search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாகூர் தொகுதி இடைத்தேர்தல் - நவாஸ் செரீப் மனைவி வெற்றி
    X

    லாகூர் தொகுதி இடைத்தேர்தல் - நவாஸ் செரீப் மனைவி வெற்றி

    பாகிஸ்தானின் லாகூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    லாகூர்:

    ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பதவி இழந்தார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலியான நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து மும்பை தாக்குதல் தீவிரவாதியும் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்தின் ஆதரவாளர் யாகூப் ஷேக் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். முன்னாள் கிரிக்கெட் விரர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த யாஸ்மின் ரசீதும் இத்தேர்தலில் போட்டியிட்டார்.

    இந்த நிலையில் தீவிரவாதி சயீத்தின் ஆதரவு வேட்பாளர் யாகூப் ஷேக்குக்கு பாகிஸ்தான் ராணுவம் மறைமுக ஆதரவு தெரிவித்தது. இதன் மூலம் தீவிரவாதி சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக் வெற்றி பெற சிறிதளவு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற தேர்தலில் 44 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 3,20,000க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் குல்சூம் நவாஸ், 59,413 வாக்குகள் பெற்று சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரசீத், 46,145 வாக்குகள் பெற்றார். ஹபீஸ் சயீத்தின் ஆதரவாளர் யாகூப் ஷேக்கிற்கு சுமார் 4000 வாக்குகளே கிடைத்தது.

    இந்த வெற்றி குறித்து நவாஸ் செரீப் மகள் மரியம் கூறியதாவது:-

    இந்த தொகுதி மக்கள் நவாஸ் செரீப் மீதான அன்பை வெளிகாட்டியுள்ளனர். இது எதிர்கட்சியினர் அழுவதற்கான நேரம். கடவுளுக்கு லட்சம் முறை நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தேர்தல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கும் மற்றும் அனைவருக்கும் எதிராக நடந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மக்கள் நிராகரித்துள்ளனர். நவாஸ் செரீப் தான் இன்னும் மக்களின் பிரதமர் என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இத்தேர்தலில் மோசடி நடத்திருப்பதாக ரசீத் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "சுமார் 29 ஆயிரம் போலி வாக்குகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டேன்", என கூறினார்.
    Next Story
    ×