search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    • உடல் எடை குறைக்க உதவும் விதைகள்.
    • உடலில் தொப்பை வர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை.

    பொதுவாக உடல் எடை குறைக்க உதவும் விதைகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

    இன்றைய காலகட்டத்தில் உடல் எடை காரணமாக பெரும்பாலானோர் பல்வேறு டயட் உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறார்கள். குறிப்பாக உடலில் தொப்பை வர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மட்டுமே. எனவே ஆரோக்கியம் தரும் இந்த மூன்று விதைகளை உணவில் சேர்க்கும் போது அது நம் உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்க உதவுகிறது.

     சியா விதைகள்

    சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது.

    இதனால், குடல் நலன் மேம்படும். தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ரத்தத்தில் உள்ள டிரிகிளைசைரைடு கொழுப்பை இது கரைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.

    இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை காலையில் எடுத்துக் கொள்ளும் போது அதிக நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். குறிப்பாக வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுப்படுத்த உதவுகிறது. மிக முக்கியமாக இது உடல்நிலை இருக்கும் கலோரிகளை எரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

     ஆளி விதைகள்

    ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்து சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

    100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலை சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன. இதை சாப்பிடும் போது இதில் இருக்கும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

     சூரியகாந்தி விதை

    சூரிய காந்தி விதையின் மேற்புறத்தில் மெல்லிய ஓடு அமைந்து இருக்கும். இதனை உமி என்று குறிப்பிடுவார்கள். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ள இவ்விதையில், வைட்டமின் ஈ, பி, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை கணிசமான அளவில் உள்ளன.

    இவைதவிர, இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன. களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும், தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது. குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.

    சூரியகாந்தி விதையிலிருந்து சராசரியாக 165 கலோரி, கொழுப்பு 14 கிராம், புரதம் 5 கிராம் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

    சூரியகாந்தி விதையை பயன்படுத்தி நாம் டீ அல்லது சூப் செய்து சாப்பிட்டு வந்தால் நல்லது. மேலும் இது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பது மட்டுமில்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பிரச்சனைகளை நீக்கி குடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

    எனவே ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்து உடலை பிட்டாக வைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

    • யோகா செய்பவர்களுக்கு மனவலிமை அதிகரிக்கும்.
    • யோகாவில் ஒரு அம்சம் தான் முத்திரைகள்.

    யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் தான் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள்.

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்த பஞ்ச பூதங்களால் ஆனவையே. மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு, இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

     கப நாச முத்திரை:

    முதலில் சுண்டு விரலை மடக்கவும். மோதிர விரலை சுண்டுவிரலின் பாதி அளவிற்கு மடக்கவும். கட்டைவிரலை மோதிர விரலின் முதல் முட்டியிலும், சுண்டுவிரலின் இரண்டாவது முட்டியிலும் படும்படி அழுத்திப் பிடிக்கவும். இவ்வாறு 30 வினாடிகளிலிருந்து 15 நிமிடம் வரை பயிற்சி செய்தால் மேலே குறிப்பிட்ட நோய்கள் நீங்கும்.

    பயன்கள்

    ஆயுர்வேதத்தின் படி பித்த நாடி குறைந்து, கப நாடி கூடினால், சுறுசுறுப்பின்மை, உடல் அதீத குளிர்ச்சி அடைதல், தன்னம்பிக்கை இழத்தல், ஜீரணக் கோளாறு, நீண்ட நேரம் செரிமாணம் ஆகாமல் இருத்தல், தாகமின்மை, மாதவிடாய் கோளாறு, தைராய்டு சுரப்பியின் குறைவான செயல்பாடு (ஹைபோ தைராடிசம்),அதிகச் சளித் தொந்தரவு, ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், கண்நோய்கள், உதாரணமாக கண்களில் அதிக நீர் சுரத்தல், பூளை கட்டுதல் போன்றவை, ரத்த ஓட்டம் சீராகஇல்லாமை, அதிக எடை, போன்ற நோய்குறிகள் ஏற்படும். இதை போக்குவது இந்த கப நாச முத்திரை.

