search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • பாராட்டு என்பது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது.
    • குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்க்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள்.

    உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்த குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும் போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளை பாராட்டும்போது, எந்த செயலுக்காக பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.

    பாராட்டுகளை பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சரியப் பார்வையோ, தலைகோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச்செல்வதோ, பிடித்த உணவை சமைத்து தருவதாகவோ கூட இருக்கலாம்.

    உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் பாராட்டுங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.

     நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப் பாராட்டும் தன்மையை குழந்தைகளிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பழக்குங்கள். இது அவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.

    திறனை வெளிப்படுத்தும்போதும், போட்டிகளில் வெற்றி பெறும்போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும். ஒருமுறை பாராட்டிவிட்டு அந்த திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.

    பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியாகவும், சமூக ரீதியாகவும் தேவையானது. அதை தவறாமல் வழங்குங்கள்.

    • ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு.
    • மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது.

    பத்து நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வதைக்கிறது வியர்வை. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு. தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கோடைகாலமும் ஆரம்பிக்க உள்ளதால் மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது. இந்நிலையில் வெப்பத்தால் வரும் வியர்க்குருவை தடுப்பதற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய வைத்திய முறைகளை பார்க்கலாம்.

     வியர்க்குரு

    உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.

    எப்படி தடுப்பது...?

    * உடலுக்கு குளுமை அளிக்கும் சந்தனத்தை கொஞ்சம் மஞ்சளும் தண்ணீருக்கு பதில் ரோஸ் வாட்டரும் கலந்து உடம்பு, கழுத்து என தடவினால் வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.

    * முல்தானி மெட்டியையும் ரோஸ் வாட்டரில் கலந்து வியர்குருவை விரட்ட பயன்படுத்தலாம்.

    * பருத்தித் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உடலில் போர்த்தி ஈரம் காயும் வரை வைத்திருப்பதும் வியர்க்குரு வருவதை தடுக்கும்.

    * அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

    * மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.

    * பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.

    * கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

    • அசைவ உணவுகளில் புரதங்கள், தாதுக்கள் அதிகமாக இருக்கிறது.
    • மீன் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு என்றே சொல்லலாம்.

    டாக்டர்கள் குழந்தைகளுக்கு அசைவ உணவை சாப்பிட கொடுக்கலாம், என்று கூறியவுடன் பெற்றோர்கள் கேட்கும் முதல் கேள்வி அசைவத்தில் எதை சாப்பிட கொடுப்பது.

    மீன், சிக்கன், மட்டன் இந்த மூன்றிலுமே நிறைய புரதங்கள், தாதுக்கள் வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. அதிலும், வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஹீமோகுளோபின், போஷாக்கு, முழுமையான புரதம் என்ற 9 முக்கியமான அமினோ அமிலங்கள் சிக்கன், மீன், மட்டன் மூன்றிலும் இருக்கிறது. அப்படியென்றால் குழந்தைக்கு சாப்பிட எதை கொடுக்கலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்திருக்கும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

    மீன்

    மீன் உணவுகள், வளர்கிற குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு என்றே சொல்லலாம். மீனில் அதிகமான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் இருக்கிறது. முக்கியமாக மீனில், ஒமேகா 3 இருக்கிறது.

    ஒமேகா 3 இதயத்திற்கு மிகவும் நல்லது, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. மீன் உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மீனில் இருக்கின்ற ஒமேகா 3, வைட்டமின் கே குழந்தைகளின் மூளை வளர்சிக்கும், கண்ணிற்கும் மிகவும் நல்லது.

    குழந்தைகளின் கவனிக்கும் திறனும் அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைப்பதற்கும் மீன் மிகவும் நல்லது. எலும்பு வலுபெறவும், மூட்டுகளில் வலுப்பெறவும், புற்றுநோயில் இருந்து பாதுகாக்கவும் மீன் உதவுகிறது. வாரத்துக்கு 3 முறை மீன் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய், தொண்டை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் எல்லாம் வராமல் பாதுகாக்கிறது.

    சிக்கன்

    சிக்கனில் அதிகப்படியான புரதங்கள் இருக்கிறது. குழந்தைகள் வலுவாக மற்றும் உயரமாக வளருவதற்கும் தேவையான அமினோ அமிலங்கள் சிக்கனில் இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு கொஞ்சம் சிக்கன் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். இதனால் தான் சிக்கன் சாப்பிட பிறகு குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை சாப்பிடமாட்டார்கள்.

    மட்டன்

    மட்டன் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், மட்டனில் அதிகபடியான நிறைவுற்ற கொழுப்பு இருக்கிறது. இப்பொழுது இல்லை என்றாலும் பிற்காலத்தில் உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அசைவ உணவுகளில் நம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப அசைவ உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்கலாம்.

    • ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்.
    • பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள்.

    ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள். ரைம்ஸ், பள்ளிக்கூட பாடங்களைத் தவிர்த்து பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள். நீச்சல், ஸ்கேட்டிங், சிலம்பம், நடனம்... போன்ற பயிற்சிகளில், அவர்களை பிசியாக்குங்கள். குடும்பமாக விளையாடுவது, பூங்கா-கடற்கரைக்கு அழைத்துச் செல்வது... என குடும்பமாக நேரம் செலவழியுங்கள்.

    காமன் சென்ஸ் மீடியா என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில், ஸ்மார்ட்போனுக்கு 50 சதவித இளையோர்களும் (13-18 வயது), 36 சதவித பெரியவர்களும் (18-24 வயது) அடிமையாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், பெற்றோர் குழந்தைகள் முன்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையும், வீடியோக்கள் பார்ப்பதையும், விளையாடுவதையும் குறைத்து கொண்டு, முன்மாதிரியாக நடந்து கொள்வது அவசியம்.

