search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.
    • நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

    செந்துறை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த பொது தேர்தல் 2 கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.

    சங்பரிவாருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம் இந்த பொது தேர்தல். இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி இருக்கிறோம்.

    இந்தியா கூட்டணிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்புகள் விடுத்துள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விளிம்பியங்களை சிதைக்க துடிக்கிற சங்க பரிவார் கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.

    ஜனநாயகத்தையும் அரசியலப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலையோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது. நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கூட்டணி பலம், இன்னொரு புறம் திமுக அரசின் மூன்றாண்டு கால நலத்திட்டங்கள், மூன்றாவதாக இந்தியா கூட்டணி முன்வைக்கக்கூடிய நாட்டு பாதுகாப்பு ஜனநாயக பாதுகாப்பு என்கிற கருத்தியல் பலம் ஆக இந்த 3 பலங்களுடன் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    எனவே பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இந்த தேசத்தை காப்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து எழுத தொடங்குகிறோம் என்பதை அறிவிப்பதற்கான நாள்தான் இன்றைய வாக்குப்பதிவு நாள்.

    தமிழக மக்கள் தி.மு.க. கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள். எனவே ஜனநாயகம் பாதுகாக்கப்படும். அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். டெல்லியில் பாசிச பா.ஜ.க. அரசு தூக்கி எறியப்படும். இந்திய கூட்டணியின் ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    தேர்தல் ஆணையம் நேர்மையோடு செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியான பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக அனைத்து தரப்பு மக்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த ஆட்சியே தொடரும் என்ற எண்ணத்தில் அவர்கள் அவ்வாறு செயல்படலாம்.

    அது தவறு. தேர்தல் ஆணையம் இந்த நாளிலிருந்து நடுநிலைமையோடு ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். ஒரு சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 20 பேர் களத்தில் உள்ளனர். அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலையில் 11 மணி வரை கிட்டதட்ட 18 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது.
    • உங்களுக்கு யார் சரியான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் காட்டுங்கள்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனைவி கிருத்திகாவுடன் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு சென்று வாக்களித்தார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய ஜனநாயக கடமையை வாக்களித்து நிறைவேற்றி இருக்கிறேன். முதலமைச்சர் சொன்னது மாதிரி, எல்லோரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள். காலையில் 11 மணி வரை கிட்டதட்ட 18 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது. இன்னும் மாலை 6 மணி வரை நேரம் உள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் யார் யாருக்கு வாக்குரிமை இருக்கிறதோ முக்கியமாக இளைஞர்கள் வந்து உங்களுடைய கடமையை செய்யுங்கள். உங்களுக்கு யார் சரியான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் காட்டுங்கள்.

    கேள்வி:- தமிழ்நாடு முழுவதும் நிலவரம் எப்படி உள்ளது?

    பதில்:- தமிழ்நாடு முழுவதும் பயணித்தேன். எனக்கு தெரிந்தவரை நல்ல வெற்றி கிடைக்கும் ஜூன் 4-ந்தேதி பேசிக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு ஓட்டு போட பழனிசாமி தனது மனைவியுடன் வந்தார்.
    • கை விரலில் மை வைத்த நிலையில் ஓட்டு எந்திரத்தின் அருகில் சென்றபோது திடீரென சின்னபொண்ணு மயங்கி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தர்மபுரி ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). இவர் இன்று காலை பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு ஓட்டு போட மனைவியுடன் வந்தார். அப்போது பழனிசாமி ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். திடீரென மயங்கி விழுந்த அவரை உடனடியாக மனைவி மற்றும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் பழனிசாமி அங்கேயே இறந்துவிட்டார் . இதனைப் பார்த்த மனைவி மற்றும் உறவினர்கள் கதறினர்.

    இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியபோது பழனிசாமி இருதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையத்து முதியவர் பழனிசாமி உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மற்றொரு சம்பவம்...

    சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 250-ல் கொண்டையம்பள்ளி ரோடு பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மனைவி சின்ன பொண்ணு (77) என்ற மூதாட்டி தனது மகன் கோவிந்தராஜ் என்பவருடன் வாக்களிக்க வந்தார். கை விரலில் மை வைத்த நிலையில் ஓட்டு எந்திரத்தின் அருகில் சென்றபோது திடீரென சின்னபொண்ணு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அந்த பகுதியினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.
    • நடிகர் அஜித், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களிப்பு.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அதன்படி, நடிகர் அஜித், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வருகை தந்தார்.

    விஜய் வருகையால், வாக்குச்சாவடியில் கூட்டம் அலைமோதியது.

    பின்னர், பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட விஜய் வாக்குச் சாவடிக்குள் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10.92 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
    • முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கிய காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 26. 58 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10.92 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    முதல் முறை வாக்களிக்கும் கல்லூரி மாணவிகள் கூறுகையில், வாக்களிப்பதை சரியாக செய்ய வேண்டும் என்ற ஆவலும், பதற்றமும் உள்ளது. கொஞ்சம் பயமாகவும் இருக்கும். வாக்களிக்கும் முறை சொல்லி இருக்காங்க. முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதை ஸ்கிப் செய்யக்கூடாது. சில சமயங்களில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களால் கூட முடிவு மாறலாம். இது நம்மளோட உரிமை என்றனர்.

    இதனிடையே முதல்முறை வாக்களிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து வந்த மாணவி, வாக்களிப்பது கடமை, கட்டாயம். முதல் முறையாக வாக்களித்து புது அனுபவமாக இருந்தது. முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு அங்கு இருந்தவர்கள் வழிகாட்டினார்கள் என்றார்.

    • வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
    • ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    கோவை:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     


    வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    • பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட இந்த மையங்கள் சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
    • கர்ப்பிணிகள், மூதாட்டிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் ஓட்டு போட தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

    சென்னையில் 3,726 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 48.69 லட்சம் பேர் ஓட்டு போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 39 சதவீதம் அளவிலான மையங்களில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    பெண்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் 16 இடங்களில் 1,461 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த சாவடிகளில் போலீஸ் உள்பட அனைத்து தேர்தல் அலுவலர்களும் பெண்களாகவே பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

    இந்த மையங்கள் இளஞ்சிவப்பு (பிங்க்) கலரில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கான அங்கீகாரம் மற்றும் மரியாதையை உயர்த்தும் வகையில் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட இந்த மையங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

    பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட இந்த மையங்கள் சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. அதன்படி ஆர்.கே.நகர் பகுதியில் 30 பேர், பெரம்பூர் பகுதியில் 66 பேர், கொளத்தூர் பகுதியில் 49 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

    வில்லிவாக்கம் பகுதியில் 38 பேர், திரு.வி.க.நகரில் 21 பேர், எழும்பூரில் 48 பேர், ராயபுரத்தில் 40 பேர், துறைமுகத்தில் 18 பேர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 62 பேர், ஆயிரம்விளக்கில் 145 பேர், அண்ணாநகரில் 140 பேர், விருகம்பாக்கத்தில் 183 பேர், சைதாப்பேட்டையில் 158 பேர், தி.நகரில் 163 பேர், மயிலாப்பூரில் 187 பேர், வேளச்சேரியில் 113 பேர் என சட்டமன்ற தொகுதி வாரியாக பெண் பணியாளர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்று பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கியூ ஆர் குறியீடு கொண்ட போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதை ஸ்கேன் செய்து தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தால் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஸ்கேன் செய்து கேள்விகளுக்கும் விடை அளித்தனர்.

    இந்த மையங்களில் கர்ப்பிணிகள், மூதாட்டிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் ஓட்டு போட தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

    இதை தவிர இங்கு பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. முதியோர் ஓய்வு அறை மற்றும் உதவி மையம், குழந்தைகள் விளையாடும் இடம் சாய் தளங்கள் ஆகியவை இந்த மையங்களில் முறையாக ஏற்படுத்தப்பட்டிருந்தது.

    • தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இந்நிலையில், வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், கள்ளக்குறிச்சியில் 29.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    காஞ்சிபுரத்தில் 24.89 சதவீதம், திருச்சியில் 22.77 சதவீதம், விழுப்புரத்தில் 24.53 சதவீதம், மதுரையில் 22.35 சதவீதம், கடலூரில் 24.72 சதவீதமும், சேலத்தில் 28.57 சதவீதமும், திண்டுக்கல்லில் 25.85 சதவீதமும், நீலகிரியில் 21.69 சதவீதமும், தென்காசியில் 25.45 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    விருதுநகரில் 23.11 சதவீதம், தேனியில் 25.75 சதவீதம், மயிலாடுதுறையில் 23.01 சதவீதம், வேலூரில் 23.46 சதவீதம், ஈரோடில் 28.29 சதவீதம், ராமநாதபுரத்தில் 25.92 சதவீதமும், தஞ்சையில் 25.19 சதவீதமும், கிருஷ்ணகிரியில் 23.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வருகிற 23-ந்தேதி முதல் மே மாதம் 2-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

    10 நாட்கள் இவ்விழாவை நடத்த கோவில் அறங்காவலர் குழு ஏற்பாடு செய்து உள்ளது. 22-ந்தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை துலா லக்னம் அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 23-ந்தேதி காலை 8 மணி முதல் 8.45 மணிக்குள் சுவாமிக்கு ரிஷப லக்னத்தில் துவஜா ரோகனம் நடக்கிறது.

    அதிகாலை 5.30 மணிக்கு தர்மாதி பீடம் இரவு 7.45 மணிக்கு புன்னைமர வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி காலை 6.15 மணிக்கு சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம் இரவு 7.45 மணிக்கு சிம்ம வாகன ஊர்வலம் நடக்கிறது.

    25-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சாமி கருட சேவை-கோபுர வாசல் தரிசனமும் பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவையும் இரவு 7.45 மணிக்கு அம்ச வாகன ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 6.15 மணிக்கு சூரிய பிரவை வாகனம், இரவு 8 மணிக்கு சந்திர பிரவை வாகனம்.

    27-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு ஊர்வலம், இரவு 8.15 மணிக்கு அனுமந்த வாகனம் 28-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம், காலை 6.15 மணிக்கு ஆனந்த விமானம் இரவு 8 மணிக்கு யானை வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்கு கும்ப லக்னத்தில் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் இரவு 9 மணிக்கு தோட்டத்திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    30-ந் தேதி காலை 6.15 மணிக்கு பல்லக்கு வெண்ணெய் தாழி, கண்ணன் திருக்கோலம், இரவு 8.15 மணிக்கு குதிரை வாகன ஊர்வலம் நடக்கிறது.

    மே 1-ந் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரி, இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு 10-ம் நாள் மே 2-ம் தேதி சப்தவர்ணம்- சிறிய திருத்தேர் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    3-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இது தவிர தினமும் மாலை 5.30 மணிக்கு பக்தி உலாத்தல் நடக்கிறது. மே 1-ந்தேதி சாமி புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளின் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்தசாரதி கோவிலின் துணை ஆணையர் நித்யா செய்து வருகிறார்.

    • டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    அவரது 11-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.


    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன், சம்யுக்தா ஆதித்தன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.


    தெலுங்கானா, புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னரும், தென்சென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான டாக்டர் தமிழிசை, அவரது கணவர் சவுந்தரராஜனுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-


    தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட துணை அமைப்பாளர் கோ.சு.கருணாநிதி, நிர்வாகிகள் வேம்பங்குடி நடராஜன், ஆனந்தராஜ், ஏ.எஸ்.மகேந்திரன், சரவணன், தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள்காந்த்.

