search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணமூர்த்தி, அஞ்சம்மாள்
    X
    கிருஷ்ணமூர்த்தி, அஞ்சம்மாள்

    கும்பகோணம் அருகே நெகிழ்ச்சி: மனைவியை விட்டு பிரிந்து சென்றவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பினார்

    கும்பகோணம் அருகே மனைவியிடம் தகராறு செய்து பிரிந்து சென்ற கணவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள முருக்கங்குடி முதல் கட்டளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி அஞ்சம்மாள். மகன் கண்ணப்பன், மகள் காந்தி.

    கிருஷ்ணமூர்த்தி, அஞ்சம்மாள் ஆகியோருக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் பிறந்த நிலையில் 3-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டது.

    இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வெளியில் எங்காவது சென்று விடுவாராம். பின்னர் சில நாட்கள் கழித்து வீடு திரும்பி விடுவது வழக்கமாக இருந்து வந்தது.

    இதேபோல் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியிடம் தகராறு செய்து வெளியே சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த அஞ்சம்மாள் வேறு வழியின்றி தனி ஆளாக இருந்து மகன், மகளை கஷ்டப்பட்டு வளர்த்தார். தற்போது அவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு முதியவர் அஞ்சம்மாள் வீட்டு வாசலில் வந்து நின்றார். நீண்ட தாடி, அடர்ந்து வளர்ந்த தலைமுடி என சாமியார் போல காட்சி அளித்த அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

    அவரை அடையாளம் கண்டு கொண்ட அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அஞ்சம்மாளின் கணவர் கிருஷ்ணமூர்த்தி தான் சாமியார் போல தோற்றமளிப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். இதை அறிந்த அஞ்சம்மாள் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

    இது குறித்து அஞ்சம்மாள் கூறியதாவது:-

    என்னிடம் தகராறு செய்து விட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய எனது கணவர், தற்போது வீடு திரும்பி உள்ளார்.

    ஜோசியர் ஒருவர் கணவர் திரும்பி வருவார் என கூறினார். அது பலித்து விட்டது. ஆனால் இத்தனை நாட்களாக கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு மகன், மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். தற்போது மகன் வழியில் 3 பேரக்குழந்தைகளும், மகள் வழியில் 3 பேரக் குழந்தைகளும் உள்ளனர். பேத்திகளில் சிலருக்கு திருமணமாகி விட்டது. அனைத்து பிரச்சனைகளையும் தனி ஆளாக சமாளித்தேன்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த எனது கணவர் அமைதியாகவே இருக்கிறார். யாரிடமும் பேசுவதில்லை. இறைவன் மீதான நம்பிக்கை என்னை காப்பாற்றும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×