search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே ராஜினாமா: தொடர் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி
    X

    ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே ராஜினாமா: தொடர் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி

    ஜிம்பாப்வே நாடாளுமன்றத்தில் அதிபர் ராபர்ட் முகாபேவை தகுதிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

    ஹரரே:

    ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா-வை முகாபே பதவி நீக்கம் செய்தார்.

    இதனால், ஆளும் ஷானு - பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து, கடந்த 15-ம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, அதிபர் முகாபேவை பதவி நீக்கம் செய்து, நாடு கடத்துவது குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் ஆளும்கட்சியின் அவசர கூட்டம் ஹராரே நகரில் நேற்று நடைபெற்றது. முகாபேவை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டாக பிரசார இயக்கம் நடத்தி வந்த ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கிறிஸ் முட்ஸ்வாங்வா இந்த கூட்டத்தில் பங்கேற்றார். 



    ராபர்ட் முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை அதிபர் நியமித்தும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் கட்சித்தலைவர் மற்றும் அதிபர் பதவியிலிருந்து முகாபே ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால், ராஜினாமா செய்ய முகாபே மறுத்து விட்டதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், ஜிம்பாப்வே பாராளுமன்றம் அவசரமாக இன்று கூடியது. அப்போது அதிபர் முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை ஆளும்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்தனர். அதன் மீதான விவாதத்தில் பெரும்பாலானோர் முகாபே பதவி விலக வேண்டும் என பெரும்பாலான எம்.பி.க்கள் பேசினர்.

    இதற்கிடையே பேசிய, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், அதிபர் பதவி விலகுவதோடு பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

    அப்போது பேசிய நாடாளுமன்ற சபாநாயகர் அதிபர் முகாபே தானாக முன்வந்து பதவி விலகிவிட்டதாக அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதமும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம் முடித்துவைக்கப்பட்டது.

    முகாபே ராஜினாமா செய்ததையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய அதிபராக முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×