     முகுள முத்திரை:

    நான்கு விரல் நுனிகளையும் பெருவிரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

    பயன்கள்

    நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையை பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையும்.

     கணேச முத்திரை:

    வலது உள்ளங்கை மார்பு பகுதியை பார்த்தவாறு இருக்க வேண்டும். இடது கை விரல்களால் இறுகப்பற்றி சங்கிலிபோல் இணைக்க வேண்டும். 6 முறை சீரான சுவாசம் விட்டு செய்தபின் இடது உள்ளங்கை மார்பை பார்த்தபடி வைத்து செய்ய வேண்டும்.

    பயன்கள்

    ரத்தம் சுத்தமாகி ரத்த ஓட்டம் சீராகும். இதயம், நுரையீரல் நன்கு செயல்படும். நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்.

     ஆகாஷ் முத்திரை:

    நமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும், மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ள வேண்டும்.

    பயன்கள்

    சைனஸ் தொந்தரவு, தலைவலி, காது வலிகளை குணப்படுத்தும். நெஞ்சு படபடப்பை குறைக்கும். கல்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும். இந்த முத்திரையை தினமும் 45 நிமிடங்கள் அல்லது குறைந்தது 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத்தரும். காலை 2 மணிமுதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும். இந்த முத்திரையை அமர்ந்திருந்து மட்டுமே செய்தல் வேண்டும்.

    • மனிதனை இந்த எந்திரங்கள் சோம்பேறி ஆக்கிவிட்டது.
    • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன.

    அந்த காலத்தில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் பெரிய மனிதர்கள். அதாவது பணக்காரர்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது கார்கள், டூவீலர்கள் என்று போக்குவரத்து வசதி பெருகிவிட்டது. இதனால் சொகுசு ஒருபுறம் இருந்தாலும், அதனால் வெளிப்படும் கரியமில வாயுவால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம், நஞ்சமல்ல.

    மேலும், மனிதனை இந்த எந்திரங்கள் சோம்பேறி ஆக்கிவிட்டது, அவர்களின் உடலில் நச்சுக்களை சேர்க்க வைத்து, கொல்ல ஆரம்பித்துவிட்டது. சைக்கிள் ஓட்டிய காலம் வரையில் மனிதனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போது மருத்துவமனைகளுக்கு செல்லும் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் வாகன ஓட்டிகள் தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    சைக்கிள் ஓட்டுவதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. இதனால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறது. சீராக சைக்கிளை ஓட்டுவதால், என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது தெரியுமா?

    * ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.

    * இதய நோய் ஏற்படும் அபாயம் காணாமல் போகிறது.

    * மனதை திசைதிருப்பி பதற்றத்தை தணிக்க உதவுகிறது. சாலையில் பார்க்கும் காட்சிகளால் மன இறுக்கமும் தளர்கிறது.

    * ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைக்கப்படுகிறது.

    * உடல் எடை சீராக்கப்படுகிறது.

    * தோளின் நிறம் மேம்படுகிறது.

    * உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    சைக்கிளை ஓட்டுவதால் மேற்கண்ட பலன்கள் கிடைக்கின்றன என்று அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தற்போது மேலை நாடுகளில் மக்களின் உடல் நலனை மேம்படுத்துவதுடன், போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைப்பதற்காக சைக்கிள்களுக்கு பெருமளவில் வரியை குறைத்து அதன் விற்பனையை ஊக்குவித்து வருகின்றன.

    ஏராளமான நிறுவனங்கள் சைக்கிள் வாடகை கடைகளை நவீன முறையில் ஆரம்பித்துள்ளன. அதாவது நாம் வசிக்கும் இடத்தில் இருந்து சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, செல்லும் இடத்தில் உள்ள கடையில் அதை ஒப்படைத்துவிட்டு, அதற்கான வாடகையை மட்டும் செலுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

    இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சைக்கிள் பரண்களுக்கு போய் நாட்களாகிவிட்டது. இனியாவது அதனை சுத்தம் செய்து பயன்படுத்த ஆரம்பிப்போம்.

