search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
    • செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

    குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

    வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள். லட்சுமி, வழிபாட்டின்போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

    மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

    லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

    மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

    வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

    தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

    • முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு.
    • மும்மலங்களை அடக்கி அருள்பவன் முருகன்.

    முருகனின் வாகனம் என்றாலே, மயில் தான் அனைவர் எண்ணத்திலும் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு. அவை மயில், யானை, ஆட்டுக்கிடா ஆகும்.

     * தேவர்களுக்கு அருள் செய்த தலைவனாக இருப்பதாலும், ராஜகம்பீரம் கொண்டவர் என்பதாலும் அவருக்கு யானை வாகனம் பொருத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

    * ஒருசமயம் நாரதர் வேள்வி ஒன்றை செய்தார். அந்த வேள்வியில் மந்திரங்களை தவறாக உச்சரித்தார். அதன் விளைவாக யாகத்தில் ஒரு பெரிய ஆட்டுக்கிடா தோன்றியது. யாராலும் அடக்க முடியாத வலிமையுடன் அது விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் அச்சுறுத்தியது. அச்சம் கொண்ட தேவர்கள் முருகனிடம் சென்று முறையிட்டனர். முருகப்பெருமான் வீரவாகு தேவரை அனுப்பி அந்த ஆட்டுக்கிடாவைப் பிடித்து அடக்கச் செய்து தனது வாகனமாக ஆக்கிக்கொண்டார்.

     * சூரபதுமனுடன் முருகப்பெருமான் போர் செய்தார். ஒவ்வொரு முறையும் ஒரு வடிவம் கொண்டு போரிட்டான் சூரபதுமன். ஆனாலும் அவன் தோல்வியையே தழுவினான். ஒரு முறை சக்கரவாகப் பறவையாக மாறி போரிட்டான். அப்போது இந்திரன் மயிலாக மாறி முருகனை தாங்கினான். பின்னர் சூரன் மாமரமாகி கடல் நடுவே மறைந்து நின்றான். அந்த மரத்தை வேல் கொண்டு இரண்டு கூறாக முருகன் பிளந்தார். அதில் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் மாறியது.

    மயில் `ஆணவம்' என்றும், யானை `கன்மம்' என்றும், ஆடு `மாயை' என்றும், மும்மலங்களை அடக்கி அருள்பவன் முருகன் என்பதே இதன் சான்று.

    • சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில்.
    • மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில்.

    கோவில் தோற்றம்

    இந்த ஆலயத்தின் கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதன் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இந்த கருடாழ்வார் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடை மீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வக் கோலம் ஆகும்.

     நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலை என மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில், அமர்ந்த நிலையில் வணங்கி நிற்கும் கருடாழ்வார் அருளும் தலம், விஜயநகர மன்னர் காலத்துக் கோவில், செஞ்சி நாயக்கர்கள் திருப்பணி செய்த ஆலயம், சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோவிலாகும்.

     புராண வரலாறு

    கலியுகத்தின் தொடர்ச்சியில் சடமர்ஷனர் என்ற மகரிஷி, வடநாட்டில் தவமிருந்து வந்தார். ஆனால், அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும், அதர்மமும் தலைதூக்கியதால் அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதிக்கு வந்தார்.

    அப்போது இப்பகுதி பஞ்சகிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப்பகுதியாக இருந்தது. வனத்திற்குள் சடமர்ஷனர் அலைந்து திரிந்தபோது, வெப்பம் தாளாமல் தவித்தார். அப்போது அங்கே தென்கரை ஓரமாக ஓடிய நீரூற்று தென்பட்டது. அதில் தன் கால்களை நனைத்து வெப்பத்தை தணித்தார்.

    பின்னர் அந்த நீரூற்று ஓடிய பாதையில் பயணம் செய்தார். அந்த நீரூற்று பாதை, வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார்.

    அந்த மகரிஷியின் தவத்தால் மகிழ்ந்த திருமால், தாயாரோடு அவருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த மகரிஷி, "இறைவா.. தாங்கள் இந்த உலகத்தைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் காட்டி அருள வேண்டும்" என்று கேட்டார். அதன்படியே அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார்.

