search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும்.
    • மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

    சென்னை:

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆண்டு இறுதித் தேர்வும் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுவிட்டது.

    இந்த நிலையில் கோடைகால விடுமுறை நாட்களில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

    இந்த புகாரைத் தொடர்ந்து கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், அது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் பெறப்பட்டு இருக்கிறது.

    இந்த புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

    இந்த உத்தரவை கண்டிப்பாக பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார்.
    • ஏராளமான பக்தர்கள் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    மதுரை:

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

    சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

    அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

    நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார். இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

    வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து "இது முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது" எனக் கூறினார் மோடி
    • காஷ்மீரில் தாவர உணவு சாப்பிடுகின்ற மக்கள் மத்தியில் பேசும்போது மாமிச உணவு சாப்பிடுபவர்களை பற்றி கொச்சையாக விமர்சித்தார் மோடி

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா?

     தேர்தல் பிரச்சாரங்களில்:

    - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து "இது முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது" எனக் கூறினார் மோடி.

    - காஷ்மீரில் தாவர உணவு சாப்பிடுகின்ற மக்கள் மத்தியில் பேசும்போது மாமிச உணவு சாப்பிடுபவர்களை பற்றி கொச்சையாக விமர்சித்தார் மோடி.

    - நேற்று ராஜஸ்தானில் "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள்" என்று கூறியுள்ளார் மோடி.

    இதிலிருந்து மோடியின் பேச்சில் தோல்வி பயமும், விரக்தியும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் ஓட்டுக்காக மக்களை பிரிக்கும் முயற்சியாக இப்படி மத வெறுப்புடன் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே இழுக்கு" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் ஊக்குவித்து வருகிறது.
    • மாபெரும் கருத்தரங்குகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளை காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது.

    சுற்றுச்சூழல் வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனையாக, காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் 1.12 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட்டு உலக சாதனை படைத்துள்ளது.

    இதையடுத்து, இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை நடப்பட்ட மரக்கன்றுகளின் மொத்த எண்ணிக்கை 10.9 கோடியாக உயர்ந்துள்ளது.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் விடாமுயற்சியால், ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான கடந்த நிதியாண்டில் 48,748 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 28,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 630 மரக்கன்றுகளை தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர்.

    உலக பூமி தினமான இன்று (ஏப்ரல் 22) இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் இவ்வியக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் பங்கேற்று கூறியதாவது:-

    காவேரி கூக்குரல் இயக்கம் என்பது சத்குரு அவர்களால் 26 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதையாகும். 1998-ம் ஆண்டு முதல் ஈஷா பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளை வெவ்வேறு பெயர்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறது.

    அதில் ஒரு அங்கமாக, தமிழகத்தின் பசுமைப்பரப்பை அதிகரித்தல், நதிகளுக்கு புத்துயிர் அளித்தல், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் ஊக்குவித்து வருகிறது.

    விவசாயிகளுக்கு தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது, மரம்சார்ந்த விவசாயம் செய்வதற்கு பயிற்சி அளிப்பது, முன்னோடி விவசாயிகளின் நிலங்களில் மாபெரும் கருத்தரங்குகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளை காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது.

    இதற்காக, கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு இடங்களில் நாங்கள் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் விநியோகித்து வருகிறோம். கடலூரில் உள்ள ஈஷா நர்சரியானது உலகின் மிகப்பெரிய நர்சரிகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஒரு ஆண்டில் 85 லட்சம் மரக்கன்றுகள் வரை உற்பத்தி செய்ய முடியும். இதுதவிர 39 இடங்களில் விநியோக நர்சரிகளை நடத்தி வருகிறோம். இங்கு தேக்கு, செம்மரம், சந்தனம், ரோஸ்வுட் உட்பட 29 வகையான விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகளை ரூ.3 என்ற மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

    மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளிக்கும் விதமாக, அவர்களே மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வாய்ப்பையும் நாங்கள் வழங்கி வருகிறோம். அந்த வகையில், கடந்தாண்டு 30 விவசாயிகள் சுமார் 50 லட்சம் மரக்கன்றுகளை தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்து வழங்கி உள்ளனர். இதில் சுமார் 25 சதவீதம் விவசாயிகள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 12 விவசாயிகள் 12 மாவட்டங்களில் ஈஷா விநியோக நர்சரிகள் மூலம் சுமார் 14 லட்சம் மரக்கன்றுகளை விநியோகம் செய்து அதன்மூலம் கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளனர்.