    குறும்புத்தனம் நிறைந்த குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைக்க, சாப்பாட்டை எளிதாக ஊட்ட... என குழந்தை வளர்ப்பில் இந்த காலத்து பெற்றோர் கையில் எடுத்திருக்கும் ஆபத்தான விளையாட்டு பொருள்தான், ஸ்மார்ட்போன்.

     வசதியில்லாதவர்கள், வசதியானவர்கள் என்ற எந்தவித பாரபட்சமின்றி, வயது வித்தியாசமின்றி எல்லா குழந்தைகளின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ்கிறது. `பேபி ரைம்ஸ்' என்ற பெயரில், குழந்தைகளின் மூளைக்குள் ஊடுருவி, `யூ-டியூப் ஷார்ட்ஸ்', `பேஸ்புக் ரீல்ஸ்' பார்க்கும் அளவிற்கு, குழந்தைகளின் மூளையை ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன.

    குழந்தைகள், ஸ்மார்ட்போன் பார்ப்பது தவறில்லை, என்றாலும் அது கட்டுப்பாட்டோடு நடைபெற வேண்டும். இல்லையேல், குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

    பொதுவாக பிறந்தது முதல் 5 வயது வரை யிலான காலகட்டத்தில்தான், மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனிற்குள் மூழ்கும்போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும். `ஸ்மார்ட்போன்' என்ற வட்டத்திற்குள்ளாகவே, வாழ அவர்களது மூளை பழக்கப்பட்டுவிடும்.

    2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்மார்ட்போன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 3 முதல் 5 வயது குழந்தைகள், கல்விக்காக ஒரு மணிநேரம் மட்டும் பயன்படுத்தலாம். அதுவும், வீடியோக்களை அவர்கள் பார்க்க அனுமதிக்கக்கூடாது. மாறாக ரைம்ஸ் பாடல்களை கேட்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். 5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு 2 மணி நேரம் மட்டும், அதுவும் கல்விக்கு உதவும் வகையிலான விஷயங்களை தெரிந்துகொள்ள அனுமதிக்கலாம். இதுதான், கட்டுப்பாடான `ஸ்கிரீனிங்' நேரம். கட்டுப்பாடுகள் மீறப்படும்போது, குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

     கடந்த 8 ஆண்டுகளில், நிறைய குழந்தைகள் `ஸ்பீச் தெரபி' எனப்படும், பேச்சுப்பயிற்சிக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஸ்மார்ட்போன்கள் மிகமுக்கிய காரணம். ஆம்...!

    8 மாதம் தொடங்கி, 2 வயதிற்குள்தான் குழந்தைகள் பேச கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் பேசுவதை உள்வாங்கி, அதற்கு பதில் பேசி பழகவும், மற்றவர்களின் கேள்விக்கு யோசித்து பதில் கொடுக்கவும் அந்த வயதில்தான் பழகுவார்கள். அந்த காலகட்டத்தில், ஸ்மார்ட் போனுக்குள் குழந்தைகள் மூழ்கும்போது பேச்சுப்பயிற்சி, பதில் பேசும் திறன்... என எல்லாமே தடைப்படும்.

    வழக்கமான குழந்தைகளில் இருந்து வேறுபட்டு, சிறப்பு குழந்தைகளை போல செயல்பட ஆரம்பிப்பார்கள். அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல், பதில் பேச தெரியாமல் தவிப்பார்கள்.

    அதேபோல, `காக்னெட்டிவ் டெவலெப்மெண்ட்' எனப்படும் அறிவாற்றல் வளர்ச்சியும் தடைப்பட்டு, குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைந்துவிடும். மேலும் சமூகத்துடன் சேர்ந்து வாழ, தயக்கம் காட்டுவார்கள்.

    ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பிஞ்சு குழந்தைகளின் கண்களை வெகுவாக பாதிக்கும். கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். நீல ஒளி மூளையின் நினைவக திறனை பாதிப்பதால், குழந்தைகளுக்கு கவனச்சிதறல் உண்டாகும். எதிலும் முழு கவனமின்றி, மிகவும் குழப்பமாகவே காணப்படுவார்கள். இதுமட்டுமல்ல, அவர்களது தூக்கம், உணவு முறை, உடல் பருமன் என பல்வேறு பிரச்சினைகளை ஸ்மார்ட்போன் உண்டாக்கும்.

    • 24 மணி நேரமும், குழந்தைக்கு டயப்பர் அணிவிக்க தொடங்கி விட்டார்கள்.
    • சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் அதிகரிக்கும்.

    சவுகரியம் கருதி இன்று பலரும் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே 24 மணி நேரமும், குழந்தைக்கு டயப்பர் அணிவிக்க தொடங்கி விட்டார்கள். அடிக்கடி மாற்ற தேவை இல்லை என்பதாலும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் குழந்தையின் தூக்கம் பாதிக்காமல் இருக்கும் என்றும், வெளியே செல்லும்போதும் அதனை உபயோகிக்கிறார்கள்.

    அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும். ஈரமான டயப்பர்கள், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களையும், சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் அதிகரிக்கவும் வழி வகுக்கின்றன. நாள் முழுவதும் டயபர்களை உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு தோலில் அழற்சி, வெடிப்பு மற்றும் எரிச்சல் உண்டாக்கலாம்.

    தற்போது காட்டன் டயப்பர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை துவைத்து திரும்பவும் உபயோகப்படுத்த முடியும். அது குழந்தைகளின் தோலுக்கும் எந்தவித கெடுதலும் செய்யாது. இதன் பயன்பாட்டை அதிகப்படுத்தலாம். துணியால் ஆன டயப்பர்கள் செலவை மிச்சப்படுத்தும்.

