search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விண்வெளியிலும் வல்லரசு?: நிரந்தர ஆய்வு மையம் அமைக்க தயாராகும் சீனா
    X

    விண்வெளியிலும் வல்லரசு?: நிரந்தர ஆய்வு மையம் அமைக்க தயாராகும் சீனா

    மக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக இருந்துவரும் சீனா வரும் 2019-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் பணியை தொடங்க தீர்மானித்துள்ளது.
    பீஜிங்:

    உலகின் அதிகமான மக்கள்தொகையை கொண்ட பெரிய நாடாக அறியப்படும் சீனா, ஆயுத பலத்திலும், விண்வெளித்துறையிலும் இந்தியாவை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

    இந்நிலையில், ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

    இதனையடுத்து, ‘ஷென்ஸோ 11’ என்ற விண்கலத்தில் இரண்டு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி ‘டியாங்காங் 2’ விண்கலத்துடன் ‘ஷெங்ஸோ 11’ இணைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட திட்டத்தை சீனா மேற்கொண்டது.

    இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி காலை 7.30 மணியளவில் ‘ஷெங்ஸோ 11’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.



    வடக்கு சீனாவில் கோபி பாலைவனத்தை ஒட்டியுள்ள ஜிக்குவான் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விண்கலத்தில் சீன விண்வெளி ஆய்வாளர்களான ஜிங் ஹெய்பெங்(50), சென் டாங்(37) ஆகியோர் சென்றனர். அவர்கள் இருவரும் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வுகளை அடுத்து, வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

    பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் இந்த ஆய்வு மையம் நிர்மாணிக்கப்பட்டால், ரஷியாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை நிலைநாட்டிய பெருமை சீனாவைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்த ஆய்வு நிலையத்துக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்வதற்காக சரக்கு விண்கலம் ஒன்றை சீனா தயாரித்தது. ‘டியான்ஸோ-1’ (Tianzhou-1) என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், திரவ நிலையில் இருக்கும் பிராண வாயு மற்றும் மண் எண்ணெயினால் இயங்கும் (Long March-7 Y2 carrier rocket) ராக்கெட் மூலம் இம்மாதம் 20-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

    10.6 மீட்டர் நீளத்தில் குழாய் வடிவில் உள்ள இந்த விண்கலம், செயற்கைக்கோள் உள்பட சுமார் 6 டன் எடையுள்ள சரக்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் செல்லும் ஆற்றல் கொண்டதாகும். மேலும், விண்வெளியில் தங்கிருக்கும்போது புவி ஈர்ப்பு விசையின் எதிர்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிநவீன சாதனங்களும் இதில் அடங்கியுள்ளன.



    தற்போது விண்வெளியில் சுற்றியவாறு பல்வேறு கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ‘டியாங்காங் 2’ விண்கலத்துடன் ‘டியான்ஸோ-1’ விண்கலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து வரும் 2019-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் பணியை தொடங்க சீன விண்வெளித்துறை தீர்மானித்துள்ளது.

    விண்வெளியில் மனிதர்கள் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக நிரந்தர ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகள் வரும் 2019-ம் ஆண்டில் தொடங்கி, திட்டமிட்டபடி 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்த திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்குமாறு  அதிபர் க்சி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், ‘சீன மக்களின் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் நிறைவேற்றும் விதமாக விண்வெளித்துறையில் மிகப்பெரிய சக்தியாக நாம் உருவெடுப்போம்’ என்று சீன விண்வெளித்துறை ஆய்வு மையத்தின் இந்த திட்டத்துக்கான மேற்பார்வையாளர் வாங் ஸாவ்யாவ் இன்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×