search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகிறார். இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னுடைய வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்து செயல்பட்ட அவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த முடியை எடுத்ததாக கூறுகிறார்கள்.

    ம.தி.மு.க. 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தபோது அவர்களுக்கு விருதுநகர், ஈரோடு தொகுதியை நாங்கள் ஒதுக்கீடு செய்தோம். அவர்கள் கேட்காமலேயே அந்த தொகுதியை வழங்கினோம். தற்போது ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள். இது கவலை தரக்கூடிய செய்தியாகும். இதற்கு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முழு பொறுப்பேற்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தொழிலதிபராக இருக்கலாம். ஆனால் அவர் வணிக நிறுவனங்கள் சார்பில் விளம்பரங்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவா, வீழ்ச்சிக்காகவா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது. குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அவர் ரோடு-ஷோ மூலமாக வாக்கு சேகரிக்கிறார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

    டாரஸ் லாரிகளால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் இங்கிருந்து வைரங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தை உரக்கிடங்கு மாவட்டமாக மாற்றி உள்ளனர். இதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

    தி.மு.க.வை சேர்ந்தவர்களின் வாகனங்கள் பறக்கும்படைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படை அதிகாரிகளின் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்.

    ஜாதி, மதத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. குமரி மாவட்டத்தை பிளவுபடுத்த தி.மு.க., காங்கிரஸ் முயற்சி மேற்கொள்கிறது. கனிமவள கடத்தலின்போது லாரி மோதி 6 பேர் பலியானார்கள். இதற்கு இந்த அமைச்சரோ, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரோ இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் கனிம வளங்களை மாநில அரசு நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும். நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை.
    • 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?

    புதுடெல்லி:

    2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1823 கோடி ரூபாய் கட்ட காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை அழிக்க சதி நடப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:- அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை. 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?. 139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் முடக்க சதி நடக்கிறது என கூறியுள்ளார்.

    முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இந்த நோட்டீஸ் நிதி ரீதியில் எங்களை முடக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வரி தீவிரவாதம். காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • 2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி.
    • இந்த நோட்டீஸ் நிதி ரீதியல் எங்களை முடக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் வருமானம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ததில் தவறு இருப்பதாக 200 கோடி ரூபாய் செலுத்த நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் வரி தீர்ப்பாயம் மூலம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    இதனால் டெல்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் எந்தவிதமான நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. இதனால் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாட இருக்கிறது.

    உயர்நீதிமன்றம் காங்கிரஸ்க்கு நிவாரணம் அளிக்க முன்வராத நிலையில், தற்போது சுமார் 1823 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறை சார்பில் புதிய நோட்டீஸ் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸ் வரி தீவிரவாதம் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இந்த நோட்டீஸ் நிதி ரீதியில் எங்களை முடக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வரி தீவிரவாதம். காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது.
    • பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேரதல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்துள்ளார்.

    மீண்டும் அவர் பிரசாரத்துக்காக தமிழகம் வருவதற்கு திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில், தி.மு.க. ஆட்சியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    "நமோ செயலி" மூலமாக இன்று மாலை 5 மணிக்கு நமது கடின உழைப்பாளிகளான பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் "எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் கலந்துரையாட உள்ளேன்.

    தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள், திட்டங்களை பாரதிய ஜனதா கட்சியினர் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் திறம்பட கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.

    தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் சலிப்படைந்து சோர்ந்து போய் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    • பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
    • ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொன்னேரியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த உச்சி வெயிலை விட உக்கிரமான ஒன்றிய அரசை விரட்டியே ஆக வேண்டும் என்று இவ்வளவு எழுச்சியோடு கூடி இருக்கிறீர்களே... அதற்கு முதலில் நன்றி. கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் நான் இதே இடத்தில் பிரசாரத்தை மேற்கொண்டேன். அப்போது இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தீர்கள். ஆனால் இந்த முறை 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் போதாது.

    கடந்த முறை நமது எதிரிகள் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இன்று எல்லோரும் பிரிந்து நிற்கிறார்கள். எனவே குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். குறைந்த பட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தால் மாதம் 2 நாள் நான் இங்கு வந்து திருவள்ளூர் தொகுதியில் தங்கி உங்களுடைய தொகுதியின் அனைத்து தேவைகளையும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருவேன். நீங்கள் இதை செய்தால் எனது வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். நீங்கள் எங்கள் வேட்பாளருக்கு போடும் வாக்கு, பிரதமர் மோடியின் தலையில் வைக்கும் வேட்டு.


    தலைவர் கலைஞர் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அறிக் கையை வெளியிட்டு சொல்வார். சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று செய்து காட்டினார். அவரது வழியில் வந்த முதல்-அமைச்சரும் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். பொன்னேரி அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் முதல் தரமான மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும். அனைத்து குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி விரிவுபடுத்தப்படும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இந்த தொகுதியை சுற்றி உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்து தருவோம். மாதவரம் அல்லது விம்கோ நகரில் இருந்து மெட்ரோ ரெயில் சேவை மீஞ்சூர் வரை நீட்டிக்கப்படும். பாரம்பரிய மீனவ சமுகதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படு வார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

    இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மாயமாவதை தடுக்க தடையற்ற தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் உங்களுக்கு கொடுத்து உள்ளார்.