    இன்றைய அவசரமான உலகில் அனைத்து மாடர்ன் அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிப்பது வழக்கமாகி விட்டது. அதில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் கலந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சிலர் ஒரு நாள் முழுவதும் கூட இதனை பயன்படுத்துவர். அவர்கள் துணியினை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றும் சுத்தமாக இருக்காது என்றும் கருதுகின்றனர். ஆனால், இது போல் டயாபர்களை அணிவிப்பதால் குழந்தைகளுக்கு தீங்கு உண்டாகும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டயாபர்களில் விஷப்பொருள் கலந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டது. அவரகள் பல மாதிரிகளை எடுத்துள்ளனர். அதில் அவர்களுக்கு பல அதிர்ச்சிகரமான முடிவுகள் தெரியவந்துள்ளது. அவர்கள் ``குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக விற்கப்படும் இந்த டயாபர்களில் ப்தலேட் எனப்படும் விஷப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது."

    இவை குழந்தைகளின் உடல் நலனை பெரிதும் பாதிக்கும். சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் தாய்மார்கள் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    டயாபர்களில் இது போன்ற வேதிப்பொருளை பயன்படுத்த சீனா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     டயப்பரை எப்போது மாற்ற வேண்டும்?

    ஈரம் கசிந்தால், அல்லது டயப்பர் கனமாக தெரிந்தால், குழந்தை மலம் கழித்து விட்டால், துர்நாற்றம் வருகையில், குழந்தை விடாத அழுது கொண்டிருந்தால் டயப்பர்களை உடனே மாற்ற வேண்டும். குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    • அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம்.
    • மின்காந்த கதிர்வீச்சுகள் ஆபத்தானது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம். ஷாப்பிங் முதல் வங்கி சேவைகள் வரை அனைத்துமே உட்கார்ந்த இடத்திலிருந்து செல்போன் வைத்து முடித்து விடுகிறோம். ஒரு பக்கம் இதனால் நாம் சோம்பேறியாக மாறினாலும் இன்னொரு பக்கம் நமக்கே தெரியாமல் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது ஏன்...? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன...? என்பதை பற்றி பார்க்கலாம்.

     செல்போனை பெரியவர்களே அதிகம் உபயோகிப்பது தவறு, அதிலும் பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த சிலர் செல்போனை கொடுத்து பழக்கம் ஏற்படுத்துகிறார்கள். இந்த செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

    நாம் குழந்தைகளுக்கு அருகில் மொபைல் போன்களை வைத்து சோறு ஊட்டும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது மட்டும் இல்லாமல் செல்போன் ஸ்கிரீன்களில் இருந்து வெளிவரும் புற உதாக்கதிர்கள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

    அதிலும் குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் குழந்தைகளின் மூளை பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு அதிக அளவு கதிர்வீச்சுகளை உறிஞ்சக்கூடிய சக்தி கொண்டது.

    குழந்தைகள் மீது இந்த புற ஊதாக்கதிர்கள் தாக்கும் போது அவர்கள் கண்கள் பாதிப்படையக் கூடும். மேலும் இது தூக்கமின்மை, மூளை செயல்பாடு, அறிவுத்திறன் மற்றும் நடத்தையை கூட சில நேரங்களில் பாதிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது தெரியாமல் பெற்றோர்கள் பலரும் குழந்தைகள் அழுகையை நிறுத்த பயன்படுத்தும் ஆயுதமாகவே செல்போன் மாறிவிட்டது.

    அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம், மனநல குறைபாடு, குழப்பம் மற்றும் சிந்தனை தடைபடுதல் ஏற்படலாம் மற்றும் உடல் செயல்பாடு குறைவதால் உடல் பருமன் மற்றும் மோசமான எலும்பு ஆரோக்கியம் ஏற்படும்.

    செல்போனில் எவ்வளவு தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இதை குழந்தைகளிடம் இருந்து எப்படி தவிர்ப்பது என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரை அவர்களுக்கு விளையாட செல்போன் கொடுக்கலாம்.

    அதாவது செல்போன் மடிக்கணினி இவை அனைத்தும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் உபயோகிக்க கொடுக்கலாம். அதேபோல வீட்டில் அனைவரும் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு பதிலாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பூங்கா அல்லது வெளி இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.

    • சமச்சீரான உணவு கிடைக்காத போது மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் புத்திக் கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    குழந்தைகள் டீன் ஏஜ் வயதிற்கு வரும் வரை அவர்களை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது. அதுவும் ஓடி, ஆடி விளையாடும் குழந்தை பருவத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியானது தினம்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் விட்டமின்கள் என நிறைய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவையாக இருக்கும். அவர்களின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சியினால் கிடைக்கப்பெறும் புத்தி கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    வளர்பருவம்:

    இந்த வளர்ச்சிதை மாற்றம் நடக்கும் பருவத்தில், அவர்கள் உணவு உண்பதற்கு கோபப்படுவதோ, மறுப்பு தெரிவிப்பதோ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த தருணங்களில் தாய்மார்கள் சத்து நிறைந்த உணவை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

    சமச்சீரான உணவு கிடைக்காத பொழுது மூளை வளர்ச்சியில் குறைபாடு, அடிக்கடி கோபப்படுவது, படபடப்பாவது, பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், வயதுக்கு வந்த பிறகு மாதாந்திர சுழற்சியில் மாறுபாடு வருவது, ரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என எதிர்காலத்தில் உடல் ரீதியான நிறைய தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

    ஆகையால் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களுக்கு பிடித்தமான, அதே நேரத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை எப்படியாவது அவர்கள் உணவில் சேர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

     வைட்டமின் சி:

    குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, நோயை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சாப்பிடும் உணவுப் பொருளில் இருக்கும் இரும்புச்சத்தை உடலுக்கு எடுத்து தருவதில் பெரும்பங்காற்றுகிறது. இந்த வைட்டமின் சி யை பெற சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி, தக்காளி, மிளகு என உணவுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அதை கொடுத்து, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கலாம்.

