search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • அச்சமின்றி தங்களை வெளிப்படுத்தக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள்.
    • குழந்தைகளின் மகிழ்ச்சியிலும் வெற்றிகளிலும் கலந்து கொள்ளுங்கள்.

    உங்கள் குழந்தையுடன் ஒரு வலுவான, வெளிப்படையான உறவை உருவாக்குவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருப்பதும் அவசியம். எனவே உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த நண்பராக இருப்பது எப்படி.? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    உங்கள் குழந்தை உங்களிடம் அச்சமின்றி தங்களை வெளிப்படுத்தக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள். அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுங்கள், அவர்களின் மகிழ்ச்சியிலும் வெற்றிகளிலும் கலந்து கொள்ளுங்கள். ஆனால் சில நேரங்களில் வேலை உள்ளிட்ட பல காரணங்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடைவெளி உருவாகலாம்.

    ஆரம்பத்தில், உங்கள் குழந்தையின் கருத்துக்கள், உணர்ச்சிகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளை பற்றி கூறும்போது முன் கூட்டியே நீ இப்படித்தான் செய்திருப்பாய் என்று கருத்து சொல்லாமல், அவர்கள் கூறுவதை கவனமாக கேளுங்கள்.

     பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை உறுதிசெய்ய வேண்டும். இது குழந்தை பெற்றோர் இடையே சிறந்த தொடர்பை வளர்க்கிறது, பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை அனுமதிக்கிறது.

    அன்பாகவும் அனுதாபமாகவும் இருப்பது நேர்மையான உரையாடலை ஊக்குவிக்கும். உங்கள் குழந்தைக்கு நம்பகமானவராக இருப்பதன் மூலமும், தொடர்ந்து உதவி வழங்குவதன் மூலமும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் பாதுகாவலராக இருக்க முயற்சியுங்கள், அவர்களுக்கு தேவைப்படும்போது உங்கள் ஆதரவையும் அக்கறையையும் தயங்காமல் காட்டுங்கள்.

    உண்மையான ஆர்வத்துடன் உங்கள் குழந்தையின் பொழுதுபோக்கு மற்றும் விருப்பமான செயல்களில் அவர்களுடன் ஈடுபடுங்கள். இது உங்கள் பிணைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு தெரிவிக்கும். தேவைப்படும் போது வழிகாட்டுதலை வழங்கும் போது அவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் ஒரு நம்பகமான நபராக குழந்தைகளுக்கு அவர்களின் உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும், நம்பிக்கை மற்றும் உணர்ச்சி நுண்ணறிவை வளர்ப்பதற்கும் ஒரு இடத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தை தவறு செய்தால், உடனடியாக ஆலோசனை வழங்காமல், அவர்கள் தரப்பு கருத்தை கூறும் போது பெற்றோர் கவனமாக கேட்க வேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒன்றாக இருக்கும் போது தரமான நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சிரித்துப் பேசி, கதைகளை பகிர்வதன் மூலம் நீடித்த நினைவுகளை உருவாக்குங்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல நண்பராக இருப்பது என்பது அவர்களைப் பற்றி அறிந்திருப்பது, அவர்களின் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த ஒரு முயற்சியை மேற்கொள்வதையும் குறிக்கிறது. இது உறுதியான பெற்றோர்-குழந்தை உறவை உருவாக்குவதுடன், இந்த நட்பை வளர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆதரவாகவும் நம்பகமானதாகவும் இருக்கும் உறவுக்கான அடித்தளத்தையும் நீங்கள் அமைக்க முடியும்.

    உங்கள் குழந்தையின் சிறு முயற்சிகளை பாராட்டுவது, அவர்களின் வளர்ச்சி மனப்பான்மையை வளர்க்கிறது, விடாமுயற்சி மற்றும் வெற்றி மற்றும் தோல்விக்கான ஆரோக்கியமான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது. குழந்தைகள், குழந்தைகள் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், அவர்களின் நடத்தைக்கு உடனடி எதிர்வினைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

    அதே நேரத்தில் உங்கள் குழந்தைக்கான உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை வழங்குங்கள். இது நெகிழ்ச்சியான மற்றும் செழிப்பான பெற்றோர்-குழந்தை உறவுக்கு அடித்தளமாக அமைகின்றன என்பதில் சந்தேகமில்லை.

    • குழந்தைகள் முதல் பருவ வயது குழந்தைகள் வரை காய்கறிகள் சாப்பிட மறுக்கின்றனர்.
    • காய்கறிகளில் சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.

    பலவித வண்ணங்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை பற்றிய விளம்பரங்களை நிமிடத்திற்கு ஒரு தரம் இடைவிடாது ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் கைவண்ணத்தில் சிறு குழந்தைகள் முதல் பதின் பருவ குழந்தைகள் வரை சத்தான காய்கறிகள் சாப்பிட மறுக்கின்றனர். இது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்கிறது. இதில் இத்தனை சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.

