search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்குநேரி அருகே ஜாமீனில் வந்த தொழிலாளி வெட்டிக்கொலை
    X

    நாங்குநேரி அருகே ஜாமீனில் வந்த தொழிலாளி வெட்டிக்கொலை

    நாங்குநேரி அருகே ஜாமீனில் வந்த தொழிலாளியை போலீஸ் சீருடையில் வந்த கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி போலீஸ் சரகம் ஏர்வாடி ரோட்டின் அருகே உள்ள மஞ்சன்குளத்தை சேர்ந்தவர் கேத்திரபால் (வயது 53). கூலி வேலை செய்து வந்த இவர், நேற்று மாலை 3.30 மணி அளவில் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது போலீஸ் உடையில் வீட்டுக்குள் வந்த ஒருவர், தூங்கிக்கொண்டு இருந்த கேத்திரபாலை தட்டி எழுப்பினார். திடுக்கிட்டு கண்விழித்து பார்த்த கேத்திரபாலை, போலீஸ் உடையில் வந்தவர், உன்னை அய்யா கூப்பிடுகிறார். வெளியில் வந்து அவரிடம் பேசு என்று அழைத்து உள்ளார்.

    அதனை உண்மை என்று நம்பிய கேத்திரபால், தூக்க கலக்கத்திலேயே எழுந்து வீட்டில் இருந்து வெளியில் வந்து உள்ளார். அப்போது வீட்டின் முன்பு அரிவாள் உள்பட பல்வேறு ஆயுதங்களுடன் நின்று கொண்டு இருந்த மர்மகும்பல், கேத்திரபாலை சுற்றி வளைத்து உள்ளனர். அப்போதுதான் கேத்திரபாலுக்கு தன்னை தீர்த்துக்கட்ட ஒரு கும்பல் தயாராக நின்று கொண்டு இருப்பது தெரிந்து உள்ளது. 

    உடனடியாக அவர் சுதாரித்துக்கொண்டு அந்த கும்பலிடம் இருந்து உயிர் தப்பித்து ஓட முயன்று உள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட விடாமல் சுற்றி வளைத்து தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் பிணமானார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    பட்டப்பகலில், நடந்த இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கண்ணன், இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ்பீட்டர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த பழனி என்பவர், தற்போது கொலை செய்யப்பட்ட கேத்திரபாலை ஓரின சேர்க்கைக்கு அழைத்து உள்ளார். இந்தநிலையில் ஆழ்வார்குளம் ரெயில்வே கேட் அருகில் பழனி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நாங்குநேரி போலீசார், கேத்திரபாலை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த கேத்திரபால், தினமும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவரை பழனி கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது ஆதரவாளர்கள் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலையாளிகளை பிடிக்க ஏ.எஸ்.பி.ராஜேஸ்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #tamilnews

    Next Story
    ×