search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு - 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு
    X

    நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு - 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு

    நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து சுற்றுலா சென்ற சுமார் 200 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக தெரியவந்துள்ளது.
    காத்மாண்டு:

    நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 21 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. ரப்தி மற்றும் புதிரப்தி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இங்குள்ள ஜாப்பா, மோராங், சன்சாரி, சப்ட்டாரி, சிராஹா, ரவுட்டாஹட், பன்க்கே, பர்டியா, டாங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளநீர் அதிகமாக சூழ்ந்துள்ளது. மோராங் மாவட்டத்தில் உள்ள பிராட்நகர் விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள சுமார் ஆயிரம் வீடுகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

    வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாக நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 49 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற சுமார் 200 பேர் சிட்வான் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தை சேர்ந்த சுமார் 200 பேர், இந்தியாவை சேர்ந்த சுமார் 200 பேர் மற்றும் இதர வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 200 பேர் என சுமார் 600 சுற்றுலா பயணிகள் சிட்வான் மாவட்டத்தில் உள்ள சவுராஹா என்ற சுற்றுலாத்தலத்தை சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவிப்பதாக காத்மாண்டுவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×