    சத்து இல்லாத பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கும் குப்பை உணவுகளை உண்டு அந்த ருசிக்கு அடிமையான பின்பு காய்கறிகள் மற்றும் பழங்களின் சுவை பிள்ளைகளுக்கு பிடிக்காமலேயே போய் விடுகிறது. ஆனால், அதற்காக அப்படியே அவர்களை விட்டுவிட முடியாது. உறுதியான உடலுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் அவசியம். அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

     1. முதலில் பிள்ளைகளை சாப்பிட வற்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும். தனக்கு பசி இல்லை என்று சொன்ன பின்பு அவர்களை வற்புறுத்த வேண்டாம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    2. சாப்பிடும்போது, முக்கியமாக டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டோ அல்லது செல்போனை பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை முதலில் இருந்தே ஊக்கப்படுத்தக் கூடாது. தட்டை பார்த்து சாப்பிடும்போதுதான் உணவின் சுவை தெரியும்.

    3. இரண்டு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு தனி தட்டு கொடுத்து குடும்பத்தினருடன் சேர்த்து அமர வைத்து உணவு தர வேண்டும். அப்பா, அம்மா மற்றும் பெரியவர்களின் தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் காய்கறிகளை பார்த்து குழந்தையும் சாப்பிட ஆரம்பிக்கும்.

     4. சில காய்களின் சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காது. காய்களின் வண்ணங்கள் மற்றும் அவை செய்திருக்கும் முறையை பார்த்தாலே அவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். கேரட், பீட்ரூட் போன்ற இனிப்பான காய்கறிகள் மற்றும் சுவையான உருளைக்கிழங்கு போன்றவற்றை சுலபமாக பிள்ளைகள் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால், புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்தமான முறையில் அது இருக்க வேண்டும்.

    5. தட்டில் காய்களை பரிமாறும்போது நிறைய அளவு வைக்காமல் கொஞ்சமாக முதலில் வைக்க வேண்டும். அவற்றை சாப்பிட்டு முடித்த பின்பு அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.

    6. சில அம்மாக்கள், 'நீ இந்த காய் சாப்பிட்டா சாக்லேட் தருகிறேன். பாப்கார்ன் தரேன். பிஸ்கட் தரேன்' என்று அவர்களை தவறான வழியில் ஊக்குவிப்பார்கள். கடமைக்கு அந்த காய்கறிகளை விழுங்கி விட்டு நொறுக்கு தீனிக்கு ஆசைப்பட்டு குழந்தைகள் நிற்கும். அந்த காய்களை பிடிக்காமல் போய்விடும்.

    7. சரியான நேரத்திற்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த நொறுக்கு தீனியும் குளிர்பானங்களும் கொடுக்கக் கூடாது. சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.

    8. காய்கறிகள் கூட்டு போன்றவற்றை பரிமாறும்போது கூடவே வடகம், அப்பளம் போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களை வைக்கக் கூடாது. அவற்றை எடுத்து உண்டு விட்டு காய்கறிகள் வேண்டாம் என்று பிள்ளைகள் தவிர்ப்பார்கள். எனவே அவற்றை தனியாகத் தருவதுதான் நல்லது.

    9. காய்கறி வாங்க கடைகள் அல்லது மார்க்கெட்டுக்கு செல்லும்போது உடன் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களையே காய்கறிகளை தேர்ந்தெடுக்கச் சொல்லலாம். காய்கறிகளை கண்களால் பார்க்கும்போது குழந்தைகளுக்கு அவற்றின் மீது ஒரு ஈர்ப்பு, விருப்பம் உருவாகலாம்.

    10. ஏழெட்டு வயது குழந்தை என்றால் அதை காய்கறிகள் நறுக்கும்போது உதவிக்கு அழைக்கலாம். மேல் தோல் சீவி விட்டு சிறிது சிறிதாக நறுக்கச் சொல்லி ஊக்கம் தரலாம்.

    11. கதை சொல்வது போல அதில் உள்ள சத்துக்களை பற்றி எடுத்துச் சொல்லலாம். கேரட் சாப்பிட்டால் நல்லா கண்ணு தெரியும். உன் முகம் பளபளப்பாகும். கீரை சாப்பிட்டால் மூளை நல்லா வேலை செய்யும், முடி வளரும் என்பது போல சொல்லலாம்.

    12. காய்கறிகள் செய்யும்போது இரண்டு விதமான காய்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு காய் பிடிக்காவிட்டால் கூட, இன்னொன்றை சாப்பிடச் சொல்லி சொல்லலாம்.

    13. காய்கறிகள் சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர காய்கறிகளை அவர்கள் உண்ணும் உணவில் சேர்த்து விட வேண்டும். பீட்ரூட், கேரட், கீரை பொரியல்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவற்றை சாதத்தில் கலந்து கொடுக்கலாம். தோசை ஊற்றும்போது பீட்ரூட் பொரியலையோ கேரட் பொரியலையோ தூவி தோசை செய்து கொடுக்கலாம். பார்க்க வண்ணமயமாக இருக்கும். சுவையாகவும் இருக்கும். அவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.

    14. வெரைட்டியாக காய்களை செய்து கொடுக்கலாம். காய்களை சூப்பில் போட்டுத் தரலாம். சப்பாத்தி ரோலில் காய்களை வேகவைத்துக் கொடுக்கலாம்.

    • பெற்றோர்கள் குழந்தைக்கு இடதுகை பழக்கம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறார்கள்.
    • குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள்.

    பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடதுகை பழக்கம் இருப்பதை எண்ணி கவலைப்படுகிறார்கள். அதை தவறானது என கருதி குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள். குழந்தைகளை வலுக்கட்டாயமாக இடதுகை பழக்கத்தில் இருந்து வலதுகை பழக்கத்துக்கு மாற்ற முயற்சிப்பது நல்லது அல்ல. இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல், உணர்ச்சி சமநிலை மற்றும் நடத்தை சார்ந்த விஷயங்கள் பாதிக்கப்பட நேரிடும். இதை பற்றிய மேலும் சில தகவல்கள் இதோ...

    உலக அளவில் 85 சதவீதம் பேர் வலதுகை பழக்கம் கொண்டவர்களாகவும், 15 சதவீதம் பேர் இடதுகை பழக்கம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

    இடதுகை பழக்கம் என்பது ஒரு சாதாரண மாறுபாடாகும். இடதுகை பழக்கம் உள்ள குழந்தைகளை திருத்தி வலதுகை பழக்கத்துக்கு மாற்றும்போது கைகளை பயன்படுத்தி செய்யும் செயல்களில் அவர்களின் திறன் குறையும். குழந்தைகள் எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறார்களோ, அதே கையால் குறிப்பிட்ட வேலைகளை செய்யும்போது விரைவாகவும். திறமையாகவும் செய்து முடிப்பார்கள்.

     இடதுகை பழக்கம் உள்ளவர்கள் ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்திக்கவும், தங்களுடைய சூழ்நிலைகளை மாற்றியமைக்கவும் விரைவாக கற்றுக்கொள்கிறார்கள். படைப்பாற்றல், புத்திக்கூர்மை ஆகியவை இடதுகை பழக்கம் கொண்டவர்களிடையே இருக்கும் பொதுவான பண்புகளாகும்.

    பெரும்பாலான இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் ஏற்படுவது இல்லை. மரபியல் மூலமாகவே இடதுகை பழக்கம் உண்டாகிறது. இது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியதாகும். இதை அடிப்படையாகக் கொண்டே மூளையின் வளர்ச்சி வேறுபாடு அடைகிறது.

    வலது பக்க மூளையானது இடதுபக்க உடல் இயக்கத்தையும், இடதுபக்க மூளையானது வலதுபக்க உடல் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதன் அடிப்படையில் இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு அல்சர், மூட்டு வலி மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் அல்லது விரைவாக குணமடையலாம்.

    எழுதுவதைத் தவிர மற்ற வேலைகளுக்கு நாம் எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே நம்முடைய பழக்கம் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் மற்ற வேலைகளை இரண்டு கைகளையும் சரிசமமாக பயன்படுத்தி செய்கிறீர்கள் எனில் நீங்கள் கலப்பு கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம்.

    கட்டாயப்படுத்தி குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை மாற்றும்போது சமநிலையற்ற உணர்ச்சிகள், மோசமான கையெழுத்து, படுக்கையில் சிறுநீர் கழித்தல், நகங்களைக் கடித்தல், கூச்சம், எதிர்மறையான நடத்தைகள், வாசிப்பதில் சிரமம், கற்றல் திறன் குறைபாடு, சுயக்கட்டுப்பாடு மற்றும் நினை வாற்றல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.

    அதுமட்டுமல்லாமல் நரம்பியல் கோளாறுகள், மூளையின் அசாதாரண செயல்பாட்டுக்கும் வழி வகுக்கலாம். ஆகையால், சிறுவயதில் குழந்தைகளின் இடதுகை பழக்கத்தை திருத்தி வலதுகை பழக்கத்துக்கு மாற்றுவதைவிட இரண்டு கைகளிலும் சமமாக அனைத்து வேலைகளையும் செய்யும்படி பழக்கலாம். கலப்பு கை பயன்பாட்டை ஊக்குவிக்கலாம். இது அவர்களின் ஆரோக்கியத்துக்கும். எதிர் காலத்துக்கும் நல்லது.

    • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை.
    • குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்...

    * வைட்டமின் `ஏ' குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் `பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும், பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், ரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

    • பருவ காலங்களில் விளையும் பழங்களை அவசியம் கொடுக்க வேண்டும்.
    • காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பது நல்லதல்ல.

    குழந்தைகளுக்கு அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்களை அவசியம் கொடுக்க வேண்டும். ஆனால் பல குழந்தைகள் பழங்கள் சாப்பிட ஆர்வம் காட்டமாட்டார்கள். பழத்துண்டுகளாக நறுக்கி கொடுத்தாலும் கூட சாப்பிட அடம்பிடிப்பார்கள்.

    எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் பலர் ஜூஸாக தயாரித்து கொடுப்பார்கள். பழங்களாக சாப்பிடுவதை விட ஜூஸாக பருகுவதற்கு குழந்தைகளும் விரும்புவார்கள். ஆனால் பழங்களுக்கு மாற்றாக எப்போதும் ஜூஸ் மட்டுமே கொடுக்கக்கூடாது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பது நல்லதல்ல.

    சாப்பிட்ட உடனேயும் ஜூஸ் கொடுப்பதும் தவறான பழக்கம். குழந்தைகள் ஜூஸ் பருகுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா?

    காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஜூஸ் கொடுப்பதுதான் சரியானது. குறிப்பாக காலை 11 மணி, பிற்பகல் 3 மணி அளவில் ஜூஸ் கொடுக்கலாம். தினமும் ஒரே வகையான பழ ஜூஸ்களை கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    சில வகை பழங்களை குழந்தைகள் சாப்பிட விரும்பாது. அவை சத்தானது என்பதற்காக கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது.

    அவர்களுக்கு பிடித்தமான மற்ற பழங்களுடன் பிடிக்காத பழங்களையும் சேர்த்து ஜூஸாக தயாரித்து கொடுக்கலாம். இரவில் ஜூஸ் கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழ ஜூஸ்களை இரவு நேரங்களில் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

    அதிலும் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக்கூடாது. அத்துடன் ஜூஸ் ரொம்ப குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடாது. குழந்தைகளுக்கு 10 மாதத்தில் இருந்தே ஜூஸ் கொடுக்கத் தொடங்கலாம். வயது அதிகரிக்க, அதிகரிக்க ஜூஸ் கொடுப்பதை படிப்படியாக குறைத்துவிட்டு பழங்களாக சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.

    • குழந்தைகளின் மன நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதும் அவசியமானது.
    • வசதியான அலமாரிகள் இருப்பது குழந்தைகளுக்கு குஷியாக இருக்கும்.

    ஒரே இடத்தில் வளரும் குழந்தைகளுக்கு நிம்மதியான வீட்டு சூழலில் பெற்றோருடன் இணைந்து வசிப்பதால் திடமானவர்களாக வளர்கிறார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. அந்த நிலையில் படிப்பு உள்ளிட்ட இதர நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் குழந்தைகள் வீடு மாற்றம் செய்யும்போது, சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள அதிக சிரமம் அடைகிறார்கள்.

    இன்றைய வாழ்க்கை முறைகளில் பணியிட மாற்றம், வாடகை மற்றும் சொந்த வீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பலரும் குடியிருக்கும் வீடுகளை அடிக்கடி மாற்றம் செய்வதுண்டு. அந்த நிலையில், வளரும் குழந்தைகள் வீடு மாற்றத்திற்கேற்ப தங்களை சீரமைத்துக்கொள்வதில் சிரமம் அடைவதாக மன நல வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    நல்ல நட்பு உள்ளிட்ட சுற்றுப்புற தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதிலும் குழந்தைகள் தடுமாறுகிறார்கள். அதன் காரணமாக வீடு மாறுவது அல்லது புதியதாக வீடு வாங்கி குடியேறுவது போன்ற நிலைகளில் சிறு குழந்தைகளின் மன நலனுக்கு ஏற்ற சூழலை கருத்தில் கொண்டு செயல்படுவதும் அவசியமானது.

    வாடகை வீட்டில் இருந்து புதுவீடு வாங்க முடிவு செய்யும் நிலையில் குழந்தைகளின் படிப்பு, நட்பு வட்டம், செயல்திறன் உள்ளிட்ட பல விஷயங்களை கணக்கில் கொள்வது பெற்றோர்களுக்கு அவசியமானது. அவ்வாறு வீடு வாங்கும் நிலையில் குழந்தைகளின் மனதில் புது வீடு பற்றிய ஆவலை ஏற்படுத்தி, அங்குள்ள சூழலுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பழக்கம் ஏற்படுத்தி பின்னர் குடியேறுவதும் ஒரு வகையில் நல்லது.

    * வாடகை வீடு அல்லது சொந்த வீட்டில் குடியேறும்போது அவற்றின் சுற்றுப்புற சூழ்நிலைகள், குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களது விளையாட்டு மற்றும் வீட்டுக்கு அருகில் பள்ளி ஆகிய விஷயங்களுக்கு ஏற்றதாக அமையவேண்டும்.

    * வீடுகளில் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற பிரத்தியேகமான நாற்காலி, மேஜை, ஊஞ்சல் போன்றவற்றை வாங்குவது அவசியமானது. வழக்கமான பர்னிச்சர் வகைகளை விடவும் அவர்களின் உடல் அளவிற்கு பொருத்தமாக பிரம்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட சிறு கூடை சேர்கள் குழந்தைகள் கச்சிதமாக அமர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    * குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக படிப்பு மேஜை இருந்தால் அவர்களின் கவனம் சிதறாது. உட்காரும் சேரிலேயே இணைந்த மேஜை, சேரில் ஒரு பலகை இணைத்து அதன் மேல் புத்தகம் வைத்து கொள்வது போன்ற எளிய மாடல்கள் அவர்களுக்கு ஏற்றது.

     * சிறு ஊஞ்சல் அல்லது சாய்ந்து ஆடக்கூடிய ராக்கிங் சேர், குட்டியான சைஸ் கொண்ட பீன் பேக், பொம்மை, துணிகள் போன்றவற்றை சுலபமாக வைத்து எடுப்பதற்கு வசதியான அலமாரிகள் வீடுகளில் இருப்பது அவர்களுக்கு குஷியாக இருக்கும். குழந்தைகள் உறங்க வசதியான பங்கர் கட்டில்களும் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

    * வீடுகளில் டைனிங் டேபிள் மற்றும் சேர்கள் பெரியவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதனால், குழந்தைகளுக்கான பிரத்தியேக டைனிங் சேர்களை பயன்படுத்தலாம். அவை, உயரம் கூடுதலாகவும், அதன் பகுதி குறுகலாகவும் இருப்பதால் அதில் உட்கார்ந்து சாப்பிடும் குழந்தைகள் டேபிளில் வசதியாக சாப்பிடுவார்கள்.

    • கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
    • ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம்.

    குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது அழுவது அல்லது சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்படுவது அல்லது சிறிது சிறிதாக சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சினைகள் சிறுநீர்ப்பாதையிலோ, சிறுநீர்ப்பையிலோ, சிறுநீரகங்களிலோ கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

     எனவே, நீங்கள் குழந்தைக்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அந்த பரிசோதனைகளின் மூலம் கிருமித்தொற்று உள்ளதா என்றும், அப்படி இருந்தால் எந்த இடத்தில் தொற்று உள்ளது என்றும், எந்த வகையான கிருமித்தொற்று என்றும் தெரிய வரும். அந்த பரிசோதனை முடிவுகளை வைத்து, பிரச்சினைக்கு எந்த ஆன்டிபயாடிக் கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் முடிவுசெய்து பரிந்துரைப்பார்.

     ஆண்குறியின் முன்தோல் துவாரம் சிறியதாக இருப்பது, அடைப்பு (ஃபிமோசிஸ்) ஏற்படவும், சிறுநீர்க் கிருமித் தொற்று ஏற்படவும், பொதுவான காரணமாக இருக்கும். இந்த பிரச்சினையை முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை எனப்படும் எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். அடிக்கடி சிறுநீர்த் தொற்று பிரச்சினை ஏற்பட்டாலோ, அடைப்பு அதிகமாக இருந்தாலோ மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.

    • தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.
    • நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கலாம்?

    ஆரோக்கியமாக, தற்போது எவ்வித மருந்துகளும் (வைட்டமின்கள், இன்சுலின், ஆஸ்துமா இன்ஹேலர்கள், தைராய்டு மாத்திரை, கண் சொட்டு மருந்துகளைத் தவிர்த்து) உட்கொள்ளாத தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.

    குறிப்பாக, அவர்கள், தங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும். அவர்களின் பச்சிளங்குழந்தைகள், ஆரோக்கியமாக போதுமான அளவு எடை அதிகரிப்புடன் இருக்க வேண்டும்; குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, போதுமான அளவு தாய்ப்பால் சுரத்தல் இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கக் கூடாது?

    புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகையிலைப் பொருள்களை உபயோகிப்பவர்கள் மற்றும் நிகோட்டின் மாற்று சிகிச்சையில் (Nicotinereplacement therapy) உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, HTLV அல்லது சிபிலிஸ் நோய்த்தொற்று உள்ளவர்கள், கடந்த 12 மாதங்களில் உறுப்புதானம் அல்லது ரத்ததானம் பெற்றவர்கள், மார்பகங்களில் முலையழற்சி (mastitis), பூஞ்சைத் தொற்று, ஹெர்பெஸ் (herpes simplex) அல்லது வேரிசெல்லா (varicella zoster) நோய்த்தொற்று உள்ளவர்கள் தாய்ப்பால் தானம் அளிக்கக் கூடாது.

    தாய்ப்பால் தானமளிப்பவர்களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என்று ரத்தப் பரிசோதனை எடுத்த பிறகு, தாய்ப்பால் சேகரிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கே, தாய்மார்கள் தங்கள் விரல்களைக் கொண்டு Manual எஸ்பிரஸின் முறையிலோ, பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தியோ, தாய்ப்பாலை அதற்குரிய கொள்கலனில் சேகரிப்பர். கொள்கலன் லேபிள் ஒட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேகரிக்கப்படும்.

    தானமளித்தவருக்கு ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் சிபிலிஸ் நோய்த்தொற்று இல்லை என்று ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்த பிறகு, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால், Pasteurization-க்கு உட்படுத்தப்படும்.

     பாஸ்டுரைசேஷன் செய்வதற்கு முன்பும் பின்பும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலில் நுண்ணுயிர்க்கிருமிகள் உள்ளனவா என்பதை அறிய வளர்சோதனை (culture) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, தாய்ப்பால் கொள்கலனில் அதன் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு, உறைவிப்பானில் 20 டிகிரி செல்சியசில் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 3 - 6 மாதங்கள் வரை, இவ்வாறு உறைய வைக்கப்பட்ட தாய்ப்பாலை உபயோகப்படுத்தலாம்.

    தீவிர பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படும்போது, உறைய வைக்கபட்ட தாய்ப்பாலுடைய கொள்கலன், குழாயின் மிதமான சுடுநீரில் காட்டப்பட்டு, நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தாய்ப்பால், மூன்று மணி நேரத்துக்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

    சென்ற அத்தியாயத்தில், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் நோய்த்தொற்று ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தாய்ப்பால் வழியாக ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று ஏற்படக் கூடுமென்ற காரணத்தால்தான், தாய்ப்பால் தானமளிப்பவர்கள் இந்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

     இந்த பரிசோதனைகள் நெகட்டிவ்வாக இருப்பின் மட்டுமே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பாஸ்டுரைசேஷன் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு உறைய வைக்கப்படும். பாஸ்டுரைசேஷன் செயல்முறையில், தாய்ப்பாலில் வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் இருந்தால், கொல்லப்பட்டுவிடும். அதன்பிறகு, வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது, உறுதியான பிறகுதான், தாய்ப்பால் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    எனவே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலின் மூலம் பச்சிளங்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைவு. பவுடர் பாலைவிட, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பலமடங்கு மேலானதாகும். எனவே கண்டிப்பாக, பச்சிளங்குழந்தைகளுக்கு தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம்.

