search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனாமா கேட் விவகாரத்தில் கூட்டுக்குழுவின் அறிக்கை கட்டுக்கதைகளின் தொகுப்பு: நவாஸ் ஷெரீப்
    X

    பனாமா கேட் விவகாரத்தில் கூட்டுக்குழுவின் அறிக்கை கட்டுக்கதைகளின் தொகுப்பு: நவாஸ் ஷெரீப்

    பனாமா கேட் விவகாரத்தில் தன் மீது அமைக்கப்பட்ட கூட்டு விசாரணைக்குழு அளித்த அறிக்கை கட்டுக்கதைகளின் தொகுப்பு என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பனாமா கேட் விவகாரத்தில் தன் மீது அமைக்கப்பட்ட கூட்டு விசாரணைக்குழு அளித்த அறிக்கை கட்டுக்கதைகளின் தொகுப்பு என  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சித்துள்ளார்.

    பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.

    இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் என அனைவரிடமும் விசாரணை முடிந்தது.

    இதைதொடர்ந்து, சிறப்பு கூட்டு புலனாய்வு குழு, தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குபதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    இந்நிலையில், நவாஸ் ஷெரீப் தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். அப்போது, பிரதமரின் பக்கம் உறுதியாக நிற்போம் என அவரது கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

    கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப், "சர்ச்சைக்குரிய கூட்டுக் குழு, சர்ச்சைக்குரிய அறிக்கையை அளித்துள்ளது. நமது எதிராளிகள் கூறி வரும் அவதூறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்தான் இந்த அறிக்கை முழுவதும் இருக்கிறது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று உச்ச நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
    Next Story
    ×