search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர்.
    • சித்திரை முதல் நாள் இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.

    கோவிலின் முகப்புத் தோற்றம்

    திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பாபவிநாசர் -உலகாம்பிகை கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழாவின் 10-ம் நாளில் சிவபெருமான்-பார்வதி தேவி திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்த வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

     முன் காலத்தில் தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திர நன்னாளில், சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது. திருமண கோலத்தில் சுவாமி-அம்பாளை தரிசிப்பதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் இமயமலை அமைந்துள்ள வடபகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது.

    எனவே உலகை சமநிலைப்படுத்த அகத்திய முனிவரை அழைத்த பரமேஸ்வரன், அவரை உடனடியாக தென்திசை நோக்கி செல்லுமாறு கட்டளையிட்டார். இதனால் 'சுவாமி-அம்பாளின் திருமணக்காட்சியை காணும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடுமே' என்று அகத்தியர் வருந்தினார்.

    அகத்தியரின் வருத்தத்தை உணர்ந்த ஈசன், `இங்கு நடைபெறும் திருமணக் கோலத்தில் பொதிகை மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்தில், சித்திரை மாதப்பிறப்பு நாளில், சித்திரை விசு தினத்தன்று நேரில் வந்து காட்சி கொடுப்போம்' என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து அங்கிருந்து விடைபெற்ற அகத்தியரிடம், தாமிரபரணி தீர்த்தத்தை சிவபெருமான் வழங்கினார். அதை தன் கமண்டலத்தில் பெற்றுக் கொண்டு தென்பகுதிக்கு வந்து சேர்ந்தார் அகத்தியர்.

    சித்திரை 1-ந்தேதி பாபநாசத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர். மேலும் அகத்தியரை பொதிகை மலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை பொதிகை மலையின் உச்சியில் இருந்து தாமிரபரணி நதியாக பாய விட வேண்டும் என்றும் ஈசன் கூறினார். அவ்வாறு பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் இப்பகுதி செழுமையுற்று திகழ்கிறது.

    சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை அகத்தியருக்கு அளித்த நிகழ்வு, ஆண்டு தோறும் பாபநாசம் கோவிலில் 10 நாள் உற்சவமாக நடைபெறும். சித்திரை மாத முதல் நாள் அன்று இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.

    இந்த ஆண்டுக்கான 10 நாள் உற்சவம், கடந்த 5-ந் தேதி தொடங்கியது. 10-ம் நாள் நிகழ்வான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி அளவில் சுவாமி-அம்பாள் இருவரும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

     பாபநாசம் கோவிலில் அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அருளியது பற்றி, கல்வெட்டிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்க கூடாது.
    • தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள்.

    அன்னதானம் செய்வதை செலவு என்று சொல்ல முடியாது. தானத்தைப் பெறுபவன் போதும், போதும் என்று சொல்வது அன்னதானத்தில் மட்டுமே. மற்ற எந்த பொருளை தானமாகப் பெற்றாலும் இன்னும் கொஞ்சம் தந்திருக்கலாம் என்றே எண்ணுவான்.

    அன்னதானத்தின் போது மட்டுமே வயிறு நிறைந்துவிட்டது, போதும் என்று திருப்தி அடைவான். இத்தனை சிறப்பு வாய்ந்த அன்னதானத்தைச் செய்வது என்பது செலவுக் கணக்கில் சேராது. மாறாக கிடைத்தற்கரிய புண்ணியம் என்ற வரவுக்கணக்கில் சேரும்.

    அட்சய திருதியை நாளுக்கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு உண்டு. பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.

    கானகத்தில் தங்களைக் காணவரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் விருந்தோம்பல் விதியின்படி உணவளிக்க வேண்டும் அல்லவா?

    உணவு சமைக்க என்ன செய்வது என்று மனம் கலங்கிய திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசிர்வதித்தார் சூரிய பகவான்.

    க்ஷயம் என்றால் குறை என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாத என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை என்றும், சூரியன் அளித்த அந்த பாத்திரத்திற்கு அக்ஷய பாத்திரம் என்றும் பெயர் வந்தது.

    அந்த நாளில் எது செய்தாலும் அந்த செயலானது மீண்டும், மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கும், தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் வாங்கிக் கொண்டிருப்போம் என்பதற்காக அட்சய திருதியை நாளில் ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, தங்களால் இயன்றவகையில் குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

    ஆனால், ஒரு விஷயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டுதான் தங்கம் வாங்க வேண்டுமே தவிர, கடன் வாங்கிச் செய்யக் கூடாது.

    அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்கினீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் தங்களிடம் இருக்கும் பொருளைக் கொண்டுதான் அன்னதானம் செய்ய வேண்டுமே தவிர, கடன் வாங்கி செய்யக் கூடாது.

    ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவக்ரகங்களில் தந்தைக்குரிய கிரகமான சூரியனும், தாய்க்குரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில், உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள். அதாவது, சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாள். அதாவது தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள்.

    இந்த உலகை ஆளும் தாய்-தந்தையராகிய பார்வதியும் பரமேஸ்வரனும் பூரணமான சந்தோஷத்துடன் விளங்கும் நாள். இந்த நாளில் நாம் எந்த வரம் கேட்டாலும் குறைவில்லாமல் கிடைக்கும் அல்லவா? இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமையல்ல.

    திரௌபதிக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை வழங்கியது அவர்கள் சாப்பிடுவதற்காக மட்டும் அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான்.

    அட்சய திருதியை நாளின் இந்த உண்மையான அர்த்தத்தினைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற அன்னதானத்தையும், பொருளுதவியையும் செய்தோமேயாகில் நம்மிடமும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    கிடைத்தற்கரிய இந்த நாளில் இவ்வுலகில் வாழ பொருட்செல்வத்தினைச் சேர்ப்போம், நம்மால் இயன்ற அன்னதானம் செய்து அவ்வுலகத்திற்கான அருட்செல்வத்தையும் சேர்ப்போம்.

    • மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை.
    • தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன.

    மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன.

    பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளில் இருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்ம கணக்குகளை நேர் செய்த பின்னர் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.

    இதுபோன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்த பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.

    • சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர்.
    • சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.

    விறன்மிண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அடியார்கள் மீது அன்பும், பக்தியும் விறன்மிண்ட நாயனார் கொண்டிருந்ததால், சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.

