search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு புகழேந்தி - சி.ஆர். சரஸ்வதி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
    X

    பெங்களூரு புகழேந்தி - சி.ஆர். சரஸ்வதி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

    சேலத்தில் பெங்களூரு புகழேந்தி, சி.ஆர். சரஸ்வதி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு தினகரன் அணி ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    சேலம்:

    எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி தினகரன் அணி சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் அழகாபுரம் திரவுபதி அம்மன் கோவில் திடலில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.


    இந்த கூட்டத்தில் தினகரன் அணி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசுவார் என்று நோட்டீசுகளும் அச்சடிக்கப்பட்டு விநியோகிப்பட்டது.

    இதையடுத்து கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தினகரன் அணியினர் தீவிரமாக இறங்கினர். கூட்டத்திற்கு அனுமதி கேட்டு கடந்த 12-ந் தேதி சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் தினகரன் அணி சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

    முதல்-அமைச்சரின் நிகழ்ச்சிகள் சேலத்தில் இருப்பதாகவும், விரைவில் அனுமதி தரப்படும் என்றும் போலீசார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தினகரன் அணியினருக்கு போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தினகரன் அணி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சி. வெங்கடாசலம் கூறியதாவது:

    கடந்த 12-ந் தேதியே பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த நிலையில் கடைசி வரை இழுத்தடித்து தற்போது போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று கருதுகிறோம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் வழியாக கோத்தகிரிக்கு தினகரன் சென்றபோது பல ஆயிரம் பேர் அவரை வரவேற்க திரண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் தற்போது எங்கள் கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

    கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது தொடர்பாக தலைமைக்கு தகவல் தெரி வித்துள்ளோம். தலைமை கூறும் அறிவுரைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை களை மேற்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தினகரன் அணி ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    சேலம் பொதுக்கூட்டத்தில் இன்று நான் பேசுவதாக இருந்தது. இந்த கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னை கண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார் என்பதையே இது காட்டுகிறது.

    சேலம் மாநகர் மாவட்ட செயலாளரிடம் கலந்து பேசி கோர்ட்டு அனுமதி பெற்று சேலம் பொதுக்கூட்டத்தில் விரைவில் நான் பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல சேலம் புறநகர் மாவட்ட தினகரன் அணி சார்பில் ஓமலூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாளை (19-ந் தேதி) நடைபெறுவதாக இருந்தது.

    இந்த கூட்டத்தில் தினகரன் அணியைச்சேர்ந்த பேச்சாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி சிறப்புரை ஆற்றுவதாக இருந்தது. ஆனால், இந்த கூட்டத்திற்கும் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை.

    இதுகுறித்து புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் கூறுகையில்:

    முதல்-அமைச்சரின் சொந்தம் மாவட்டம் என்பதால் எங்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் தலைமையின் அனுமதி பெற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×