     இரும்புச்சத்து:

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இரும்புச் சத்தாகும். இரும்புச்சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. இதற்கு இரும்புச் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. காய்கறிகள் இறைச்சி, முட்டை, தானிய வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய காய்கறிகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் ஃபோலிக் ஆசிட் ஆனது உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறப்பான ஒரு அமிலம் ஆகும்.

    வைட்டமின் டி:

    குழந்தைகளின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமாகிறது. இது நேரடியாக சூரியனில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளை, காலையில் அல்லது மாலை வேலைகளில் விளையாட உற்சாகப்படுத்துங்கள். தேங்காய் பால், சோயா, மத்தி மீன் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. எனவே அவர்களை காலையில் அல்லது மாலை வேலைகளில் கட்டாயமாக விளையாட, உற்சாகப்படுத்துவதோடு, மேற்கண்ட உணவு தேர்வில் ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமாறு செய்து கொடுங்கள் இதன் மூலம் வைட்டமின் டியை பெற முடியும்.

     புரதம்:

    வளர்ந்து வரும் குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கும் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கும் புரோட்டின் எனப்படும் புரதம் இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது. மீன், கோழி, இறைச்சிகள், முட்டை,பால், தயிர், நெய், வெண்ணெய், கடலை பயிறு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள், ஆகியவற்றிலும் இந்த புரதமானது நிறைந்து காணப்படுகிறது.

    ஆரோக்கியமான கொழுப்பு:

    சரியான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை கொடுப்பது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரும். குறிப்பாக குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. ரத்த உறைதல் மற்றும் வைட்டமின்களை உடலுக்கு எடுத்துக் கொள்வதற்கும் கொழுப்பானது தேவையாக இருக்கிறது. இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, பால், தயிர், வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது ஆகவே இந்த பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தயாராக வைத்திருப்பது அவர்கள் உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

    • மூளையில் உள்ள முக்கியமான பகுதி `ஹிப்போகாம்பஸ்’.
    • சில பயிற்சிகளாலும் மூளையின் செயல்பாடுகளை தூண்டலாம்.
     நினைவாற்றல் மற்றும் மூளைத்திறனை அதிகரிக்கும் பயிற்சி முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

    மூளையின் செயல்திறனை மேம்படுத்த, பல்வேறு நுட்பங்கள் உள்ளன. இதனை முறையாக வழக்கமான முறையில் செயல்படுத்தினால் அறிவுத்திறனை முன்னேறச் செய்யலாம்.

     `மூளைத்திறன் குறையாமல் இருக்கவும், மேம்படவும் வாழ்நாள் முழுவதும் எதையாவது ஒன்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்' என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இத்தகைய கற்கும் பயிற்சி மூலம் நமது நியாபகசக்தி அதிகரிக்கும். மேலும் குறிப்பிட்ட பயிற்சிகளினால், மூளையில் புதிய செல்கள் உருவாகும். இதனால் அறிவுத்திறன் மேம்படும், மூளை நரம்பியல் மண்டலத்தில் உள்ள `நியூரான்கள்' ஆரோக்கியமாக இருக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மூளையில் உள்ள முக்கியமான பகுதி `ஹிப்போகாம்பஸ்'. தமிழில் இதை `மூளை பின்புற மேடு' என்பார்கள். இதுதான் நமது ஞாபகசக்தி மற்றும் கற்கும் திறனை மேம்படுத்தும் பகுதியாகும். நாம் எப்போது கற்பதை நிறுத்த ஆரம்பிக்கின்றோமோ, அப்போது மூளையின் இந்த பகுதிகள் சுருங்க ஆரம்பித்துவிடுகின்றன.

    சில பயிற்சிகளாலும் மூளையின் செயல்பாடுகளை தூண்டலாம். அத்தகைய பயிற்சிகளில் ஒன்று `நிமானிக்'. இந்த பெயர் நமக்கு புதிதாக இருந்தாலும், நமக்கு பழக்கமானதுதான். இருகைகளின் விரல் இணைப்பு எலும்பு பகுதியின் ஏற்ற இறக்கங்களை கொண்டு 12 மாதத்திற்கான நாட்களை கணக்கிடுவது போன்ற சுலப பயிற்சி இது. அதேபோல ஒரு வாக்கியத்தை அடிப்படையாக கொண்டு சிக்கலான விஷயங்களை நினைவுப்படுத்தும் பயிற்சி இது.

     இதுபோல `நிமானிக்' முறையின் இன்னொரு பயிற்சி `அக்ராஸ்டிக்'. அகர வரிசைப்படுத்தும் முறையில் எழுத்துக்களின் வரிசைகளை நினைவில் வைத்துக்கொண்டு ஞாபகத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் முறைப்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு... 'My veryEducated Mother Just Served Us Noodles' என்ற வாக்கியத்தை கூறலாம். இந்த வாக்கிய வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை நினைவில் கொண்டு, சூரிய குடும்பத்தின் கோள்களை (Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune.) வரிசைப் படுத்தும் நினைவு பயிற்சி இது.

    இந்த நினைவூட்டும் பயிற்சி மூளையில் தகவல்களை பதிவு செய்யவும், பதிவு செய்துள்ள தகவல்களை மீட்டு எடுக்கவும் உதவுகிறது. மிகக் கடினமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள இந்த பயிற்சி உதவுகிறது. நாம் படித்தது, கேட்டது போன்றவற்றை மறந்துபோகாமல் நியாபகத்தில் வைக்க எளியமுறையில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் படங்கள், வாக்கியங்கள் மற்றும் சில சாதாரண வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.