    பின்னர் மகரிஷி, "இந்த இடத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து அடியவர்களுக்கு அருளாசி வழங்க வேண்டும்" என்றும் கேட்டார். அதன்படியே நின்ற கோலத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபாலராகவும், கிடந்த கோலத்தில் ஆதிசேஷனின் பாம்பணையில் பள்ளிகொண்ட ராமராகவும் காட்சி அருளினார்.

    தொன்மைச் சிறப்பு

    தமிழகக் கோவில்களின் வரலாற்றை அறிய உதவும் மெக்கன்சி வரலாற்றுக் குறிப்புகளும், கி.பி. 1464-ல் எழுதப்பட்ட செப்புப் பட்டயமும், புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பேடும் இத்தலத்தின் தொன்மையையும், வரலாற்றினையும் அறிய உதவுகிறது.

    செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் காலத்தில் (கி.பி. 1464-1478), இத்திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு, செழிப்புடன் விளங்கியது. தெலுங்கு மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்டம்மாள் என்ற பெண்மணியின் நினைவாக இவ்வூர் `வெங்கட்டம்மாள்பேட்டை' என அழைக்கப்பட்டது. இதுவே மருவி, தற்போது 'வெங்கடாம்பேட்டை' என அழைக்கப்படுகிறது.

    கி.பி.1464-ல் இருந்து சுமார் 12 ஆண்டுகள் செஞ்சி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் சிறப்புப் பெற்றிருந்ததை, செப்புப் பட்டயத்தின் வாயிலாக அறிய முடிகிறது. புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சுக் காரர்களின் ஆட்சியில் துபாஷி எனும் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ஆனந்தரங்கம் பிள்ளைக்கு இவ்வூர் மானியமாக வழங்கப்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது.

    மேலும், புதுச்சேரியின் வரலாற்று ஆவணமாகத் திகழும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் இவ்வூர் வெங்கட்டம்மாள் பேட்டை என்றே குறிப்பிடப்படுகிறது.

    ஆலய அமைப்பு

    ஊரின் கிழக்கே பெரிய மதில்சுவர்களைக் கொண்டு சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் சிதிலம் அடைந்த ஏழுநிலை ராஜ கோபுரத்துடன் திருக்கோவில் அமைந்துள்ளது. வாசலின் முன்பாக கருட மண்டபம் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கி.பி.1884-ம் ஆண்டின் கல்வெட்டு விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது.

    மகாமண்டபத்திற்குள் தெற்கு நோக்கி, வைகுந்த வாசன் அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவருக்கு ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து நிற்கிறார். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சி கொடுத்த வேணுகோபாலரை தரிசிக்கலாம்.

    கருவறைக்குள் சுமார் ஆறடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி, மற்ற இரு கரங்களில் புல்லாங்குழல் பிடித்து ஊதும் பாவனையில் வலது காலை சற்றே மடித்து, பெருவிரலால் தரையில் ஊன்றியுள்ளார். நின்ற நிலையிலான இந்த எழிலான கோலத்தைக் காண கண்கோடி வேண்டும். வேணுகோபால சுவாமியின் இருபுறமும் ருக்மணி மற்றும் சத்யபாமா காட்சி தருகின்றனர்.

    மூலவரைத் தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார், தனிச் சன்னிதியில் உள்ளார். பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

    வடக்கே ஆண்டாள் சன்னிதி உள்ளது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் ராமபிரான் அருளும் சயனக்கோலம் நம்மை பரவசப்படுத்துகிறது. இவரது மார்பில் திருமகளும், திருவடியில் சீதாதேவியும், வீர ஆஞ்சநேயரும் உள்ளனர்.

    இந்த ஆலயத்தில் ஆவணி மாதம் 25-ந் தேதியில் இருந்து 6 நாட் களுக்கு காலை 6 மணிக்கு சூரியன் தன் கதிர்களால் மூலவரை வணங்குகிறார். அதேபோல புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும், தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களை செங்கமலவல்லி தாயார் மீது பாய்ச்சுகிறார்.

    ஊஞ்சல் மண்டபத்தில் அருகே அழகிய திருக்குளம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்தக் குளத்தின் கிழக்குக் கரையில் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளது. கோவிலின் எதிரே சுமார் ஐம்பதடி உயர பதினாறு கற்தூண்கள் கொண்ட ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தில் குதிரை வீரர்களின் உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.

    ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் திருமால் தன் சக்கரத்தை ஏவி உருவாக்கிய சக்கரத் தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்திருப்பதாக தல வரலாறு கூறுகிறது.

    இவ்வாலயத்தில் தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை, கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள் ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் வெங்கடாம்பேட்டை உள்ளது. சென்னைக்குத் தெற்கே 215 கிலோமீட்டர் தொலைவிலும், வடலூருக்கு வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும், கடலூருக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

    • மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.
    • ராமநாதர் சன்னதியில் ராமரின் பாதம் உள்ளது.

    தலவரலாறு

    பாதாளத்தை ஆண்ட நாகவேந்தனாகிய ஆதிசேஷன் தனக்கு குழந்தை வேண்டி குடந்தை முதல் நாகைக்காரோணம் வரை நான்கு தலங்களுக்கும் சென்று வழிபடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டார். பின்னர் இறைவன் அருளால் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை மூன்று தனங்களுடன் இருந்தது கண்டு வருந்தினர்.

    அப்போது அசரீரி தோன்றி, "இக்குழந்தைக்கு தக்க வயது வந்தபோது இது எந்த ஆடவனைப் பார்க்கும்போது இதன் மிகை தனம் மறையுமோ, அவனே இவளுக்கு கணவனாவான்" என்று கூறியது.

    அதன்படி, ஒருநாள், தேவதீர்த்தக்கரையில் அரசகுமாரன் சாடீசுகன் என்பவனைக் கண்டதும் மிகைதனம் மறைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து காதல் கொண்டனர். காமவயப்பட்ட நாக கன்னிகை, தன் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்துகொள்ள எண்ணி சுரங்கம் வழியாகப் பாதாளம் சென்றாள். பின்னர் நாக கன்னிகையின் பிரிவால் வருந்திய அரசகுமாரன், பாதாளம் செல்லும் வழி தெரியாமல் பலவாறு புலம்பி இறைவனிடம் முறையிட்டான்.

    இறைவன் அவனுக்கு பாதாளம் செல்லும் வழியைக் கூற, அவனும் அங்கு சென்று நாக கன்னிகையை மணந்தான். தன் மகளை மணம் முடித்து கொடுத்தபின் நாகை காரோணம் வந்து தான் பிரதிஷ்டை செய்த நாகநாதர் கோயில் அருகில் குளம் அமைத்து, அதற்கு நாகதீர்த்தம் என்று பெயரிட்டார்.

    ஆதிசேடன், மாசி சிவராத்திரியின் போது ஒவ்வொரு யாமமும் குடந்தை, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் ஆகிய தலங்களில் வழிபட்டு, நாலாம் யாமத்தில் நாகை காரோணரை மலர்கொண்டு வழிபட்டு பூஜையை நிறைவு செய்வார். ஒருநாள் நாகநாதர் இவனது பூஜையில் மகிழ்ந்து இறைவன் காட்சி தந்து, "வேண்டும் வரம் கேள்" எனக் கூறினார்.

    அதற்கு ஆதிசேடன், "இறைவா, இந்நகர் என் பெயரால் வழங்க வேண்டும். நான் பிரதிஷ்டை செய்த லிங்கம் என் பெயர் கொண்டு விளங்கவும், தாங்கள் இதில் இருந்து வேண்டுபவர்களுக்கு வேண்டிய பலன்களை தந்தருள வேண்டும். மேலும் இவ்வூர் வளம்பெற்று விளங்க ஆறு ஒன்று இப்பகுதியில் ஓடிக் கடலில் கலக்க வேண்டும். இவ்வாறு காவிரி தோன்றுவதற்கு முன்னே தோன்றுவதால், `விருத்த காவிரி' எனப் பெயர் பெற வேண்டும்" என்றார்.

    நாகனது வேண்டுகோளுக்கு இணங்கிய இறைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று வரமளித்தார். தங்கள் தலைவனாகிய நாகன் வந்து நகர் உண்டாக்கி, நாகநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறுபெற்ற பெருமையை அறிந்து, வாசுகி, குளிகன், சங்கபாலன் ஆகியோர் இக்கோயில் வந்து நாகநாதரை வழிபட்டு, தங்கள் பெயரால் மேலத்திருச்சுற்றில் அருள்குறிகள் நிறுவிப் பூஜித்து பேறு பெற்றுப்போயினர்.

    வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    கோவில் அமைப்பு

    நாகநாத சுவாமி கோயில் வலது புறத்தில் உள்ள தென்திருச்சுற்று அருகில் அர்த்த மண்டபத்துடன் கூடிய ஒரு கோயில் உள்ளது. அதில் உள்ள இறைவனுக்கு, "ராமநாத சுவாமி" என்று பெயர். இதற்கு ஒரு காரணம் உண்டு.

    கோசலநாட்டின் தலைநகரான அயோத்தி வேந்தன் ராமபிரான் திருமுடி துறந்து, சிற்றன்னையின் சொற்படி மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் கானகம் சென்றார். காட்டில் வாழ்ந்து வரும்போது ராமன் மனைவியை ராவணன் என்ற அசுரன் அபகரித்துச் சென்றான். மனைவியைத்தேடி, தம்பியும் தானுமாகக் காட்டில் பல இடங்களில் அலைந்துகொண்டு கிஷ்கிந்தை என்ற நகருக்கு வந்தார்.

    கிஷ்கிந்தையின் மன்னனான சுக்ரீவனைக் கண்டு, அவனது நட்பைப் பெற்றார். அவனது உதவியால் வானரப்படைகளைக் கொண்டு இலங்கைத்தீவில் தன் மனைவி இருப்பதை அறிந்தார். இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்க எண்ணினார். இவ்வாறு ஆலோசித்துக் கொண்டு தம்பியுடன் கீழக்கடற்கரை ஓரமாக வந்துகொண்டிருந்தார்.

    வரும் வழியில் நாகைக்காரோணம் வந்தார். விருத்த காவிரி ஆற்றின் சங்கமத்தில் நீராடி, வெண்ணீறு அணிந்து, ஐந்தெழுத்தை உச்சரித்து கோயில் சென்று காரோணப் பெருமானை வணங்கினார். பின்பு அக்கோயிலின் மேல் திசையில் நாகன் பூஜித்த நாகநாதரை வணங்கினார். அப்பெருமானுக்கு தென்புறம் ஒரு அருள்குறி நிறுவ பூஜித்தார். பூஜைக்குகந்த பெருமான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார்.

    சிவபெருமானைக் கண்ட ராமன் அவரை வலம் வந்து போற்றி வணங்கினார். தனது மனத்துயரை போக்குமாறு கேட்டுக்கொண்டார். பெருமானும் "உனது குறைகளை கூறுவாய்" என்றார்.

    "என் மனைவியை ராவணன் என்ற அரக்கன் கவர்ந்து சென்றுள்ளான். அவன் வாழும் இலங்கை நகர் செல்ல கடலிடத்தை மலைகளால் அடைத்து வழிசெய்ய வரம் வேண்டும். அத்துடன் நீர் நான் நிறுவிய லிங்கத்துள் என்றும் இருந்து வழிபடுபவரது குறைகளைத் தீர்க்க வேண்டும். இந்த லிங்கம் ராமநாதன் என்று என் பெயர் கொண்டு விளங்க வேண்டும்" என்றார். அதன் காரணமாக இப்போது ராமலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

    சிவபெருமான் கூறியவாறே ராமன், ராவணவதம் நிகழ்த்தி, சீதையை சிறை மீட்டுக்கொண்டு திரும்ப நாகை அடைந்தார்; சீதையுடன் கடலில் நீராடி, கருந்தடங்கண்ணி உடனாய காரோணரை வழிபட்டு, முன்பு தான் பிரதிஷ்டை செய்த மூர்த்தியாகிய ராமநாதரை வழிபட்டு, பின் தன் நகராகிய அயோத்திக்கு எழுந்தருளினார். இது கிருத்திகை நட்சத்திர பரிகார தலம் ஆகும். இக்கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது.

    இங்கு விநாயகர், பஞ்ச லிங்கங்கங்கள், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர், சனிபகவான் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. இங்கு தெட்சிணாமூர்த்தி தனி கோயிலில் அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் வலஞ்சுழி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நாகருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.