    • கண் தான் முகத்தின் அழகையும், உணர்வையும் மேம்படுத்திக் காட்டுபவை.
    • கண்களை நாம் கருத்துடன் பேணிக் காக்க வேண்டும்.

    கண்கள் தான் ஒருவரது முகத்தின் அழகையும், உணர்வையும் மேம்படுத்திக் காட்டுபவை. மிகுந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் அமைந்திருக்கும் கண்களை நாம் கருத்துடன் பேணிக் காக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக கண்களுக்கு ஊறுவிளைவிக்கத்தக்க செயற்கை ஒளியை அடிக்கடி நாம் சந்திக்க நேரிடுகிறது. கணிப்பொறியில் பணி செய்வதும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பதுவுமே நம் கண்களைப் பெரிதும் சோர்வடையச் செய்கின்றன.

    நம் கண்கள் தான் நம் முகத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒன்றாகும். கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கண்ணுக்கு கீழ் உள்ள சுருக்கங்களை நீக்குவதற்கு ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. இதை வைத்து எப்படி கண் சுருக்கத்தை நீக்கலாம் என்று பார்க்கலாம்.

     மசாஜ்:

    ஒரு கிண்ணத்தில் ஜோஜோபா எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், அதன்பின் வேப்ப எண்ணெயை 3 முதல் 4 துளி வரை கலந்து கொள்ளலாம். இதனை கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். இவ்வாறு செய்வதினால் கண்களில் உள்ள சுருக்கம் நீங்க ஆரமிக்கும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்ய வேண்டும்.

    மற்றொரு முறைப்படி ஒரு கிண்ணத்தில் ஜோஜோபா எண்ணெய் – 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், அப்ரிகாட் கர்னல் எண்ணெய் – 2 ஸ்பூன், அவோகேடா எண்ணெய் 2 ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து தூங்கச் செல்லும்போது இதனை நன்றாக தடவி விட்டு படுக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அதனை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் கண் சுருக்கம், கண் சோர்வு ஆகியவை நீங்கும்.

     கண்களுக்கான பயிற்சி

    ஒரு பென்சில் அல்லது பேனாவை வலது கையினால் எழுதுமுனை மேல் நோக்கியவாறு கைக்கெட்டிய தூரத்தில் பிடியுங்கள். மெல்ல மெல்ல அதைக் கண்களுக்கு அருகே எழுதுமுனை இரண்டாகத் தெரியும் வரை கொண்டு வாருங்கள் அந்த அளவில் நிறுத்திச் சிறிது நேரம் பென்சிலின் முனையை உற்று நோக்குங்கள். பின்னர் பென்சிலை கண்களுக்கு அருகில் இருந்து அகற்றிப் பழைய நிலைக்கு கொண்டு செல்லுங்கள். இதுபோல் நான்கைந்து முறை செய்யுங்கள்.

    கண்சோர்வை நீக்க மற்றுமொரு பயிற்சி. ஒரு மேஜையின் முன்பு உட்கார்ந்து கொண்டு முழங்கைகள் இரண்டையும் மேஜையில் ஊன்றிக் கொள்ளுங்கள். இரண்டு உள்ளங்கைகளாலும் இரண்டு கண்களையும் இறுகப் பொத்திக்கொள்ளுங்கள். தலையைத் தொய்வாக வைத்து இரண்டு கைகளாலும் தாங்கிக் கொள்ளுங்கள். இதேபோல் பத்து நிமிடங்கள் இருந்த பின்னர் கண்களில் இருந்து கைகளை விலக்குங்கள். இதுபோல் தினமும் பல முறை செய்யலாம்.

    • கைகளை நீட்டிக்கும் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வரலாம்.
    • நீங்கள் உட்காரும் நாற்காலியும் சவுகரியமாக இருக்க வேண்டும்.

    தற்போதைய காலகட்டத்தில் லேப்டாப், கணிணி முன்னிலையில் உட்கார்ந்து வேலை செய்யும் சூழல் உண்டாகி உள்ளது. இதனால் கூட நிறைய பேருக்கு முதுகுவலி, கைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

     இந்த கணினி கைவலி பிரச்சனை பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது என்பது பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில் இது ஒரு நபரின் வாழ்க்கையை பொருத்தது. அவர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறார் என்பதையெல்லாம் பொருத்து அமைகிறது என்று தெரிவித்து உள்ளனர்.

