search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.
    • விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.

    தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தனக்கு யாரோ பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.

    கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சில மணி நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டது.

    மேலும், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று மாலைக்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • யார்-யார் எந்தெந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும்.

    சென்னை:

    நமது நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்பதை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நாளை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் சிரமமின்றியும் கால தாமதமின்றியும் ஓட்டு போடுவதற்கு வசதியாக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் 80 சதவீதத்துக்கு அதிகமான வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு இந்த பொருட்களை அனுப்பும் பணிகளும் இன்று முழு வீச்சில் நடைபெற்றன.

    இன்று மாலைக்குள் அனைத்து மையங்களுக்கும் மின்னணு எந்திரங்களை கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்படுகிறது.

    தேர்தல் பணியில் 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டு போட வரும் வாக்காளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி 3 கட்டங்களாக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் நாளை அதிகாலையிலேயே பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 3726 மையங்களில் 708 மையங்கள் பதற்றமானவையாகும்.

    இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளை தலைமை செயலகத்தில் இருந்தபடியே அதிகாரிகள் கண்காணிக்க முடியும். அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


    தேர்தல் பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார், 190 கம்பெனி துணை ராணுவப் படையினர், முன்னாள் ராணுவத்தினர், காவலர்கள் என 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள். இவர்களில் யார்-யார் எந்தெந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலையில் இருந்தே வாக்குப்பதிவு மையங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    தற்போது கோடை வெயில் வாட்டி எடுப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே ஓட்டு போட்டுவிட வேண்டும் என்றே பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். இதனால் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் ஓட்டு போட வருகை தந்து விடுவார்கள்.

    இதுபோன்று முன் கூட்டியே வரும் வாக்காளர்களை வரிசையில் நிற்க வைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் இதனை கண்காணித்து வாக்காளர்களை வரிசையாக அனுப்பி வைக்க உள்ளனர்.

    சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குப்பதிவு மையம் வரை சென்று ஓட்டு போடுவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் பல மையங்களில் ஏற்பாடுகள் அரைகுறையாக செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல மையங்களில் நுழைவுவாயல்களில் உள்ள படிகளே மாற்றுத்திறனாளிகளுக்கு தடைகளாக உள்ளன.

    சேத்துப்பட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாய்வு தளம் கைப்பிடிகள் இல்லாமல் காட்சி அளிக்கிறது. ஊன்றுகோலை பயன்படுத்தி வரும் வயதான முதியவர்கள் இந்த சாய்வு பாதையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்று பல்வேறு வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படாமலேயே இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபோன்ற குறைகளை வாக்குப்பதிவு மையங்களில் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    நாளை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தேர்தல் நாளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோரது மேற்பார்வையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீசார் இன்றே உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 42 நாட்கள் பாதுகாக்கப்பட உள்ளன. இதன் பின்னர் ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    • இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும் இதுவரை யாரும் ஓட்டுக்கேட்டு பிரசாரத்துக்கு போவதில்லை.
    • தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இஞ்சிக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை உள்ளது.

    இந்த அணையை சுற்றி அகஸ்தியர் குடியிருப்பு, சேர்வலாறு, பெரிய மைலார், சின்ன மைலார், இஞ்சிக்குழி ஆகிய இடங்களில் காணி பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

    இதில் 'இஞ்சிக்குழி' என்ற கிராமம் காரையாறு அணைக்கு மேல் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் தென்பொதிகை மலையில் நடுகாட்டில் அமைந்துள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது வெறும் 7 குடும்பத்தினர் மட்டும் வசிக்கின்றனர். இந்த மக்கள் இங்கு வாழை, மிளகு, கிழங்கு போன்ற விவசாயம் செய்தும், தேன் எடுத்தும் தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

    இஞ்சிக்குழி பகுதிக்கு செல்ல எந்த ஒரு வாகன வசதியும் கிடையாது. சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காரையாறு அணையை கடந்துதான் இஞ்சிக்குழிக்கு செல்ல வேண்டும்.

    அணையை கடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் படகு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது படகில் ஆட்களை ஏற்ற மறுப்பதால் காணி பழங்குடி மக்கள் மூங்கில் மற்றும் மோட்டார் சைக்கிள் டயரால் 'சங்கடம்' கட்டி அணையை கடக்கின்றனர்.