    அ.தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன் மற்றும் சுரேஷ், வர்த்தகர் அணி துணை செயலாளர் பெருங்குடி வேல்ஆதித்தன், வடசென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஆர்.சி.பால்கனகராஜ், பா. ஜனதா மாநில செயலாளர் சதீஷ்குமார், செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், தமிழக காங்கிரஸ் கே.கே.நகர் பகுதி தலைவர் சரவணன் பால்ராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில நிர்வாகிகள் ஆர்.எஸ்.முத்து, சென்னை நந்து, முனவர் பாஷா, தி.நகர் கோதண்டன், சைதை நாகராஜ், மாவட்ட தலைவர் சைதை மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிட பொறுப்பா ளர்கள் செல்லத்துரை, இரா.செல்வம், முனியன், ராஜேந்திரன் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., துணை பொதுச் செயலாளர் காமராஜ், மாநில செயலாளர் ஊரப்பாக்கம் குட்டி, துணை செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், உயர்மட்டக்குழு உறுப்பினர் டி.உதயகுமார், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.வைகுண்டராஜா, தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார், தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பாலமுருகன், பொருளாளர் டி.ராஜ் நாடார், தென்சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் ராஜசுதாகர், செயலாளர் ஈகை டி.விஜயன், பொருளாளர் நடராஜன், மாவட்ட அமைப்பாளர் முருகன், வழக்கறிஞர் அருணா செல்லக்கனி, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் புரசை சி.நாகராஜ், தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ. பாலமுருகன், விருகம்பாக்கம் தொகுதி தலைவர் கே.மணிராஜ், அண்ணா நகர் தொகுதி தலைவர் செல்வராஜ், தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சுயம்புலிங்கம், தென் சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் உத்திர குமார், எம்.பாலகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


    இதே போன்று சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் கண்ணன், வடசென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வார்டு பாஸ்கர், நாடார் பேரவை வட சென்னை மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் சாமுவேல், சமத்துவ மக்கள் கழக ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் கவுதம், ஆர்.கே.நகர் பகுதி இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், 50-வது வட்ட செயலாளர் சர்புதீன், நாடார் பேரவை ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் பாக்யராஜ், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக பொதுச் செயலாளர் முத்து ராமன் சிங்கபெருமாள், அகில இந்திய காந்தி காமராஜர் காங்கிரஸ் மாநில தலைவர் மணியரசன், மாங்காடு பெருந்தலைவர் காமராஜ் நலச்சங்க தலைவர் ராமபாண்டி நாடார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்த்ராஜ், நிர்வாகிகள் ராம்ஜி, ஜெயக்குமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ் நாடார், பொதுச்செயலாளர் வீரக்குமார், பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் டி.ராஜ்குமார், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம், போரூர் நாடார் சங்க செயலாளர் ஜெயக்குமார், இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், பொருளாளர் சிவக்குமார், கவுரவ ஆலோசகர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் செல்வக்குமார், ரவிராஜன், எட்வர்ட்ராஜா, திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க சென்னை சேர்மன் வி.செல்வராஜ், இயக்குனர் அன்புசெழியன், சென்னை வாழ் சூலப்புரம் நாடார் சங்க செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் பரமசிவம், ராம கிருஷ்ணன், கேசவன், செல்லபாண்டியன், கெருகம்பாக்கம் நாடார் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    நாடார் மகாஜன சங்க இணை செயலாளர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, மண்டல தலைவர் பிரபாகரன், மாவட்ட தலைவர் தங்கம் நாடார், செயலாளர் சந்திர மோகன், பொருளாளர் தமிழ்செல்வன், அயன்புரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பிரபாகரன், பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாஸ்கர், தமிழ்நாடு நாடார் சங்க இளைஞரணி தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் சிவஜோதிராஜ், பொருளாளர் ராமமூர்த்தி, தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் விஜய குமார், பொருளாளர் மெல்வின், இணை செயலாளர் மார்க்கெட் ராஜா, துணை தலைவர் செந்தில், இ.சி.ஆர்.நாடார் சங்க தலைவர் கொட்டிவாக்கம் முருகன், நாடார் மறுமலர்ச்சி இயக்க தலைவர் பால முருகன், சென்னை வாழ் பசுவந்தனை நாடார் உறவின் சங்க தலைவர் எத்திராஜ், செயலாளர் செல்லகுமார், திருவான்மியூர் நாடார் பேரவை மத்திய மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் சுபாஷ், கே.கே.நகர் நாடார் சங்க தலைவர் நாகராஜன், ஷாம், பூந்தமல்லி ஐக்கிய நாடார் சங்க தலைவர் ஆர்.சுரேஷ், நசரத்பேட்டை நாடார் சங்க தலைவர் முருகன், பூவை ராம்ராஜ் நாடார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழ்நாடு சத்திரிய நாடார் சங்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், பொதுச் செயலாளர் மாரித் தங்கம், நிர்வாகிகள் காமராஜ், மாரிமுத்து, நாகராஜன், நடராஜன், ஜெகநாதன், பெரம்பூர் வட்டார நாடார் சங்க தலைவர் த.பத்மநாபன், துணைத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் செல்வம், பொருளாளர் தர்மேந்திரன், பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் டி.பி.செல்வராஜ், செயலாளர் அருணாசல மூர்த்தி, பொருளாளர் ஜெயராஜ், ஆலோசகர்கள் வெள்ளைசாமி, ஆசீர்வாதம் தெட்சணமாற ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை வாழ் போடுபட்டி நாடார் உறவின்முறை தலைவர் ஏ.எம்.சின்னா நாடார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பால்ராஜ், பொன்னுசாமி, சென்னை வாழ் துறையூர் நாடார் உறவின் முறை தலைவர் கே.ஏ.குருசாமி நாடார், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் செல்லத்துரை, தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் கே.செந்தூர்செல்வம் நாடார், ஒன்றிய இளைஞரணி தலைவர் பட்டுகணேசன், ஜெபஸ்டின் கண்ணன், அகில இந்திய நாடார் கூட்டமைப்பு மாநில தலைவர் காண்டீபன்.


