search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் மரினா பகுதியில் புதிய துறைமுகம்
    X

    துபாய் மரினா பகுதியில் புதிய துறைமுகம்

    துபாய் மரினா பகுதியில் 20 ஆயிரம் சிறிய படகுகளை நிறுத்தும் வகையில் புதிய துறைமுகம் கட்டுமான பணியை சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தொடங்கி வைத்தார்.
    துபாய்:

    துபாய் மரினா பகுதியில் 20 ஆயிரம் சிறிய படகுகளை நிறுத்தும் வகையில் புதிய துறைமுகம் கட்டுமான பணியை சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தொடங்கி வைத்தார்.

    இது குறித்து துபாய் துறைமுகங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    துபாயில் கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரக்கூடியது மரினா கடற்கரை ஆகும். இந்த பகுதியில் இருந்து பெரிய கப்பல்கள் மற்றும் சிறிய வகை சுற்றுலா படகுகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.



    இந்த பகுதியில் தண்ணீரில் செல்லும் மோட்டார் சைக்கிள் மற்றும் ‘ஜெட் ஸ்கை’ எனப்படும் நீரினால் உந்தப்பட்டு அந்தரத்தில் மிதக்கும் விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவை. இந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அதிக அளவில் சுற்றுலா படகுகளை இயக்கவும் துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்துள்ள புதிய 10 மேம்பாட்டு திட்டத்தின் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மரினா பகுதியில் சிறிய வகை சுற்றுலா மற்றும் தனியார் படகுகளை நிறுத்தும் வகையில் புதிய துறைமுகம் ஒன்று கட்டப்பட உள்ளது.

    இதில் 20 ஆயிரம் சிறிய படகுகளை நிறுத்தும் வகையில் வசதிகள் செய்து தரப்படும். இந்த பகுதியானது ‘மெரினா கியூப்’ எனும் சிறு தீவுப்பகுதியாக அழைக்கப்படும்.

    மினா ராஷித் மரினா என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகும் புதிய படகு துறைமுக கட்டுமான பணி தொடக்க நிகழ்ச்சி இன்று (அதாவது நேற்று) நடந்தது. சிறப்பு விருந்தினராக துபாய் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் ஷேக் மன்சூர் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பங்கேற்று அங்கு சிறு மேடையில் வைக்கப்பட்டு இருந்த சான்றிதழ் பலகையில் கையொப்பம் இட்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் சுங்கத்துறை உயர் அதிகாரிகளிடம் திட்ட பணிகள் பற்றி கேட்டு அறிந்தார்.

    நிகழ்ச்சியில் துபாய் துறைமுகங்களின் தலைவரும் டி.பி. வேர்ல்டு பொதுத்துறை நிறுவனத்தின் தலைவருமான சுல்தான் பின் சுலையம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×