search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம்: டிரம்ப்புக்கு சீன அதிபர் ஆலோசனை
    X

    வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம்: டிரம்ப்புக்கு சீன அதிபர் ஆலோசனை

    கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிவரும் வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சீன அதிபர் க்சி ஜின்பிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
    பீஜிங்:

    கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

    அந்தநாடு தொடர்ந்து 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டையும் வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்நாடு இதுவரை ஐந்து முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

    இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

    இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.



    இந்நிலையில், ஒன்றாக இருந்த கொரியாவில் இருந்து வடகொரியா என்ற தனிநாட்டை பிரித்து உருவாக்கிய (மறைந்த) கிம் யோ சங்-கின் 105-வது பிறந்தநாள் விழாவையொட்டி வடகொரியா தலைநகரான பியாங்யாங் நகரில் சமீபத்தில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.



    வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சக்தி வாய்ந்த போர் ஆயுதங்கள், ராணுவ டாங்கிகள் மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன ஏவுகணைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இந்த பிரமாண்ட அணிவகுப்பு அந்நாட்டு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகியது.

    இந்த அணிவகுப்பை தொடங்கி வைத்து உரையாற்றிய அந்நாட்டின் இரண்டாம் நிலை தலைமை அதிகாரியும், ஆளும்கட்சி தலைவரும், ராணுவ தளபதியுமான சோய் ரியாங்-ஹே, ‘வடகொரியா மீது தொடுக்கப்படும் நேரிடையான எவ்விதப் போரையும் நேரடியாக சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்பதை இன்றைய அணிவகுப்பு உறுதிப்படுத்தும். நம்மீது நடத்தப்படும் அணு ஆயுத தாக்குதலுக்கும், நமக்கே உரிய பாணியில் சரியான பதிலடி கொடுப்போம்’ என்று குறிப்பிட்டார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹார்ல் வின்சன் என்னும் மிகப்பெரிய போர் கப்பலை வட கொரியா கடல் பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

    வட கொரியாவின் மக்கள் ராணுவம் அமைக்கப்பட்ட 85-வது ஆண்டு தினத்தை வரும் 25-ம் தேதி வெகு எழுச்சியாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, அருகாமையில் இருக்கும் ஜப்பான் மீது வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், வட கொரியா நாட்டின் அருகே கொரிய தீபகற்பத்துக்கு உட்பட்ட கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹார்ல் வின்சன் போர் கப்பல் மற்றும் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான சமிடரே, ஆஷிகரா ஆகிய போர் கப்பல்களில் இருந்தபடி இருநாட்டு வீரர்களும் நேற்று போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். வட கொரியாவின் அண்டை நாடாகவும் நேரடி பகை நாடாகவும் இருந்துவரும் தென் கொரியாவும் இந்த கூட்டுப் போர் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இருப்பினும், வடகொரியா அடங்குவதாக இல்லை. அந்த நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு சொந்தமான நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் ‘அணுசக்தியால் இயங்கக்கூடிய அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை நமது புரட்சிகர படைகள் ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயாராக உள்ளது’ என்று மிரட்டியுள்ளது.

    இதற்கிடையே, கிம் என்ற புனைப்பெயரால் அறியப்படுகிற கொரிய வம்சாவளி அமெரிக்கரை வடகொரியா கைது செய்துள்ளது. இதனால், வட கொரியா - அமெரிக்கா இடையிலான பனிப்போர் நாளுக்குநாள் வலுத்து கொண்டே வருகிறது.

    இது இவ்வாறிருக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சீன அதிபர் க்சி ஜின்பிங், ‘கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிவரும் வடகொரியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என ஆலோசனை தெரிவித்ததாக சீன அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

    Next Story
    ×