search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணு ஆயுத பொக்கிஷம் என்னும் போர்வாளை கைவிட மாட்டோம்: அமெரிக்காவுக்கு வடகொரியா சவால்
    X

    அணு ஆயுத பொக்கிஷம் என்னும் போர்வாளை கைவிட மாட்டோம்: அமெரிக்காவுக்கு வடகொரியா சவால்

    தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டு, கூடுதலான பொருளாதார தடையும் விதிக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் என்னும் போர்வாளை கைவிடப் போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது.
    பியாங்யாங்:

    உலக நாடுகளின் கண்டனம், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    புதிய பொருளாதார தடைக்கு அமெரிக்கா உரிய விலையை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்தது. போர் தொடுத்தால் அமெரிக்காவை ஏவுகணைகளால் தகர்ப்பதாகவும் மிரட்டியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அமெரிக்காவில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருவதாக கூறினார். தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரான், சூடான், சிரியா போன்ற நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் இணைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் வடகொரியா மீதான கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. வடகொரியாவுடன் பல கோடி ரூபாய்க்கு வர்த்தக தொடர்பு வைத்துள்ள ஒரு தொழிலதிபர், 13 நிறுவனங்கள் மற்றும் 20 கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை தடுத்து அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீண்டிப்பார்த்து, ஆத்திரமூட்டும் செயலாக குறிப்பிட்டுள்ள வடகொரியா, தீவிரவாதத்துக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெளிவுபட தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, வடகொரியா அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’வடகொரியாவின் தலை மீது அமெரிக்க அரசு தீவிரவாத தொப்பியை கவிழ்ப்பதைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை.

    ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கையில் இருந்து எங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமானால், பொக்கிஷமாக நாங்கள் பாதுகாத்துவரும் அணுஆயுத போர்வாளை தொடர்ந்து உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும் என்பதைதான் அமெரிக்காவின் நடவடிக்கை சுட்டிக் காட்டுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×