    சேரநாடு என்று அழைக்கப்படும் மலைநாட்டில் திருச்செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளராக அவதரித்தவர் விறல்மிண்ட நாயனார். திருச்செங்குன்றூர் நீர் வளமும், நில வளமும், மலை வளமும் நிரம்பி வேளாண்மைக்கு சிறந்ததாக விளங்கியது.

    விறன்மிண்டர் திருநீறும், உருத்திராக்கமும் அணிந்த சிவப்பரம்பொருளிடம் மாறாத பக்தி கொண்டிருந்தார். சிவனிடத்தில் மட்டுமில்லாது சிவனடியார்களிடத்தும் பெரும் பக்தியும், மரியாதையையும் கொண்டிருந்தார்.

    அவர் இறைவழிபாட்டிற்கு சிவாலயம் செல்லும்போது ஆலயத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் சிவனடியார்களை வணங்கி, பின்னர் ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இறைவனுடைய திருவருள் சிறப்பை எல்லோரும் உணரும்படி தம்முடைய ஒழுக்கத்தின் சிறப்பால் வெளிப்படுத்துபவர்கள் சிவனடியார்கள். ஆதலால் அரனின் அடியார்களின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் விறல்மிண்டர்.

    ஒருசமயம் சேரநாட்டு திருத்தலங்களை வணங்கியபின், சோழநாட்டு திருதலங்களை வழிபடும் நோக்கில் சோழநாட்டிற்கு வந்திருந்தார் விறன்மிண்டர்.

    ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டு வந்த நிலையில் திருவாரூரை அடைந்தார் விறன்மிண்டர்.

    திருவாரூரில் சிவனடியார்கள் குழுமி இருக்கும் இடத்திற்குப் பெயர் தேவாசிரியர் மண்டபம். அம்மண்டபம் தியாகேசர் கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்தது.

    திருவாரூரை அடைந்த விறன்மிண்டர் முதலில் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கி மரியாதை செய்துவிட்டு கோவிலுக்குள் சென்று தியாகேசரை வழிபட்டார்.

    பின்னர் மீண்டும் தேவாசிரிய மண்டபத்திற்குள் வந்து சிவனடியார்களிடம் அளாவிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வன்தொண்டரான சுந்தரர் வீதிவிடங்கரை வழிபட வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை மனதினால் வழிபட்டுவிட்டு ஒதுங்கி சென்றார்.

    அதனைக் கண்ட விறன்மிண்டர் அருகில் இருந்தோரிடம் யார் என விசாரித்தார். அவரும் ஆரூர் பெருமானின் அருளால் பரவை நாச்சியாரை மணந்து இங்கே இருக்குமாறு பணிக்கப்பட்ட சுந்தரர். இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் செல்கிறார் என்று கூறினார்.

    "இவ்வளவு பெரியவர் அடியார் திருக்கூட்டத்தை வணங்காது செல்கிறாரே? இவரே இப்படிச் சென்றால் அடியார்களிடம் யார் மதிப்புடன் நடப்பார்கள்? அடியார்களை மதிக்காமல் செல்லும் வன்தொண்டரைப் புறக்கணிக்கிறேன்" என்றார் விறல்மிண்டர். "அவர் ஆரூரானின் அருளுக்குப் பாத்திரமானவர்" என்றனர் அருகில் இருந்தவர்கள்.

    விறன்மிண்டர் கூறியவை யாவற்றையும் கேட்ட சுந்தரர் 'இறைவனை வழிபடுவது எளிது. அடியர்களை வழிபடுவது அரிது.

    அடியவர்களை வழிபட தகுதி மிகுதியானதாக இருக்க வேண்டும். ஆதலால்தான் அடியவர்களை நான் மனதிற்குள் வழிபட்டு ஒதுங்கிச் சென்றேன்' என மனத்திற்குள் கவலை கொண்டவராக தியாகேசரரை அடைந்தார்.

    "இறைவா, நான் அடியர்களுக்கு அடியவானாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்" என்று மனதிற்குள் பிராத்தித்தார் சுந்தரர்.

    அதனைக் கண்ட விறன்மிண்ட நாயனார் மகிழ்ந்தார். பின் பலகாலம் சிவதொண்டுகள் புரிந்து இறுதியில் சிவனை அடைந்து சிவனாரின் பூதகணங்களின் தலைவரானார்.

    விறன்மிண்டர் சுந்தரரையும், வீதிவிடங்கரையும் புறக்கணித்தால் திருத்தொண்டர் தொகையை சுந்தரர் பாடினார். பெரியபுராணம் என்னும் மரத்திற்கு திருத்தொண்டர் தொகை விதை எனில் விறன்மிண்டரின் செயல் அதற்கு மழை என்றால் மிகையாகாது.

    விறல்மிண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரமான இன்று கொண்டாடப்படுகிறது.

    • ராமாயணத்தை `சரணாகதி தத்துவம்’ என வைணவங்கள் கூறுகின்றன.
    • கல்யாண வைபோகமாகவும் இதனை கொண்டாடுகிறார்கள்.

    ராமபிரான் அவதரித்த நாளே ராம நவமியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிலையான வெற்றியும், நீடித்த செல்வமும் நிலைக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் முக்கிய வேண்டுதலாக அமைந்துள்ளது.

    ராவண யுத்தம் புராண காலத்தில் நடந்த ஒன்று என ஒதுக்கிவிட முடியாது. இது தேவ சக்திகளுக்கும், அசுர சக்திகளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தைக் குறிக்கின்றது. முடிவில் தேவ சக்தியே வெல்லும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ராமாயணத்தை `சரணாகதி தத்துவம்' என வைணவங்கள் கூறுகின்றன. துளசி ராமாயணம் காந்தியடிகளின் மனங்கவர்ந்த நூலாக அமைந்திருந்தது. சகோதர தர்ம சாஸ்திரமாகவும், பேரிதிகாசமாகவும் கம்பராமாயணம் உள்ளது.

    ராமநவமி பழங்காலந்தொட்டு கொண்டாடப்பட்டு வருவதை திருவரங்கம், ஓரகடம் உள்ளிட்ட சில வைணவ திருக்கோவில் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன. அயோத்தி உள்ளிட்ட நாடெங்கிலும் உள்ள பல்வேறு வைணவ திருக்கோவில்களில் ராமநவமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில் கல்யாண வைபோகமாகவும் இதனை கொண்டாடுகிறார்கள். இந்நாளில் ரத உற்சவமும் நடைபெறும்.

    • மனக்கவலையின்றி வாழ்ந்திட, இறை வழிபாடே சிறந்த வழியாகும்.
    • சகல சவுபாக்கியங்களையும் அருளும் தலமாக திகழ்கிறது.

