search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 24-ந்தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 3 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 1,500 பேர் வரை பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

    தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கும் இப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், முதற்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளைக்கு மீண்டும் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர்.
    • தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் துணிச்சலாக அவர் எடுத்து வைத்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசில் புயலை கிளப்பி இருக்கும் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (நேற்று) வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அவர் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவலை 1-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில் "கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்" என்ற புதிய பிரசாரத்தை அவரது மனைவி சுனிதா தொடங்கி உள்ளார்.

    கெஜ்ரிவால் கைதுக்குப்பிறகு 3வது முறையாக காணொலியில் உரையாற்றிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறுகையில்,

    * என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர்.

    * தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் துணிச்சலாக அவர் எடுத்து வைத்தார்.

    * 8297324624 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கெஜ்ரிவாலுக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    • 2017-ல் ஏர் இந்தியா குத்தகை தொடர்பாக முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு.
    • பிரபுல் பட்டேலுக்கு எதிராக குற்றச்சாட்டில் தவறு செய்ததற்கான ஆதாராங்கள் இல்லை.

    சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் பிரபுல் பட்டேல். இவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்தார். அப்போது ஏர்இந்தியா கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தபோது, ஏர்இந்தியா விமானங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் ஏர்இந்தியாவுக்கு கடும் நிதி இழப்பு ஏற்பட்டது. தனியார் நபர்கள் அதிக லாபம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு பிரபுல் பட்டேல் மீது வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

    இந்த நிலையில்தான் பிரபுல் பட்டேல் தவறாக செயல்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இதனால் வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதா? அல்லது விசாரணையை தொடர உத்தரவிடுமா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரியும்போது பிரபுல் பட்டேல் அஜித் பவார் பக்கம் சென்றார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் வசம் ஆனது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசில் பங்கேற்றுள்ளது.

    மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பிடித்துள்ளது. பா.ஜனதா பக்கம் வந்த உடன் சிபிஐ வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

    ஏற்கனவே பா.ஜனதாவை எதிர்க்கட்சிகள் வாஷிங் மெஷின் என்று அழைத்து வருகின்றன. கரைபடிந்தவர்கள் பா.ஜனதா பக்கம் சென்ற பிறகு தூய்மையடைந்து விடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    • கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கோவை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிங்காநல்லூரில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராக உள்ளது. கோவை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு எல்லாம் முன்னுதாரணமாக சிறந்த மாநகராட்சியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி விட்டது.

    கோவை என்றதுமே சிறுவாணி தண்ணீர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று அப்படிப்பட்ட கோவை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 20 நாளைக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒன்றும் இல்லை.

    கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பினை பெற்று வந்தனர். தற்போது சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளது.

    இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் பல சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தையும் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து உயர்த்தி விட்டன. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வந்த பலரும் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. ஆனால் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    இந்த நிலைமை எல்லாம் மாற கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும்.
    • கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும்.

    கோவை:

    கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதி மக்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் வழியாக சிறப்பு ரெயில் ஒன்றும், சென்னை வழியாக மற்றொரு சிறப்பு ரெயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் வருகிற 31-ந்தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

    அதேபோல் ரெயில் 06049 ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும். அந்தவகையில் கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும். சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    ரெயில் எண் 06043 தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 31-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 1.57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

    06044 கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில் கொச்சுவேலியில் இருந்து 1-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய இடங்களில் நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
    • நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம்-நகை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் உரிய ஆவணங்கள் இருந்தால் விடுவித்து விடுவதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    பறக்கும் படை வாகன சோதனையில் இதுவரை ரூ.80 கோடி அளவுக்கு நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பிடிபட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை அங்கு ஒப்படைத்து விடுகின்றனர்.

    இதனால் பணம் நகை பொருட்களை வியாபாரிகள் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்போது தேர்தல் நெருங்க நெருங்க சோதனைகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த 2 பேரிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்கு வதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறியும் விடவில்லை. பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர்.

    அடுத்தடுத்து சோதனை நடைபெறும் நிலையில் வியாபாரிகளும், நகை கடைக்காரர்களும் பணம் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுபற்றி தேர்தல் கமிஷனில் முறையிட்டும் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என வியாபாரிகள் ஆதங்கப்படுகின்றனர். கொள்முதல் செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கடைக்கு கொண்டு வர முடியாததால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதாகவும் வியாாரிகள் கூறி வருகின்றனர்.

    பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இதுபற்றி மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தவைர் ஜெயந்தி லால் சலானியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதிப்பதால் பொதுமக்கள் நகை வாங்க வருவதற்கு பயந்து கடைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதற்கு சிறிய நகரங்களில் இருந்து பெரிய நகரங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்த மாதம் தொடர்ந்து நகை விலை உயர்ந்து கொண்டு வருவதால் எப்படியாவது கையில் உள்ள பணத்தை கொண்டு நகை வாங்கி விடலாம் என ஒவ்வொரு குடும்பத்தினரும் நினைக்கின்றனர். ஆனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் நகை கடைக்கு வருவதை தவிர்க்கின்றனர்.


    இப்போது உள்ள விலைவாசியில் ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் சேர்த்து ரூ.55 ஆயிரம் ஆகிவிடும். எனவே தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள ரூ.50 ஆயிரம் என்ற அளவை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம்.

    மே 10-ந்தேதி அட்சய திருதியை நாள் நெருங்கி வருவதால் நகைக் கடைக்காரர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் நகை பட்டறையில் இருந்து நகைகளை கடைகளுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    அட்சய திருதியை ஆர்டர், திருமண நகை ஆர்டர் உள்ள நிலையில் நிறைய நகைகளை கொண்டு செல்லும் போது பறக்கும் படையினர் பிடித்து விட்டால் உடனே அதை வாங்க முடியாது.

    2 மாதம் கழித்துதான் பெற முடியும். தங்கம் விலை தினமும் ஏறி வரும் நலையில் 2 மாதம் போலீசாரிடம் நகை இருந்தால் விலை ஏற்றத்தால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடும்.

    எனவே நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நகைக் கடைகளில் கூட்டம் குறைந்துவிட்டது. வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதால் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று 1000 கிலோ அளவுக்கு நகை வியாபாரம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்த அளவு வியாபாரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

    வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்ததால் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்பு அவர் தரப்பு விளக்கங்கள் பெறப்பட்ட பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது பெயரிலான 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

    சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, கோவையில் களம் இறங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கன்னியாகுமரியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினம் என்பதால் அரசு விடுமுறையாகும். இதனால் வேட்பு மனுக்களை இன்று திரும்பப் பெற முடியாது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களைத் திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு சின்னம் பெறாத கட்சிகள், சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நாளை மாலை நிறைவடைந்ததும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தை ம.தி.மு.க.வும் கேட்டு உள்ளன.

    வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் 18 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

    1. திருவள்ளூர் (தனி)-14

    2. வடசென்னை-49

    3. தென்சென்னை-53

    4. மத்தியசென்னை-32

    5. ஸ்ரீபெரும்புதூர்-32

    6. காஞ்சிபுரம் (தனி)-13

    7. அரக்கோணம்-29

    8. வேலூர்-37

    9. கிருஷ்ணகிரி-34

    10. தர்மபுரி-25

    11. திருவண்ணாமலை-37

    12. ஆரணி-32

    13. விழுப்புரம் (தனி)-18

    14. கள்ளக்குறிச்சி-21

    15. சேலம்-27

    16. நாமக்கல்-48

    17. ஈரோடு-47

    18. திருப்பூர்-16

    19. நீலகிரி (தனி)-16

    20. கோவை-41

    21. பொள்ளாச்சி-18

    22. திண்டுக்கல்-18

    23. கரூர்-56

    24. திருச்சி-38

    25. பெரம்பலூர்-23

    26. கடலூர்-19

    27. சிதம்பரம் (தனி)-18

    28. மயிலாடுதுறை-17

    29. நாகப்பட்டினம் (தனி)-9

    30. தஞ்சாவூர்-13

    31. சிவகங்கை-21

    32. மதுரை-21

    33. தேனி-29

    34. விருதுநகர்-27

    35. ராமநாதபுரம்-27

    36. தூத்துக்குடி-31

    37. தென்காசி (தனி)-26

    38. திருநெல்வேலி-26

    39. கன்னியாகுமரி-27.

    • முக்தார் அன்சாரி மரணத்தை தொடர்ந்து அவரது வீடு மற்றும் சில நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • முக்தார் அன்சாரியின் மனைவி மற்றும் மகன்கள் முக்தார் அன்சாரி சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல தாதாவாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் முக்தார் அன்சாரி. இவர் மீது அந்த மாநிலத்தில் 63 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 15 வழக்குகள் கொலை வழக்குகள் ஆகும்.