    அடுத்தது, `மைண்ட் பேலஸ் மெமரி' என்ற பயிற்சி. இது மிகவும் சக்தி வாய்ந்த பயிற்சி. இதில் மூளையின் செயல்திறனை, வார்த்தைகள் மற்றும் படங்களைக் கொண்டு இணைப்பு ஏற்படுத்தி, நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்வதாகும். இப்பயிற்சியின் மூலம் நூற்றுக்கணக்கான வேற்றுமொழி வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

     மூளைக்கு சில புதிய அனுபவ ஆற்றல்களைக் கொடுப்பதினாலும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். `நியூரோபிக் காக்னடிவ் டிரைய்னிங்' என்னும் நரம்பியல் அறிவாற்றல் பயிற்சியில் மூளையைப் பயன்படுத்தி செய்யும் பயிற்சி முறைகள் உள்ளன. இதில் நமது உடல் மற்றும் உணர்வுகள் மூலம் மூளையின் பயன்பாடு மேம்படுத்தப்படுகிறது. உதாரணமாக, வலதுகைப் பழக்கம் உள்ளவர் தனது இடதுகையால் செயல்களைச் செய்யப் பழகவேண்டும். இதனால் மூளையின் பல பகுதிகள் இணைந்து தூண்டப்படும். இது நமது நரம்பணுக்களை வலிமையாக்கி அவை வயதாகாமல் இருக்க எதிர்ப்புசக்தியைத் தரும்.

    புதிர்கள், குறுக்கெழுத்துப்போட்டி, வரிசைப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மூளையின் திறனை அதிகரிக்கும். மூளை சார்ந்த விளையாட்டுகள் மூலம் மூளையின் நிர்வாக செயல்பாடு, வேலை நினைவாற்றல், செயலாற்றும் வேகம் போன்றவை அதிகரிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    கணினிகள் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்கள் நம்முடைய பல வேலைகளை சிறப்பாக செய்ய ஆரம்பித்து விட்டன. இவை நமது மூளையின் செயல்பாடுகளை குறைத்து மனிதனை சோம்பேறி ஆக்கிவிட்டன. எனவே, நமது மூளைக்கு சவால் விடும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கணிதம் சார்ந்த மற்றும் மதிப்பீடு தரக்கூடிய பயிற்சி களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். எந்த நிலையிலும் உடலையும், மூளையையும் சோம்பேறி ஆக்கிவிடக்கூடாது. இதுபோன்ற பயிற்சிகள் மூலம் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

    ஒரே நேரத்தில் இரு கைகளையும் இருவேறு வேலைகளில் ஈடுபடுத்துவது மூளைக்கு சிறப்பான பயிற்சியாக அமையும். ஒரே சமயத்தில் ஒரு கையில் சதுரம் வரையவும், மற்றொரு கையில் முக்கோணம் வரையவும் உங்கள் குழந்தைக்கு பயிற்சி கொடுத்தால், அது குழந்தையின் வலது-இடது மூளையை ஒரே நேரத்தில் இயக்கும் பயிற்சியாக அமையும். கூடவே, மூளையின் செயல்திறனும் அதிகரிக்கும்.

    ஊட்டச்சத்து

    குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு நல்ல ஊட்டச்சத்து அவசியம். சிறு வயதில் இருந்தே சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுப்பது அவர்களது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பாக்கெட்டுகள், பதப்படுத்திய உணவுகள், துரித உணவுகள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். கடல் உணவு, கீரைகள், நட்ஸ் மற்றும் விதைகள், முழு தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக அக்ரூட் பருப்புகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

    ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் மூளையின் ஆரோக்கியம் பலப்படுத்தப்படும். மூளையின் எடையில் 8 சதவீதம் ஒமேகா கொழுப்பு அமிலம் இருப்பதாகவும், இந்த கொழுப்பு அமிலம் மூளையின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் பாதுகாப்பதில் திறன் வாய்ந்ததாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    • இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
    • வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம்.

    இடது கை பழக்கம் உடையவரா நீங்கள்...?

    இடதுகை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..!

    இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.

    வலதுகை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடதுகை பழக்கமுள்ளவர்கள்தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், பில்கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது. உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம்.

    அதேபோல வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம். ஆனால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்கிறார்கள் எனவும் கண்டறிந்துள்ளனர்.

    அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.க்யூ அளவு 140-க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின் மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடதுகை பழக்கம் உள்ளவர்கள்தான்.

    இடதுகை பழக்கம் உள்ளவர்களது மூளை சிறப்பாக செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குகிறார்கள். இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது. தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வைத் திறன் இருக்கிறது.

     இடது கை பழக்கம் உண்டாவது ஏன்?

    ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவர் இடது கை பழக்கம் உடையவர் என தீர்மானிக்கப்படுவதாகவும், அது நம் உயிரியலில் கலந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தகவல் கூறிகிறது. நாம் அதிகமாக பயன்படுத்தும் கைகளுக்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நம் முதுகுத்தண்டில் உள்ள சில தனித்துவமிக்க மரபணு செயல்பாடுதான் இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    இதற்கு முன்பு வரை, மூளையின் எந்த பக்கம் அதிக செயல்பாட்டோடு இருக்கிறதோ, அதை பொறுத்துதான் ஒரு நபர் வலது கை பழக்கம் உள்ளவரா அல்லது இடது கை பழக்கம் உள்ளவரா என்பது தீர்மானிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது வந்துள்ள ஆய்வின் முடிவு இந்த கருத்தை தகர்த்துள்ளது. கர்ப்பமடைந்து 8 முதல் 12 வாரத்திற்கு இடைபட்ட காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு முதுகுத்தண்டு வளர ஆரம்பிக்கும். இந்த ஆய்விற்காக கருவில் உள்ள குழந்தைகளை மிக நெருக்கமாக கண்காணித்து வந்தனர் ஆய்வாளர்கள்.