    கோவில் முகப்புத் தோற்றம்

    இவ்வுலகில் வாழ்பவர்களுக்கு தினமும் எண்ணற்ற கவலைகள் வந்து போகின்றன. அவற்றுள் சில நிலையாக இருந்து நம்மை வாட்டுகின்றன. நாம் அனுபவிக்கும் நன்மை - தீமைகள் யாவும் முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக அமைகின்றன.

     நமது வினைகளைப் போக்கி, மனக்கவலையின்றி வாழ்ந்திட, இறை வழிபாடே சிறந்த வழியாகும். அந்த வகையில் நமது குறைகளை போக்கி, சகல சவுபாக்கியங்களையும் அருளும் தலமாக திகழ்கிறது, மருதாடு திருத்தலம்.

    எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் நமக்கு வேண்டும் அல்லவா? சொர்க்கத்தின் அதிபதியாக விளங்கும் தேவலோக தலைவன் இந்திரனுக்கு, அப்படி ஒரு பாக்கியமற்ற நிலை ஒரு சமயம் உண்டானது. கேட்டதைத் தரும் காமதேனு, கற்பக விருட்சம், அரம்பையர்கள் என அனேக சுகங்களைப் பெற்ற இந்திரனுக்கு, திடீரென ஒரு இனம் புரியாத அச்சம் தொற்றிக் கொண்டது. அனைத்து சுகங்களும் அவனைத் தீயாய் சுட்டது. மனம் வாடினான். உடல் மெலிந்தான். அதைக் கண்டு இந்திரனின் மனைவி இந்திராணி மிகவும் வருந்தினாள்.

    ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அசுரப் படைத் தலைவனான விருத்திராசுரனை அழிக்க முடியாமல் இந்திரன் திணறினான். அவனை அழிக்கும் வழியை கேட்டு சிவபெருமானை வணங்கி நின்றான். விருத்திராசுரனை அழிக்கும் ஆயுதம், ததீசி முனிவர்தான் என்று உரைத்தார், சிவபெருமான்.

    சிவபெருமானின் உத்தரவின்படி, ததீசி முனிவர் தனது உயிரை தியாகம் செய்தார். அவரது வஜ்ஜிர தேகத்தில் இருந்து முதுகெலும்பை எடுத்து, அதில் ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே இந்திரன் கையில் இருக்கும் வஜ்ஜிராயுதம். அந்த ஆயுதத்தால்தான், விருத்திராசுரனை அழிக்க முடிந்தது. போரில் தேவர்கள் பெரும் வெற்றியைப் பெற்று விட்டனர். ஆனால் அதன்பின்னர்தான், இந்திரன் மனம் வருத்தத்தில் தோய்ந்து போனது. ததீசி முனிவரின் இறப்பு பிரம்மஹத்தி தோஷமாக மாறி, இந்திரனை வாட்டியது.

    மிகுந்த கலக்கமுற்ற இந்திரன், நாரதரின் உதவியை நாடினான். நாரத மகரிஷியோ, 'பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட, பூவுலகில் சிவபூஜை செய்வதே சிறந்த வழி' என்று கூறினார்.

    அதன்படி இந்திராணியுடன் பூவுலகம் வந்த தேவேந்திரன், கங்கையில் நீராடி முதலில் விஸ்வேஸ்வரரை வணங்கினான். அப்படியே பல சிவன் ஆலயங்களை வழிபட்டபடியே, பாலாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான். காஞ்சியில் புதனுடன் சேர்ந்து சிறப்புற சிவ பூஜை செய்தான். அங்கிருந்து தெற்கு நோக்கி வந்த தேவர்கோன் பெரிய மருதங்காட்டை அடைந்தான்.

    அங்கு தானாக பூமியில் இருந்து தோன்றியப் பெருமானைக் கண்டான். தீர்த்தம் அமைத்து, அந்த லிங்கத்திற்கு நாள்தோறும் நியமத்துடன் பூஜை செய்தான். இந்திராணி, வாசனை மலர்களை பறித்து, மாலையாக்கி, மருத வன ஈசனுக்கு சாற்றி மகிழ்ந்தாள். இவ்வாறு வழிபட்டு வரும் வேளையில், பார்வதி தேவியோடு சிவபெருமான் அங்கு தோன்றினார்.

    அவரிடம் இந்திரன், தனக்கு ஏற்பட்டுள்ள பிரம்மஹத்தி தோஷத்தையும், தேவையற்ற பயத்தையும் போக்கும்படி வேண்டினான். அப்படியே அருளிச் செய்தார், சிவபெருமான். பார்வதிதேவி விபூதி பிரசாதமும், தீர்த்த பிரசாதமும் வழங்கி இந்திரனை ஆசிர்வதித்தார்.

    அப்போது இந்திரன், இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் அருள் வேண்டும் என்று வேண்டினான்.

    அன்னையும் அப்படியே அருள செய்தார். இத்தல இறைவன் `புரந்தரீசர்' என்றும், இந்திரனுக்கு பிரசாதம் அளித்ததால் அம்பிகை `இந்தரபிரசாதவல்லி' என்றும் பெயர் பெற்றனர். இந்திரன் அமைத்த தீர்த்தம் `இந்திர தீர்த்தம்' என்றும், இந்த இடம் `புரந்தரபுரி' என்றும் போற்றப்பட்டது.

    ஊரின் கிழக்குப் பகுதியில் சாலையை ஒட்டியபடியே அழகிய மூன்று நிலை கோபுரத்துடன் எழுந்து நிற்கிறது, இந்த ஆலயம். கோபுர வாசலின் உள்ளே நுழைந்ததும், தென்மேற்கு திசையில் தல கணபதியின் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. மேற்கில், சுவாமி சன்னிதியின் பின்புறமாக வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சன்னிதி உள்ளது. கிழக்கு திசையில் கொடிமரம், நந்தி உள்ளனர்.

    அதன் அருகே தீப ஸ்தம்பம் ஒன்று அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் சுமார் நான்கடி உயர லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கின்றார், புரந்தரீசர்.

    இங்கு நந்திதேவருக்கு வலப்புறமாக இந்திரபிரசாதவல்லி, தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். அம்பாள் சன்னிதிக்கு எதிர்புறம் சுரங்கப்பாதை ஒன்றும் காணப்படுகிறது. ஈசான திக்கில் நவக்கிரகங்கள் மற்றும் சூரியன், கால பைரவர் வீற்றிருக்கின்றனர். வடபுறத்தில் மதில் சுவரின் உட்புறம் 63 நாயன்மார்களுக்கும் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வடக்கு வாசல் ஒன்று இங்கே இருப்பது சிறப்பு.

