search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
    • இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.

    சென்னை:

    எல்லை தாண்டி இரக்கமற்று இந்தியர்களை கொன்று குவிக்கும் பாகிஸ்தானியர்கள் மீது ஆத்திரமும் கோபமும் இருந்தாலும் என்னை காப்பாற்றுங்கள் என்று வந்தால் எல்லைகளை கடந்து உயிர் கொடுத்தும் காப்பவர்கள் இந்தியர்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த சம்பவம்.

    பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆயிஷா ரஷான் (19). இந்த இளம்பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு சிகிச்சைக்காக இந்தியா வந்திருக்கிறார். அப்போது அடையார் மலர் ஆஸ்பத்திரியில் இதயவியல் நிபுணராக இருந்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் அவரது இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவ குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தில் ஒரு பம்பை பொருத்துகிறார்கள். சிகிச்சைக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய ஆயிஷா தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

    எம்.ஜி.எம். மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்த டாக்டர் பால கிருஷ்ணனை அணுகி பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஆயிஷாவின் இதய பம்பில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

    இதையடுத்து இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.

    இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம் தானத்துக்கு கிடைத்து இருப்பதாகவும் சிகிச்சை பெற வரும்படியும் அழைத்துள்ளார்கள்.

    ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்று தவித்துள்ளர்கள். கடைசியில் ஐஸ்வர்யா டிரஸ்டு மூலம் பண உதவியும் கிடைத்துள்ளது.

    இதையடுத்து சென்னையில் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அறுவை சிசிக்சை வெற்றிகரமாக முடிந்தது.

    விரைவில் தாயகம் திரும்பவிருக்கும் ஆயிஷா தனது தாய் சனோபருடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது சனோபர் கூறியதாவது:-

    "வெளிப்படையாகச் சொல்வதென்றால், இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. இந்தியா மிகவும் நட்பாக இருப்பதாக உணர்கிறேன். இந்தியாவுக்கு வந்தபோது கிட்டதட்ட உயிர் போகும் நிலையில் தான் இருந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லை என்று பாகிஸ்தானில் மருத்துவர்கள் கூறியபோது, நாங்கள் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம். இதற்காக இந்தியாவுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் நன்றி என்றார்.

    ஆயிஷா கூறும்போது கராச்சி திரும்பியதும் பள்ளி படிப்பை தொடர போவதாகவும், ஆடை வடிவமைப்பாளராக வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் குறிப்பிட்டார்.

    • பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது.

    பழனி:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் பதிவாகி உள்ளது. இது மட்டுமின்றி மேலும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். மக்களுக்கே இந்த நிலை என்றால் விலங்குகள் மற்றும் பறவைகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு கோடை காலம் முடியும் வரை போதிய அளவு தண்ணீர் மற்றும் இரை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே போல் பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.

    பழனி முருகன் கோவிலில் கஸ்தூரி என்ற யானை உள்ளது. இந்த யானை தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா நாட்களின் போது பக்தர்களுக்கு ஆசி வழங்குவது மற்றும் தேரை பின்னால் இருந்து தள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும். மற்ற நாட்களில் இந்த யானை காரமடை தோட்டத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது.

    இதற்காக அங்கு புல், தீவனம் போன்ற உணவு வழங்கப்படுகிறது. கோவில் யானைக்கு என இங்கு பிரத்யேக நீச்சல் குளம் மற்றும் ஷவர் பாத் எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது. காலையில் ஷவர் பாத்தும், மாலையில் நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியலும் போட்டு வருகிறது. நீச்சல் தொட்டிக்குள் இறங்கி சிறு குழந்தைப்போல 1 மணி நேரத்துக்கும் மேலாக கோவில் யானை கஸ்தூரி ஆனந்தமாக குளித்து வருவதாகவும், இதனால் இரவில் நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம்.
    • வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள்.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளருமான ஏ.பி.முருகானந்தம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பா.ஜ.க. கைப்பற்றும்.