    நமது அசைசவுகளை மூளை கட்டுப்படுத்துவதற்கு முன்பே இந்த நடவடிக்கைகள் தொடங்கிவிடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. நமது முதுகுத்தண்டில் உள்ள பகுதிகளே நம்முடைய கைகள், கால்கள் மற்றும் பாதங்களுக்கு சிக்னல் கொடுக்கிறது. நாம் வலது கையில் எழுதப் போகிறோமா அல்லது இடது கையிலா என்பதை இந்த செயல்பாடுதான் தீர்மானிக்கிறது.

    தாயின் கருவிற்குள் குழந்தை இருக்கும் போதே, வெளிப்புற காரணிகளின் தூண்டுதல் இதற்கு காரணமாக இருக்கும் என அவர்கள் நினைக்கின்றனர். நொதிகள் எப்படி இயங்க வேண்டும் என மாற்றக்கூடிய ஏதோவொரு விஷயம் குழந்தையை சுற்றி இருப்பதாக ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நொதிகளின் செயல்பாட்டையே மரபணுக்களும் பின்பற்ற தொடங்குகிறது.

    முதுகுத்தண்டில் தனித்துவமான மரபணு செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். எதிர்காலத்தில் ஒரு குழந்தை இடது கை பழக்கமா அல்லது வலது கை பழக்கமா என்பதை இவைதான் தீர்மாணிக்கிறது.

    மேலும், கருவில் உள்ள குழந்தை பெருவிரலை வாயில் வைத்து சப்பும் பழக்கத்திற்கும், அக்குழந்தை இடது கை அல்லது வலது கை பழக்கம் உடையதா என்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதற்காக கருவில் இருக்கும் 274 குழந்தைகளை ஆய்வு செய்த போது, 13-வது வாரத்தில் 90 சதவீதம் கருவில் உள்ள குழந்தைகள் தங்களது வலது கை பெரு விரலை வாயில் வைக்கின்றன.

    அதேசமயத்தில் வெறும் 10 சதவீதம் கருக்களே தங்களது இடது கை விரலை வாயில் வைக்கின்றன. இதே குழந்தைகள் பிறந்ததும், கருவில் இருக்கும் போது வலது கையை பயன்படுத்திய 60 குழந்தைகள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடது கையை பயன்படுத்திய 15 குழந்தைகளில் ஐந்து பேர் தற்போது வலது கை பழக்கம் உடையவர்களாகவும் பத்து பேர் இடது கை பழக்கம் உடையவர்களாகவும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    • மூளை வளர்ச்சியை தூண்ட சில விளையாட்டுகள் உதவும்.
    • விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டும் விளையாட்டுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்துவத்தோடு பிறக்கிறார்கள். சுற்றுச்சூழல் காரணிகள் அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிறந்தது முதல் 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும்.

    அந்த காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய அவர்களை ஊக்கப்படுத்துவது, சுயக்கட்டுப்பாட்டை கற்பிப்பது, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமைகளை வளர்ப்பது, தகவல் தொடர்பை மேம்படுத்த உதவி செய்வது போன்ற செயல்பாடுகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

    அதன்மூலம் குழந்தைகள் எதையும் அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்து பார்ப்பார்கள். அவர்களின் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்திக் கொள்வார்கள். இதற்கு மூளை வளர்ச்சியை தூண்டும் சில விளையாட்டுகள் உதவும்.

     புதிர் விளையாட்டுகள்:

    பலதரப்பட்ட வயதினரையும் ஈர்க்கும் புதிர் விளையாட்டுகள், பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. குழந்தைகள் தங்களின் கவனத்தை மேம்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இவ்வகை விளையாட்டுகள் உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அவர்களின் பகுத்தறிவும், சிக்கல்களை அணுகும் தன்மையும் மேம்படும்.

     வியூக விளையாட்டுகள்:

    பகடைக்காய், ஏணியும் பாம்பும் போன்ற வியூக விளையாட்டுகள், குழந்தைகளுக்கு சிக்கலான சூழ்நிலைகளில் முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கின்றன. இத்தகைய விளையாட்டுகள் மூலம் அவர்கள் திட்டங்களை உருவாக்கவும், அதில் உள்ள ஆபத்துகள் மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு சமநிலைப்படுத்தவும் கற்றுக்கொள்ள முடியும். வியூக விளையாட்டுகள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளின் மாதிரியாக திகழ்பவையாகும்.

     சுடோகு:

    எண் புதிர் விளையாட்டான சுடோகு, குழந்தைகளின் அறிவை மேம்படுத்தும். எண்களை கட்டங்களில் நிரப்புவதன் மூலம் சாத்தியக்கூறுகளை எடை போடுவதற்கும், அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கும் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். சுடோகுவின் மூலம் கணிதம் மற்றும் எண்ணியல் சார்ந்த அறிவையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

     வார்த்தை விளையாட்டுகள்:

    குறுக்கெழுத்துப் புதிர்கள், சொல் தேடல்கள் என பல வகையான வார்த்தை விளையாட்டுகள் உள்ளன. இவை குழந்தைகளின் மொழித்திறனையும், மொழியியல் நுண்ணறிவையும் மேம்படுத்தும். இவ்வகை விளையாட்டுகளின் மூலம் பல்வேறு புதிய சொற்களை தெரிந்துகொள்ள முடியும்.