    இந்த வாசல் வழியாக சென்றிட, ஆலயத் திருக்குளமான இந்திர தீர்த்தம் நாற்புறமும் படிகளுடன் அழகாக அமைந்துள்ளதைக் காணலாம்.

    மீண்டும் உள்ளே வந்தால், நந்திக்கு இடதுபுறம் தல விருட்சமான வில்வ மரமும், அதன் கீழே நாகர் சிலைகளும் காணப்படுகின்றன.

    பிணைந்த நாகங்களுக்கு இடையே கிருஷ்ணரும் காட்சி தருகின்றார். தென்முக வாசலில் 16 கால் மண்டபமும், அதன் தென்மேற்கில் தர்மசாஸ்தா சன்னிதியும் உள்ளது.

    இந்த ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. தவிர கந்தசஷ்டியில் சூரசம்ஹாரம், பங்குனியில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம், அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு போன்றவையும் கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மன் சன்னிதியில் குங்கும பிரசாதமும், தை மாத வெள்ளிக்கிழமையில் தீர்த்த பிரசாதமும் தரப்படுகிறது. அம்பாளுக்கு அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், இத்தலத்தில் உள்ள சூரியன் மற்றும் புரந்தரீசருக்கு கோதுமைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் நோய்கள் நிவர்த்தியாகும்.

    ராகு - கேது மற்றும் நாக தோஷத்தினால் துன்பப்படுபவர்கள், இணைந்த நாகங்களுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

    அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த ஆலயம் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மருதாடு.

    • பன்னிரு திருமுறை பாராயணம் செய்வர்.
    • இடைவிடாத சிவபக்தியால், நாயன்மாரார் அந்தஸ்தை பெற்று, சிவனடி சேர்ந்தார்.

    சிவனடியார்களுக்கு இடைவிடாது தொண்டு செய்துவந்தார். நேச நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் அதாவது இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், எம்பிரான் நேச நாயனார் குருபூஜை நடைபெறும். திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 64 நாயன்மார்கள் சிலை அமைக்கப்பட்டு, நாயன்மார் குருபூஜை நடந்து வருகிறது. அர்த்த சாமபூஜை அடியார் திருக்கூட்டத்தினர், இதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று பங்குனி மாத, ரோகினி நட்சத்திர தினமான எம்பிரான் நேசநாயனார் குருபூஜை நடைபெறும். காம்பீலி என்ற ஊரில், அறுவையார் குலத்தில், செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர் நேசர். இவர், சிவனடியாருக்கு தொண்டு செல்வதையே வாழ்க்கையாக நினைந்து வாழ்ந்தார். குடும்ப தொழிலாக கைத்தறி நெசவு இருந்ததால், சிவனடியாருக்கு உடைகள், கோவணம் நெய்து கொடுக்கும் சேவையை செய்து வந்தார்.

    இடைவிடாத சிவபக்தியால், நாயன்மாராக போற்றும் அந்தஸ்தை பெற்று, சிவனடி சேர்ந்தார். அவரது குருபூஜை விழா விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெறும். அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்ட பக்தர்கள், எம்பிரான் நேச நாயனாருக்கு, அபிஷேக ஆராதனை செய்து, பன்னிரு திருமுறை பாராயணம் செய்வர்.

    • பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
    • மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்வது ஆயுளை விருத்தியாக்கும்.

    மூன்றாம்பிறை பிறந்த கதை:

    ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர்.

    தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், `மூன்றாம் பிறையாக' அமரும் பேறு அருளினார்.

    சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

    மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

    மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்க ளைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்க ளை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்) வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

    • சிம்மவர்ம பல்லவர் மிகச் சிறந்த சிவபக்தர்.
    • சிற்பியும் தூய தங்கத்தில் சிலையைச் செய்தார்.

    சித்திரை – திருவோணம் உச்சிக்காலம், ஆனி – உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி – வளர்பிறை சதுர்த்தசி மாலைச் சந்தி, புரட்டாசி – வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி – திருவாதிரை உஷத்காலம், மாசி – வளர்பிறை காலைச்சந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேக காலங்களாகும்.

     விக்கிரகமாக மாறிய சிவனடியார்!

    கும்பகோணம் அருகில் உள்ள ஊர் கோனேரிராஜபுரம். இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் நடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில், மனித உடலில் இருப்பது போன்று ஒரு 'மரு'வையும் முடியையும் காணலாம்!

    சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரி ராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார். சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், '`கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாள்களுக்குள் வடிக்கவேண்டும்" என்று கட்டளையிட்டார் மன்னர். சிவ பக்தரான அந்தச் சிற்பி, இறைவனை வணங்கி, விக்கிரகப் பணியைத் தொடங்கினார். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை விரைவில் புரிந்துகொண்டார். ஒவ்வொரு முறையும் அவர், பஞ்சலோகத்தை உருக்கி, அச்சில் வார்க்கும்போது ஏதேனும் ஒரு குறை தென்படும்; விக்கிரகம் முழுமை அடையாது! சிற்பி எவ்வளவோ முயன்றும், காரணத்தை அறிய முடியவில்லை.

    நாட்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்பதை அறிய சிற்பக்கூடத்துக்கு வந்தார் மன்னன். `விக்கிரகம் இன்னும் தயாராக வில்லை!' என்பதை அறிந்து சினம் கொண்டவர், '`இன்னும் இரண்டு நாள்களில் விக்கிரகம் தயாராக வில்லையெனில், உம் தலை தரையில் உருளும்!'' என்று கூறிவிட்டு, ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றார். கவலையில் ஆழ்ந்த சிற்பி, `அம்பலவாணா… இது என்ன சோதனை!'' என்று இறைவனையே தியானித்து கண்ணீர் வடித்தார். அவர் அருகில், பெரிய உலைகலன் ஒன்றில் பஞ்சலோகம் கொதித் துக்கொண்டிருந்தது.

    அப்போது, `ஐயா' என்ற அழைப்பொலி கேட்டு, வாயிலுக்கு வந்தார் சிற்பி. அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார். `ஐயா, தாகம் உயிர் போகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்…

    சுடுதண்ணீராக இருந்தால் நன்று!'' என்றார் சிவனடியார். சிற்பிக்கோ எரிச்சல்! இன்னும் இரண்டு நாள்களில் என் தலை உருளப்போகிறது;

    இவருக்குச் சுடுதண்ணீர் வேண்டுமாம்!' என்று சலித்துக்கொண்டவர், `உள்ளே, உலை கலனில் கொதிக்கிறது… போய்க் குடியுங்கள்!'' என்றபடி வெளியே அமர்ந்துவிட்டார்.