    மகளிருக்கு கட்டண மில்லா பஸ் வசதி திட்டத்தை முதல்-அமைச்சர் கொடுத்தார். இங்கு வந்திருக்கும் மகளிரும் இதை பயன்படுத்துகிறீர்கள் தானே. இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் நிற பஸ்தான். இன்னும் சொல்லப்போனால் நாம், பெண்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

    அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்போது அவர்கள் தான் பஸ் உரிமையாளர்கள். எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். இந்த 3 வருடத்தில் 460 கோடி பயணங்களை மேற் கொண்டு இருக்கிறார்கள். இதை நகைச்சுவையாக சொல்லவில்லை. இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. இதுதான் திராவிட மாடல் அரசு. இப்போது பிங்க் பஸ்சை தாய்மார்கள் ஸ்டாலின் பஸ் என்று தான் சொல்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி யாரைப்பார்த்தாலும் முட்டி போட்டு விடுகிறார். பிரதமர் மோடியை பார்த்தால் படுத்து விடுகிறார். மனிதருக்கு முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கத்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் முதுகெலும்பு இல்லாத ஒரே மனிதர் எடப்பாடி பழனிசாமிதான். மோடி பிரதமராக வரக்கூடாது என்று எங்களால் கூற முடியும். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறுவாரா? ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.

    பிரதமர் மோடியின் பெயரை 29 காசு என்று மாற்றிவிட்டேன். ஏனென்றால், நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் வெறும் 29 காசு தான் தருகிறார். இனி யாரும் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்லாதீர்கள். இனி அவரது பெயர் 29 காசு. இன்னும் ஒரு மாதம் தான் அவர் பிரதமர். அதன் பிறகு அவர் பிரதமர் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 24-ந்தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 3 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 1,500 பேர் வரை பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

    தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கும் இப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், முதற்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளைக்கு மீண்டும் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர்.
    • தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் துணிச்சலாக அவர் எடுத்து வைத்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசில் புயலை கிளப்பி இருக்கும் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (நேற்று) வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அவர் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவலை 1-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில் "கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்" என்ற புதிய பிரசாரத்தை அவரது மனைவி சுனிதா தொடங்கி உள்ளார்.

    கெஜ்ரிவால் கைதுக்குப்பிறகு 3வது முறையாக காணொலியில் உரையாற்றிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறுகையில்,

    * என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர்.

    * தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் துணிச்சலாக அவர் எடுத்து வைத்தார்.

    * 8297324624 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கெஜ்ரிவாலுக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    • 2017-ல் ஏர் இந்தியா குத்தகை தொடர்பாக முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு.
    • பிரபுல் பட்டேலுக்கு எதிராக குற்றச்சாட்டில் தவறு செய்ததற்கான ஆதாராங்கள் இல்லை.

    சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் பிரபுல் பட்டேல். இவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்தார். அப்போது ஏர்இந்தியா கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தபோது, ஏர்இந்தியா விமானங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் ஏர்இந்தியாவுக்கு கடும் நிதி இழப்பு ஏற்பட்டது. தனியார் நபர்கள் அதிக லாபம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு பிரபுல் பட்டேல் மீது வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

    இந்த நிலையில்தான் பிரபுல் பட்டேல் தவறாக செயல்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இதனால் வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதா? அல்லது விசாரணையை தொடர உத்தரவிடுமா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரியும்போது பிரபுல் பட்டேல் அஜித் பவார் பக்கம் சென்றார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் வசம் ஆனது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசில் பங்கேற்றுள்ளது.

    மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பிடித்துள்ளது. பா.ஜனதா பக்கம் வந்த உடன் சிபிஐ வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

    ஏற்கனவே பா.ஜனதாவை எதிர்க்கட்சிகள் வாஷிங் மெஷின் என்று அழைத்து வருகின்றன. கரைபடிந்தவர்கள் பா.ஜனதா பக்கம் சென்ற பிறகு தூய்மையடைந்து விடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    • கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கோவை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிங்காநல்லூரில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராக உள்ளது. கோவை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு எல்லாம் முன்னுதாரணமாக சிறந்த மாநகராட்சியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி விட்டது.

    கோவை என்றதுமே சிறுவாணி தண்ணீர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று அப்படிப்பட்ட கோவை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 20 நாளைக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒன்றும் இல்லை.

    கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பினை பெற்று வந்தனர். தற்போது சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளது.

    இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் பல சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தையும் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து உயர்த்தி விட்டன. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வந்த பலரும் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. ஆனால் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    இந்த நிலைமை எல்லாம் மாற கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும்.
    • கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும்.