    காவேரி கூக்குரல் இயக்கத்தில் மொத்தம் 130 களப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு 31,400 விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளனர். அங்குள்ள நிலத்தின் மண் மற்றும் நீரின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப மர விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் 29,800 விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3 மிகப்பெரிய கருத்தரங்குகளையும், 12 மண்டல அளவிலான கருத்தரங்குகளை நடத்தினோம். இதில் சுமார் 6,000 விவசாயிகள் நேரில் பங்கேற்று பயன்பெற்றனர். சத்குருவின் பிறந்த நாள், நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்களில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதுபோன்ற பல்வேறு வகையான செயல்பாடுகளால் தான் எங்களுடைய 1.12 கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கு பூர்த்தி ஆகியுள்ளது.

    இந்த மாதம் தொடங்கியுள்ள நடப்பு நிதியாண்டில் (2024 - 25) காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள் - மோடி
    • உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? - மோடி

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    மோடியின் இந்த பேச்சிற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,

    "பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. தனது தோல்விகளால், மக்களிடம் எழுந்துள்ள கோபத்திற்கு அஞ்சி, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வெறுப்பூட்டும் பேச்சை நாடியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்.

    பிரதமர் மோடியின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காதை மூடிக்கொண்ட தேர்தல் ஆணையம், வெட்கமின்றி நடுநிலைமையை கைவிட்டுள்ளது

    இந்தியா கூட்டணி உறுதியளித்த சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பு ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான நீண்ட கால ஒரு தீர்வாகும். பிரதமர் மோடி அதை திரித்து, சமூக ரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகளில் உரிய பங்கை வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

    பாஜகவின் வஞ்சகமான திசை திருப்பும் உத்திகள் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்துவதில் நமது உறுதிப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • பள்ளியில் படிக்கும் போது துளிர்விட்ட ஜெய்ஸ்ரீயின் காதல், கல்லூரி வரை வந்து மரணத்தில் முடிந்தது ஸ்ரீரங்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பொதுவாக மாடியில் இருந்து கீழே குதித்தால் தலை, கை, கால், இடுப்பு என அனைத்து இடங்களிலும் அடிபட்டிருக்கும்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் மகள் ஜெய்ஸ்ரீ (வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. ஆங்கில பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    ஜெய்ஸ்ரீ ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோர் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கிஷோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் இவர் ரவுடி பட்டியலில் உள்ளார்.

    கடந்த 20-ந்தேதி கிஷோரும், ஜெய்ஸ்ரீயும் நண்பரின் வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜெய்ஸ்ரீ திடீரென்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதை தொடர்ந்து ஜெய்ஸ்ரீயை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கிஷோரை போலீசார் கைது செய்தனர். கைதான கிஷோர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் ஜெய்ஸ்ரீயும், கடந்த 5 வருடமாக காதலித்து வந்தோம். ஜெய்ஸ்ரீ பள்ளியில் படிக்கும்போது அவரை நான் விரும்பினேன். இந்த நிலையில் ஜெய்ஸ்ரீ திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அதற்கு நான் 'நீ கல்லூரி படிப்பை முடி, நானும் ஒரு வேலை தேடிக்கொள்கிறேன். வேலை கிடைத்ததும் திருமணம் செய்கிறேன்' என்றேன். அதை ஜெய்ஸ்ரீ ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே எங்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.

    இதற்காக அவள் தற்கொலை செய்வாள் என்று நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    பள்ளியில் படிக்கும் போது துளிர்விட்ட ஜெய்ஸ்ரீயின் காதல், கல்லூரி வரை வந்து மரணத்தில் முடிந்தது ஸ்ரீரங்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக மாடியில் இருந்து கீழே குதித்தால் தலை, கை, கால், இடுப்பு என அனைத்து இடங்களிலும் அடிபட்டிருக்கும். ஆனால், ஜெயஸ்ரீக்கோ பின் தலையில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் காயம் ஏற்படவில்லை. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    • கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் முழுவதும் தீ வேகமாக பரவியது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை சேர்ந்த விஷ்ணுவர்தன் கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது அவர் ஓட்டி வந்த பைக்கில் திடீரென தீப்பற்றியது.

    இருசக்கர வாகனத்தில் இருந்து விஷ்ணுவர்தன் உடனடியாக இறங்கினார். கடும் வெயில் காரணமாக பைக் முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம்.
    • வருகிற 24-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது, நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து ரூ.4 கோடியும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் இருந்து ரூ.28 லட்சத்து 51 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த பணம் பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம். எனவே இது தொடர்பாக புகார் அளித்தும் அமலாக்கத்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், தேர்தலின் போது பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது.

    இருப்பினும், இது சம்பந்தமாக அமலாக்கத்துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, இந்த மனுவுக்கு வருகிற 24-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

    • மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
    • பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வட சென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், கண்டெய்னர் யார்டுகள், பெட்ரோல் நிறுவனங்கள், நிலக்கரி யார்டுகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனங்களில் இருந்து தினமும் 40 ஆயிரம் கனரக வாகனங்கள் மீஞ்சூர் வழியாக பொன்னேரி பகுதிக்கும், வல்லூர் 100 அடி சாலையில் இருந்து மணலி வழியாக சென்னைக்கும், வண்டலூர் சாலை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கும் செல்கின்றன.