    சிவனடியார் உள்ளே சென்றார். நன்கு கொதித்துக் கொண்டிருந்த பஞ்சலோகத் திரவத்தைக் குடித்தார். மறுகணமே நடராஜர் விக்கிரகமாகவே உறைந்தார் சிவனடியார். அவரைக் காணாது உள்ளே வந்த சிற்பி, விக்கிரகத்தைக் கண்டார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! `என்ன அதிசயம்… சிவனடியார் மார்பில் இருந்தது போன்றே இந்த விக்கிரகத்திலும் மருவும் முடியும் உள்ளனவே… அப்படியானால் வந்தது யார்?' என்று வியந்தவர், எல்லாம் சிவனருள் என்பதை உணர்ந்து, கண்ணீர் மல்க ஆடல்வல்லானை வணங்கிப்பணிந்தார்.

     ஒரு சிற்பியும் ஐந்து விக்கிரகங்களும்!

    பல்லவ வம்சத்தின் சிம்மவர்ம பல்லவர் மிகச் சிறந்த சிவபக்தர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களையும் இயற்றும் நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை வடிவமைத்து சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அதற்காக சிறந்த சிற்பி ஒருவரைத் தேடினார்.

    கடைசியாக சோழ தேசத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவரைக் கண்டார். அவர் பெயர் நமசிவாயமுத்து. அவரும் சிறந்த சிவபக்தர். அவரிடம் நடராஜர் திருவுருவத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். மன்னரின் விருப்பப்படி நமசிவாய முத்து அதியற்புதமான தோற்றத்தில் நடராஜர் சிலையை வடிவமைத்தார். அந்த செப்புச் சிலையின் அழகில் மயங்கிய மன்னர், `செப்பில் செய்த விக்கிரகமே இவ்வளவு அழகாக இருந்தால், தங்கத்தில் வடித்தால் என் ஐயனின் திருவுருவம் இன்னும் எத்தனை பொலிவாக இருக்கும்!' என்று வியந்து, சிற்பியிடம் தங்கத்தைக் கொடுத்து சிலை வடிக்கச் சொன்னார்.

    சிற்பியும் தூய தங்கத்தில் சிலையைச் செய்தார். சிலையை வடித்துவிட்டுப் பார்த்தபோது, அதுவும் செப்புச் சிலையாகவே இருந்தது. சிற்பி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த மன்னர், சிற்பியை சிறையில் அடைத்துவிட்டார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய ஈசன், `சிற்பியின் மீது தவறில்லை. அவர் வடித்த தங்க சிலையை நானே செப்புச் சிலையாக மாற்றினேன். நான் செப்புச் சிலையாகவே இருக்க விரும்புகிறேன். முதலில் செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து தென் தமிழகத்துக்கு செல்ல ஏற்பாடு செய்' என்று உத்தரவிட்டார்.

    சிற்பி இரண்டாவதாகச் செய்த சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டதுடன், முதலில் செய்த சிலையை சிற்பியிடன் கொடுத்து தென்பகுதிக்குச் செல்லும்படிக் கூறினார்.

     செப்பறையில் ஒலித்த சிலம்பொலி!

    முதலில் வடித்த நடராஜரின் செப்புச்சிலையுடன் தென் பகுதிக்குப் புறப்பட்ட சிற்பியின் பாதுகாவலுக்காக மன்னரின் படைவீரர்கள் சிலரும் உடன்சென்றனர். திருநெல்வேலியை நெருங்கியபோது சிலையின் எடை அதிகரித்தது. இதுபற்றி அவர்கள் சிற்பியிடம் கூறினர். அவரும் படைவீரர்களிடம் சிலையை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுக்கும்படிக் கூறினார். சற்று நேரம் உறங்கிய வீரர்கள் பின்னர் கண்விழித்துப் பார்த்த போது சிலையை அங்கே காணவில்லை.

    அதனால் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த சிற்பி, அந்த பகுதியை ஆண்டு வந்த மன்னர் ராம பாண்டியனிடம் முறையிட்டனர். தன்னுடைய நாட்டில் நடராஜர் சிலை காணாமல் போனதால் மனம் வருந்திய ராமபாண்டியன், படைவீரர்களுடன் சேர்ந்து சிலையைத் தேடிச் சென்றார். வழியில் காட்டுக்குள் இருந்து சிலம்பு சத்தம் கேட்டது. சிலம்பொலி கேட்ட இடத்தை நோக்கி மன்னர் தன் படைவீரர்களுடன் சென்று பார்த்தார்.

    ஓரிடத்தில் எறும்புகள் வரிசை வரிசையாக ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். எறும்புகளைத் தொடர்ந்து சென்ற மன்னர், ஓரிடத்தில் செப்புச் சிலை இருப்பதைக் கண்டார். அப்போது, `மன்னனே, இதுவே எமக்கு உகந்த இடம்.

    இந்த இடத்தில் எனக்கு ஒரு கோயிலை எழுப்பி, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்' என்று ஓர் அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் ராமபாண்டிய மன்னர் ஓர் ஆலயம் அமைத்து, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். சிற்பியால் செய்யப்பட்ட நடராஜரின் முதல் செப்புச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம்தான் செப்பறை.

     கட்டாரிமங்கலம்

    செப்பறையில் இருப்பதுபோலவே தான் தினமும் வழிபடும் நெல்லையப்பர் கோயிலிலும் நடராஜரின் செப்புச் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பிய ராமபாண்டியன், அதே சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை வடிக்க விரும்பினார். அதே தருணத்தில் ராமபாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்ட வீரபாண்டியனும் தன்னுடைய ஆளுகையின் கீழுள்ள கட்டாரி மங்கலத்தில் ஒரு நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பினான். ராமபாண்டியன் அதே சிற்பியிடம் இரண்டு நடராஜர் சிலைகளை வடிக்கும்படிக் கூறினார்.

    சிற்பியும் இரண்டு செப்புச் சிலைகளை வடித்து முடித்தார். தன்னுடைய சிலையை வாங்கிப் போக வந்த வீரபாண்டியன் சிலைகளின் அழகில் மயங்கிவிட்டான். இரண்டு சிலைகளையும் தானே எடுத்துச் செல்லவேண்டுமென்று பேராசைப் பட்டான். அத்துடன் நிற்காமல், சிற்பி அதேபோல் அழகான நடராஜர் சிலைகளை வேறு யாருக்கும் செய்து கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கைகளைத் துண்டித்தான். பின்னர், அவனுடைய படைவீரர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரண்டு நடராஜர் சிலைகளையும் எடுத் துச் சென்றனர். ஒரு பிரிவினர் கட்டாரி மங்கலம் சென்று, அங்கே ஒரு நடராஜரைப் பிரதிஷ்டை செய்தனர்.