    இங்கு மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இங்கு நாகநாதர், ராமநாதர் என்ற இரு சிவன் சன்னதிகளும், அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி என்ற இரு அம்மன் சன்னதிகளும் தனித்தனியாக உள்ளது சிறப்பு. ராமநாதர் சன்னதியில் ராமரின் பாதம் உள்ளது. இக்கோயில் மூலவரின் திருநாமத்தின் அடிப்படையில்தான் இந்த ஊருக்கே "நாகப்பட்டினம்" என்ற பெயர் வந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் தசமி தர்மராஜா தசமி.
    • தர்மராஜாவையும், குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கலாம்.

    தசமி திதி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களைத் தொடர்ந்து வரும் பத்தாவது நாள் ஆகும். இவற்றுள் பௌர்ணமியில் இருந்து வரும் பத்தாவது நாள் கிருஸ்ணபட்ச தசமி என்றும் அமாவாசையில் இருந்து வரும் பத்தாவது நாள் சுக்கிலபட்ச தசமி என்றும் அழைக்கப்படுகின்றது.

    தசமி திதி ஆனது வீரபத்திரன் மற்றும் தர்மராஜா போன்ற தெய்வங்களுக்கு உரிய நாளாக காணப்படுகின்றது. இந்த நாளில் மதம் சார்ந்த நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். ஆன்மீக செயல்களில் இந்த தசமி திதியில் ஈடுபடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

    இன்று தர்மராஜா தசமி. பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் தசமி தர்மராஜா தசமி கொண்டாடப்படுகிறது. இதற்கான கோயில் வலங்கைமான் நரிக்குடி கிராமத்தில் உள்ளது. புவனேஸ்வரி சமேத கோயிலில் இவ்விழா சிறப்பாக நடைபெறும் பல்வேறு நோய்களிலிருந்து விடுபடவும் மரண பயத்தை நீக்கவும் இந்த நாளில் இருந்து தர்மராஜாவையும் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கலாம்.

    மேலும் தசமி திதியில் சுப காரியங்கள், புதிய தொழில்கள் போன்றன செய்யலாம். இவை தவிர திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் வாங்கலாம். மேலும் திருமணம், கிரகப்பிரவேசம், போன்ற நிகழ்வுகளும் அரச காரியங்கள், வெளியூர் பயணங்கள் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். அத்தோடு கஷ்டப்படுபவர்களுக்கு பண உதவி கடன் கொடுக்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம்.
    • உதாரண புருஷராய் விளங்கியவர் ஶ்ரீராம சந்திரமூர்த்தி.

    மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம். பூவுலகில் மனிதனாய் அவதரித்து, தர்மத்தின் பாதையில் நடந்து, ஓர் உதாரண புருஷராய் விளங்கியவர் ஶ்ரீராம சந்திரமூர்த்தி. பங்குனி மாத வளர்பிறை நவமியே ராமநவமியாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராம பகவான் நவமியை யொட்டி அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராமநவமி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாட்களுக்கு விஷ்ணு தலங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமருக்கு கோயில்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெறும். அதைத் தரிசித்தால் பாவங்கள் விலகும். மேலும், பல கோயில்களில், ராமபஜனைகள் நடைபெறும்.

    ஸ்ரீராம நவமி நாளில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் கிடைப்பது உறுதி, நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம். வீட்டில் ஸ்ரீராமநவமி தினத்தில் வாசல், பூஜை அறை சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    சுவாமிக்கு நிவேதனமாக நீர்மோர், பானகம், பாயசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    • அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் என்று பொருள்.
    • மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் அசோகாஷ்டமி என்று பெயர்.

    அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் (மகிழ்ச்சி) என்று பொருள். சோகத்தை நீக்கி, மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் இந்நாளுக்கு அசோகாஷ்டமி என்று பெயர்.

    சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச்சோலையிலே சிறைவைத்தான் ராவணன். குளிர்ந்த அந்த மலர்ச் சோலையிலே சீதையின் உள்ளம் மட்டும் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய்ச் சுட்டது. சீதையின் இந்த சோகத்தைப் போக்குவதற்காக, இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து, அவளை சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம். சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம்.

