search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனபால் - முருகேசன்
    X
    தனபால் - முருகேசன்

    துபாயில் தீ விபத்து: மன்னார்குடியை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

    துபாயில் தீ விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 கட்டிட தொழிலாளர்கள் பலியான சம்பவம் மன்னார்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). இவரது நண்பர் தனபால் (40). இருவரும் கட்டிட தொழிலாளர்கள்.

    கடந்த 2016-ம் ஆண்டில் கட்டிட வேலைக்காக ஒரு ஏஜெண்டு மூலம் முருகேசன், தனபால் ஆகியோர் துபாய் சென்றனர். அங்கு கடந்த 1½ ஆண்டாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசன், தனபால் ஆகியோர் அவர்களது அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் அறையில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்தது. அறையில் இருந்த 2 பேரும் தீயில் சிக்கி கொண்டனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதில் 2 பேரும் பரிதாபமாக உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    தீ விபத்தில் முருகேசன், தனபால் ஆகியோர் பலியானது குறித்து துபாயில் இருந்து சக தொழிலாளர்கள் போன் மூலம் மன்னார்குடியில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதை கேட்டு 2 பேரின் குடும்பத்தினரும் சோகத்தில் கதறி அழுதனர்.

    இதைதொடர்ந்து முருகேசன் மனைவி கலையரசி, தனபால் மனைவி துர்காதேவி மற்றும் உறவினர்கள் நேற்று மாலை திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் நிர்மல்ராஜை சந்தித்து தீ விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மன்னார்குடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்தனர்.

    இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 2 கட்டிட தொழிலாளர்கள் வெளிநாட்டில் தீ விபத்தில் பலியான சம்பவம் மன்னார்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



     

    Next Story
    ×