    உத்தர பிரதேச வரலாற்றில் மிகப்பெரிய தாதாவாக கருதப்பட்ட இவர் 1963-ம் ஆண்டு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். இவரது மூதாதையர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். ஆனால் தவறான நபர்களுடன் சேர்ந்ததால் முக்தார் அன்சாரி தாதாவாக மாறினார்.

    1980-ல் இவர் ஒரு தாதா கும்பலில் சேர்ந்து தனிப்பெரும் ரவுடியாக உலா வந்தார். மிக குறுகிய காலத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல்களில் இவர் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கினார். 1990-ல் இவருக்கு என்று தனி ரவுடி படை உருவாகியது.

    உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் இவரது பெயரை கேட்டாலே பயப்படும் அளவுக்கு அவர் அந்த மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகளில் கலக்கி வந்தார். காசிப்பூர், வாரணாசி, ஜான்பூர், மவு ஆகிய மாவட்டங்களில் இவரது அட்டகாசம் மிக கடுமையாக இருந்தது.

    இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் 8 வழக்குகளில் இவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக இவர் அடிக்கடி ஜெயிலுக்கு செல்ல நேரிட்டது. அரசியல்வாதிகளின் தொடர்பு ஏற்பட்டதால் பல வழக்குகளில் தப்பி வந்தார்.

    குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அவர் அரசியலில் ஈடுபட தொடங்கினார். மவு தொகுதியில் அவருக்கு செல்வாக்கு இருந்ததால் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் இருந்து அவர் 5 தடவை உத்தர பிரதேச சட்டசபைக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதால் பஞ்சாபிலும், உத்தர பிரதேசத்திலும் ஜெயிலுக்குள் இருக்க வேண்டி இருந்தது. ஜெயிலுக்குள் இருந்தபடியே அவர் தனது கூலிப்படையை இயக்கிக் கொண்டே அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் ஒரு தண்டனைக்காக அவர் பண்டா ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒரு மாதமாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து பண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் அவர் உடல்நிலை மோசமானது. அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணித்து வந்தனர்.

    நேற்று இரவு 8.45 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது கூலிப்படை ரவுடிகளும் பீதிக்குள்ளானார்கள். முக்தார் அன்சாரி மரணத்தை தொடர்ந்து அவரது வீடு மற்றும் சில நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே முக்தார் அன்சாரியின் மனைவி மற்றும் மகன்கள் முக்தார் அன்சாரி சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். முக்தார் அன்சாரிக்கு ஜெயிலில் விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.

    ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

    • நாங்களும் அ.தி.மு.க.வை ஒரு போட்டியாக கருதவில்லை.
    • நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான எல்.முருகன், ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் யார் பெரிய கட்சி என்பது ஜூன் 4-ந்தேதி தெரிய வரும். நாங்களும் அ.தி.மு.க.வை ஒரு போட்டியாக கருதவில்லை. பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சி ஜூன் 4-ந் தேதி தெரிய வரும். அன்று எந்த கட்சி காணாமல் போகிறது என்பதும் தெரியவரும்.

    நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. களத்தில் இல்லை. பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. சமூக நீதிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு போலி சமூக நீதி பேசுபவர் தான் மு.க. ஸ்டாலின். பா.ஜ.க. சார்பில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் துணை முதல்-மந்திரிகளாவும், முதல்-மந்திரிகளாகவும் உள்ளனர். சமூக நீதியை பிரதமர் மோடி நிலைநாட்டி வருகிறார். தி.மு.க.வில் அமைச்சர்களாக உள்ள பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 3 பேர். கடைசி இடங்களில் உள்ளனர். பெட்ரோல், விவசாய கடன் தள்ளுபடி என எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. பிரதமர் தர்மத்தின் பக்கமும், ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும் இருக்கிறார்கள். நீலகிரியில் இந்த தேர்தலை 2 ஜியா, மோடி ஜியா என்று என்ற கேள்வியுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • AI டூல்ஸ் மூலம் பல்வேறு டீப்ஃபேக் உருவாக்கப்படுகிறது.
    • தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடி உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உடன் ஏய் (AI) முதல் டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது வரையிலான பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடினார்.

    உரையாடல் முடிவில் பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ் ஊட்டசத்து தொடர்பான புத்தகங்களை பரிசாத வழங்கினார். அதற்குப் பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை பரிசாக வழங்கினார்.

    உள்நாட்டிற்கு தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் "Vocal for Local" என்பதை வலியுறுத்தும் வகையில் பரிசு பொருட்கள் அமைந்திருந்தது.

