search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்க சங்கிலிகள், தங்கக்கட்டி மற்றும் தங்க பெல்ட் பக்கிள்.
    X
    விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்க சங்கிலிகள், தங்கக்கட்டி மற்றும் தங்க பெல்ட் பக்கிள்.

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் வெளிநாட்டு விமானங்களில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஆசிக் நவாஸ்(வயது 28) என்பவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் மறைத்து வைத்து கடத்திவந்த ரூ.9 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 317 கிராம் எடைகொண்ட 4 தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல சவூதி அரேபியா ரியாத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மெகபூப்கான்(50) என்பவரை சோதனை செய்தனர். அவரது உடமைகளில் மறைத்துவைத்து கடத்திவந்த ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 233 கிராம் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திராவை சேர்ந்த வல்லூர் முகமது(30) என்பவரை சோதனை செய்தனர். அவர் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த 200 கிராம் தங்கத்தையும், அணிந்து இருந்த பெல்ட் கொக்கி (பக்கிள்) 93 கிராம் தங்கத்தால் ஆனது என்பதையும் கண்டுபிடித்தனர். ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள அந்த 293 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.

    மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×