search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் சினிமா தியேட்டர் - சீனாவின் சில்லுண்டித்தனம்
    X

    சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் சினிமா தியேட்டர் - சீனாவின் சில்லுண்டித்தனம்

    வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடிவரும் தென் சீனக் கடல் பகுதியில் சினிமா தியேட்டர் திறந்துள்ள சீனாவின் அடாவடித்தனம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பீஜிங்:

    தென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா தென்சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.

    சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்தும், ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான சரக்குகள் பரிமாற்றமும் இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    ஆனால், ‘‘தென் சீனக்கடலில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது’’ என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. கடந்த 2012-ம் ஆண்டில் இந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதிக்குட்பட்ட ஒரு தீவில் சான்ஷா என்ற மாதிரி நகரத்தை சீனா உருவாக்கியது.

    இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக திஹேக் நகரில் ஐ.நா. சட்டதிட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான மத்தியஸ்தம் செய்வதற்கான நிரந்தர தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ், 2013–ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு வெளியானது.

    தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. ஆனால், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாக கூறிவிட்டது.

    இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் சில ஆயிரம் மக்கள்கூட வசிக்காத ஒரு தீவில் சீன அரசு சமீபத்தில் சினிமா தியேட்டர் ஒன்றை திறந்துள்ளது.

    சாந்தா என்லாங் சினிமா என பெயரிடப்பட்டுள்ள இந்த தியேட்டரில் அதிநவீன டிஜிட்டல் ஒலி அமைப்புடன், 3-டி திரையில் 4-டி புரொஜெக்டர்கள் மூலம் படம் காட்டப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இந்த தியேட்டரில் ரிலீசான ‘தி எட்டர்னிட்டி ஆஃப் கியாவோ யுலே’ என்ற படத்தை படத்தை உள்ளூர்வாசிகளில் சுமார் 200 பேர் மிகுந்த ஆரவாரத்துடன் பார்த்து ரசித்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தினந்தோறும் இங்கு வெவ்வேறு படங்கள் திரையிடப்படும். ராணுவ வீரர்களும் உள்ளூர்வாசிகளும் படங்களை பார்த்து ரசிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உட்டி ஐலான்ட் என்றழைக்கப்படும் இந்த தீவில் உள்ள சான்ஷா நகரத்தில் புதிதாக சினிமா தியேட்டரை திறந்ததன்மூலம் தென் சீனக் கடல் பகுதியில் தனது பேராதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்துவரும் சீனாவுக்கு இதே கடல் பகுதிக்கான உரிமையை தீர்ப்பாயத்தின் மூலம் பெற்றுள்ள வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் கண்டம் தெரிவித்துள்ளன.

    சினிமா தியேட்டரை அடுத்து இதே தீவில் பல்வேறு மக்கள்நல திட்டங்களை நிறைவேற்ற சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×