    அந்த மரம் எப்படியாவது ராமன் வந்து சீதையை மீட்டுச் செல்ல வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்தது. அந்த பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது. சீதை அசோகவனத்தில் சிறையிலிருந்து விடுபட்ட போது, அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன. அப்பொழுது சீதை, அசோகமரங்களை நோக்கி, "என்ன வரம் வேண்டும்?" என கேட்டார். "அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும் வரக்கூடாது'' எனக் கேட்டது.

    சீதாதேவியும் "மருதாணி மரங்களான (அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு) உங்களை யார் ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிக்கொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று வரமளித்தாள்.

    ஆகவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள். சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே "அசோகாஷ்டமி'' நாளாகும். பங்குனி மாத அமாவாசையில் இந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்குத் துன்பத்தை போக்கி இன்பத்தைத் தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம்.

    கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி மருதாணி அரைத்து பூசிக் கொள்ளலாம். மருதாணி உடல் பிணிகளையும் தீர்க்கும், அப்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

    த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ

    பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.

    • கேரள மாநிலம் `கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படுகிறது.
    • இயற்கை பேரழகில் காண்போரை சொக்க வைக்கிறது.

    இயற்கை எழில் சூழ்ந்த இன்றைய கேரள மாநிலம் `கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இன்றைய குமரி மாவட்டமும், கேரள மாநிலத்தின் ஒரு அங்கமாக, அதாவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. எனவே குமரி மாவட்டமும் இயற்கை பேரழகில் காண்போரை சொக்க வைக்கிறது. குமரி மாவட்டத்தில் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. அந்த வரிசையில் சமணர்களின் பெருமைகளைச் சொல்லும் சிதறால் மலைக்கோவிலும் ஒன்று.

    இங்குள்ள திருச்சாணத்து மலை மீது அமைந்திருக்கும் குடைவரைக் கோவில், பல்வேறு வரலாற்று அதிசயங்களைத் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது.

     சமணத் துறவிகள்

    இந்தியாவில் தோன்றிய பல சமயங்களில் சமணமும் ஒன்று. இந்த சமயத்தை பின்பற்றியவர்கள் 'சமணர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். எதிலும் பற்று இல்லாத துறவற வாழ்க்கையை வாழ்வது சமண மதக் கொள்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கி.பி. 7-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் சிதறால் மலைப்பகுதியில் வசித்து வந்ததாக சான்றுகள் சொல்கின்றன.

    இந்த சிதறால் மலைக்கிராமம், குமரி மற்றும் கேரள எல்லையோரம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருக்கிறது. குமரியின் 2-வது பெரிய நகராக கருதப்படும் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இருந்து 55 கி.மீ. தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது.

    தொலைவில் இருந்து பார்க்கும்போது மலை உச்சியில் ஒரு சிறிய புள்ளியைப்போன்று இந்த சிதறால் மலைக் கோவில் மிக அழகாகத் தெரியும். சுற்றிலும் உயர்ந்தோங்கிய பாறைக்கூட்டங்கள், மலையில் இருந்து பார்க்கும் திசை அனைத்தும் மனதுக்கு இதம் அளிக்கும் விதமாய், பூமிப் பந்து பசுமைப் பட்டாடையை உடுத்தியது போன்று காட்சி அளிக்கிறது.

    மலை அடிவாரத்தில் இருந்து அரை கி.மீ. தூரம் வரை படிகள் வழியே மேலே நடந்து சென்றால் குகைக் கோவிலை அடைந்து விடலாம். முன்பு திருச்சாணத்துப்பள்ளி அல்லது திருச்சாணத்து மலை என்று அழைக்கப்பட்ட இந்த ஊா், திகம்பர சமண மதத் துறவிகளின் உறைவிடமாக திகழ்ந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்தான், இந்த சிதறால் மலை குடைவரைக் கோவில்.

    இதய வடிவில் குளம்

    இங்கு மலை உச்சியில் உள்ள குகையில் உள்ளேயும், வெளியேயும் சமண மதம் தோன்றவும், வளரவும் காரணமாக இருந்த தீா்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் முதலாம் மகேந்திரவா்மனின் உதவியால் சமண மதம் வளா்ந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் இந்த குகைக்கோவில், பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டது.

    இந்த சிதறால் மலை 'சொக்கன் தூங்கி மலை' எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள சிதறால் குகை, அனைத்து தரப்பினரையும் கவரும் அழகிடமாகத் திகழ்கிறது. இங்கு 9-ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன.