     சதுரங்கம்:

    உலக அளவில் மூளை வளர்ச்சியைத்தூண்டும் விளையாட்டுகளின் பட்டியலில், இது முதன்மை இடத்தில் உள்ளது. இருவர் மட்டுமே பங்குபெறும் இந்த விளையாட்டில், விளையாடுபவர்கள் விழிப்புணர்வோடு திட்டமிட்டு விளையாடுவது முக்கியமானது. இதில் எதிரிகளின் நகர்வுகளை கணிக்க வேண்டும்.

    நம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் எதிரியின் அசைவு என்னவாக இருக்கும் என்பதை கணித்து சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டும். சதுரங்கம் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவும். பொறுமை, கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை இந்த விளையாட்டின் மூலம் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

     இசை:

    சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்வேறு வகையான இசைகளை அறிமுகப்படுத்துங்கள். இசைக்கு, நினைவாற்றலை வளமாக்கும் ஆற்றல் உண்டு. அதேபோல, ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக் கொடுங்கள். இந்த பயிற்சிகூட கற்றல் திறனை மேம்படுத்தவும், படிப்பில் நல்ல மதிப்பெண்களை பெறவும் உதவும். தெய்வீக பாடல்களை அவ்வப்போது வீட்டில் ஒலிக்க செய்து அதனை குழந்தை கேட்குமாறு செய்யலாம்.

     5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு...

    ஒன்றரை வயது தொடங்கி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பில்டிங் பிளாக் விளையாட்டுகள் சிறப்பானதாக இருக்கும். அதேபோல, செம்மையான இயக்க திறன்களை (பைன் மோட்டார் ஸ்கில்ஸ்) வளர்க்க, வண்ணம் தீட்டுதல், வண்ணங்களை கண்டறிதல் போன்ற பயிற்சிகள் கை கொடுக்கும்.

    வட்டம், சதுரம் போன்ற எல்லைகளுக்குள் வண்ணம் தீட்ட பழகுவதால், புத்திக்கூர்மை அதிகமாகும். மேலும் இரு கைகளையும் பயன்படுத்தி எழுத வைப்பது, ஒரே நேரத்தில் இரு கைகளுக்கும் இருவேறு வேலை கொடுப்பது போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடுத்தலாம். இது அவர்களது வலது-இடது மூளைகளை தூண்டி, அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற உதவும்.

    • சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது.
    • சிறுவர்கள் அதில் இருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறார்கள்.

    இப்போதெல்லாம் பாடசாலையில் பயிலும் மாணவ-மாணவிகளும், உயர்கல்வி கற்கும் மாணவ-மாணவிகளும் திடீரென்று அவர்களது நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்படுவதால் அவர்களுடைய பெற்றோர்கள் கவலை அடைகிறார்கள்.

     போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் இணையதள வசதி மற்றும் இணைய சூழல் அதிகரித்துவிட்ட தருணத்தில் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டல் அதிகரித்திருப்பதால் இது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மனநிலையை பாதிக்கிறது என்றும், இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை பெற்றோர்களும், இளம் சிறுவர், சிறுமிகளும் பெறவில்லை என்றும் உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய சூழலில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதன் அவசியம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. இணைய வழி தொழில்நுட்பத்தால் உலகம் சிறியதாகி விட்டாலும், பல புதிய வடிவிலான மனநல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இணையதள வசதி அதிகரித்துவிட்டதாலும், பிறந்து மூன்று மாதமான பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரின் கைகளிலும் செல்ஃபோன் எனப்படும் கைபேசி இருப்பதாலும் இத்தகைய உளவியல் பிரச்சினைகள் அதிகரித்திருக்கிறது.

    பாடசாலையில் பயிலும் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலையில் இருந்து இல்லம் திரும்பியவுடன் சீரூடையைக் கூட களையாமல் உடனடியாக செல்ஃபோனை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு, இணையத்தில் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்குகிறார்கள் அல்லது ஏதேனும் ஒரு இணையதள பக்கத்தை அல்லது சமூக வலைத்தள பக்கத்தை இயக்கி தன்னைப் பற்றிய பிம்பத்தையும், தன்னை பற்றி மற்றவர்களின் விமர்சனத்தையும் ஆர்வத்துடன் காணத் தொடங்குகிறார்கள்.

    தற்போது சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது. இணைய வழி மிரட்டல் என்பது மற்றவர்களை துன்புறுத்தும் நோக்கத்தை கொண்டிருப்பதால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டு, அதில் இருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறார்கள். இது மன ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது.

    சைபர் புல்லிங் என்பது தற்போதைய சூழலில் பொதுவானதாகிவிட்டது. யாரையும் எந்த ஒரு சூழலையும் துணிவுடன் கையாண்டு அவர்களை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். இதனுடைய தீவிரத் தன்மை தெரியாமல் ஏதோ ஒரு உந்துதலில் இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை இணையத்தில் பதிவிடுகிறார்கள். இதனால் எதிர்மறை விமர்சனத்துக்கு உள்ளாகும்

    நபர்கள் மனதளவில் சீர்குலைந்து சோர்வடைகிறார்கள். குறிப்பாக, உருவ கேலி, கடுமையான வார்த்தைகளுடன் கூடிய விமர்சனத்தை குறிப்பிடலாம்.

    தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, இது தவறு என்றாலும், இளம் தலைமுறையினர் பலரும் இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். முதலில் சைபர் புல்லிங் என்பதன் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும். இது முற்றிலும் மற்றவர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது பக்கவிளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும், இது ஒருவரின் உள நலத்தையும், மன அமைதியையும் சிதைக்கிறது. அவர்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்குகிறார்கள். இதனால் சமூகத்துடனும் மற்றவர்களுடனும் இயல்பாக பழகுவதில் தடையும் இடைவெளியும் உண்டாகிறது. இது அவர்களின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி, அவர்களை முற்றிலும் முடக்குகிறது.

    எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களின் அன்றாட பழக்கவழக்க நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடான நடவடிக்கைகளை துல்லியமாக அவதானித்து, அவர்களிடம் இது தொடர்பாக எச்சரிக்கைகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    மேலும், உங்கள் பிள்ளைகள் இணைய வழி பயன்பாட்டை மேற்கொள்ளும்போது அவரைப் பற்றிய சுய விபரங்களையும், தனிப்பட்ட பிரத்தியேக தகவல்களையும் ஆன்லைனில் பகிரக்கூடாது என கற்பிக்க வேண்டும்.

    உதாரணத்துக்கு உங்கள் வீட்டு முகவரி, உங்களது செல்ஃபோன் எண் போன்றவற்றை பதிவிடக்கூடாது. இது இணையவழி மிரட்டல்காரர்களுக்கு வழிவகுத்துவிடும்.

    பிறகு உங்களின் பிள்ளைகளின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட விஷயங்களை பற்றியும் தனிப்பட்ட விடயங்களை பற்றியும் இணையவழியில் விவாதிக்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், இவை கூட இணையவழி மிரட்டல்காரர்களுக்கு ஆயுதமாக மாறக்கூடும்.

    அதே தருணத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் உங்களுடைய கடவுச்சொல்லையும் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட கணக்கு விபரங்களையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள் என பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

    அதனைத் தொடர்ந்து இணையத்தில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்தும், கருத்துகள் குறித்தும் எவை நல்லவை? எவை தவறானவை? எவை தவறான உள்நோக்கத்தை கொண்டவை? என்று விஷயத்தையும் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

    • இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன.
    • தொடுகை கல்வியை சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன. எந்த வயது குழந்தைகளையும் பலாத்காரம் செய்து, அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்க, பலர் சமூகத்தில் சுற்றித் திரிகின்றனர். பிறந்த குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. எனவே, இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, பாலியல் கல்வியை குறிப்பாக, தொடுகை கல்வியை நாம் சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பாலர் வகுப்பு என்கிற போது, சுமார் ஏழு, எட்டு வயதில் இருந்தே நாம் இவற்றை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம். தெளிவாக சொல்வதானால், ஒரு பிள்ளைக்கு எப்போது சிந்திக்கும் ஆற்றல் ஏற்படுகிறதோ அப்போது இருந்தே பாலியல் கல்வியை சொல்லிக்கொடுக்கலாம்.

    பாலியல் கல்வி என்பது அறுவறுக்க தக்கதல்ல... உடல் உறுப்புகளை இனங்காட்டுவது, உறுப்புகளின் முக்கியத்துவங்களை பற்றி எடுத்துரைப்பது, தொடுகை பற்றி கற்பிப்பது முதலிய அம்சங்கள் இதில் உள்ளன.

    நாம் கற்பிக்கும் பாலியல் கல்வியை குழந்தைகளால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியுமா, அதற்கு அவர்களின் மனநிலை பக்குவப்பட்டிருக்குமா என்கிற சந்தேகங்கள் பலர் மத்தியில் காணப்படுகின்றன.

    தொடுகை பற்றி அறியாத, கேள்விப்படாத ஒரு குழந்தையை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனில், தனக்கு நேர்வது தவறு என்பதை அந்த குழந்தையால் உணர முடியாது. எனவே குழந்தைகளுக்கு புரியும் அளவுக்கு நாம் தொடுகை குறித்து கற்பிக்க வேண்டும்.

    சில குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி காணப்பட்டாலும், மனதளவில், குழந்தைத்தனம் மிக்கவர்களாகவே இருப்பர். அந்த குழந்தைகள் நாம் சொல்லும் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாகவே கருதுவார்கள். அதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ள மாட்டார்கள்.

    ஆகவே, பெற்றோர் அல்லது ஆசிரியர் சொல்வதை கேட்டு, புரிந்துகொள்ளும் இயல்புநிலைக்கு குழந்தைகள் வரவேண்டும். அப்போது தான், நாம் சொல்லும் எதையும் குழந்தைகளால் சிந்தித்து செயல்பட முடியும்.

    மேலும், இன்றைய புள்ளிவிவரப்படி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிறுவர்களில் அதிகமானோர் மனநலம் குன்றியவர்களும், மாற்றுத் திறனாளிகளுமே என்பது தெரியவந்துள்ளது. புத்தி சுவாதீனம் உள்ள குழந்தைகளுக்கே பாலியல் கல்வியை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கிறதென்றால், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அதை எப்படி நம்மால் சொல்லிக்கொடுக்க முடியும்? இது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது.

    ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி முக்கியம்

    பாலியல் கல்வி, குறிப்பாக தொடுகை என்பது அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒன்றாகும். பொதுவாக, அனைவருமே பாலியல் துஷ்பிரயோகத்தை பற்றி பேசுகின்றபோது பெண் பிள்ளைகளின் மீதே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    சிறுவர் உலகத்தில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கும் பாலியல் கல்வியை கட்டாயம் வழங்க வேண்டும். அவர்களுக்கும் தொடுகை பற்றி கற்பிக்கவேண்டியது அவசியமாகின்றது. ஆண் குழந்தைகளுக்கும் தொடுதல் பற்றிய விழிப்புணர்வு, தொடுகை பற்றி கற்பிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு முறையான தொடுதல் எது?, முறையற்ற தொடுதல் எது...? என்பது பற்றி சொல்லிக்கொடுத்தால் தான் அவர்களுக்கு நேரும் ஆபத்துக்களை தடுக்க முடியும்.

    ×