search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்து வட்டியை விட ஜி.எஸ்.டி.வரி கொடுமையானது: திருநாவுக்கரசர்
    X

    கந்து வட்டியை விட ஜி.எஸ்.டி.வரி கொடுமையானது: திருநாவுக்கரசர்

    கந்து வட்டியை விட ஜி.எஸ்.டி. வரி. தான் கொடுமையானது எனவும் குஜராத் தேர்தல் காரணமாக தான் வரி குறைக்கப்பட்டுள்ளது எனவும் தஞ்சையில் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    தஞ்சாவூர்:

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழா தஞ்சை மாநகரம், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற தலைவர் ராமசாமி, முன்னாள் மாநிலச் செயலாளர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், பொதுக் குழு உறுப்பினர்கள் திருச்சி முரளிதரன், மன்சூர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த போது எந்த தீங்கும் செய்யவில்லை. நன்மைகள் தான் செய்தார். தற்போது மக்களுக்கு தீங்கு செய்பவர்கள் ஆட்சி தான் நடக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம், வளர்ச்சி அடைந்தது. ஆனால் தற்போது 5.7 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வங்கிகள் கடன் கொடுக்க முடியாமல் தத்தளிக்கிறது.

    பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி மூலம் மத்திய அரசு மக்களுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. அனைத்து பொருளாதார குறியீடுகளும் சீரழிந்து விட்டது. மத்திய பா.ஜ.க.அரசு தொடர்ந்து மக்களுக்கு தீங்கு விளைவித்து வருகிறது. தற்போது குஜராத் தேர்தலுக்காக ஜி.எஸ்.டி. வரியை குறைத்துள்ளனர்.

    ஏழைகளையும், விவசாயிகளையும் புறக்கணிக்கும் இந்த அரசு நாட்டிற்கு உகந்தது இல்லை. இந்த அரசு தொடர்வதை இனியும் சகிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் அமைதியான முறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா வருகிற 18-ந் தேதி கோவையில் நிறைவு பெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது வங்கிகளை தேசியமய மாக்கினார். தலித் மக்களுக்கு அவரை போல யாரும் உதவிகள் செய்தது கிடையாது. விவசாயத்தில் புரட்சியை உருவாக்கினார். தமிழகத்தில் தற்போது உள்ள அணைகளில் பெரும்பாலும் காமராஜர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. இப்படி பல்வேறு புரட்சிகளை செய்த இந்திராகாந்தி மறைவுக்குப் பின் அவரது வழியில் ராஜீவ்காந்தி செயல்பட்டார். அவருக்கு பின் சோனியா, அவரை தொடர்ந்து ராகுல் செயல்பட்டு வருகிறார்.

    மத்திய அரசு நாளுக்கு நாள் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. கந்து வட்டியை விட கொடுமையானது ஜி.எஸ்.டி. வரி. மக்களுக்காக ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு குறைக்கவில்லை. குஜராத் தேர்தல் காரணமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற பார்க்கிறது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடிக்கும்-பன்னீர் செல்வத்துக்கும் கொடுக்க முடிவு செய்துவிட்டார் மோடி. ஆனால் தமிழகத்தில் ஒருபோதும் பா.ஜனதா கட்சியால் காலூன்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியபோது எடுத்தபடம். அருகில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், சட்டமன்ற தலைவர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
    Next Story
    ×