search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் பஸ் நிலைய கடையில் கண்ணாடி பெட்டிக்குள் இருந்த இனிப்புகளை சாப்பிட்ட எலி
    X

    ஓசூர் பஸ் நிலைய கடையில் கண்ணாடி பெட்டிக்குள் இருந்த இனிப்புகளை சாப்பிட்ட எலி

    ஓசூர் பஸ் நிலையத்தில் உள்ள கடை ஒன்றில், கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள இனிப்புகளை எலி ஒன்று ருசித்து சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய பஸ் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கடை ஒன்றில், கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள இனிப்புகளை எலி ஒன்று ருசித்து சாப்பிடுவது போன்ற வீடியோ நேற்று ‘‘வாட்ஸ்அப்’’பில் வெளிவந்தது.

    ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், கடைக்காரர் வியாபாரத்தை மும்முரமாக கவனித்துக் கொண்டிருக்க, எலியோ கண்ணாடி பெட்டிக்குள் ஏறி, உள்ளே வைக்கப்பட்டுள்ள இனிப்புகளை ருசித்து சாப்பிடும் காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோவில் வரும் கடைகள் மற்றும் அருகில் உள்ள சுவர்களை வைத்து அது ஓசூர் பஸ் நிலைய கடை என்பதை வீடியோவை பார்த்த பொதுமக்கள் அறிந்தனர்.

    இதை பார்த்து பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த வீடியோ நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ‘‘வாட்ஸ்அப்’’ குழுக்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ குறித்து தகவல் அறிந்ததும், ஓசூர் நகராட்சி அதிகாரிகள் நேற்று காலை ஓசூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் ஆய்வில், சுகாதாரமற்ற முறையில் கண்ணாடி பெட்டிக்குள் எலி இருந்த கடை கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, மேலும் அந்த கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதேபோல அந்த கடையில் இருந்த இனிப்பு பலகாரங்கள் அனைத்தும் கொட்டி அழிக்கப்பட்டன. இதன் காரணமாக ஓசூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று, சுகாதாரமற்ற முறையில் அந்த கடையை நடத்தியதாக ‘சீல்’ வைத்தனர்.
    Next Story
    ×