search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா - தென்கொரியா இணைந்து கடற்படை பயிற்சி
    X

    கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா - தென்கொரியா இணைந்து கடற்படை பயிற்சி

    வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கடற்படை பயிற்சியை நேற்று தொடங்கி உள்ளது.
    சியோல்:

    ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் நடவடிக்கையால் அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 3-ந்தேதி வடகொரியா நடத்திய 6-வது மற்றும் மிகப்பெரிய அணு ஆயுத சோதனையும், ஜப்பானுக்கு மேலே ஏவுகணை பறக்க விட்ட சம்பவமும் சமீப காலமாக அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

    வடகொரியாவின் இத்தகையை அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கடற்படை பயிற்சியை நேற்று தொடங்கி உள்ளது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சி வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.

    இதில் அமெரிக்காவுக்கு சொந்தமான, அணுசக்தியில் இங்கும் யு.எஸ்.எஸ். ரொனால்டு ரீகன் விமானந்தாங்கி போர்க்கப்பல் உள்பட இரு நாடுகளையும் சேர்ந்த 40 கடற்படை கப்பல்கள் பங்கேற்கின்றன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இந்த கூட்டு கடற்படை பயிற்சியை ‘ஒரு போர் ஒத்திகை’ என வடகொரியா கூறியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இதற்கிடையே கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தை தணிக்க தூதரக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். வடகொரியாவுக்கு எதிராக முதல் குண்டை வீசும் வரை இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்ததாகவும் டில்லர்சன் தெரிவித்தார். 
    Next Story
    ×