    இந்த கணிணி கைவலியின் முதல் அறிகுறியாக முள்ளெலும்பு உணர்வுகள் முதல் பாதிக்கப்பட்ட உடல் பாகங்களில் உணர்வு இழப்பு மற்றும் உணர்வின்மை வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

     கம்பியூட்டரிலேயே உட்கார்ந்து டைப் பண்ணுவது, மவுஸ் கிளிக் செய்வது சில மணி நேரம் வேண்டும் என்றால் சவுகரியமாக தோன்றலாம். ஆனால் நேரம் ஆக ஆக கைவலிக்க ஆரம்பித்து விடும். ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரே மாதிரியான உடல் அசைவுகளை செய்து கொண்டே இருக்கும் போது அந்த பகுதி தசைகள் வலிக்கத் தொடங்கி விடுகின்றன.

    இந்த வலி அப்படியே அவர்களின் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வரை பரவ ஆரம்பித்து விடுகிறது. வலியால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்க நீங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

     என்னசெய்யலாம்...?

    வேலை பார்க்கும் சமயங்களில் சிறிது ரிலாக்ஸ் மற்றும் கைகளை நீட்டிக்கும் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வரலாம். தசைகள் ஓய்வெடுக்க சிறிது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுக்கலாம். அதே நேரத்தில் கைவலியை குறைக்க குளிர் ஒத்தடமும் கொடுக்கலாம்.

    இதைத் தவிர்த்து நீங்கள் வேலை செய்யும் இடம், மேஜை உங்களுக்கு செளகரியமாக இல்லை என்றால் அதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள கீபோர்டு, ஹேண்ட் ரெஸ்ட், கம்ப்யூட்டர் மவுஸ், ஜாய்ஸ்டிக் போன்றவற்றை உங்க பயன்பாட்டிற்கு வசதியாக எந்த இடத்தில் சவுகரியமாக இருக்குமோ அங்கே வைத்துக் கொள்ளுங்கள்.

     மேலும் தொடர்ந்து கைகளை பயன்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள். சிறிது நேரம் கை தசைகளுக்கு ஓய்வு கொடுங்கள். அதே மாதிரி நீங்கள் உட்காரும் நாற்காலியும் சவுகரியமாக இருக்க வேண்டும். நீங்கள் உட்காரும் விதத்திற்கு ஏற்றவாறு சரி செய்யக்கூடிய நாற்காலியை பயன்படுத்துங்கள். நேராக அமர்ந்து வேலை செய்யுங்கள்.

    அதே மாதிரி உங்க கம்ப்யூட்டர் மானிட்டரும் உங்களுக்கு ஏற்றவாறு சரி செய்யக் கூடிய வகையில் அமைந்திருப்பது நல்லது. அப்பொழுது தான் உங்க கோணத்திற்கு ஏற்ப திருப்பிக் கொள்ள முடியும். கைகளுக்கான தன்னியக்க தசைபயிற்சி போன்றவைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • ஐஸ்வாட்டரை குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள்.
    • அறை வெப்பநிலையில் தண்ணீரை விட குளிர்ந்த நீர் தாகத்தைத் தணிக்கிறது.

    ஆரோக்கியமான நல்வாழ்வு மற்றும் நீரேற்றத்தை நிலைநிறுத்துவதற்கு குடிநீர் ஒரு இன்றியமையாத அம்சமாகும். இருந்தாலும், நாம் குளிர்ந்த தண்ணீரை உட்கொள்வதால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என்பது ஒரு பரவலான விவாதம் சுழல்கிறது.

    ஐஸ்வாட்டரை குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பார்க்கலாம். ஐஸ்வாட்டர் குடிப்பது புத்துணர்ச்சியூட்டும் மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும், குறிப்பாக வெயில் காலம் அல்லது கடுமையான உடல் உழைப்பின் போது, ஐஸ்வாட்டர் குடிப்பது உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. அறை வெப்பநிலையில் தண்ணீரை விட குளிர்ந்த நீர் தாகத்தைத் தணிக்கிறது.