    கோவை:

    கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதி மக்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் வழியாக சிறப்பு ரெயில் ஒன்றும், சென்னை வழியாக மற்றொரு சிறப்பு ரெயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் வருகிற 31-ந்தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

    அதேபோல் ரெயில் 06049 ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும். அந்தவகையில் கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும். சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    ரெயில் எண் 06043 தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 31-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 1.57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

    06044 கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில் கொச்சுவேலியில் இருந்து 1-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய இடங்களில் நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
    • நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம்-நகை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் உரிய ஆவணங்கள் இருந்தால் விடுவித்து விடுவதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    பறக்கும் படை வாகன சோதனையில் இதுவரை ரூ.80 கோடி அளவுக்கு நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பிடிபட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை அங்கு ஒப்படைத்து விடுகின்றனர்.

    இதனால் பணம் நகை பொருட்களை வியாபாரிகள் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்போது தேர்தல் நெருங்க நெருங்க சோதனைகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த 2 பேரிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்கு வதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறியும் விடவில்லை. பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர்.

    அடுத்தடுத்து சோதனை நடைபெறும் நிலையில் வியாபாரிகளும், நகை கடைக்காரர்களும் பணம் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுபற்றி தேர்தல் கமிஷனில் முறையிட்டும் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என வியாபாரிகள் ஆதங்கப்படுகின்றனர். கொள்முதல் செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கடைக்கு கொண்டு வர முடியாததால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதாகவும் வியாாரிகள் கூறி வருகின்றனர்.

    பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இதுபற்றி மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தவைர் ஜெயந்தி லால் சலானியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதிப்பதால் பொதுமக்கள் நகை வாங்க வருவதற்கு பயந்து கடைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதற்கு சிறிய நகரங்களில் இருந்து பெரிய நகரங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்த மாதம் தொடர்ந்து நகை விலை உயர்ந்து கொண்டு வருவதால் எப்படியாவது கையில் உள்ள பணத்தை கொண்டு நகை வாங்கி விடலாம் என ஒவ்வொரு குடும்பத்தினரும் நினைக்கின்றனர். ஆனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் நகை கடைக்கு வருவதை தவிர்க்கின்றனர்.


    இப்போது உள்ள விலைவாசியில் ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் சேர்த்து ரூ.55 ஆயிரம் ஆகிவிடும். எனவே தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள ரூ.50 ஆயிரம் என்ற அளவை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம்.

    மே 10-ந்தேதி அட்சய திருதியை நாள் நெருங்கி வருவதால் நகைக் கடைக்காரர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் நகை பட்டறையில் இருந்து நகைகளை கடைகளுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    அட்சய திருதியை ஆர்டர், திருமண நகை ஆர்டர் உள்ள நிலையில் நிறைய நகைகளை கொண்டு செல்லும் போது பறக்கும் படையினர் பிடித்து விட்டால் உடனே அதை வாங்க முடியாது.

    2 மாதம் கழித்துதான் பெற முடியும். தங்கம் விலை தினமும் ஏறி வரும் நலையில் 2 மாதம் போலீசாரிடம் நகை இருந்தால் விலை ஏற்றத்தால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடும்.

    எனவே நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நகைக் கடைகளில் கூட்டம் குறைந்துவிட்டது. வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதால் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று 1000 கிலோ அளவுக்கு நகை வியாபாரம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்த அளவு வியாபாரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

    வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்ததால் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்பு அவர் தரப்பு விளக்கங்கள் பெறப்பட்ட பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது பெயரிலான 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

    சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, கோவையில் களம் இறங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கன்னியாகுமரியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினம் என்பதால் அரசு விடுமுறையாகும். இதனால் வேட்பு மனுக்களை இன்று திரும்பப் பெற முடியாது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களைத் திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு சின்னம் பெறாத கட்சிகள், சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நாளை மாலை நிறைவடைந்ததும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தை ம.தி.மு.க.வும் கேட்டு உள்ளன.

    வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் 18 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

    1. திருவள்ளூர் (தனி)-14

    2. வடசென்னை-49

    3. தென்சென்னை-53

    4. மத்தியசென்னை-32

    5. ஸ்ரீபெரும்புதூர்-32

    6. காஞ்சிபுரம் (தனி)-13

    7. அரக்கோணம்-29

    8. வேலூர்-37

    9. கிருஷ்ணகிரி-34

    10. தர்மபுரி-25

    11. திருவண்ணாமலை-37

    12. ஆரணி-32

    13. விழுப்புரம் (தனி)-18

    14. கள்ளக்குறிச்சி-21

    15. சேலம்-27

    16. நாமக்கல்-48

    17. ஈரோடு-47

    18. திருப்பூர்-16

    19. நீலகிரி (தனி)-16

    20. கோவை-41

    21. பொள்ளாச்சி-18

    22. திண்டுக்கல்-18

    23. கரூர்-56

    24. திருச்சி-38

    25. பெரம்பலூர்-23

    26. கடலூர்-19

    27. சிதம்பரம் (தனி)-18

    28. மயிலாடுதுறை-17

    29. நாகப்பட்டினம் (தனி)-9

    30. தஞ்சாவூர்-13

    31. சிவகங்கை-21

    32. மதுரை-21

    33. தேனி-29

    34. விருதுநகர்-27

    35. ராமநாதபுரம்-27

    36. தூத்துக்குடி-31

    37. தென்காசி (தனி)-26

    38. திருநெல்வேலி-26

    39. கன்னியாகுமரி-27.

    ×