    கோவில் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. மகாவீரர் சிலை, அம்பிகா இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் காட்சி, பறக்கும் வித்யாதாரர் போன்ற சிற்பங்கள் அவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. சிற்பங்களுக்கு கீழ் உள்ள ஒரு சிறு குகையில், கல்லில் வடிக்கப்பட்ட 5 தலை நாகர் சிலையும், பார்ச்சுவநாதர் உருவமும், பத்மாவதி உருவமும் உள்ளது.

    ஒவ்வொரு உருவத்தின் கீழும் அதைச் செதுக்கியவர்களின் பெயர், ஊர் பற்றிய விவரங்கள் வட்டெழுத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள், உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    சிதறால் மலையில் இதய வடிவில் அமைந்த குளம் ஒன்று, அந்த இடத்திற்கு கூடுதல் அழகைத் தருகிறது. சமணத் துறவிகளால் இயற்கையான முறையில் பாறையில் அமைக்கப்பட்டுள்ள குளம் இதுவாகும்.

    ஒரு பாறையின் மீது தொங்கும் நிலையில் உள்ள மற்றொரு பாறையில், இயற்கையாக அமைந்த குகைக்குள் பகவதி கோவில் அமைந்திருக்கிறது. குகை மேற்குப் பார்த்து உள்ளது. திருச்சாணத்து மலையில் காணப்படும் தற்போதைய பகவதி கோவில், ஒரு காலத்தில் தென்னாட்டில் வாழ்ந்த சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக திகழ்ந்துள்ளது.

    இங்கு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் பள்ளி அல்லது சமணப் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டதாகவும், அதில் பல நூறு மாணவர்கள் படித்ததாகவும், அவர்களுக்கு குறத்தியறையார் என்ற மகாராணி சொத்துகளை அளித்தது பற்றியும், தமிழ்-பிராமி மொழியில் கல்வெட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மறைந்த பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த சமயத்தில் சீனப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது அவரிடம், அந்த நாட்டு தலைவர் சுவன்லாய், திருச்சாணத்து மலையைப் பற்றி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு புகழ் வாய்ந்த சமணக் கோவிலாக சிதறால் கோவில் இருந்திருக்கிறது.

    அதன்பிறகு நேருவின் உத்தரவுப்படி, இன்று அந்தக் கோவில் மத்திய தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கி.பி. 8-ம் நூற்றாண்டில் சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியால் இந்தியாவில், குறிப்பாக தென் பகுதிகளில் சமண, புத்த மதங்கள் வீழ்ச்சியடைந்தன. சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப்பின் பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றிக் கிடந்த இந்தக் கோவில், இரண்டாம் ராஜராஜன் காலத்தில்தான் சற்று புதுப்பொலிவு அடைந்திருக்கிறது. பின்னர் பத்மாவதி சிலை, பகவதி சிலையாக மாற்றப்பட்டுள்ளது.

    திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா காலத்தில், சிதறால் குகையில் `சிதறாலம்மா' என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

    • சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 25-ந்தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது.

    திருவையாறு:

    திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இதில் தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தேரோட்டம்

    விழாவில் வருகிற 18-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

    22-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர்வீதி உலா வருகிறது. அப்போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேர் நான்கு வீதி வந்து நிலையடி வந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    சப்தஸ்தான பெருவிழா

    விழாவில் 25-ந்தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.

    பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

    26-ந்தேதி தில்லைஸ்தானம் பல்லக்குகளுடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

    விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • 16 நாட்களுக்குள் கரும காரியத்தினை சிரத்தையுடன் செய்து முடிப்பர்.
    • கசப்புத்தலை நாளில் கறி எடுக்க வேண்டும்.

    இறந்தவருக்கான கரும காரியத்தினை செய்து முடித்த மறுநாள் கசப்புத்தலை நாள் என்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் சொல்வது வழக்கம். இந்த நாளை சுபஸ்வீகரண நாள் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதாவது, ஒருவர் இறந்தவுடன் அவரது வாரிசுகளும், பங்காளிகளும் பத்துநாள் தீட்டு என்ற பெயரில் தலையில் எண்ணெய் தடவாது, நெற்றியில் மங்கல சின்னங்களை அணியாது இறந்தவரின் நினைவாகவே இருப்பார்கள்.