    அதில் ஒன்று தூத்துக்குடி முத்து ஆகும். தூத்துக்குடி முத்தை பில் கேட்ஸ்க்கு பரிசளித்த பிரதமர், இது தூத்துக்குடி முத்து. தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் முத்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இங்குள்ள மீனவர்கள் இந்த தொழில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்றார்.

    இந்த உரையாடலின்போது "AI மிகவும் முக்கியமானது. சில நேரங்களில் நான் நகைச்சுவைக்காக, எங்களுடைய நாட்டில், நாங்கள் எங்களுடைய தாயாரை ஏய் (Aai) என அழைப்போம். தற்போது நான் சொல்கிறேன், குழந்தைகள் பிறக்கும்போது அவன் ஏய் (Aai) என சொல்கிறான். அதுபோன்று AI குழந்தைகள் முன்னேறிவிட்டன என்பேன்" எனத் தெரிவித்தார்.

    அவர் பில் கேட்ஸை NaMo செயலி மூலம் ஒரு செல்ஃபி எடுக்கச் சொன்னார், பின்னர் அதை முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு கண்டறியலாம் என்பதைக் காட்டினார்.

    மேலும், AI டூல்ஸ் மூலம் பல்வேறு டீப்ஃபேக் உருவாக்கப்படுகிறது. தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    • பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    கோவை:

    கோவையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து இன்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரசாரம் செய்தார். துடியலூர் சந்தைக்கடை பகுதியில் அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க.வினர் பொய் செய்திகளை பரப்புவதற்கு என்றே ஒரு குழு வைத்துள்ளனர். அந்த குழுவினர் மூலம் பொய் செய்திகளை பரப்பி மக்களிடத்தில் மத ரீதியிலான பிரச்சனைகளை பா.ஜ.க. ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில், மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை தான் உள்ளது. குறிப்பாக மணிப்பூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் உயிரோடு இருந்தாலே போதும் என்று தான் நினைக்கின்றனர். அந்தளவுக்கு பா.ஜ.க. ஆட்சி உள்ளது. கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏன் இதுவரை செல்லவில்லை?.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. எம்.பி.க்களில் 44 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பா.ஜ.க. தேர்தல் பத்திரம் ஒன்றை கண்டுபிடித்து, அதனை கொண்டு வந்தது. அந்த தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    விசாரணை அமைப்புகளை அனுப்பி, ரெய்டு நடத்தி அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரத்தை பயன்படுத்தி நிதி பெற்றுள்ளனர். தேர்தல் பத்திரத்தில் பா.ஜ.க. ஊழல் செய்துள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நடைபெறுகிற கடைசி தேர்தல் இதுவாக தான் இருக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாமல் போகலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிந்தது.

    தேர்தலில் போட்டியிட 39 தொகுதிகளிலும் 1,403 பேர், 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையின் போது பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்கு பிறகு அரசியல் கட்சியினர் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    வேட்புமனுவை வாபஸ் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளையே வெளியிடப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து தினமும் அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி அருகே தடங்கம் பி.எம்.பி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதேபோல் அனைத்து கட்சி தலைவர்களுமே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் முற்றுகையிட்டு போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24-ந்தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை ஓட்டல் ஹைவே இன் அருகில் அவர் பிரசாரம் செய்கிறார். பின்னர் இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பல்லாவரம் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலை, அன்னை தெரேசா பள்ளி அருகில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்தார். இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் 11.30 மணிக்கு ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இன்று மாலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு ஆலந்தூர் கோர்ட்டு அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு பல்லாவரம் சந்தை ரோடு பகுதியிலும், மாலை 6.30 மணிக்கு தாம்பரம், சண்முகம் சாலை, காந்தி மார்க்கெட் பகுதியிலும், இரவு 7.30 மணிக்கு மறைமலைநகர் பாவேந்தர் சாலை பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் அண்ணாமலை பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் காலை 11 மணியளவில் சென்னை மாதவரம் நகராட்சி அலுவலகம் அருகில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இன்று பிற்பகல் 3 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் தேரடி சந்திப்பு பகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானா தெருவில் அவர் ஓட்டு சேகரிக்கிறார். பின்னர் இரவு 7 மணியளவில் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இரவு 8 மணிக்கு வேளச்சேரி திருவள்ளுவர் நகரில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை 8 மணி முதல் அவர் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் தலைவர்கள் பலர் முற்றுகையிட்டுள்ளதால் தேர்தல் பிரசாரம், வேகம் எடுத்துள்ளது.

    ×