    • பிலிருபின் என்ற மஞ்சள் நிறமியின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும்.
    • ரத்த சிவப்பணுக்கள் உடையும்போது பிலிருபின் மஞ்சள் நிறமி வெளிப்படுகிறது.

    பிறந்த குழந்தையின் ரத்தத்தில் பிலிருபின் என்ற மஞ்சள் நிறமியின் அளவு அதிகரிப்பதால் குழந்தையின் சருமம் மஞ்சள்நிறமாக மாறுவது 'நியோநேட்டல் ஜாண்டிஸ்' (Neonatal jaundice ) எனப்படுகிறது. நிறை மாதத்தில் பிறக்கும் 60 சதவிகிதக் குழந்தைகளுக்கும், குறைமாதத்தில் பிறக்கும் 80 சதவிகிதக் குழந்தைகளுக்கும் இதற்கான அறிகுறிகள் தென்படலாம்.

    முதிர்ந்த ரத்தச் சிவப்பணுக்கள் உடையும்போது பிலிருபின் என்ற மஞ்சள் நிறமி வெளிப்படுகிறது. இதை கல்லீரல் உருமாற்றம் செய்து மலத்துடன் சேர்த்து குடல்வழியாக உடலைவிட்டு வெளியேற்றுகிறது. மலத்துக்கு மஞ்சள் அல்லது பிளெயின் நிறத்தைத் தருவது இதுதான்.

     குழந்தை, தாயின் கருவில் இருக்கும் வரை தாயின் கல்லீரல் இந்த வேலையைச் செய்கிறது. எனவே குழந்தை பிறந்த முதல் 24 மணி நேரம்வரை பிலிருபின், மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் அளவுக்கு இருப்பதில்லை. குழந்தையின் கல்லீரல் மற்றும் குடல், திறம்பட இந்த வேலையைச் செய்ய சில நாள்கள் ஆகும்.

    குழந்தை பிறந்த 24 முதல் 72 மணி நேரத்தில் ரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகரிக்கும். பிறகு கல்லீரலும் குடலும் நன்கு செயல்பட ஆரம்பித்த பிறகு ஒரு வாரத்தில் இந்த அளவு தானாகக் குறைந்துவிடும். இதற்கு 'பிசியலாஜிகல் நியோநேட்டல் ஜாண்டிஸ்' என்று பெயர்.

    மாறாக மிக வேகமாக பிலிருபின் அளவு அதிகரித்து குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது அதை 'எக்ஸாஜிரேட்டடு பிசியலாஜிகல் ஜாண்டிஸ்' என்கிறோம். இந்த அளவு உடனடியாகக் குறைக்கப்படாவிட்டால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். குழந்தைக்கு மூளை பாதிப்பும், வலிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

     அதிகரித்த பிலிருபின் அளவைக் குறைக்க போட்டோதெரபி என்கிற சிகிச்சை முறை செய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை அதிகமுள்ள குழந்தைகளை மருத்துவ தரமுள்ள நீலநிற ஒளியில் குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து வைக்கும்போது பிலிருபின் சிதைந்து மலத்துடன் உடலைவிட்டு வெளியேறுகிறது. அதனால் மஞ்சள்காமாலை மட்டுப்படுகிறது.

    இந்த சிகிச்சை எளிமையானது, பக்க விளைவுகள் அற்றது. இதை சரியான நேரத்தில் செய்வதால் குழந்தைக்கு ரத்த மாற்று சிகிச்சை போன்றவற்றைத் தவிர்க்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்துவிதமான மஞ்சள்காமாலைக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம்.

     பிறந்த 24 மணி நேரத்துக்குள் மஞ்சள் காமாலை ஏற்பட்டாலோ, அது ஒன்றிரண்டு வாரங்கள் தொடர்ந்தாலோ. வேறு காரணங்கள் கண்டறியப்பட்டாலோ, பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதித்து முழுமையான பரிசோதனையும் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

    • குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறை.
    • மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது.

    மாண்டிசோரி கல்வி முறை என்பது குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறையாகும், இது 1900-களின் முற்பகுதியில் மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது. மாண்டிசோரி முறையானது கற்றல், தனிப்பட்ட கவனம் மற்றும் குழந்தையின் இயல்பான வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

    இது குழந்தைகளுக்கு கற்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பம், மேலும் அவர்கள் சுயமாகச் செயல்படுதல், ஆய்வு செய்தல் மற்றும் அவர்களின் சுற்றுச்சூழலைக் கையாளுதல் மூலம் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

    மாண்டிசோரி வகுப்பறைகளில், குழந்தைகள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஆர்வங்களைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட கல்விப் பொருட்களுடன் வேலை செய்கிறார்கள், மேலும் அவர்கள் அறையைச் சுற்றிச் செல்லவும் தங்கள் சொந்த வேகத்தில் வேலை செய்யவும் சுதந்திரமாக உள்ளனர்.