    இருப்பினும், குளிர்ந்த தண்ணீரை உட்கொள்வதன் பாதுகாப்பைப் பற்றி சில கருத்துகளை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் குளிர்ந்த நீர் ரத்த நாளங்களை சுருக்கி, அதன் மூலம் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்க வாய்ப்புள்ளது.

    ஆயினும்கூட, ஐஸ்வாட்டர் குறைவாக அருந்துவது பொதுவாக பெரும்பான்மையான நபர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

    ஐஸ்வாட்டர் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதை தடுக்கிறது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரிக்க ஆரம்பித்து விடும். அதுமட்டுமில்லாமல் சாப்பிட உடனேவும் தண்ணீர் அருந்துவதும் கூடாது.

    ஃபிரிட்ஜில் இருக்கும் தண்ணீரை அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே கோடை காலத்தில் கூட ஐஸ் வாட்டர் அருந்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. அதிகமாக ஐஸ்வாட்டர் அருந்தும் போது உடலில் உள்ள செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

    இதனால் உணவு செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. மேலும் ரத்த நாளங்களில் சுருக்கத்தையும் ஏற்படுகிறது.

    குளிர்ச்சியான தண்ணீரை அடிக்கடி பருகுவதால் தொண்டை புண், மூக்கடைப்பு மற்றும் தொண்டையில் அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சுவாசக்குழாயில் அதிகப்படியான சளி உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. இதனால் உடலில் நோய் தொற்றுகள் ஏற்படுகிறது.

    குளிந்த நீரை அருந்தும் போது தலையில் உள்ள நரம்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இது இதயத்துடிப்பை குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஐஸ்வாட்டர் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கும். இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஐஸ்வாட்டரை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது.

    ஐஸ்வாட்டர் குடித்தவுடன் அது மூளையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் தலைவலி ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஐஸ்வாட்டர் முதுகெலும்பில் உள்ள நரம்புகளையும் பாதிக்கிறது.

    • தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.
    • நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும்.

    தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது. தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.

    நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும்.

    இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கிக் கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்துக் கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் எல்லாம் மறந்து போகும்.

    இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளியில் உள்ள சத்தங்கள் இடையூறு செய்யும்.

    மனதில் இருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.

     மனதை கட்டுப்படுத்தாமல் எப்படி தியானம் செய்வது...?

    முதுகுத்தண்டு வளையாது நிமிர்ந்திருந்து கொண்டு இருக்க வேண்டும். மனதைக் கட்டுப்படுத்தாமல் எண்ணங்களை மனதின் வழியே சுதந்திரமாக விடுங்கள். என்னென்ன எண்ணங்கள் மனதில் உண்டாகின்றதோ அவற்றை முக்கியப்படுத்தாது அப்படியே விடுங்கள்.

    மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமன்றி தீய எண்ணங்களும் ஏற்படலாம். தீய எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை. அதனை அதன்படியே விட்டுவிட வேண்டும். இவ்வளவு கெட்ட எண்ணங்கள் இருந்ததா என்று எண்ணும் போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதேபோன்றே நல்ல எண்ணங்களும் உருவாகும்.

    இவ்வாறு தினமும் பல்லாயிரக் கணக்கான எண்ணங்கள் மனதில் தோன்றி இறுதியில் எண்ணுவதற்கு எண்ணங்கள் இல்லாத நிலையில் தாமாகவே எண்ணங்கள் குறைந்து கொண்டே வந்து இறுதியில் மனம் அமைதியடையும்.

    தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர் அவசியமற்றவர்களின் தொடர்புகளை விட்டுவிடுவதோடு மனதைக் குழப்பும் காரியங்களிலும் ஈடுபடாதிருப்பது நலம் பயக்கும்.

    • வேலையில் நெருக்கடிகள் அதிகரிக்கும்போது மன அழுத்தம் ஏற்படக்கூடும்.
    • இருக்கையில் அமர்ந்தபடியே உடல் தசைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம்.

