search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ் மட்டம் இல்லாத தி.மு.க. சாய்ந்து விடும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X

    பேஸ் மட்டம் இல்லாத தி.மு.க. சாய்ந்து விடும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    தி.மு.க. விற்கு பேஸ்மட்டம் மோசமாக உள்ளது. எந்த நேரத்திலும் தி.மு.க.வின் கட்டிடம் சரிந்து சாம்பலாகிவிடும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் எம்.பி., தலைமை கழக பேச்சாளர்கள் கோதைதங்கவேல், மின்னல் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். பிறந்த நாள்விழா உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கிராம மக்களின் மனதில் இன்றும் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். எம்.ஜி.ஆர். படங்களை இன்று வெளியிட்டாலும் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து வருகின்றனர். காந்த சக்திபோல் மக்கள் மனதில் இன்றும் புரட்சித்தலைவர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்.

    நெசவாளர்கள், ஏழை எளிய மக்களின் நலன் கருதி இலவச வேஷ்டி சேலை திட்டம், இலவச மின்சாரம் திட்டம் உட்பட பல்வேறு சரித்திர திட்டங்களை செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

    இன்றைக்கு எதுவுமே செய்யாமல் சிலர் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று கூறி வருகின்றனர். மக்களுக்கு எதுவுமே செய்யாமல் கட்சி கட்டமைப்பு இல்லாமல் எப்படி இவர்கள் கட்சி ஆரம்பித்து தேர்தலில் ஜெயிப்பார்கள்.

    பணம் சம்பாதிப்பதற்காகவே கட்சி ஆரம்பித்து வருகின்றனர். ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டால் கட்சி ஆரம்பிப்பது பே‌ஷனாகி விட்டது. அ.தி.மு.க.வில் கடைக்கோடி நிர்வாகி கூட 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பணியில் மக்களோடு செயலாற்றிக் கொண்டிருப்பார். அ.தி.மு.க.வை வீழ்த்தி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. இது நடக்கவே நடக்காது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த இரட்டை இலை சின்னம் இருக்கும்வரை தமிழகத்தில் அ.தி.மு.க.வை அசைத்துக்கூட பார்க்க முடியாது. இரட்டை இலை எங்கு இருக்கின்றதோ அங்குதான் அ.தி.மு.க. தொண்டர்கள் இருப்பார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை படிக்கட்டாக பயன்படுத்தி உள்ளாட்சியை கைப்பற்றுவோம்.

    இப்போதும் கிராமங்களில் அ.தி.மு.க. கரைவேட்டியை பார்த்தால் இரட்டை இலை சின்னத்தை காம்பிப்பார்கள். அ.தி.மு.க.விற்கு எம்ஜிஆரும், புரட்சித்தலைவி அம்மாவும்தான் ஆழமான பேஸ் மட்டத்தை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். தி.மு.க. விற்கு பேஸ்மட்டம் மோசமாக உள்ளது. எந்த நேரத்திலும் தி.மு.க.வின் கட்டிடம் சரிந்து சாம்பலாகிவிடும். அ.தி.மு.க.வை யாரும் அசைக்க முடியாது.

    பட்டாசு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வாபஸ் பெறப்பட்டது. வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றப்பட்ட பிறகு கூட தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

    வேலைநிறுத்தம் வாபஸ் பெற்றதை கூட தெரியாமல் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று விஜயகாந்த் கூறிவருகிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் விஜயகாந்த் மனநிலை உள்ளது. விமானத்தில் ஏறக்கூட முடியாத விஜயகாந்தை சென்னையில் இருந்து காரில் சிவகாசிக்கு கூட்டி வந்துள்ளனர். விஜயகாந்த் உடல்நிலை தெரிந்தும் அரசியல் ஆதாயத்திற்காக அவரை அவரது மனைவி, மைத்துனர் கஷ்டப்படுத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களையும் சமாளித்து ஆட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறோம். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று ஒரு கூட்டம் திட்டம் போட்டு செயல்பட்டு வருகின்றது.

    ஆனால் மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அத்தனை தடைகளையும் தாண்டி அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும். அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று செயல்பட்டு வருபவர்களுக்கு அது கனவாகவே இருக்கும். மக்கள் நலன் மீது அக்கரை கொண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசிற்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews
    Next Story
    ×