     சினிமா ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் ராஜேந்திரநாத், இமான் அண்ணாச்சி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீஷ் சவுந்தர்முருகன், துணை செயலாளர் பால முனியப்பன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பத்திரப் பதிவு துறை முன்னாள் டி.ஐ.ஜி. ஏ.ஆறுமுக நயினார், காயல் ஆர்.எஸ்.இளவரசு, ஏ.கணேசா, அயன்புரம் நற்பணி மன்ற தலைவர் ஜெகதீஷ், செயலாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் சச்சிதானந்தம், பாலமுருகன், பார்வதி, ஜெகதீஸ்வரராஜ், செங்குட்டுவன், அருண்பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட நற்பணி மன்ற துணை செயலாளர் செல்லத்துரை, திருவொற்றியூர் மன்றம் டி.முல்லைராஜா, பிரைட்டன், திருச்சி மாவட்டம் அணியாப்பூர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், சந்தைப்பேட்டை மன்ற செயலாளர் காமராஜ், முன்னாள் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், தேவி செல்வம், தினேஷ், திவாகர், மும்பை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொதுச் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் பொன்னு நாடார், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பெனியல் நாடார், செல்வன் நாடார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, செய்தித் தொடர்பாளர் பாண்டியராஜ், துணைச் செயலாளர் வி.பி.மணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