    தமிழகத்தில் பா.ஜ.க., தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 39 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் புரட்சியை பா.ஜ.க., மேற்கொண்டுள்ளது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் இது தெரியும்.

    மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எந்த வேலையையும் செய்யவில்லை. வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இது ஆளுங்கட்சி தலையீடாக கூட இருக்கலாம்.

    ராகுல் காந்தி- பிரியங்கா ஆகியோர் கோவிலுக்கு செல்வது தேர்தல் காலத்தில் மட்டும்தான். இந்தியா கூட்டணி என்பது ஒன்றுமில்லாத ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • இன்றைக்கு இளைஞர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது.
    • கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் குமாரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார் தமிழக முழுவதும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை திறந்து மக்களுக்கு சேவை செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

    அவர் அறிவித்த 24 மணி நேரத்தில் சோழவந்தான் தொகுதியில் உள்ள குமாரம், அலங்காநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மக்களை தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர், இளநீர், சர்பத் உள்ளிட்ட நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே எடப்பாடியார் நீர் மோர் பந்தலை திறக்க தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று உள்ளார்.

    மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் 7000 போலீசார் காவல் பணியில் இருந்தனர். ஆனால் அப்படி இருந்தும் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.

    சித்திரை திருவிழாவில் ராமராயர் மண்டபத்தின் அருகே பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் மோதி ஒரு இளைஞரை கொலை கொலை செய்தனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அதேபோல் மதுரையில் வேலை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பிய ஒருவரை மது, கஞ்சா அருந்தியவர்கள் அவரை தாக்கியுள்ளார். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில், ஜாபர் சாதிக் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் கஞ்சா கடத்தியுள்ளார். தற்போது சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி அளவில் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் நடைபெற்று ஆயுதக்கிடங்காக தமிழகம் மாறியது மட்டுமல்ல, தற்போது போதை பொருள் கிடங்காக மாறிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இன்றைக்கு இளைஞர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து தொடர்ந்து சட்டமன்றத்திலும், தேர்தல் பிரசாரத்திலும் எடப்பாடியார் எடுத்துரைத்து வருகிறார். அவர் எடுக்கின்ற தியாக வேள்விக்கு மக்கள் அனைவரும் கரம் கொடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் மக்களை மதரீதியாக பிரித்துப் பார்த்து பேசக்கூடாது, சட்டம் அனைவருக்கும் சமம். உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல, இது போன்று நாடு சந்தித்தது இல்லை தற்போது மரபை மீறி உள்ளார்களா? என்று அச்சம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 1 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து300 வாக்குச்சாவடி உள்ளது. இதில் அதிமுகவிற்கு அனைத்து இடங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். பி.ஜே.பி.க்கு வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தால் முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்கள். இதன் மூலம் கட்டமைப்பு இல்லை என்று தெரிகிறது.

    தற்போது தேர்தல் தோல்வி காரணமாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆனாலும் தேர்தல் ஆணையம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மயிலாடுதுறை, குற்றாலம், அரியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை அல்லது அதன் கால் தடம் எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை.

    அரியலூர்:

    மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது.

    பின்னர் அந்த சிறுத்தை குற்றாலம் பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது.

    இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 89 சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன. மேலும் மயிலாடுதுறை, குற்றாலம், அரியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன.

    ஆனால் அதன் பின்னர் சிறுத்தை நடமாட்டம் எங்கும் தென்படவில்லை.

    இதுகுறித்து மூத்த வன அதிகாரி ஒருவர் கூறும்போது, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை அல்லது அதன் கால் தடம் எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை. இருப்பினும் மேற்கண்ட மாவட்டங்களில் வனத்துறையினர் தொடர்ந்து 2 பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர் அதிகாரிகள், உள்ளூர் மக்களுடன் தொடர்பில் உள்ளனர்.

    சந்தேகப்படும்படியாக மர்ம விலங்கு ஏதும் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

    • கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை
    • ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உள்ளது - அண்ணாமலை

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 19 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.