    அலுவலகத்தில் பணி புரிபவர்கள் அமரும் இருக்கை உடல் அமைப்புக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முதுகுவலி பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் நிலையில் வேலைப்பளுவுக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்வதற்கும் சிறிது நேரமாவது ஒதுக்க வேண்டும். அதற்காக தனி இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. இருக்கையில் அமர்ந்தபடியே உடல் தசைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம்.

    கை விரல்களுக்கு எளிமையான பயிற்சிகளை கொடுக்கும் உடற்பயிற்சிகள் ஏராளம் உள்ளன. அவை கைகளுக்கு வலுவை கொடுக்கவும் உதவும். கை விரல்களை சுழலவிட்டு அங்கும் இங்கும் அசைப்பது கூட சிறந்த பயிற்சியாக அமையும்.

    நாற்காலியில் அமர்வதால் முதுகுவலி பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் அதற்கு மாற்றாக `சுவிஸ் பால்' எனப்படும் பந்து நாற்காலியை உபயோகப்படுத்தலாம். அது சமநிலையில் இருக்கையில் அமர்ந்து பணி புரிவதற்கு வழிவகை செய்யும். முதுகெலும்புக்கு வலுவை ஏற்படுத்திக் கொடுக்கும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் பந்து நாற்காலி சிறந்த தேர்வாக அமையும். அதில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் சுமார் 160 கலோரிகள் வரை எரிக்கப்படும்.

    நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே இருக்காமல் நின்று கொண்டும் சிறிது நேரம் வேலை பார்க்கலாம். அதன் மூலமும் கலோரிகள் எரிக்கப்படும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.

    உடல் எடையை சீராக பராமரிக்க விரும்புபவர்கள் தினமும் 200 படிக்கட்டுகள் வரை ஏறி இறங்குவது நல்லது. அதன் மூலம் 100 கலோரிகள் வரை எரிக்கப்படும். அலுவலக வேலையில் நெருக்கடிகள் அதிகரிக்கும்போது மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதனை தவிர்க்க சில நிமிடங்கள் தியானம் செய்யலாம்.

    அது முடியாத பட்சத்தில் ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்யலாம். அது மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும். உங்களுக்கு பிடித்தமான யோகாசனத்தை சில நிமிடங்கள் செய்தாலே போதுமானது. அதுவும் மனதையும் இலகுவாக்கும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்றுவிடும்.

    • கொலஸ்ட்ராலை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • மோர் சூட்டை தணித்து உடலை வரண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது.

    கெட்ட கொழுப்பு என்பது நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் படிந்து காணப்படும் நிலை. இது தவறான உணவுப்பழக்க வழக்கத்தினால் வருவதாகும். இது ரத்த நாளங்களில் உறைவதால் ரத்த ஓட்டம் சீராக நடைபெறாமல் பல பிரச்சனைகள் வரும். இந்த கெட்ட கொலஸ்ரோலை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் மோர் குடிப்பதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எவ்வாறு குறைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    மோர் சூட்டை தணித்து உடலை வரண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது. வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோரை தயாரிக்கலாம்.

     மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்க்கும் போது இது இரட்டிப்பான நன்மை தரக்கூடியது. காலையில் டீ காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை தவிர்த்து காலையில் ஒரு கிளாஸ் மோர் குடித்து வந்தால் மிகவும் நன்மை தரும்.

    மோர் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது. இதனால் வயிறு சுத்தப்படுத்துவதுடன் உடலின் வளர்சிதை மாற்றம் அளவு அதிகரிக்கிறது.

    பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்டக்கூடிய வாயுப்பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. இதில் தேவையான அளவு புரதம் இருக்கிறது. இதனால் எலும்புகள் பலமடைந்து தோல் ஆரோக்கியமாக இருக்கும். தோல் வறட்சி இல்லாமல் இருப்பதால் பளபளப்பான தோற்றத்தை கொடுக்கும்.

    மோரில் வைட்டமின் C, B நிறைந்துள்ளதால், தலைமுடிக்கும் நல்லது, சருமத்துக்கும் நல்லது. புரோபயாடிக் லாக்டிக் அமிலம் மோரில் உள்ளதால், தலைமுடிக்கும், சருமத்துக்கும் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.

    • ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை.
    • குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் வாங்கி பயன்படுத்துங்கள்.

    ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் தரத்தையும் அளவையும் பொறுத்துதான் அந்த ஆரோக்கியத்தைக் கணிக்க முடியும். அதாவது இன்ஸ்டன்ட் ஓட்சில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அதை அடிக்கடி எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை அதிகரிக்கலாம்.

    நீங்கள் ஓட்ஸ் கஞ்சியில் சேர்த்துக்கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கும் வேர்க்கடலை. தாமரைவிதை, சோளம் போன்றவற்றின் அளவும் இந்த விஷயத்தில் முக்கியம்.

    ஓட்சில் நிறைய வகைகள் உள்ளன. ரோல்டு ஓட்ஸ் அல்லது ஸ்டீல் கட் குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் போன்றவை ஆரோக்கியமானவை. இவற்றில் ஒன்றை 30 கிராம் அளவு எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் சாப்பிடலாம். தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதும் உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். வேர்க்கடலையில் நல்ல புரதம் அதிகம் உண்டு என்றாலும் அதில் கலோரிகள் மிக அதிகம்.

    சோளத்திலும் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அதையும் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும். உங்களுக்கு வயிற்று உப்புசமோ, வாயு பிரிவதோ இருந்தாலும், வயிறு அழுத்தமாக இருப்பது போன்றோ உணர்ந்தாலும் ஓட்ஸ் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள் அல்லது குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் வாங்கி பயன்படுத்துங்கள்.

     30 கிராம் ஓட்சை வேகவைத்து, அதில் அரை கப் தயிர் சேர்த்து, வெங்காயம், தக்காளித் துண்டுகள் சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே காலை உணவுக்குச் சாப்பிடலாம். இப்படி சாப்பிடப் பிடிக்காதவர்கள், 30 கிராம் ஓட்ஸ், ஏதேனும் ஒரு பழம், ஒரு டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ், இரண்டு பாதாம், இரண்டு வால்நட்ஸ், ஒரு டீஸ்பூன் பூசணி விதைகள் எல்லாம் சேர்த்து ஸ்மூத்தி போன்று எடுத்துக்கொள்ளலாம். எனவே, நீங்கள் சாப்பிடும் அதே ஓட்சை இப்படி வேறு வேறு வகைகளில் மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள்... ஆரோக்கியமாகவும் உணர்வீர்கள், எடையும் அதிகரிக்காது.

    • மனித உடல் என்பது இயங்குவதற்காகவே படைக்கப்பட்டது.
    • ஆண்கள் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம்.

    ``இந்த அச்சம் ஜிம்முக்குச் செல்லும் பலரிடமும் இருக்கிறது. மனித உடல் என்பது இயங்குவதற்காகவே படைக்கப்பட்டது. 12 மணி நேரம்கூட உடலுழைப்பு செய்யலாம். வேட்டை, விவசாயம் என்று பல மணி நேரம் உழைத்தவர்கள் தான் மனிதர்கள். கடந்த 100 வருடங்களாகத்தான் நம்மில் பலரும் வொயிட் காலர் ஜாப் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அதே நேரம், சுவைக்கு ஆசைப்பட்டு வறுத்தது, பொரித்தது, இனிப்பு வகைகள் என்று கலோரி அதிகமான உணவுகளையும் அதிகம் சாப்பிட ஆரம்பித்து விட்டோம்.

    இதன் விளைவுதான் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் பிரச்சினைகள். இந்த பிரச்சினைகள் வரக்கூடாது என்றால், ஒவ்வொருவரும் தினமும் 6,000 அடிகள் நடக்க வேண்டும். இது கிட்டத்தட்ட நாலரை கிலோ மீட்டர் வரும். செக்ஸ் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நாளொன்றுக்கு 10,000 அடிகள் நடக்கலாம் அல்லது 6 முதல் 7 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கலாம்.