     சுதந்திரம், பொறுப்பு, கற்றல் மீதான காதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக பணியாற்றுகிறார்கள், ஒவ்வொரு குழந்தையையும் கவனித்து, தேவைப்படும்போது ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள்.

    மாண்டிசோரி அணுகுமுறையானது கலப்பு-வயது வகுப்பறைகள், சிறப்புக் கல்விப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியின் வேகத்திற்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

    மாண்டிசோரி கல்வியின் குறிக்கோள், குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் அன்பையும், அத்துடன் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான சமூக, உணர்ச்சி மற்றும் அறிவுசார் திறன்களையும் வளர்ப்பதற்கு உதவுவதாகும்.

    மாண்டிசோரி கல்வி முறையானது முறையான கற்பித்தல் முறைகளைக் காட்டிலும் குழந்தைகளின் இயல்பான ஆர்வங்கள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கியது. ஒரு மாண்டிசோரி வகுப்பறை நடைமுறையில் கற்றல் மற்றும் நிஜ-உலகத் திறன்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

     மாண்டிசோரி கல்வி முறை:

    * இதன் கல்வி முறை முழுமையாக செய்முறை தொடர்பானது.

    * குழந்தைகள் தாமாகவே செயல்முறை மூலம் கல்வி கற்பர்.

    * குழந்தைகள் தனித்தனியாகவோ / குழுவாகவோ இணைந்து தாமாக கல்வி கற்பர்.

    நன்மைகள்

    * மாணவர் படைப்பாக்கத் திறன் கூடும்.

    * தாமாகவே புதிது புதிதாக குழந்தைகள் கற்பர்.

    பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்:

    * மொழி

    * கணிதம்

    * நடைமுறை வாழ்க்கை பயிற்சி

    * சமூகத்துடனான அணுகுமுறை

    * கலை

    * இசை-பலப்பல

    வயது முறை:

    * 0–18 வயது வரை

    * 0–3 வீட்டிலேயே இம்முறையில் கற்பிக்கலாம்.

    வகுப்பறைகள்:

    * பொதுவாக சாதாரண பள்ளிகளில் 16 வயது என்றால் 10 வது, 18 வயது என்றால் 12-வது என்ற அடிப்படையில் கற்பிக்கப்படும்.

    * மாண்டிசோரி பள்ளிக்கல்வி முறையில் ஒரே வகுப்பறையில் 3–6 வயதுடையவர்கள், மற்றொரு வகுப்பில் 6–9 வயதுடையோர், மற்றொரு வகுப்பில் 9–12 என்பது போல் வயதுக்கேற்ப பிரித்து கல்வி கற்பிப்பர்.

     பாடங்கள் தேர்வு

    இக்குழந்தை இப்பாடங்களைத்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தமக்கு பிடித்த பாடம் எதுவென்றாலும் அது கணிதமோ, அறிவியலோ, மொழியோ இன்ன பிற அவர்களுக்குப் பிடித்த வகுப்பில் அமர்ந்து அவர்கள் கல்வி கற்கலாம். ஆசிரியர்கள்

    * ஆசிரியர்கள் குழந்தைகளை கண்காணிப்பர்.

    * மாணவர் தாமாக கற்க அவர்களை வழிபடுத்துவர். அதுவும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதுபோல் அன்றி, எதுவாயினும் அதை குழந்தைகள் சுதந்திரமாக செய்ய அவர்களை அனுமதிப்பர். அதாவது கற்பிக்க மாட்டார்கள் ஆனால் அவர்களை செயல்படுத்தவிட்டு அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென நல்வழிப்படுத்துவர்.

    பிற பயிற்சிகள்

    நம் வீட்டில் நாம் ஒரு பொருளை எடுத்தால் அதை மீண்டும் அதே இடத்தில் தான் வைக்க வேண்டும் என்பதை அறிவோம். இம்முறையை அவர்களுக்கு பயிற்சியாக வழங்குவர். அதாவது, ஒரு பொருள் என்றால் அதை இங்குதான் வைக்க வேண்டும், சோப்பு என்றால் குளியலறை, புத்தகம் என்றால் கற்கும் அறை என எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்குதான் வைக்க, அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவர்.

    • அறிவு திறன் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும்.

    உங்கள் குழந்தையின் கற்றல், அறிவு திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த சில வழிகள் உள்ளது. உங்கள் பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும், இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிப்பது அவர்களின் நினைவாற்றலையும் மூளையின் திறனையும் மேலும் கூர்மைப்படுத்த உதவும்.

     விளையாட்டுகள்:

    ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கு வேடிக்கையான மற்றும் சவாலான பிரைன் கேம்கள் தேவைப்படுகின்றன. இவை எங்கும் விளையாடக்கூடிய சுயமாக உருவாக்கப்பட்ட கேம்களாக கூட இருக்கலாம் அல்லது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடுவதற்கான போர்டு கேம்களாக இருக்கலாம்.

    உங்கள் குழந்தையின் வளரும் ஆண்டுகளில் இதுபோன்ற விளையாட்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அவர்களின் நினைவாற்றல் தசைகளுக்குப் பயிற்சி அளித்து, எல்லா வகையான விஷயங்களையும் தகவலையும் சரியாக நினைவுப்படுத்த உதவும். அத்துடன் நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும்.