    இந்த நாட்களில் உணவுப் பழக்கத்திலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். பத்து இரவுகள் முழுமையாக கடந்த பின்னர் அவரவருக்கு உரிய சம்பிரதாயப்படி 11 முதல் 16 நாட்களுக்கு உள்ளாக கரும காரியத்தினை சிரத்தையுடன் செய்து முடிப்பர்.

    கரும காரியத்தினை செய்து முடித்த மறுநாளில் இருந்து இறந்தவரின் வாரிசுகளும், பங்காளிகளும் வழக்கம்போல் தங்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் மற்ற வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் சுபஸ்வீகரணம் என்ற நிகழ்வினைச் செய்வார்கள். அதாவது, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, ருசிமிகுந்த நல்ல உணவுகளை உட்கொண்டு புத்துணர்ச்சியோடு வழக்கமான பணியில் ஈடுபடுவர்.

    தீட்டு காப்பவர்களின் தலை காய்ந்துபோய் வறட்டு நிலையில் இருக்கும் என்பதால் இந்த நாளில் நன்றாக எண்ணெய் தேய்த்து தலைமுடியினை கசக்கிக் குளித்து பார்ப்பவர்களின் கண்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நாளை கசப்புத்தலை நாள் என்று அழைத்தார்கள். கசப்புத்தலை நாளில் கறி எடுக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.

    அதாவது, எவ்வாறு வைகுண்ட ஏகாதசியின்போது விரதம் இருந்து மறுநாள் துவாதசி நாளில் 21 வகையான காய்கறிகளுடன் உணவினை உட்கொள்கிறோமோ, அதேபோல விதவிதமான காய்கறிகளை அந்த நாளில் உண்டு மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லி வைத்தார்கள்.

    ஆனால், இந்த சொல்வழக்கு காலப்போக்கில் மருவி, கசாப்புக்கடையில் தலைக்கறி எடுக்க வேண்டும் என்பதால் இந்த நாளுக்கு கசப்புத்தலை என்று பெயர் என்றும், இந்த நாளில் கட்டாயம் அசைவ உணவினை சாப்பிட வேண்டும் என்றும் ஒரு சிலர் மாற்றுக் கருத்தினை பரப்பி வைத்துள்ளார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று.

    கசப்புத்தலை நாளில் கட்டாயம் கறி என்று சொல்லப்படும் அசைவ உணவினைச் சாப்பிட வேண்டும் என்று நம் பெரியவர்கள் யாரும் விதிமுறையை வகுக்கவில்லை. சுபஸ்வீகரணம் என்று சாஸ்திரம் சொல்வது சுபத்தினை அதாவது, மங்களகரமானவற்றை சுப ஸ்வீகரணம் செய்துகொள்ள வேண்டும். அதாவது, ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இறந்தவரைப் பற்றிய துக்க நினைவுகளை மறந்து, அந்தநாள் முதல் வழக்கம்போல் உலக வாழ்வினில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே கசப்புத்தலை அல்லது சுபஸ்வீகரண நாள் ஆகும். அதனை விடுத்து கசப்புத்தலை நாளில் அசைவ விருந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்வது அபத்தமான வாதம்.

    • சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு நவாப் பஞ்சாங்கம், சமஸ்தான அரண்மனை பஞ்சாங்கம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    தங்கம் விலை ஏற்றம்

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்று நோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சினை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.

    விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

    எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றம் செய்து தலைமறைவாக வாழ்ந்தவர்கள் இச்சமயம் மாட்டிக் கொள்ள நேரும்.

    அரசியல் மாற்றம்

    அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்.

    புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    • 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் தங்க மூஷிக வாகனத்திலும் அருள்பாலித்தனர். காலை 9.30 மணிக்கு அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவர் புறப்பாடாகி கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினர்.

    தீர்த்தவாரி உற்சவம்

    அங்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதர் குருக்கள் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவரை எடுத்துச் சென்று திருக்குளத்தில் 3 முறை மூழ்கி தீர்த்தவாரி உற்சவத்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு நின்ற பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் புதிய புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன் செட்டியார், பூலான்குறிச்சி சுப.முத்துராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×