    நிறைய பேர் உடற்பயிற்சி செய்தால் ஆண்மை குறைந்துவிடுமோ? `தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் கருத்தரிக்க முடியாதா...? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட பெண்கள் கூட கர்ப்பமாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்தால் கரு கலைந்துவிடும் என்று நம்புகிறார்கள். ஆனால், இவை எதுவுமே உண்மை கிடையாது.

     ஆண்கள் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம். தவிர, உடற்பயிற்சி செய்யும்போது டெஸ்டோஸ்டீரான் சுரப்பு தூண்டப்பட்டு ஆண்மையும் அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள், கலோரி அதிகமான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்துக்கு அடியில் கொழுப்பு அதிகமாக சேரும். ரத்தத்தில் இருக்கிற ஆண் ஹார்மோன் சருமத்துக்கடியில் இருக்கிற அந்த கொழுப்புடன் இணைந்து பெண் ஹார்மோனாக மாறி ரத்தத்துடன் கலக்கும். இதை அரோமேட்டிஸேஷன் என்போம். இது ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும்.

     பெண்களுக்கும் உடற்பயிற்சி ஆரோக்கியத்தைத் தரும். ஆரோக்கியம் அவர்களுக்கு நல்ல கருத்தரிப்புத் திறனைக் கொடுக்கும். கருத்தரித்த பிறகு, மருத்துவரின் ஆலோசனைபடி உடற்பயிற்சிகளைத் தொடரலாம். சில பெண்களுக்கு மட்டும், கர்ப்பமாக இருக்கும்போதும் சில நேரங்களில் ரத்தப்போக்கு இருக்கும். அவர்கள் மட்டும், உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.

    தினமும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்தால் யாருக்குமே எந்த தீங்குமே வராதா என்றால், வரலாம். ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் ஜிம்மிலேயே இருப்பவர்களுக்கு வளர்சிதை மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் நிகழலாம். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் வரலாம். இதனால், பிற்காலத்தில் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் வரலாம். மற்றபடி, ஆரோக்கியத்துக்காக ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்கிற ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு வராது. பெண்களுக்கு கருத்தரிப்பதில் எந்த சிக்கலும் வராது.

    • நமக்கு நல்ல தூக்கம் இல்லாவிட்டால் எடை விறுவிறுவென ஏறிவிடும்.
    • இரவில் நன்றாக தூங்குபவர்களுக்கு உடலில் அதிக கொழுப்பு இருக்காது.

    ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாமல் பலருக்கும் உடல் எடை அதிகமாகிவிடும். அதன் பின்னர் என்ன செய்தாலும் உடல் எடை கொஞ்சம் கூட குறையாது. அதிலும் அடிவயிற்று தொப்பை கல் போல கரையவே கரையாது.

     நமக்கு நல்ல தூக்கம் இல்லாவிட்டால் எடை விறுவிறுவென ஏறிவிடும். அதிலும் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் மற்ற நோய்களும் ஏற்படும். ஒருவர் நாள்தோறும் 8 அல்லது அதற்கும் அதிகமாக தூங்கினால் உடல் ஆரோக்கியமாகவும், எடை கட்டுக்குள்ளும் இருக்கும்.

     இரவில் நன்றாக தூங்குபவர்களுக்கு உடலில் அதிக கொழுப்பு இருக்காது. டைப் 2 நீரிழிவு மாதிரியான நோய்கள் வராது. இரவில் நன்றாக தூங்காமல் போனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி உடல் எடை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை ஏற்படும். உடல் எடை கட்டுக்குள் இருக்க 8 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும்.

     உடற்பயிற்சிகள்

    சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் எடை குறையும். ஆனால் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஜம்பிங் ஜாக்ஸ், ஹை நீஸ், ஸ்குவாட், கிரஞ்ஜஸ், லஞ்சஸ், ரிவர்ஸ் ப்ளாங் போன்றவை நல்ல பலன் தரக்கூடியவை. ஆரம்பத்தில் இவற்றை 3 செட் 15 கவுண்ட் செய்தால் போதும். நாளடைவில் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உடல் எடை கணிசமாக குறையும். வாக்கிங், ஸ்கிப்பிங் தினசரி செய்யலாம்.

    ×