search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும் - எப்.பி.ஐ தலைவர்
    X

    ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும் - எப்.பி.ஐ தலைவர்

    அதிபர் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு எப்.பி.ஐ அமைப்பும் ஒரு காரணம் என ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்த நிலையில், ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் அது பேரழிவாக இருக்கும் என எப்.பி.ஐ தலைவர் பதிலளித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்-ம் போட்டியிட்டனர். முன்னர் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது ஹிலாரி தனது தனிப்பட்ட வேலைக்காக அரசு இ-மெயிலை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற பழைய குற்றச்சாட்டை எப்.பி.ஐ அமைப்பு தோண்டியெடுத்து அம்பலப்படுத்தியது. இதனால், இக்குற்றச்சாட்டு தேர்தல் சமயத்தில் அவருக்கு பின்னடைவை கொடுத்தது.

    பின்னர், தேர்தலில் தோல்வியை தழுவிய ஹிலாரி கிளிண்டன், தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியே இருந்தார். 5 மாதங்களுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹிலாரி மீண்டும் அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தார்.

    தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக எதை கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹிலாரி ,”என் பிரசாரத்தில் குறைகள் இருந்தாலும், அதிபர் தேர்தலில் நான் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால், எப்.பி.ஐ திடீர் அறிவிப்பு, விக்கிலீக்ஸ் மற்றும் ரஷ்ய தலையீடு ஆகியவையே என் வெற்றிக்கு பாதகம் விளைவித்தன” என குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், ஹிலாரியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள எப்.பி.ஐ தலைவர் ஜேம்ஸ் கோமே ,” அந்த நேரத்தில் ஹிலாரி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க எடுத்த முடிவு கடினமானது. ஆனாலும், அது ஒரு சரியான முடிவு. அதை அப்போது மறைத்து வைப்பது பேரழிவிற்கு சமமானது. இதனால் யாருடைய அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதை என்னால் அப்போது பரிசீலிக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×