search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலி
    X

    ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலி

    மியான்மர் நாட்டில் இருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச்சென்ற படகு வங்களதேசம் அருகே கடலில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    டாக்கா:

    மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது. ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதுவரை சுமார் 5 லட்சம் ரோஹிங்கியா மக்கள் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் மற்றும் ஆற்றின் வழியாக பாதுகாப்பற்ற வகையில் அளவுக்கதிகமான மக்கள் படகுகளில் செல்கின்றனர். இவர்களில் பலர் அவ்வப்போது விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுமார் 30 குழந்தைகள் உள்பட 65 பேர் மியான்மரில் இருந்து வங்காளதேசத்துக்கு வங்காள விரிகுடா வழியாக தப்பிச் சென்றபோது வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தின் அருகேயுள்ள ஷா போரிர் டிவிப் கடல் பகுதியில் அந்த படகு இன்று கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக வங்காளதேச கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து மியான்மரில் இருந்து வங்காளதேசத்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×