search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் மர்மமாக இறந்த தமிழக டாக்டர் நண்பர்களிடம் போலீசார் அதிரடி விசாரணை
    X

    டெல்லியில் மர்மமாக இறந்த தமிழக டாக்டர் நண்பர்களிடம் போலீசார் அதிரடி விசாரணை

    டெல்லியில் மர்மமாக இறந்த திருப்பூர் மருத்துவ மாணவரின் நண்பர்கள் இருவரிடமும் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை பாரப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வமணி. சாய ஆலை நடத்தி வருகிறார். இவரது மகன் சரத் பிரபு (28). பிளஸ்-2 வில் 1,187 மதிப்பெண் பெற்ற இவர் கடந்த 2015-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார்.

    அதன் பின் டெல்லி ஷாதரா மாவட்டம் தில்ஷாத் கார்டன் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் மெடிக்கல் சயின்ஸ் (யு.சி.எம்.எஸ்.சி.) என்ற கல்லூரியில் எம்.டி. பொது மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கி இருந்தார்.

    நேற்று காலை 6-.30 மணியளவில் அறையின் கழிவறைக்கு வெளியே சரத்பிரபு மயங்கிய நிலையில் கிடந்ததாகவும் அதை பக்கத்து அறையில் தங்கி இருந்த மாணவர்களில் ஒருவர் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

    பின்னர் சரத்பிரபுவை அருகில் உள்ள யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியின் ஜி.டி.பி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
    அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரத் பிரபு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சரத் பிரபு தங்கியிருந்த அறைக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு ஊசி போடும் சிரஞ்சு, இன்சுலின் மற்றும் வேதிப்பொருள் இருந்ததாகவும் அதனை டாக்டர்களிடம் கொடுத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    சரத் பிரபு உடலியல் அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்து ஊசி வழியாக ஏற்றப்பட்டு இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் இதன் முழு விவரம் தெரியும்.

    சரத் பிரபுவுடன் 3 மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்களில் ஒருவர் பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் வந்து விட்டார்.

    மற்ற மாணவர்களான அரவிந்த், கார்த்திகேயன் ஆகியோர் அங்கு தங்கி இருந்துள்ளனர். அவர்கள் இருவரிடமும் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சரத் பிரபு இறந்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை செல்வமணி மற்றும் உறவினர் டெல்லி சென்று விட்டனர்.

    மாணவர் உடலை டெல்லி அரசின் சுகாதார துறை சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று காலை பிரேத பரிசோதனை செய்கிறது. பிரேத பரிசோதனை முடிந்து மாலை உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    மகன் உடலை வாங்கும் தந்தை செல்வமணி இன்று மாலை 6 மணி விமானம் மூலம் கோவை புறப்படுகிறார். இன்று இரவு 10 மணிக்கு சரத் பிரபு உடல் கோவை வந்து சேருகிறது. பின்னர் கார் மூலம் திருப்பூர் கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை இறுதி சடங்கு நடைபெறும் என தெரிகிறது.



    மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து திருப்பூரில் சோகம் நிலவுகிறது. உறவினர்கள் அவரது வீட்டு முன் குவிந்து உள்ளனர்.

    சரத் பிரவுவின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர்.  #tamilnews
    Next Story
    ×