search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவைச் சேர்ப்பது குறித்து முடிவெடுக்காமல் முடிவடைந்த என்.எஸ்.ஜி மாநாடு
    X

    இந்தியாவைச் சேர்ப்பது குறித்து முடிவெடுக்காமல் முடிவடைந்த என்.எஸ்.ஜி மாநாடு

    அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி) உறுப்பினராவதற்கு இந்தியா விண்ணப்பித்தது தொடர்பாக முடிவெடுக்காமல் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாடு நிறைவடைந்தது.
    பெர்ன்:

    என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்தி வினியோக கூட்டமைப்பில் 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் சேருவதற்கு இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.  இந்தியா உறுப்பு நாடாக சேர அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் சீனா மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. என்.எஸ்.ஜி.-யில் சேர பாகிஸ்தானும் முயற்சி மேற்கொண்டுவருகிறது.

    என்.எஸ்.ஜி.-ல் இந்தியாவை சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று சீனா கூறி வருகிறது. கடந்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற என்.எஸ்.ஜி ஆண்டுக் கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதில்லை என்ற முடிவில் சீனா உள்ளிட்ட சில நாடுகள் உறுதியாக இருந்தன.

    இந்நிலையில், சுவிட்சர்லார்ந்து தலைநகர் பெர்னில் என்.எஸ்.ஜி அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  இந்தியா உள்ளிட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் தங்கள் அமைப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளதில் அடங்கியுள்ள தொழில்நுட்ப, சட்ட, அரசியல் அம்சங்கள் பற்றி விவாதித்ததாக என்எஸ்ஜி தெரிவித்துள்ளது. எனினும், இந்தியாவை என்எஸ்ஜி-யில் உறுப்பினராகச் சேர்ப்பது குறித்து மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

    இதனால், இந்தியாவின் என்எஸ்ஜி உறுப்பினர் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. என்எஸ்ஜி-யில் உறுப்பினர்களாக உள்ள 48 நாடுகளும் ஆதரித்தால் மட்டும் புதிதாக ஒரு நாட்டை உறுப்பினராக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×