபத்திய கணக்கெடுப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.




    2022 -ல் 128,878 மெக்சிகன் மக்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றனர். அதை தொடர்ந்து, இந்தியாவை சேர்ந்தவர்கள் 65,960 பேர் குடியுரிமை பெற்றுள்ளனர். பிலிப்பைன்ஸ் 53,413, கியூபா 46,913, டொமினிகன் குடியரசு 34,525, வியட்நாம் 33,246 பேர் குடியுரிமை பெற்றனர்.




    இந்நிலையில் தற்போது 65,960 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க குடியுரிமை பெற்ற 2- வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல்.
    • 1200 பேரை கொன்று குவித்ததுடன், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென காசா எல்லையைத் தாண்டி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்தனர். இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளை பிடித்துக் சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்திய தொடங்கியது. ஏழு மாதங்களாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் அமைப்பினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்ரேல் ராணுவத்தின் உளவுத்துறை தோல்வியும் முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை உயர்அதிகாரிகளும் பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜானாமா செய்யாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று ராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இஸ்ரேல் ராணுவத்தின் தலைசிறந்த பாதுகாப்பு அமைப்பை முறியடித்து இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தடுக்க முடியாததற்கு தான் பொறுப்பேற்பதாக தாக்குதல் நடைபெற்ற பிறகு ஹலிவா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் 1200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் கட்சி பிலாவல் பூட்டோ கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது.
    • வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டதால் சில இடங்களில் மறுத்தேர்தல்.

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணங்களுக்கான உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும், இம்ரான் கான் கட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்தது. இதன்தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    அதனடிப்படையில் 21 பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணங்களின் உறுப்பினர் இடங்களுக்கு நேற்று மறுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.-என்), பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாம் ஆதரவு பெற்ற சன்னி இட்டேஹாத் கவுன்சில் (எஸ்ஐசி), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

    தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை அறிவிக்கவில்லை. ஆனால் தனியார் மீடியாக்கள் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

    அதனடிப்படையில் நவாஸ் ஷெரீப் கட்சி இரண்டு தேசிய உறுப்பினர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் மக்கள் கட்சி, சன்னி இட்டேஹாத் கவுன்சில் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சையாக நின்ற ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார்.

    மாகாணங்களுக்கான உறுப்பினரில் 16 இடங்களில் 10 இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி பெற்றி பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் மக்கள் கட்சி, எஸ்ஐசி, இஸ்டெகாம் பாகிஸ்தான் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பலுசிஸ்தான் தேசிய கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சையாக நின்றவர்களில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

    இடைத்தேர்தலின்போது ஆங்காங்கே சிறிய வன்முறைகள் ஏற்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் பிடிஐ கட்சி வாக்காளர்களுடன் நடைபெற்ற மோதலின்போது நவாஸ் ஷெரீப் கட்சி தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். இருந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழங்கு கட்டுக்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

    தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு காரணமாக பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தானில் இணையதளங்கள் முடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர்.
    • குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.

    இந்த நிலையில் காசாவின் ரபா நகரில் நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    இதில் 22 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல்-சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்தார். அவரது வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

    குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது. 1.4 கிலோ எடையுள்ள குழந்தை, அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. குழந்தை மூன்று முதல் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். சகானியின் மகள் மலக், தனது புதிய சகோதரிக்கு அரபு மொழியில் ரூஹ் என்று பெயரிட விரும்பினாள் என்று அவரது உறவினர் ரமி அல்-ஷேக் தெரிவித்தார்.

    • சோதனை செய்து பார்த்த போது பண்ணையில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவது நிறுத்தப்பட்டது என குறிப்பிட்டிருந்தனர்.
    • இந்த நுட்பத்தை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள்ளன.

    செம்மறி ஆடுகள் கூட்டமாக இருக்கும் போது சண்டையிட்டு காயம் அடைவது அதனை வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாகவே திகழ்கிறது. இதனை தடுக்க இங்கிலாந்தில் செம்மறி ஆடுகள் மீது பாடிஸ்பிரே தெளித்து விசித்திரமான தீர்வை கண்டுபிடித்துள்ளதாக சில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இங்கிலாந்தின் நார்போக்- சபோல்க் எல்லையில் உள்ள பண்ணை விவசாயிகள் இது தொடர்பாக பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளனர். அதில், செம்மறி ஆடுகள் சண்டையை தடுக்க அவற்றின் மீது பாடிஸ்பிரே தெளித்தோம். இந்த சோதனை செய்து பார்த்த போது பண்ணையில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவது நிறுத்தப்பட்டது என குறிப்பிட்டிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த நுட்பத்தை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள்ளன.

    • மலை ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
    • வீடியோக்கள் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    சீனாவின் தைஷான் பகுதியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான தாய் மலை உள்ளது. 1,545 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. மலையின் உச்சியை அடைவதற்கு 6,600 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.

    இங்குள்ள கோவிலை தரிசிக்கவும், கலாச்சார சின்னங்களை பார்ப்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்கிறார்கள். ஆனால் படியில் ஏறுவதற்குள் அவர்களின் கால்கள் வலுவிழந்து சாதாரணமாக ஏற முடிவதில்லை. எனவே மலை ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    அதில் சில வீடியோக்களில், படிகள் ஏற முடியாமல் சுற்றுலா பயணிகள் ஊர்ந்து செல்லும் காட்சிகளும் உள்ளது. சில பயணிகள் பாதி படி ஏறிய நிலையில், அவர்களின் கால்கள் நடுங்கியதால் அவர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி செல்லும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகின. இந்த வீடியோக்கள் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    ×