    இஞ்சிக்குழி மக்கள் அரிசி, பருப்பு உள்பட தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வாரம் ஒருமுறை காரையாறு பகுதிக்கு வந்து செல்கிறார்கள்.

    இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், இஞ்சுக்குழி மக்களுக்கு தேர்தல் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் சென்றடையவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும் இதுவரை யாரும் ஓட்டுக்கேட்டு பிரசாரத்துக்கு போவதில்லை. அரசு சார்பிலும் ஓட்டுப்போட வரும்படி எந்த அழைப்பும் விடுப்பதில்லை என்றே கூறப்படுகிறது.

    இருப்பினும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்களிப்பதற்காக இஞ்சிக்குழி மக்கள் கீழே இறங்கி வரத் தொடங்கி உள்ளனர். காரையாறு அணை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது.

    இங்குதான் இஞ்சிக்குழி மக்கள் உள்பட அனைத்து காணி பழங்குடி மக்களும் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இஞ்சிக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

    இதற்காக 2 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு, சுமார் 25 கிலோ மீட்டர் சவாலான காட்டு பயணம் மேற்கொண்டு கீழே இறங்கி வருகின்றனர். அவர்கள் காரையாறு அருகே சின்ன மைலாரில் உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி விட்டு நாளை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 

    இஞ்சிகுழியில் உள்ள காணி மக்களின் குடியிருப்பு.

    இஞ்சிகுழியில் உள்ள காணி மக்களின் குடியிருப்பு.

    இது குறித்து இஞ்சிக்குழியை சேர்ந்த காணி பழங்குடி மக்கள் கூறுகையில், 'நாங்கள் நடுக்காட்டில் வசிக்கிறோம். எங்களுக்கு ஏற்கனவே எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வனத்துறையினர் படகு தர மறுப்பதால் மிக சிரமத்தோடு அணையை கடந்து எங்கள் ஊருக்கு சென்று வருகிறோம். வேட்பாளர் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது. யாரும் பிரசாரத்துக்கும் வருவதில்லை.

    நாங்கள் இதுவரை ஓட்டு போட்டும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. எங்களுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதில்லை.

    ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமாவது அரசு சார்பில் வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்தால் வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வரப்போகும் நெல்லை தொகுதி புதிய எம்.பி. எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் முபாரக் உசேன் என்பவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதே போன்று நுங்கம்பாக்கம் குமாரமங்கலம் சாலையில் உள்ள ஐ.டி. ஊழியர் தர்சன்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குமரன்நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஆடிட்டர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த 3 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை என குற்றச்சாட்டு.
    • 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கும்படி நோட்டீஸ் விடுத்தேன்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை என ஈபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதால் ஈபிஎஸ் மீது தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதன்பிறகு, செய்தியாளர்களை சந்திதத் தயாநிதி மாறன் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பாக எனது தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் நான் பயன்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினர் என்று கூறி அவதூறு பரப்பியுள்ளார்.

    24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கும்படி எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தேன். ஆனால், அதற்கு பதில் வரவில்லை. அதனால், ஈபிஎஸ் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கு அடுத்த மாதம் 14-ந்தேதி தேதி விசாரணைக்கு வருகிறது.

    தொகுதி நிதியில் சுமார் ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. தொகுதி நிதியை மத்திய சென்னை தொகுதி மக்களுக்காக செலவழித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தேர்தலில் அடையப்போகும் தோல்வியின் விரக்தியில் எனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். அவர் பேசுவது அவருக்கு புரிகிறதா? என்று தெரியவில்லை. ஏதோ வந்தோம் பேசினோம் தி.மு.க.வினரை தாக்கினோம் என்று அவர் பேசுகிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த தேர்தலில் என்னுடைய நண்பர்கள் பலரும் வாக்களித்து விட்டு விரலில் வைத்த மையை காட்டியபோது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
    • இன்னும் கூட பல நாடுகளில் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தமனம்பட்டி கிராமத்தை சேர்ந்த சத்யா (வயது 19) என்பவர் தெரிவிக்கையில்,

    நான் அரசு கல்லூரியில் இயற்பியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த தேர்தலில் என்னுடைய நண்பர்கள் பலரும் வாக்களித்து விட்டு விரலில் வைத்த மையை காட்டியபோது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. முதல் முறையாக இந்த தேர்தலில் எனக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    இதுவரை எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் வாக்களிக்க செல்வதாக கூறி விட்டு செல்லும்போது நாமும் எப்போது வாக்களிக்க செல்வோம் என மிகுந்த ஆர்வமுடன் காத்திருந்தேன்.

    தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.

    வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. அதனை முறையாக நிறைவேற்ற வேண்டும். அந்த வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைப்பது அரிது.

    இன்னும் கூட பல நாடுகளில் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே நமக்கு கிடைத்த ஜனநாயக கடமையை தேர்தலை புறக்கணிக்காமல் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    • தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    * தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    * தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793, பெண்கள்-3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 467.

    * தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மிக எளிதாக வாக்களிப்பதற்காக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    * தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

    * மிக மிக பதட்டம் நிறைந்ததாக 181 வாக்குச்சாவடிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 181 வாக்குச்சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

    * தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    * தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    * தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-873 பேர், பெண்கள்-77 பேர்.

    * 950 வேட்பாளர்களில் 606 பேர் சுயேட்சைகள். மற்றவர்கள் அரசியல் கட்சி வேட்பாளர்கள்.

    * தமிழக வாக்காளர்களில் முதல் முறையாக நாளை வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420.

    * 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679.

    * 30 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 263.

    * 40 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 152.

    * 50 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 51 ஆயிரத்து 484.

    * 60 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 71 லட்சத்து 64 ஆயிரத்து 278.

    * 70 வயது முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 66 ஆயிரத்து 798.

    * 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 14 லட்சத்து 44 ஆயிரத்து 851 பேர் உள்ளனர்.

    * தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    * தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது பணிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட உள்ளது.

    * தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு 95 சதவீதம் பூத் சிலிப் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

    * சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரபிடோ பயணத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு "கடமைக்கான சவாரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.


    * நாளை ஓட்டுப்பதிவு எப்படி நடைபெறுகிறது என்பதை முழுமையாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் அந்த வாக்குச்சாவடிகளின் செயல்பாடுகள் 100 சதவீதம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும்.

    * அரசு ஊழியர்கள் இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை பெருமளவில் தடுத்து இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. என்றாலும் விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம், நகை பறிமுதல் செய்யப்பட்டன.

    * தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் ரூ.1,297 கோடி மதிப்புள்ள நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. உரிய ஆவணத்தை காட்டி இவற்றை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 20-ந்தேதி (சனிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடக்கிறது.
    • தேவையான காய்கறிகளை பரவை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை எரிவாயு நிறுவனத்தினரும் வழங்குகின்றனர்.

    மதுரை:

    உலகப் புகழ்பெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். சுவாமி-அம்மன் திருக்கல்யாணம் முடிந்த பின்பு பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்படுவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு காரணங்களுக்காக மீனாட்சி பஜார் அருகே உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. 20-ந்தேதி (சனிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடக்கிறது.

    திருக்கல்யாணத்தன்று காலை 7 மணி முதல் இடைவெளி இல்லாமல் பக்தர்கள் அனைவருக்கும் கற்கண்டு சாதம், வெண்பொங்கல், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வடை, பச்சடி ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதற்கு தேவையான காய்கறிகளை பரவை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை எரிவாயு நிறுவனத்தினரும் வழங்குகின்றனர்.

    அரிசி, பருப்பு, எண்ணெய், நெய் மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்களும், பக்தர்களும் வழங்கி வருகின்றனர். எனவே விருந்துக்கு தேவையான பொருட்களை கொடுக்க விரும்புபவர்கள் சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வழங்கலாம்.

    மேற்கண்ட தகவலை பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக போட்டியின் முக்கிய அம்சம் விடுபடுகிறது.
    • இந்த விதிமுறையால் துபே, சுந்தர் போன்ற வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைப்பதில்லை.

    17-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 32 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இதன் முடிவில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் உள்ளன.