     கரிசூழ்ந்தமங்கலம்

    இரண்டாவது படைப்பிரிவினர், வேறு வழியில் சென்றுகொண்டிருந்தபோது வழியில் தாமிரபரணி குறுக்கிட்டது. தாமிரபரணிக்கும் நடராஜப் பெருமானின் திருமேனியைத் தழுவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது போலும்; வெள்ளமெனப் பெருக்கெடுத்து வந்தாள். படைவீரர்கள் அனைவரும் சிலையுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    சிலநாள்களுக்குப் பிறகு தாமிரபரணியில் வெள்ளம் வடிந்ததும் நடராஜரின் செப்புச் சிலை கரையில் ஒதுங்கியது. அந்தப் பகுதி மக்கள் அந்த விக்கிரகத்தை ஓரிடத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். அந்தச் செய்தியை கேள்விப்பட்ட ராம பாண்டியன், அந்த நடராஜரை நெல்லையப்பர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய விரும்பி எடுத்துச் செல்ல வந்தார். ஆனால், அந்தச் சிலையை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை.

    அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய இறைவன், தான் அந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும், தனக்கு அங்கே ஒரு கோயில் கட்டும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு நான்காவது நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த ஊர்தான், கரிசூழ்ந்தமங்கலம்.

    கன்னத்தில் கிள்ளிய சிற்பி!

    மன்னர் ராமபாண்டியர் கையை இழந்த சிற்பிக்கு மரத்தினாலான கையைப் பொருத்தினார். மரக்கை பொருத்தப்பட்டு, சிற்பி தன்னுடைய உதவியாளர்களுடன் சேர்ந்து மற்றொரு நடராஜர் சிலையை வடித்தார். சிலையை வடித்து முடித்ததும், தான் முன்பு வடித்த நான்கு சிலைகளைவிடவும் இந்த ஐந்தாவது நடராஜர் சிலை மிகவும் அழகாக இருப்பதைக் கண்ட சிற்பி, அந்தச் சிலையின் அழகில் மயங்கியவராக, அந்தத் திருமேனியின் கன்னத்தில் மெள்ள கிள்ளினார். அவர் கிள்ளிய வடு சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. அந்த சிலை கருவேலங்குளத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

     தில்லை நடராஜர்

    ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கிவைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி. சிதம்பரம் கருவறையின் வலது புறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜ பெருமான், ஸ்படிகலிங்கம் என தில்லையில் மூன்று வடிவங்களில் அருள்கிறார் சிவனார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயி லில் ஐந்து படிகள் அமைந்துள்ளன என்பர்.

    சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை. உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம் என்ற தேவசபை. ஊர்த்துவ தாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. கொடி மரத்தின் தென்புறம் உள்ள இது, நிருத்த சபை எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திருமஞ்சனமும் நடக்கு மிடம் ஆயிரம் கால் மண்டபம். இது ராஜசபை.

     குடகத் தில்லை அம்பலவாணன்

    சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு தில்லையம்பலத்தானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற, பட்டீஸ்வர நடராஜர் ஆனந்த தாண்டவத்தில் தரிசனம் தந்தார். இதன் காரணமாக இங்கிருக்கும் நடராஜருக்கு `குடகத் தில்லை அம்பலவாணன்' என்ற என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

    பஞ்ச நதன நடராஜர்

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர் பாடாலூர். இங்கிருந்து புள்ளம்பாடி எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஊட்டத்தூர். இத்தலத்தின் ஸ்ரீபஞ்ச நதன நடராஜருக்குச் சம்மேளன அர்ச்சனை என்று சொல்லப்படும் அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், நீண்டநாள் திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணப் பிராப்தம் கிடைக்கும். சம்மேளன அர்ச்சனை என்பது சுவாமி, அம்பாள் இருவருக்கும் சேர்த்து செய்யப்படுவது.

     திருவெண்காடு நடராஜர்

    திருவெண்காடு தலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமான், ஈரேழு பதினான்கு புவனங் களைக் குறிக்கும் வகையில் 14 சதங்கைகள் கொண்ட காப்பு, பிரணவம் முதல் நம: வரையுள்ள 81 பத மந்திரங்களைக் குறிக்கும் 81 வளையங்கள் கோக்கப்பட்ட அரைஞாண், 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத் துண்டுகள் கோத்த ஆரம், பதினாறு கலைகளைக் குறிக்கும் வகையில் 16 சடைகளுடன் காட்சி தருகிறார்.

     திருநல்லம் நடராஜர்

    கும்பகோணம் அருகே நல்லம் என்ற திருத் தலத்தில் அருளும் நடராஜரை உற்று நோக்கினால், அவரது கையில் உள்ள ரேகைகளும், காலில் உள்ள நரம்புகளும் தென்படுமாம். இங்கு நடராஜரை தொலைவிலிருந்து பார்த்தால் முதியவரைப் போலவும், அருகில் சென்று பார்த்தால் இளை ஞரைப் போலவும் இரண்டு திருக்கோலங்களில் காட்சியளிக்கிறார்.

     மயூரநாதர்

    பொதுவாக சிவன் கோயில்களில் நடராஜருடன் பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார் ஆகியோர்தான் இருப்பார்கள். ஆனால் மயிலாடு துறை மயூரநாதர் கோயிலில் நடராஜருடன் ஜுரஹர தேவரும் இருக்கிறார். இந்தத் தலத்தில் அம்பிகைக்காக ஈசன் மயில் வடிவம் எடுத்து நடனம் ஆடியதால், இங்குள்ள நடராஜரை `மயூர தாண்டவர்' என்கிறார்கள். மூன்று கால்களுடன் வித்தியாசமான கோலத்தில் இருக்கும் ஜுரஹர தேவரை தரிசித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

    மரகத நடராஜர்

    உத்திரகோசமங்கையில், மரகத நடராஜரை ஆருத்ரா அன்று மட்டுமே பூரணமாக தரிசிக்க முடியும். மற்ற நாள்களில் சந்தனக்காப்புடன் காட்சி தருகிறார். இறைவன், உமையவள் மட்டும் கண்டு மகிழும்படி ஆடியது இத்தலதில்தான். `உத்திரம்' என்ற சொல்லுக்கு `உபதேசம்' என்ற பொருளும் உண்டு. `கோசம்' என்றால் `ரகசியம்'. அம்பாளுக்கு பிரணவத்தை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால், உத்திரகோசமங்கை எனப் பெயர் பெற்றது இத்தலம்.

    • செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலம் வைத்தீஸ்வரர் கோயில்.
    • மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது.

    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த எந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

    இந்தியாவில் கிரக, விஞ்ஞானப் பூர்வமான ஆகர்ஷண சக்திகள் வாய்ந்த பல ரகசியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் விந்திய மலை. இம்மலைத் தொடருக்கு தெற்கில் உள்ள பூமி, அங்கார பூமி என்றும், இங்கு செவ்வாயின் தோஷம் அதிக அளவில் ஏற்படாது என்றும் புராதன நூல்களில் கூறப்பட்டுள்ளன. இதற்கு காரணம், செவ்வாயின் சாரப்பாதையில் இருந்து விந்திய மலைக்கு தெற்கே உள்ள பூமிப்பகுதி, விலகி இருப்பதே. இந்த உண்மையை அறிந்த நமது பெரியோர்கள், செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் சக்தி வாய்ந்த எந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

    சீதையை தேடிக்கொண்டு, தம்பி லட்சுமணனுடன் வனவாசம் வந்த ஸ்ரீ ராமபிரான், சீதா தேவியை ராவணனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக போரிட்டு, உயிர் துறந்த ஜடாயுவுக்கு, திருப்புட்குழி என்ற புண்ணிய தலத்தில் அந்திம தகனக் கிரியைகளைத் தன் தொடை மேலேயே செய்துவிட்டு, அதற்குப்பின் செய்ய வேண்டிய தினச்சடங்குகளை வைத்தீஸ்வரன் கோவிலில் செய்ததால், மேலும் இத்திருத்தலம் புனிதம் பெற்று, புள்ளிருக்கும் வேளூர் என சிறப்பு பெயருடன் திகழலாயிற்று.

    மேலும், அங்காரகன் என்று புகழ்பெற்ற செவ்வாயும் இத்திருத்தலத்தில் ஒரு சமயம் தவம் செய்ததால், செவ்வாய் தோஷ பரிகார பலம் இந்த தலத்திற்கு மேலும் அதிகமாயிற்று. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் திருக்கோவிலுக்கு வந்து, இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, இறைவனையும், வணங்கி, தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி, தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும்.

    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லது அவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும். செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.

    வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய் தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி ஜோதிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் நாடி ஜோதிடத்தை அதிகமாக நம்புகின்றனர். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.

    ஈசனின் பெயர் வைத்தீஸ்வரர் பெருமாள், அம்பிகையின் பெயர் தையல்நாயகி. மேலும் இத்திருகோவிலில் உள்ள ஈச பெருமான் சுயம்புவாக எழுந்தருளி மூலிகை தைலத்துடன் உள்ளார். வைத்தீஸ்வரர் என்ற பெயருக்கு மருத்துவர் என்ற பெயரும் உண்டு.

    கோவில் வரலாறு:

    செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய்'' வந்ததாகவும் அதனை போக்க சிவபெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

    ஒருமுறை ராவணன் சீதையை கானகத்தில் இருந்து தூக்கிக் கொண்டு போகும் போது, ராவணனை தடுத்த சடாயுவை ராவணன் கொன்றான். அப்போது சடாயுவின் உடல் கீழ் விழுந்தது. அதனை கண்ட ராமன் மற்றும் அவர் தமையன் லட்சுமணன் உடலைக் கண்டு அந்த உடலுக்கு சிதை மூட்டி எரித்தனர்.

     இந்த சிதை இக்குளத்திற்கு அருகாமையில் உள்ளது. ஆதலால் இக்குளம் `சடாயு குளம்' என்று அழைக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாது இந்த கோவிலின் மட்டற்ற பெருமை சித்தர்கள் பாற்கடலில் கலந்த அமிர்தத்தால் அபிஷேகம் சேயும் போது அந்த அமிர்தம் சிதறி குளத்தில் விழுந்தது. ஆதலால் இத்திருக்குளம் "சிதர்கள் அம்ரிதா தீர்த்தம்'' என்ற பெயர் பெற்றது.

     கோவிலின் சிறப்பம்சம்:

    இத்திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின் பின் உள்ளது. இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அனைத்து நோய்களும் தீர்வாக உள்ளது. இங்கு வைத்தீஸ்வரர் கோவில் என்பதால் தன்வந்திரி உள்ளார். மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி ஆனார்.

    சுமார் ஐந்து ஆயிரம் நோய்களை குணபடுத்தும் வல்லமை பெற்றது இத்திருத்தலம். மேலும் இத்தலத்தில் கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை வேம்பு, சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும்.

    இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இந்த கோபுர வாசலில் ஆதி சிவன் உள்ளார். இந்த சிவனை வழிபட்டால் ஆயிரம் சிவனை வழிபட்டதற்கு சமம் என்பது ஆன்றோர் வாக்கு.

    • காளி என்றாலே கோபக்கனலாய் இருப்பாளோ என்றால் இல்லை.
    • முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி.

    காளி என்றதும் பொதுவாகவே நம் மக்களுக்கு அவளிடம் பக்தியையும் தாண்டி பயம் தான் ஏற்படும். ஆனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு அடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மனைப் பார்த்தால் அந்த எண்ணமே மாறி விடும். தேனை தேடி பறந்து வரும் தேனீக்களாக ஒரு முறை அம்மனை தரிசித்து வந்தால் மீண்டும் மீண்டும் அத்தலம் செல்லும் ஆவலை ஏற்படுத்துகிறாள் அன்னை.

    இங்கு தான், கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அளிக்கும் வரப்பிரசாதியாய் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை மதுரகாளி. காளி என்றாலே கோபக்கனலாய் இருப்பாளோ என்றால் இல்லை. பெயருக்கு ஏற்றார் போல் முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி.

    சிலப்பதிகார நாயகி கண்ணகி தான் இங்கு மதுரகாளியம்மனாக வீற்றிருக்கிறாள் என்பது செவி வழி செய்தி. பிரம்மேந்திராள் ஸ்ரீ சக்கரத்தை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை.

    மதுர காளியம்மன் திருக்கோயிலில், காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு நிறைவடைகிறது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர், உடுக்கை ஒலிக்க அன்னையை உரத்த குரலிட்டு அழைக்கின்றனர். அதை நேரில் கேட்கும் போது நம்மையறியாமல் உடலும் உள்ளமும் சிலிர்ப்பதை உணர முடியும். அப்படி அழைக்கும்போது மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

    ஸ்தல வரலாறு

    ஆதியிலே சிறுவாச்சூரில் செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளிடம் ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு உட்படுத்தினான் அவன்.