    மன அழுத்தம்:

    ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான கற்றல் முறை உள்ளது. அவர்களின் பாடங்களை புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு தேவையான நேரத்தை வழங்க வேண்டும், மேலும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது அவர்கள் எந்தவித அழுத்தமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ உணரக்கூடாது. எனவே உங்கள் பிள்ளையின் ஆர்வத்தை ஊக்குவித்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இந்த மனப்பான்மை மிகவும் அவசியம், அதனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த பள்ளிப் பாடத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    தூக்கம்:

    குழந்தைகளின் நினைவாற்றலை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒவ்வொரு நாளும் சுமார் 8-10 மணிநேர ஆழ்ந்த தூக்கத்தை அவர்கள் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வழக்கமான தூக்க அட்டவணையை வைத்திருப்பதும் முக்கியம், மேலும் அவர்கள் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வது அவசியம். இதனால் அவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு எழுந்திருக்கும் முன் போதுமான ஓய்வு பெற்றிருப்பார்கள்.

    நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சின் ப்ரோசீடிங்சில் வெளியிடப்பட்ட ஆய்வில், காலையில் பார்த்த கார்ட்டூன் படங்களை நினைவுபடுத்தும் குழந்தைகளின் திறன் பிற்பகல் தூக்கத்திற்குப் பிறகு 10 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று ஆய்வு செய்துள்ளனர்.

     பச்சை காய்கறிகள்:

    பச்சை காய்கறிகள் வைட்டமின்கள், ஆன்ட்டி-ஆக்சிடெண்ட்ஸ், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் எ,பி , சி, டி மற்றும் கே போன்ற வைட்டமின்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    கீரை, கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், கடுகு இலைகள், கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை சிறந்த காய்கறிகளாகும். உங்கள் குழந்தை தினமும் இவற்றை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் புதினா இலைகளை புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் சேர்க்கலாம், கொத்தமல்லி இலைகளை அனைத்து வகையான குழம்புகளிலும் பயன்படுத்தலாம்.

     நட்ஸ்:

    நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க குழந்தைகளுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. எனவே அவர்களின் உணவில் பாதாம், நிலக்கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் வகை உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

    மேலும் பூசணி விதை, சியா விதைகள், எள் விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற விதைகள் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. இவற்றை நேரடியாக சாப்பிடலாம் அல்லது கேக், மில்க் ஷேக், கீர் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

    முட்டை:

    நமது மூளை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் டிஹெச்ஏ போன்ற கொழுப்புகளால் ஆனது. இவை பெரும்பாலும் முட்டை மற்றும் சால்மன் போன்ற மீன்களில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் மூளை மற்றும் நரம்பு செல்களை மேம்படுத்தி, ஒருவரின் கற்றல் சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளை குழந்தையின் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    • குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும்.

    தங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். இதன் காரணமாக தங்களின் பொருளாதார நிலையைத் தாண்டியும் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு, கைவினை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பிற செயல்பாடுகளிலும் அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்த முடியும்.

    தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை விடாமுயற்சி, தலைமைத்துவம், விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை வளர்க்க முடியும். ஏட்டுப்பாடங்களால் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடங்களை, பல்வேறு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டவையே ஆய கலைகள்' நடனம், இசைக்கருவி மீட்டுதல், ஒப்பனை செய்தல், ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் என இதில் 64 வகையான கலைகள் உள்ளன. அவற்றில் இந்த கால வாழ்க்கை முறைக்கு தகுந்த சில கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக அமையும். அதைப் பற்றிய தகவல்கள் இதோ....

     பூ தொடுத்தல்:மலர் அலங்காரம், மலர் வடிவமைப்பு, மலர் ஓவியம் மற்றும் பூக்களால் சிற்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு அடிப்படையாக இருப்பது பூத்தொடுத்தல் அல்லது பூக்கட்டுதல் ஒன்று போல உள்ள பூக்களை தேர்ந்தெடுத்து, வரிசையாக வைத்து அவற்றை மாலையாக கட்டும் செயலில், வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதன்மூலம் கண்களுக்கும். கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும்.

     ஓவியம் வரைதல்:

    குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும். ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் ஓவியக்கலை பயன்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கவும், தங்களது செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் ஓவியக்கலையின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

    உதாரணத்துக்கு, ஓர் ஓவியத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தெந்த நிறங்களை எவ்வாறு கலக்க வேண்டும். ஓவியத்தில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பனவற்றை குழந்தைகள் சிந்திப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டறிய உதவும்.

    மண்பாண்டங்கள் செய்தல்:

    களிமண்ணைக் கொண்டு பல்வேறு பொருட்களை வடிவமைக்கும் கலையானது, குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். களிமண்ணை பக்குவமாக கையாளும் போதுதான் அதைக் கொண்டு பொருட்களை வடிவமைக்க முடியும். மனதையும், உடலையும் சமநிலையில் வைத்து சிந்திக்க இந்தக் கலை கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் களிமண்ணுக்கு உண்டு.

    மண்பாண்டங்கள் செய்வதற்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மிகவும் அமைதியாக வடிவங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்க முடியும். அதேநேரம் அவர்களின் ஆற்றலும், செயலும் வேகமாக இருக்கும். இவ்வாறு சமைத்தல், தையல் நீச்சல், இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என ஒவ்வொரு கலையும் குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்ப்பதற்கு உதவுகின்றன.

    ×