search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • அரசு போக்குவரத்துக் கழகங்களில் 6 ஆண்டு கடந்த பேருந்துகளை மாற்றி புதியவற்றை வாங்க வேண்டும்
    • பழைய பேருந்துகளை பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்

    திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுனர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இவை தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

    புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்
    • பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்

    அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்ப நிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.

    இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன்.

    வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம் இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

    வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி,துண்டு,தொப்பி அணிந்துகொள்ள வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும்.

    மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சினை என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இத்தகை சூழலில் அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நான் அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் போன்ற திறந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வன விலங்குகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.

    அதன்படி நகர்ப்புறங்களில் இயங்கிவரும் 299 பேருந்து நிலையங்கள், 68 சந்தைகள், 338 சாலையோரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய 277 இடங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 56 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 1038 இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்களில் வெப்பத்தைத் தணிக்க குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 842 இடங்களில் கூடுதல் தண்ணீர் பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத்துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது.

    அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள் திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி நகரப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது
    • அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்

    திருச்சி நகரப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துனர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன்.

    ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

    எனவே, இனியாவது இந்த விடியா திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு
    • புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்

    சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டையில் நடைபெறும் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது:

    மலைப்பிரதேசங்களில் மட்டுமே மிளகு சாகுபடி செய்ய முடியும் என பெரும்பாலான விவசாயிகள் எண்ணி கொண்டு இருக்கின்றனர். ஆனால், சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்து அதில் லாபம் எடுக்க முடியும் என்பதை நாங்கள் எங்களுடைய கள அனுபவத்தின் மூலம் கண்டறிந்துள்ளோம்.

    புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள் பல ஆண்டுகளாக மிளகு சாகுபடியை சமவெளியில் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். சில விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு மிளகில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானம் ஈட்டி வருகின்றனர். வேறு எந்த ஊடுப்பயிருலும் இந்தளவுக்கு அதிக லாபம் எடுக்க முடியாது. மேலும், சில விவசாயிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    இவற்றை எல்லாம் நேரில் ஆய்வு செய்த பிறகு காவேரி கூக்குரல் இயக்கம் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் பயிற்சியை கடந்த 7 ஆண்டுகளாக அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இம்மாதம் ஏப்ரல் 28-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 இடங்களில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்த விரிவான கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் என 4 மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளின் மிளகு தோட்டங்களில் இக்கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

    இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல விஷயங்கள் குறித்து விரிவாக பேச உள்ளனர்.

    குறிப்பாக, போடியில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குநர் திரு. சிமந்தா சைக்கியா, கர்நாடகாவில் உள்ள ICAR - IISR நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் முகமது பைசல், தமது மிளகு ரகங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள முன்னோடி விவசாயிகள் திரு. டி.டி. தாமஸ், கே.வி.ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர்.

    இதுமட்டுமின்றி, பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகள் தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ள முடியும்.

    இக்கருத்தரங்குகளில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90081, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

    கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பொள்ளாச்சியில் உள்ள முன்னோடி விவசாயி திரு. வள்ளுவன் அவர்களின் இயற்கை விவசாய பண்ணையில் இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சங்கன் விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்
    • புகார் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆனால், இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர். 

    • சொத்துக்குவிப்பு வழக்கில் திருச்சி முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு

    1989-1993 காலகட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக ஜானகிராமன் என்பவர் பொறுப்பு வகித்துள்ளார்.

    மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி பெயரிலும் அப்போதைய மதிப்பில் 32 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக 2001 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

    இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று முடிவுற்ற நிலையில், முதல் குற்றவாளி ஜானகிராமன் மற்றும் இரண்டாம் குற்றவாளியான வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.

    மேலும் குற்றவாளிகள் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    • ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க உத்தரவு.
    • தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
    • இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.

    சென்னை:

    எல்லை தாண்டி இரக்கமற்று இந்தியர்களை கொன்று குவிக்கும் பாகிஸ்தானியர்கள் மீது ஆத்திரமும் கோபமும் இருந்தாலும் என்னை காப்பாற்றுங்கள் என்று வந்தால் எல்லைகளை கடந்து உயிர் கொடுத்தும் காப்பவர்கள் இந்தியர்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த சம்பவம்.

    பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆயிஷா ரஷான் (19). இந்த இளம்பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு சிகிச்சைக்காக இந்தியா வந்திருக்கிறார். அப்போது அடையார் மலர் ஆஸ்பத்திரியில் இதயவியல் நிபுணராக இருந்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் அவரது இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவ குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தில் ஒரு பம்பை பொருத்துகிறார்கள். சிகிச்சைக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய ஆயிஷா தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

    எம்.ஜி.எம். மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்த டாக்டர் பால கிருஷ்ணனை அணுகி பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஆயிஷாவின் இதய பம்பில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

    இதையடுத்து இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.

    இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம் தானத்துக்கு கிடைத்து இருப்பதாகவும் சிகிச்சை பெற வரும்படியும் அழைத்துள்ளார்கள்.

    ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்று தவித்துள்ளர்கள். கடைசியில் ஐஸ்வர்யா டிரஸ்டு மூலம் பண உதவியும் கிடைத்துள்ளது.

    இதையடுத்து சென்னையில் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அறுவை சிசிக்சை வெற்றிகரமாக முடிந்தது.