    மேலும், "ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உள்ளது. கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. பெயர்கள் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், கோவையில் 'எங்கள் ஓட்டை காணவில்லை' என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    தேர்தலில் ஓட்டு போட்ட மை அடையாளத்துடன் வந்து ஓட்டை காணவில்லை என பாஜகவினர் போராட்டம் நடத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

    • 1008 கிலோ குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.

    செங்குன்றம்:

    செங்குன்றம் ஸ்ரீதேவி பராசக்தி வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் 46 -ம் ஆண்டு தீமிதி திருவிழா ஆலய தர்மகர்த்தா அருள் வாக்கு தேவி சித்தர் தவத்திரு. ஆர்.ராஜா சுவாமிகள் தலைமையில் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு 1008 கிலோ குங்குமம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் செங்குன்றம், பாடிய நல்லூர், புழல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து குங்குமம் மற்றும் பிரசாதங்களை பெற்று சென்றனர்.

    ஆலய தர்மகர்த்தா ஆர். ராஜா சுவாமிகள் கூறுகையில், பராசக்தி வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தின் 46 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அஷ்ட காளி பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கணபதி ஓமம் மற்றும் கொடியேற்றம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    1008 கிலோ குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளாக மங்கள சண்டிஹோமமும், அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். பால்குடம் எடுத்தல், பெண்கள் முளைப்பாரி சிரசில் ஏந்திய வண்ணம் ஆலமரம் பகுதியில் இருந்து புறப்பட்டு ஆலயம் வந்தடையும்.

    அதனைத் தொடர்ந்து அம்பாள் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு அடியார்கள் தோல் சுமந்து அம்பாள் மாடவீதி பவனி வருதல், அம்பாளுக்கு பூச்சோரல் விழா, அக்னி கப்பறை கரத்தில் ஏந்திய வண்ணம் வீதி உலா, அம்பாளுக்கு தூப தீப ஆராதனைகளும் நடைபெறும்.

    அம்பாள் தனது அடியார்களுடன் தீ மிதித்தல் என்னும் பூக்குண்டத்தில் திருநடனம் புரிதல், மஞ்சள் நீராட்டு விழா, சுமங்கலி பூஜை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஆகையால் பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்து அருள் ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.
    • சென்னை விமான நிலையம் போதை பொருள் கடத்தும் மையமாக மாறி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது.

    அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் அந்தப் பயணி கம்போடியா நாட்டிலிருந்து, மலேசியா வழியாக சென்னைக்கு வந்துள்ளதால், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு, சந்தேகம் அதிகமானது.

    இதை அடுத்து அவருடைய உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலை கண்டுபிடித்தனர்.

    அந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்த போது, அதனுள் 3.5 கிலோ கொகைன் போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.35 கோடி என்று கணக்கிடப்பட்டது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல், தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

    இந்த போதை பொருளை யாரிடம் கொடுப்பதற்காக இந்தப் பயணி கடத்தி வந்தார்? சென்னைக்கு கடத்தி வரப்பட்ட காரணம் என்ன? இந்த போதைப் பொருள் கடத்தல் பயணியின், பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். ஆனால் இந்தப் பயணி சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இப்போது விசாரணை நடந்து கொண்டு இருப்பதால், இதுகுறித்து மேலும் எந்த தகவலும் வெளியிட முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    நேற்றைய தினம் அதிகாலை சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்புடைய கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ.35 கோடி மதிப்புடைய, போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையம் போதை பொருள் கடத்தும் மையமாக மாறி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களில் ரூ.63 கோடி போதை பொருள் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம்.
    • மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்.

    நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

    சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சந்தித்து பேசினார்.

    அப்போது, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், " முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்.

    இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன்" என்றார்.

    • பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அடையாறில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குனர் அறிவொளி, மாதிரி பள்ளிகள் இயக்குனர் சுதன், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாட நூல் கழக இயக்குனர் கஜலட்சுமி, தேர்வுத்துறை இயக்குனர் சேதுவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றியும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது பற்றியும் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மே 6-ந் தேதி தோவு முடிவுகள் வெளியாகும் என ஒரு தற்காலிக தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் வெளியிட வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதே போல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எந்த தேதியில் வெளியிட வாய்ப்பு உள்ளது? என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    மாநிலம் முழுவதும் புதிய மாணவர் சேர்க்கை எந்த அளவில் நடைபெறுகிறது? எத்தனை லட்சம் மாணவர்கள் சேருவார்கள்? என்பது பற்றியும் ஆலோசித்தார். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

    இப்போது வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் முதல் வாரம் திறக்க முடியுமா? அல்லது கடந்த ஆண்டைப் போல் பள்ளி திறப்பை தள்ளி போடலாமா? என்பது பற்றியும் ஆலோசித்தார்.

    பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 3-ந்தேதி திறப்பதற்கு தயாராகி வருவதால் அந்த தேதியில் திறக்க சொல்லலாமா? அல்லது வேறு தேதியை அறிவிக்கலாமா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது. எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பதை ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளி போட முடியுமா? என்று ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

    • குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.
    • இன்றைக்கு அதையும் கடந்து குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து தற்போது 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்ன செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷினி ( வயது 26). பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2020-ம் ஆண்டு முதல் திருப்பூர் கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேலைக்கு இடையே, தொடர்ந்து போட்டித்தேர்வுக்கான படிப்பையும் கைவிடாது படித்து இன்றைக்கு, தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் தமிழ்நாட்டில் 49-ம் இடம்பிடித்து கூட்டுறவுத்துறையிலேயே, துணைப் பதிவாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார். இவரது தந்தை காளியப்பசாமி, விவசாயி. தாய் உமா மகேஸ்வரி. தம்பி, தங்கை உள்ளனர்.

    சுபாஷினி கூறும்போது, வேலைக்கு சென்று வந்த எஞ்சிய நேரத்தில் தான் படித்தேன். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் தந்த ஊக்கமும், பயிற்சியும் எனக்கு பக்கபலமாக இருந்தன. இன்றைக்கு நான் வெற்றி பெற்றதை பார்த்து என் தங்கை இன்றைக்கு போட்டித்தேர்வுக்கு தீவிரமாக படித்து வருகிறாள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி (28). பிஎஸ்சி., வேளாண்மை படித்தவர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக கடந்த 2019-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

    தொடர்ந்து குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். இந்திரா பிரியதர்ஷினி கூறும்போது, "வேளாண்மை அலுவலராக இருந்ததால், பல்வேறு பகுதிகளில் பணியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவே தாமதமாகும். ஆனால் தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படித்து வந்தேன். இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளேன் என்றார். இவரது தந்தை கேசவன், தொழில் செய்து வருகிறார். தாய் ரேகாதேவி செஞ்சேரிப்புத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-ல் வெற்றிபெற்று இளநிலை உதவியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர் நித்யா (26). பிஎஸ்சி., வேளாண்மை படித்தவர். அரசு வேலை கிடைத்துவிட்டது என தேங்கிவிடாமல், தொடர்ந்து படித்து வேளாண்மை அலுவலராக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

    இன்றைக்கு அதையும் கடந்து குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து தற்போது 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி-பழனியம்மாளின் மகள் ஆவார்.

    3 பேரும் கூறும்போது, தமிழ்நாட்டில் குரூப் 1-ல் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 3 பேர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருவது எங்களுக்கு ஆச்சர்யம். அரசு வேலை கிடைத்த பின்பும், மனம் தளராமல் தொடர்ந்து படித்தோம். வாழ்க்கையின் எந்த இடத்திலும் நாங்கள் தேங்கவில்லை. எங்களின் அடுத்தடுத்த முயற்சிகளே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1- வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றனர்.

    ×