search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயமான வாலிபரை கடத்தி வைத்திருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டல்: வாலிபர் கைது
    X

    மாயமான வாலிபரை கடத்தி வைத்திருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டல்: வாலிபர் கைது

    கோவையில் மாயமான வாலிபரை கடத்தி வைத்திருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஆத்துபாலம் பகுதியை சேர்ந்தவர் பிலால் (வயது 52). தொழிலாளி.

    இவரது மகன் ஜாபர்சாதிக் (19) கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி மாயமானார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்க வில்லை. இதுகுறித்து பிலால் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    மேலும் ஜாபர்சாதிக்கின் படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை அச்சிட்டு நகரின் பல இடங்களில் ஒட்டி தீவிரமாக தேடினர்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிலாலின் செல் போனுக்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் வந்தது. அதில் பேசிய வாலிபர் நான் உங்கள் மகனை கடத்தி வைத்திருக்கிறேன், ரூ.50 ஆயிரம் தந்தால் விட்டு விடுகிறேன் என மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பிலால், நீங்கள் யார்? எனது மகனை எங்கே கடத்தி வைத்திருக்கிறீர்கள்? என கேட்டார். அதற்கு மறுமுனையில் பேசிய நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதோடு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதுகுறித்து பிலால் தகவல் கூறியதன்பேரில் போலீசார் அவருக்கு அழைப்பு வந்த எண் குறித்து விசாரித்தனர். அப்போது அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் மீண்டும் பிலாலுக்கு அதேநபர் பேசினார். ரூ.20 ஆயிரம் தந்தால் உங்கள் மகனை விடுவித்து விடுகிறேன், இல்லையென்றால் மகனின் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று மிரட்டினார். உடனே பிலால் நான் பணம் தந்து விடுகிறேன், என் மகனை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றார். அதற்கு அந்த வாலிபர் முதலில் பணத்தை தாருங்கள், அதன்பிறகு உங்கள் மகனை விட்டு விடுகிறேன் என கூறினார்.

    உடனே பிலால் நீங்கள் நேரில் வாருங்கள், பணம் தருகிறேன் என்றார். அதன் பேரில் நேற்று இரவு அந்த வாலிபர் கோவை ஆத்து பாலம் டோல்கேட் பகுதிக்கு வந்தார். வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசியதன் மூலம் அவரை அடையாளம் கண்ட பிலால் தனது உறவினர்களுடன் சேர்ந்து மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் திருவள்ளூரை சேர்ந்த சேகர் என்ற ராஜசேகர்(வயது 30) என்பது தெரியவந்தது. அவர் உங்கள் மகனை நான் கடத்த வில்லை, கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் கோவை வந்த போது ஜாபர்சாதிக் மாயமானது குறித்த துண்டு பிரசுரத்தை பார்த்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக தந்து விடுவீர்கள் என நினைத்து மிரட்டியதாக கூறினார். இதையடுத்து சேகர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×