    விரைவில் தாயகம் திரும்பவிருக்கும் ஆயிஷா தனது தாய் சனோபருடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது சனோபர் கூறியதாவது:-

    "வெளிப்படையாகச் சொல்வதென்றால், இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. இந்தியா மிகவும் நட்பாக இருப்பதாக உணர்கிறேன். இந்தியாவுக்கு வந்தபோது கிட்டதட்ட உயிர் போகும் நிலையில் தான் இருந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லை என்று பாகிஸ்தானில் மருத்துவர்கள் கூறியபோது, நாங்கள் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம். இதற்காக இந்தியாவுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் நன்றி என்றார்.

    ஆயிஷா கூறும்போது கராச்சி திரும்பியதும் பள்ளி படிப்பை தொடர போவதாகவும், ஆடை வடிவமைப்பாளராக வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் குறிப்பிட்டார்.

    • பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது.

    பழனி:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் பதிவாகி உள்ளது. இது மட்டுமின்றி மேலும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். மக்களுக்கே இந்த நிலை என்றால் விலங்குகள் மற்றும் பறவைகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு கோடை காலம் முடியும் வரை போதிய அளவு தண்ணீர் மற்றும் இரை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே போல் பறவைகளுக்கும் குடிநீர் மற்றும் அவை தங்கி இளைப்பாறும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.

    பழனி முருகன் கோவிலில் கஸ்தூரி என்ற யானை உள்ளது. இந்த யானை தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா நாட்களின் போது பக்தர்களுக்கு ஆசி வழங்குவது மற்றும் தேரை பின்னால் இருந்து தள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும். மற்ற நாட்களில் இந்த யானை காரமடை தோட்டத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது.

    இதற்காக அங்கு புல், தீவனம் போன்ற உணவு வழங்கப்படுகிறது. கோவில் யானைக்கு என இங்கு பிரத்யேக நீச்சல் குளம் மற்றும் ஷவர் பாத் எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவில் யானை கஸ்தூரி தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது. காலையில் ஷவர் பாத்தும், மாலையில் நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியலும் போட்டு வருகிறது. நீச்சல் தொட்டிக்குள் இறங்கி சிறு குழந்தைப்போல 1 மணி நேரத்துக்கும் மேலாக கோவில் யானை கஸ்தூரி ஆனந்தமாக குளித்து வருவதாகவும், இதனால் இரவில் நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம்.
    • வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள்.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளருமான ஏ.பி.முருகானந்தம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பா.ஜ.க. கைப்பற்றும்.

    தமிழகத்தில் பா.ஜ.க., தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 39 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் புரட்சியை பா.ஜ.க., மேற்கொண்டுள்ளது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் இது தெரியும்.

    மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எந்த வேலையையும் செய்யவில்லை. வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இது ஆளுங்கட்சி தலையீடாக கூட இருக்கலாம்.

    ராகுல் காந்தி- பிரியங்கா ஆகியோர் கோவிலுக்கு செல்வது தேர்தல் காலத்தில் மட்டும்தான். இந்தியா கூட்டணி என்பது ஒன்றுமில்லாத ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • இன்றைக்கு இளைஞர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது.
    • கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் குமாரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார் தமிழக முழுவதும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை திறந்து மக்களுக்கு சேவை செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

    அவர் அறிவித்த 24 மணி நேரத்தில் சோழவந்தான் தொகுதியில் உள்ள குமாரம், அலங்காநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மக்களை தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர், இளநீர், சர்பத் உள்ளிட்ட நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே எடப்பாடியார் நீர் மோர் பந்தலை திறக்க தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று உள்ளார்.

    மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் 7000 போலீசார் காவல் பணியில் இருந்தனர். ஆனால் அப்படி இருந்தும் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.

    சித்திரை திருவிழாவில் ராமராயர் மண்டபத்தின் அருகே பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் மோதி ஒரு இளைஞரை கொலை கொலை செய்தனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அதேபோல் மதுரையில் வேலை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பிய ஒருவரை மது, கஞ்சா அருந்தியவர்கள் அவரை தாக்கியுள்ளார். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில், ஜாபர் சாதிக் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் கஞ்சா கடத்தியுள்ளார். தற்போது சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி அளவில் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் நடைபெற்று ஆயுதக்கிடங்காக தமிழகம் மாறியது மட்டுமல்ல, தற்போது போதை பொருள் கிடங்காக மாறிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இன்றைக்கு இளைஞர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து தொடர்ந்து சட்டமன்றத்திலும், தேர்தல் பிரசாரத்திலும் எடப்பாடியார் எடுத்துரைத்து வருகிறார். அவர் எடுக்கின்ற தியாக வேள்விக்கு மக்கள் அனைவரும் கரம் கொடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் மக்களை மதரீதியாக பிரித்துப் பார்த்து பேசக்கூடாது, சட்டம் அனைவருக்கும் சமம். உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல, இது போன்று நாடு சந்தித்தது இல்லை தற்போது மரபை மீறி உள்ளார்களா? என்று அச்சம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 1 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து300 வாக்குச்சாவடி உள்ளது. இதில் அதிமுகவிற்கு அனைத்து இடங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். பி.ஜே.பி.க்கு வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தால் முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்கள். இதன் மூலம் கட்டமைப்பு இல்லை என்று தெரிகிறது.

    தற்போது தேர்தல் தோல்வி காரணமாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆனாலும் தேர்தல் ஆணையம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×