search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொது வாக்கெடுப்பில் தோல்வி - இத்தாலி பிரதமர் ராஜினாமா
    X

    பொது வாக்கெடுப்பில் தோல்வி - இத்தாலி பிரதமர் ராஜினாமா

    இத்தாலி நாட்டில் புதிய சட்டதிருத்தத்தின் மீது நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிரதமர் மட்டியோ ரென்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
    ரோம்:

    இத்தாலி நாட்டில் ஆட்சி இயந்திரத்தின் தலைவரான பிரதமரை தங்களது ஓட்டுரிமையின் மூலம் நீக்கம் செய்யும் அதிகாரம் பாராளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

    5 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யாமல், இவ்வாறு அவ்வப்போது ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டதால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இத்தாலியில் 63 முறை ஆட்சிக் கவிழ்ப்புகளும், புதிய அரசுகள் தேர்வும் நடைபெற்றுள்ளது. இதனால், ஸ்திரமான ஒரு அரசு அமையாமல் போனதுடன், முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்த திட்டங்களும், கொள்கையளவிலான சில பொது சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தப்படாமல், பாதியிலேயே முடங்கிப் போயின.

    இதன்விளைவாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்தநிலையை சந்தித்து வருவதுடன், வேலையில்லா திண்டாட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து பிரதமரை தங்களது ஓட்டுரிமையின் மூலம் நீக்கம் செய்ய பாராளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்குவது என தற்போதைய இத்தாலி பிரதமரான மட்டியோ ரென்சி தீர்மானித்தார்.

    இதற்காக, இத்தாலி நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தத்துக்கு மக்களின் ஆதரவு என்ன? என்பது தொடர்பாக நாடு முழுவதும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதனையடுத்து, அரசியலமைப்பு திருத்த சட்டம் தொடர்பாக வரும் 4-ம் தேதி பொதுவாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலி பாராளுமன்றத்துக்கு வரும் 2018-ம் ஆண்டு பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பொதுவாக்கெடுப்பின் முடிவு எவ்வாறு அமையும்? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இவ்விவகாரத்தில் மக்களின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிவதற்கான பொது வாக்கெடுப்பு நேற்று காலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி 11 மணி) தொடங்கியது. இரவு 11 மணிவரை நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் அந்நாட்டின் வாக்குரிமை பெற்ற சுமார் 5.1 மக்களில் 70 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.

    பதிவான வாக்குகளில் சுமார் 59.5 சதவீதம் வாக்குகள் இந்த சட்டதிருத்தத்துக்கு எதிராக ‘கூடாது’ என்று பதிவாகி இருந்தன. வெறும் 11.5 சதவீதம் வாக்குகளே பிரதமரின் முடிவுக்கு சாதகமாக அமைந்திருந்தன.

    இதையடுத்து, இந்த பொது வாக்கெடுப்பில் பிரதமர் மட்டியோ ரென்சியின் திட்டம் தோல்வியை தழுவியது. இதுதொடர்பான முடிவுகள் வெளியானதும், தனது பதவியை ராஜினாமா செய்வதாக ரென்சி அறிவித்துள்ளார்.

    இத்தாலி அதிபரை இன்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கப் போவதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து, நாட்டின் ஆட்சி ஸ்தம்பித்து போய்விடாதபடி பாதுகாக்க காபந்து அரசின் தலைவராக நீடிக்கும்படி ரென்சியை அதிபர் செர்ஜியோ மாட்டரெல்லா கேட்டுக் கொள்வார் என கருதப்படுகிறது.

    இதற்கு ரென்சி மறுத்துவிட்டால் வரும் 2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வரை புதிய பிரதமராக தற்போதையை நிதி மந்திரி பியெர் கர்லோ படோவன் பதவி ஏற்பார் என தெரிகிறது.
    Next Story
    ×