search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட கணேசன், கொடிகாட்டுராஜா
    X
    கொலை செய்யப்பட்ட கணேசன், கொடிகாட்டுராஜா

    தூத்துக்குடியில் பழிக்குபழியாக நடந்த இரட்டை கொலையில் 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

    தூத்துக்குடி அருகே பழிக்குபழியாக நடந்த இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட 10 பேரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி(வயது 42). இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது முனியசாமியின் மனைவி மஞ்சுளாவும், அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி பாக்கியலட்சுமியும் போட்டியிட்டனர். அந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் இருதரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.

    இந்த நிலையில் கடந்த 23.1.2017 அன்று முனியசாமி தனது நண்பரான தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்த முத்துகுமாரிடம்(35) அங்குள்ள ஒர்க்‌ஷாப்பில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு ராமச்சந்திரன் தலைமையில் வந்த 21 பேர் கொண்ட கும்பல், முனியசாமியையும், முத்துகுமாரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    இதுகுறித்து புதியம் புத்தூர் போலீசார் ராமச்சந்திரன் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் அதே பகுதியை சேர்ந்த விசுவநாத் ராம்குமார்(27), முத்துச்செல்வம், மாரிமுத்து(23), கவியரசன்(30), கொடிகாட்டு ராஜா(24), கணேசன்(33) ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்து தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அவர்கள் ஓட்டப்பிடாரத்தில் இருந்து கையெழுத்து போடுவதற்காக காரில் புறப்பட்டனர். கவியரசன் தூத்துக்குடியில் இருப்பதால், அவர் அங்கிருந்து கோர்ட்டுக்கு வந்து விடுவதாக கூறியுள்ளார். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் வசந்தகுமார் என்பவரும் உடன் வந்தாராம். காரை கணேசன் ஓட்டினார்.



    புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே எதிரே வந்த ஒரு லாரி கார் மீது மோதியது. காரில் இருந்து அவர்கள் இறங்கி, தப்பி ஓடிய போது மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல் கணேசன், கொடிகாட்டு ராஜா ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முனியசாமி கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது சகோதரர்கள் செந்தில், பொன்முனியசாமி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கணேசன், கொடிகாட்டு ராஜா ஆகிய இருவரையும் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

    தலைமறைவான கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நெல்லை-தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து புதூர் பாண்டியாபுரத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    Next Story
    ×