    இந்த புள்ளி பட்டியலில் பலம் வாய்ந்த அணியான மும்பை 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 4-ல் தோல்வியடைந்துள்ளது. நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா சக வீரராக விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இம்பேக் விதிமுறையில் தனக்கு உடன்பாடு இல்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்பேக்ட் பிளேயர் விதிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. கிரிக்கெட் போட்டி என்பது 11 வீரர்களை கொண்டதே தவிர 12 வீரர்களை உள்ளடக்கியது அல்ல. ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக போட்டியின் முக்கிய அம்சம் விடுபடுகிறது. இந்த விதிமுறையால் துபே, சுந்தர் போன்ற வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைப்பதில்லை.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • பறவை காய்ச்சலில் இறந்த வாத்துக்கள் இருந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.

    கோடை மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் டெங்கு, அம்மை உள்ளிட்ட நோய்களும் பருவ தொடங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆலப்புழாவில் உள்ள எடத்துவா மற்றும் மேலும் ஒரு பஞ்சாயத்தில் விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட வாத்துக்கள் அடுத்தடுத்து இறந்தபடி இருந்தன. இதனால் இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் இறந்த வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பறவை காய்ச்சலில் இறந்த வாத்துக்கள் இருந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செயல்பட்டு வரும் பண்ணையில் வளர்க்கப்படும் பறவைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டத்தை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடங்கி இருக்கின்றனர். பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோதிலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.
    • திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்து 690 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    குறிப்பாக தங்கம் காணிக்கை செலுத்துவது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் தங்கத்தை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    கடந்த ஆண்டில் 1,031 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். இதுவரை ரூ.8,496 கோடி மதிப்பிலான மொத்தம் 11 ஆயிரத்து 329 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு பிறகு தரிசனம் செய்து வரும் பக்தர்கள் அதிக அளவில் தங்கம் நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பக்தர்கள் அளிக்கும் தங்க காணிக்கையும் உயர்ந்து வருகிறது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்து 690 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20 ஆயிரத்து 744 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    உண்டியல் காணிக்கையாக ரூ.3.02 கோடி வசூல் ஆனது. பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    • தஞ்சாவூரில் உள்ள கியாஸ் சிலிண்டர் நிரப்பும் யூனிட்டில் முதலில் பிரச்சனை ஏற்பட்டது.
    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோவை பீளமேடு, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.

    சென்னை:

    நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகத்தில் மத்திய அரசின் ஐ.ஓ.சி. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. மற்ற 2 நிறுவனங்களை விட ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு தான் அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக பிரச்சனை நிகழ்ந்து வந்தது.

    லாரிகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு லாரி உரிமையாளர்களிடம் வலியுறுத்தினார்கள். இதையடுத்து கியாஸ் லாரி உரிமையாளர்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் வாடகை, கூலி போன்றவற்றை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை உயர்த்தி தரமால் இழுத்தடித்து வந்ததால் உரிமையாளர்கள் கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூரில் உள்ள கியாஸ் சிலிண்டர் நிரப்பும் யூனிட்டில் முதலில் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோவை பீளமேடு, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.

    இதனால் இந்த 5 இடங்களில் இருந்து பாரத் சமையல் கியாஸ் சிலிண்டர்களை லாரிகள் வினியோகஸ்தர்களுக்கு கொண்டு செல்லவில்லை. தொழிற்சாலையில் சிலிண்டர்கள் தேங்கி கிடக்கிறது.

    சொந்தமாக லாரிகள் வைத்துள்ள கியாஸ் ஏஜென்சிகள் மட்டுமே சிலிண்டர்களை தொழிற்சாலையில் இருந்து ஏற்றி்ச் செல்கிறது. பெரும்பாலானவர்கள் ஒப்பந்த லாரிகள் மூலமே சிலிண்டர்களை பெறுவதால் வினியோகஸ்தர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் பாரத் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. வேலை நிரந்தரம் முடிவுக்கு வராவிட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சமையல் கியாஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் கியாஸ் தொழிலாளர்கள் யூனியன் பொதுச்செயலாளர் விஜயன் கூறியதாவது:-

    சிலிண்டர்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு வாடகை மற்றும் கூலி போன்றவை நிர்ணயித்து பல ஆண்டுகள் ஆகிறது. அதனை உயர்த்தி தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடக்கிறது. பி.பி.சி. நிறுவனம் வாடகையை உயர்த்தி தர மறுக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு பிளாண்ட்டிலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் சிலிண்டர்களை ஏற்றாமல் நிற்கின்றன.இதன் காரணமாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×