    மந்திரவாதியின் கொடுமையால் அவதிப்படும் தன் மக்களை காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுர காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான்.

    தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவவராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை அற்ப மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் அன்னை மதுர காளியம்மன்.

     செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்கிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே இப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை முதலில் மலை நோக்கி காட்டப்பட்டு, பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகின்றது.

    மதுரை காளியம்மன் என்ற திருநாமமே மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவதால் மதுர காளியம்மன் என்ற திருநாமம் கொண்டாள் என்பதும் வழக்கு.

    சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது.

    இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக்காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது. திங்கள், வெள்ளிக்கிழமைகள் தவிர பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும், நவராத்திரி நாட்களிலும் மதுரகாளியம்மனை தரிசிக்கலாம்.

    • தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்.
    • ஞான சம்பந்தருக்கு, அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபம் உள்ளன.

    இந்த தஜாரோகண மண்டபத்தில்தான் அருள்தரும் கற்பகாம்பிகை நவராத்திரி கொலுவிருப்பாள். பஞ்ச மூர்த்திகள் திருவீதிஉலாவுக்கு புறப்படுவதற்கு முன் இங்கு வைத்து தான் அலங்காரம் செய்கிறார்கள். மண்டபத்தை யொட்டி திருமுறை பாராயண அறையும் உள்ளன. இதில் ஒரு தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

     வேத மண்டபம்

    12 கால் மண்டபத்தின் அருகே 4 கால் தூணுடன் விளங்கும் வேத மண்டபத்தில்தான் விழாகாலங்களில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலாட்டுவர்.

    அருணகிரிநாதர்

    இங்கு அருணகிரிநாதருக்கென்று தனி சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. அவரை ஆட்கொண்ட முருகனின் சன்னதிக்கு எதிரிலேயே கூப்பிய கரங்களுடன் இவரது சன்னிதியும் அமைந்துள்ளது சிறப்பு.

    தங்கத்தேர் விசேஷ நாட்களில் உட்பிரகாரத்தில் உலா வரும் காட்சியைக் காண பேறு பெற்றிருக்க வேண்டும். விருப்பப்படும் பக்தர்கள் விசேஷ கட்டணம் செலுத்தி இறைவனை தங்கத்தேரில் எழுந்தருளச் செய்து உட்பிரகாரத்தில் வலம்வரச் செய்து நல்லாசி பெறுகின்றனர்.

    திருக்குளம், நீராழி மண்டபம்

    மேற்கு பிராகாரத்தின் நடுவில் அமைந்துள்ள மேலைக் கோபுரத்தின் வழியே வெளியில் சென்றால், கடல் போல் பரந்துள்ள திருக்குளம், கபாலீ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நடுவே அழகான நீராழி மண்டபம் உள்ளது. சக்தி தீர்த்தம், முக்தி தீர்த்தம் என்றழைக்கப்படும் இக்குளத்தின் மேற்கு கரையில் எட்டுக்கால் மண்டபம் உள்ளது. அதன் அருகில் ஜ்யேஷ்டா தேவியின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

    குளத்தின் வடமேற்கு மூலையில் மூன்று கால் மண்டபமும் தென்கரையில் ஞான சம்பந்தருக்கு பங்குனி விழாவில் அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபமும் உள்ளன. கிழக்கே மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் நீராடும் மண்டபமும், வடக்கில் சிவலிங்க மண்டபமும் அமைந்துள்ளது.

    இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் தைப்பூசத்தன்று தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. முதல் நாள் சந்திசேகர சுவாமியும், இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களில் சிங்கார வேலரும், தெப்பத்தில் எழுந்தருளுவார். முதல்நாள் ஐந்து சுற்று, இரண்டாவது நாள் ஏழு சுற்று, மூன்றாவது நாள் ஒன்பது சுற்று என மூன்று நாட்கள் தெப்பம் நீராழி மண்டபத்தை சுற்றி வரும் அழகைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.

    தெப்பம் புறப்படுகையில் பெண்கள் வெற்றிலையில் கற்பூரமேற்றி தண்ணீரில் விடுகின்றனர். இத்திருக்குளத்தில் முழுகி பாவங்கள் களைந்தவர்கள் அனேகம். அவ்வாறே கலிங்கத்தை ஆண்ட தருமனின் புதல்வன் சாம்பன் என்பவனும் தனது பாவங்கள் தீர இக்குளத்தில் நீராடி கற்பகாம்பிகை, கபாலீஸ்வரரை வழிபட்டு முக்தியடைந்ததாக 'தீர்த்த சர்க்கம்' என்ற நூல் தெரிவிக்கிறது.

    குளத்திற்கு எதிரே கோபுரத்தின் வடக்குப்புறத்தில் கற்பக விநாயகரையும், அருள்பாலிக்கின்றனர். தென்புறத்தில் பாலமுருகனும் நுழைவாயிலுக்கு எதிரே துவஜஸ்தம்பம் உயர்ந்து காட்சி தருகிறது. அதனருகே பலி பீடத்தையும், ரிஷப தேவரான நந்தியம் பெருமானையும், அடியார்க்கு அருள்புரிய வீற்றிருக்கும் விநாயகரையும் காணலாம்.

    ஸ்ரீ கற்பகாம்பிகை சன்னதி

    இங்கு அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறாள். சதுர்புஜங்களுடன் நின்ற திருக்கோலம். அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. அதோடு வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி, நவராத்திரி காலங்களில் பூப்பாவாடை, தங்கக் காசுமாலை மற்றும் வைரக்கிளி தாடங்கமும் அணிந்து காட்சி கொடுக்கிறாள். வெள்ளிக் கிழமைகளில் வெள்ளித் தொட்டிலில் அம்பாளை வைத்து வேத பாராயணம் ஒலிக்க மும்முறை வலம் வரும் அவளின் அழகைக்காண கண்கோடி வேண்டும். தமிழ் மாதத்தின் கடைசி சுக்ரவாரம் இந்த பவனியுடன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கும்.

    சன்னிதியின் தென்மேற்கில் இறைவனின் பள்ளியறை உள்ளது. பிராகார சுவர்களில் பாமாலைகளும், சவுந்தர்ய லஹரியும், அபிராமி அந்தாதியும் சலவைக் கற்களில் பொறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.

    ×