search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவின் அடாவடி வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அரசின் விசாரணை தொடங்கியது
    X

    சீனாவின் அடாவடி வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அரசின் விசாரணை தொடங்கியது

    அமெரிக்காவின் காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் சீனா நடத்திவரும் ‘டூப்ளிகேட்’ மற்றும் ‘கோல்மால்’ வர்த்தக நடைமுறைகள் தொடர்பான உயர்மட்ட விசாரணை இன்று தொடங்கியது.
    வாஷிங்டன்:

    அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

    வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும் ராஜதந்திர முயற்சிகள் பயனற்றுப் போனதால் அந்நாட்டை மிரட்டும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 14-ம் தேதி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையிலும், சர்வதேச வர்த்தக சட்டங்களை மீறிய வகையிலும் சீனா நடத்தியுள்ள முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க நாட்டின் வர்த்தகத்துறை செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமைகளை பிறநாடுகள் திருடி பயன்படுத்துவதால் நமது நாடு ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது, பல்லாயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பும் உண்டாகிறது. நமது நாட்டில் இருந்து பலகாலமாக பிறநாடுகள் செய்துவரும் இந்த சுரண்டல்களுக்கு எதிராக நாம் இதுவரை எதுவுமே செய்ததில்லை.

    எனவே, நமது தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையை களவாடி, சீனா செய்துவரும் வர்த்தகங்கள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு இன்று நான் உத்தரவிட்டுள்ளேன். அமெரிக்காவின் அதிபராக நமது நாட்டின் தொழிலாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையை பாதுகாக்க வேண்டியது எனது கடமையாகவும், பொறுப்பாகவும் உள்ளது.

    மேலும், நமது நாட்டின் வர்த்தக முத்திரை சட்டங்கள், காப்பிரைட் சட்டங்கள், வர்த்தக ரகசியங்கள், அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் போன்றவை நமது நாட்டின் வளங்கள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடையவையாகும். இவற்றை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். நாட்டை வலிமை மிக்கதாக்கும் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், படைப்புகள் ஆகியவற்றை பாதுகாப்பதுடன் நமது தொழிலாளர்களின் நலன்களையும் நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது என இந்த புதிய உத்தரவுக்கான கோப்பில் கையொப்பமிட்ட பின்னர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.  

    டிரம்ப்பின் இந்த உத்தரவு தொடர்பான செய்திகள் வெளியானதும் சீன நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சகம் உடனடியாக கண்டன அறிக்கை வெளியிட்டது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக சட்டங்கள் தொடர்பான உண்மைகளை புறக்கணிக்கும் வகையில் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் சீனா கைகட்டிக் கொண்டு மவுனமாக இருக்க முடியாது, எங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சீன வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

    அமெரிக்கா - சீனா இடையே ஆண்டுதோறும் சுமார் 65 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுவரும் நிலையில், டிரம்ப்பின் உத்தரவுப்படி, சீனாவின் வர்த்தக நடைமுறைகள் தொடர்பான உயர்மட்ட விசாரணை இன்று தொடங்கியதாக அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ராபர்ட் லைட்டிசர் இன்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராபர்ட் லைட்டிசர், ‘அதிபரின் உத்தரவு தொடர்பாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசுசார்ந்த நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், சீனாவின் வர்த்தகமுறை தொடர்பான சில சிக்கலான விவகாரங்களில் தீவிர விசாரணை நடத்த வேண்டிய முகாந்திரம் ஏற்பட்டுள்ளது.



    எனவே, 1974-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின்கீழ் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் வர்த்தகமுறை தொடர்பான விசாரணையை எனது தலைமையிலான குழு இன்றிலிருந்து தொடங்கி விட்டதாக அதிபர் டிரம்ப்பிடம் நான் தெரிவித்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×