search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் ஆன 15 நாளில் கணவரை உதறிவிட்டு காதலனுடன் சென்ற புதுப்பெண்
    X

    திருமணம் ஆன 15 நாளில் கணவரை உதறிவிட்டு காதலனுடன் சென்ற புதுப்பெண்

    நாங்குநேரி அருகே திருமணம் ஆன 15 நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் காதலனுடன் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    நாங்குநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை மகள் முத்துட்சுமி (வயது 25). இவருக்கும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெருமாள்நகரை சேர்ந்த பால் வியாபாரி முருகன் (31) என்பவருக்கும் கடந்த மாதம் 30–ந்தேதி திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற முத்துலட்சுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், முத்துலட்சுமி உடன்குடியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டதும், அவர்கள் நீண்டநாள் காதலித்து வந்ததும், அந்த வாலிபருடன் முத்துலட்சுமி சென்று இருப்பதும் தெரியவந்தது.

    மேலும் முத்துலட்சுமி திருச்செந்தூரில் தங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று முத்துலட்சுமியை மீட்டு நேற்று நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் நாங்குநேரி கோர்ட்டில் நீதிபதி சதீஷ் முன்னிலையில், முத்துலட்சுமியை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது முத்துலட்சுமி நீதிபதியிடம், ‘நான் முருகனுடன் செல்ல விரும்பவில்லை. எனது தாய், தந்தையை பார்க்கவும் விரும்பவில்லை. நான் எனது காதலனுடன் தான் செல்ல விரும்புகிறேன்’ என்று கூறினார்.

    முத்துலட்சுமி மேஜர் பெண் என்பதால் அவரது விருப்பத்துக்கு மாறாக முடிவு எடுக்கக்கூடாது எனவும், ஏற்கனவே அவருக்கு பெற்றோர் வழங்கிய நகைகள், முருகன் கட்டிய தாலிச்சங்கிலி ஆகியவற்றை திரும்ப பெற்றுக் கொள்வது தொடர்பாக நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் ஒப்புதல் அளித்து பெற்றுக்கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் முத்துலட்சுமியை நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது முத்துலட்சுமி தனது பெற்றோரிடம் நகைகளை கழற்றி கொடுத்தார். முருகனிடம் தாலிச்சங்கிலியை கொடுத்தார். அதன்பிறகு காதலன் தரப்பில் வந்தவர்களுடன் முத்துலட்சுமியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×