search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் போர்நிறுத்த முயற்சி தோல்வி: அலெப்போ நகருக்குள் அரசுப் படைகள் நுழைந்தன
    X

    சிரியாவில் போர்நிறுத்த முயற்சி தோல்வி: அலெப்போ நகருக்குள் அரசுப் படைகள் நுழைந்தன

    சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அரசுப் படைகள் அங்கு நுழைந்துள்ளன.
    டமாஸ்கஸ்:

    உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் முன்முயற்சியால் சமீபத்தில் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதே அங்குள்ள போராளிகள் முகாம்மீது சிரியா மற்றும் ரஷியா நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் பலர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

    சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக அங்குள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற லாரிகள் மீதும் நிவாரணப் பொருட்களை சேமித்து வைத்த கிட்டங்கி மீதும் விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷியா உள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்கா - ரஷியா வெளியுறவுத்துறை மந்திரிகளுக்கு இடையில் நியூயார்க் நகரில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இருபதுக்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

    சிரியாவுக்குள் ரஷியாவின் போர் விமானங்கள் பறப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என இந்த கூட்டத்தின்போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வலியுறுத்தினார். இதை ஏற்றுக்கொள்ள ரஷிய நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கேய் லாவ்ராவ் மறுத்து விட்டார்.

    இதனால், எவ்வித முன்னேற்றமும் இன்றி இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதற்கிடையே, சிரியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றான அலெப்போ நகரை கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து போராளிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அரசுப் படைகள் அங்கு நுழைந்துள்ளன.

    ராணுவ டாங்கிகள் துணையுடன் காலாட்படையினர் அலெப்போ நகரை நோக்கி முன்னேறி சென்றுகொண்டுள்ள நிலையில் இங்குள்ள பஸ்தான் அல் - கஸ்ர் மாவட்டத்தில் உள்ள போராளிகளின் முகாம்கள் மீது சிரியா விமானப்படைகளும் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

    இந்த அதிரடி தாக்குதலால் இங்குள்ள ஒரு முக்கிய தெருவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும், சுமார் 20 பேர் பலியானதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    Next Story
    ×