search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டாட பாலஸ்தீனத்துக்கு உரிமை உண்டு: சவுதி மன்னர் அறிவிப்பு
    X

    கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டாட பாலஸ்தீனத்துக்கு உரிமை உண்டு: சவுதி மன்னர் அறிவிப்பு

    ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ள நிலையில் கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டாட பாலஸ்தீனத்துக்கு உரிமை உண்டு என சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
    ரியாத்:

    ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜெருசலேம் நகரின் எதிர்காலம் என்ன? என்பது தொடர்பாக இஸ்ரேலிய தலைவர்களும், பாலஸ்தீன தலைவர்களும் நேருக்குநேர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஐ.நா. சபையின் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி திட்டத்துக்கான தூதர் நிக்கோலே மிலடெனோவ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் நீடிக்காத வரையில் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படாது என பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இன்று குறிப்பிட்டுள்ளார்.

    டிரம்ப்பின் அறிவிப்பையடுத்து எதிர் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisation
    of Islamic Cooperation (OIC) அவசர மாநாடு பாலஸ்தீனம் நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் இன்று நடைபெற்றது. 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    கடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

    இஸ்தான்புல் நகரில் இன்று நடைபெற்ற இந்த அமைப்பின் அவசர மாநாட்டில் உரையாற்றிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் இருந்து வந்துள்ளது. இனி எப்போதும் அப்படியே இருக்கும். ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலைநகராக நீடிக்காத வரையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியோ, நிரந்தரத்தன்மையோ ஏற்படாது என அறிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் ஒரு நகரத்தை பரிசாக அளிப்பதுபோல் ஜெருசலேம் நகரை யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு அளிப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த மஹ்மூத் அப்பாஸ், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதி தொடர்பாக அமெரிக்காவுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில், ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ள நிலையில் கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டாட பாலஸ்தீனத்துக்கு உரிமை உண்டு என சவுதி மன்னர் சல்மான் இன்று அறிவித்துள்ளார்.

    ஜெருசலேம் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதையே சவுதி அரேபியா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

    இது முற்றும்முழுக்க பாலஸ்தீனியர்களை சார்ந்த பிரச்சனை என்பதாலும், பாலஸ்தீனிய மக்களின் சட்டபூர்பமான உரிமைகள் என்பதாலும், கிழக்கு ஜெருசலேம் நகரை தங்கள் நாட்டின் தலைநகராக கொண்டாட பாலஸ்தீனத்துக்கு உரிமை உண்டு என மன்னர் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×