search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் உள்ள அத்தனை பேரும் உத்தமர் தானா?: நவாஸ் ஷெரிப் கேள்வி
    X

    பாகிஸ்தானில் உள்ள அத்தனை பேரும் உத்தமர் தானா?: நவாஸ் ஷெரிப் கேள்வி

    ஊழல் வழக்கில் சிக்கி பதவியை இழந்திருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், பாகிஸ்தானில் உள்ளவர்கள் அனைவரும் உத்தமர்கள் தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.

    இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதேபோல் நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கமானவர்கள் அனைவரிடமும் விசாரணை முடிந்தது.

    இந்நிலையில், சிறப்பு கூட்டு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் விலக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    இதையடுத்து, அவர் பதவியை விட்டு விலகினார். பாகிஸ்தானின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் சார்பில் மேலிட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கலந்து கொண்டார். நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரிப்பை அடுத்த பிரதமராக நியமிக்க ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டது.

    அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தலைவர்கள் மத்தியில் நவாஸ் ஷெரிப் ஆவேசமாக பேசினார்.

    உங்கள் தலைவர் (நவாஸ் ஷெரிப்) மீது எவ்வித ஊழல் கரையும் இல்லை என்பதை எண்ணி நீங்கள் பெருமைப்பட வேண்டும். நான் யாரிடம் இருந்தும் அன்பளிப்புகளோ, லஞ்சமோ பெற்றதில்லை. என் கொள்கைகளில் என்றுமே சமரசம் செய்து கொண்டதில்லை.

    எனது குடும்பம் மட்டும் ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும் என்றால் எப்படி? இந்த நாட்டில் உள்ள அனைவருமே வாய்மையாளர்களாகவும், நேர்மையாளர்களாகவும், உத்தமர்களாகவும் இருக்கிறார்களா?

    நான் தவறு செய்திருந்தாலோ, இந்த நாட்டில் இருந்து எனக்கு சொந்தமில்லாததை எடுத்திருந்தாலோ எனக்கு குற்ற உணர்வு இருக்கும். எனது பணிக்காக நான் சம்பளம்கூட வாங்கியதில்லை. எனது மனசாட்சி தெளிவாக இருக்கிறது என்று நவாஸ் ஷெரிப் கூறினார்.
    Next Story
    ×