    சிம்ம பேரவை நிறுவன தலைவர் ராவணன் ராம சாமி நாடார், தென்சென்னை மாவட்ட தலைவர் ராமர் நாடார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்து நாடார், நிர்வாகிகள் விஜயகுமார், பிரதீப்குமார், நேதாஜி இளைஞர் முன்னேற்றப்படை ராஜேஷ், கலாம் காமராஜர் கக்கன் அறக்கட்டளை வேல்முருகன், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமராஜன், வக்கீல் பாக்யராஜ், முருகன் தியேட்டர் பாலு, காயல்பட்டினம் சதக் அப்துல்லா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் இந்திய கைப்பந்து சம்மேளன செயலாளர் முருகன், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக செயலாளர்கள் மார்ட்டின், சுதாகர், துணைத் தலைவர் ஆதித்தன், பீச் வாலிபால் கன்வீனர் பிரபாகரன், சர்வதேச கைப்பந்து விளையாட்டு வீரர்கள் பாலாஜி, பிரதீப்ஜான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    இதே போன்று தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, சென்னை மண்டல தலைவர் அருணாச்சல மூர்த்தி, கே.குழந்தைவேல், எம்.பி.ரமேஷ், சுவைராஜா, ஜெயக்குமார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், நிர்வாகிகள் துரை, பிரகாஷ், பழக்கடை சுரேஷ், சுப்பிரமணியன், ஜோசப், ஆண்டனி பீட்டர், தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார், மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சந்திரமோகன், தலைமை ஆசிரியை ஜெகஜோதி ஆகியோர் தலைமையில் பள்ளியின் சாலை பாதுகாப்பு படை மாணவிகள், இசை வாத்திய குழுவினருடன் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    பள்ளி நிர்வாகிகள் தங்கம், காளியப்பன், பாண்டியன், செல்வராஜ், சோழன், தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் சித்ரா ஜெயசீலி, ஸ்ரீஜா, பிரமிளா, சுஜாதா, சேதுராமன் ஆகி யோர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்று வட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    மேலும் இந்த ஆலையால் 5 கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும் என்று கூறி சம்பந்தப்பட்ட உர ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே கிராமத்தினர் மனு அளித்திருந்தனர்.

    இந்தநிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் செந்தாமரை, ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் தொடர்ந்து ஆலையை மூட நடவடிக்கை எடுக்காததால் நேற்று தாசில்தார் செந்தாமரையிடம் உரத் தொழிற்சாலையை மூடநடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஐந்து கிராம மக்கள் மனு அளித்திருந்தனர். இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி 5 கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் 5 கிராமங்களில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனை அறிந்த திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் செந்தாமரை, திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • கோடை வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர்.
    • வாக்குச்சாவடியின் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதி மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இத்தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன், அ.தி.மு.க. சார்பில் அருணாசலம், பா.ஜ.க.சார்பில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 50 மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கோடை வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.

    வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 16 லட்சத்து 8ஆயிரத்து 521 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 வகையான அடையாள ஆவணங்களை காண்பித்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    வாக்குப்பதிவுக்காக 2081 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2081 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 30 சதவீதம் கூடுதலாக 2555 விவி.பேட் எந்திரங்கள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டன. வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி தங்களது வாக்கினை பதிவு செய்து சென்றனர். அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி அருகே செல்லாமல் இருக்க 100 மீட்டர் தொலைவில் கோடு வரையப்பட்டு இருந்தது. அதனை தாண்டி அவர்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    பெருந்துறை தொகுதியில் 10 வாக்குச்சாவடிகள், பவானி தொகுதியில் 23, அந்தியூர் தொகுதியில் 38, கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 45, திருப்பூர் வடக்கு தொகுதியில் 98, திருப்பூர் தெற்கு தொகுதியில் 79 என திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

    வாக்குச்சாவடியின் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளின் நிகழ்வுகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளில் நடக்கும் நிகழ்வுகளை தேர்தல் பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்கும் வகையில் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலெக்டர் கிறிஸ்துராஜ் செயல்பட்டார்.

    ஒரு சட்டசபைக்கு ஒருவர் வீதம் 6 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், 6 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணியாற்றினர்.

    வாக்குச்சாவடியில் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் 3 பேர் மற்றும் கூடுதல் அலுவலர்கள் இருப்பு என மொத்தம் 8 ஆயிரத்து 700 பேர், நுண்பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு சதவீதம் குறித்து 2 மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு தெரிவிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்கு சதவீதம் தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது. அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட உள்ளது. பின்னர் அங்குள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட உள்ளது.

    ×