    இந்நிலையில் மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் பள்ளமாக காணப்படும் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிகாரியிடம் மனு அளித்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.


    இந்நிலையில் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து வல்லூர் வரை 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலையில் ஏற்படும் தூசிகள் கடை முழுவதும் பரவி வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் வராததால் ஓட்டல்கள், டிபன் கடைகள், டீக் கடைகளை வியாபாரிகள் மூடி வருகிறார்கள். மேலும் காய்கறி, பழக்கடைகள் முழுவதும் தூசி மற்றும் மணலால் நிரம்பி காணப்படுவதால் கடைகளை காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணிவரையும் திறந்து வியாபாரம் செய்துவிட்டு செல்கின்றனர். சிலர் கடையை காலி செய்து விட்டு வேறு இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு கடந்த 2 வருடத்திற்கு மேலாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடையை நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மற்ற மூன்று மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
    • ஒரே நாளில் 4 மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் நடைபெறுகிறது.

    மாபெரும் கருத்தரங்கம்

    ஒரே நாளில் 4 மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் வல்லுனர்கள் பேசுவதை மற்ற மூன்று மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

    பங்கேற்பாளர்கள்

    Dr.பிரசாத் அவர்கள். முதன்மை விஞ்ஞானி.

    ஒருங்கிணைப்பாளர். AICRPS. IISR. கோழிக்கோடு.

    Dr. கண்டி அண்ணன் முதன்மை விஞ்ஞானி

    IISR. கோழிக்கோடு.

    Dr. முகமது பைசல். முதன்மை விஞ்ஞானி

    ICAR-IISR. மடிக்கேரி. கர்நாடகா.

    திரு. சிமந்தா சாய்கியா. துணை இயக்குனர்

    இந்திய நறுமணப் பயிர்கள் வாரியம்.போடிநாயக்கனூர்.

    திரு. கனக திலீபன் அவர்கள். உதவி இயக்குனர்.

    இந்திய நறுமண பயிர்கள் வாரியம். ஈரோடு.

    இடம்: புதுக்கோட்டை, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, கடலூர்.

    நாள்: ஏப்ரல் 28 ஞாயிறு

    முன்பதிவு அவசியம்

    94425 90079, 94425 90081

    பயிற்சி கட்டணம் ₹200

    • நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன.
    • மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    மரக்காணம்:

    மரக்காணம் அருகே காக்காபாளையம் கிராமம் மேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் சுதாகர் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன. இதில் இரவு வெகுநேரமாகியும் ஒரு மாடு வீடு திரும்பவில்லை.

    இதனால் சுதாகர் அவரது மாட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது அவரது பசு மாடு குடல் சரிந்த நிலையில் இருந்தது. மர்ம நபர் யாரோ மாட்டின் வயிற்றில் குத்தியதால் குடல் வெளியில் வந்திருக்கும் என்று சந்தேகம் அடைந்த சுதாகர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடு உயிரிழந்தது.

    இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் மாடு வளர்ப்போரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கரின் மனைவி சங்கீதா. இவர் ராமாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவியாக உள்ளார். அதே ஊரில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கலைமணி. இவர் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றிக்கொண்டதாகவும், இதனை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அங்கு ஆஸ்பத்திரி கட்ட சங்கீதா முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெய்சங்கர்-சங்கீதா தம்பதியரின் மகள் ஜெயப்பிரியா, கடந்த 19-ந் தேதி வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கலைமணி தரப்பினர், ஜெயப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் அறிந்த ஜெய்சங்கர், அவரது அண்ணன் ஜெயக்குமார், அவரது மனைவி கோமதி, மகன்கள் ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார் ஆகியோர் கலைமணி தரப்பினரை தட்டிக்கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கலைமணி, அவரது மனைவி தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் உள்ளிட்ட 10 பேர் ஜெய்சங்கர் தரப்பினரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே கோமதி துடிதுடித்து இறந்து போனார். படுகாயமடைந்த மற்றவர்களை அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இளம்பெண் ஜெயப்பிரியா, பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால் அவரிடம் கைது செய்யப்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும், இதனை தட்டிக்கேட்ட அவரது உறவினர்களும் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் கோமதி இறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இத்தகவலை சமூக வளைதலங்களில் பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் "வட இந்தியர்" என்ற பெயரில் ரோஷன் என்பவர் இதனை வெளியிட்டது தெரியவந்தது. மேலும், இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரி பிரபாகரன் ஷேர் செய்ததும், பிரபல யூடியூபர் சண்முகம் இது குறித்து கருத்து வெளியிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறுகையில், இது போன்று தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார்.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், கடலூர் மாவட்டத்தில் பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் வடமாநில சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×